தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஐந்தாம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 6ஆம் தேதியும் தொடங்கின.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்தத் தேர்வு வருகிற 31ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள்.
4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் ஆவர். தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று நடந்த 11ஆம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கு 44,394 மாணவர்கள் வரவில்லை என்று தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வில் 43,533 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று தேர்வுத்துறை தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.