திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கீழ பூசாரிபட்டியில் பாப்பான்குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று மதியம் மணப்பாறை அண்ணா நகரைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் (14), முரளி (12) அவரது அண்ணன் மணிகண்டன் (16) ஆகிய மூன்று பேரும் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 3 பேரும் குளத்தினுள் மூழ்கினர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கரையில் நின்ற மற்றொரு சிறுவர் விரைந்து சென்று கிராம மக்களிடம் தெரிவித்து உள்ளார்.
உடனே விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குளத்திற்குள் இறங்கி நீரில் மூழ்கிய சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் 3 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாடு போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




