சென்னை: நான் அறிந்த 7 மொழிகளில் இந்தி மொழியே சிறந்தது’ என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி. சென்னையில் நடந்த தாய் மொழி நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார். சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் தாய்மொழி நாள் விழா நேற்று நடந்தது. விழாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி குத்துவிளக்கு ஏற்றி, “இணையவழி செம்மொழி தமிழ், அகம்- புறம்’’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பாடலை கல்லூரி மாணவிகள் பாடினார்கள். தொடர்ந்து சிறந்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை-வேந்தர் அவ்வை நடராஜன் கௌரவிக்கப்பட்டார். சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், தில்லியில் உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் அமைப்பு சார்பில் புத்தகங்கள் வெளியிடப்பட்டது. குறிப்பாக 22 மொழிகளில் உள்ள, குழந்தைகளுக்கான 1,008 சிறுகதைகள் மொழிபெயர்ப்பு புத்தகம், ‘பொன்னியின் செல்வன்’ சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி வெளியிட்டு, பாரதியார் பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார்.

