கான்பெர்ரா: ஜிம்பாப்வேக்கு எதிராக தாம் அடித்த இரட்டை சதத்தை, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தம்மை ஊக்குவித்த ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். முன்னர், கிறிஸ் கெய்ல் ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார்; அவர் ஓய்வு பெறலாம் – என்று ஒரு ரசிகர் ட்விட்டரில் விமர்சித்து எழுதியிருந்தார். இதனை மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவர் டேவ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் சர்ச்சை வெடித்தது. இருப்பினும் பின்னர் அதற்காக கேமரூன் மன்னிப்பு கேட்டார். இந்த நிகழ்வுக்கு அடுத்த 2 வது நாளில் கிறிஸ் கெய்ல் தனது மட்டையால் பதிலடி கொடுத்தார். உலகக் கோப்பையில் இதுவரை 366 போட்டிகள் நடந்துள்ளன. அதில் ‘முதல் இரட்டை செஞ்சுரி நாயகன்’ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கெய்ல். இந்த சாதனைகுப் பின் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த போது, சரிவர ரன் எடுக்காததால் எனக்கு நிறைய நெருக்கடி உருவானது. ‘நீங்கள் நிறைய ரன்கள் குவித்து ஜொலிக்க வேண்டும், உங்களால் முடியும்’ என்று ‘டுவிட்டர்’ வலைத் தளத்திலும், செல்போனிலும் ஏராளமான தகவல்கள் ரசிகர்கள் மூலம் எனக்கு வந்தன. ரோகித் சர்மா இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த போதும், நீங்களும் இதே போன்று சாதிக்க வேண்டும் என்று ட்விட்டரில் வேண்டுகோள் குவிந்தன. நான் களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இத்தனை பேர் வேண்டுகோள் விடுத்திருப்பது இதுவே முதல் முறை. இப்படிப்பட்ட நெருக்கடியை நான் எனது வாழ்க்கையில் சந்தித்ததில்லை. இதுவே எனக்கு உத்வேகம் அளித்தது. இந்தியாவின் ஷேவாக் உள்ளிட்டோர் நான் மிகப் பெரிய ரன்கள் குவிப்பேன் என்று எதிர்பார்த்தனர். அதை நிறைவேற்ற எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு உரிய நாளாக அமைந்தது. இப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு இன்னிங்சை கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் நான் தடுமாறினேன். முதல் பந்தே என்னை அச்சுறுத்தியது. எல்.பி.டபிள்யூ. அப்பீல் கேட்ட போது பதற்றமடைந்தேன். நடுவர் அவுட் இல்லை என்று கூறிய பிறகே நிம்மதி அடைந்தேன். அடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
- என்றார் அவர்.


