சங்கரன்கோவிலில் சாமி கும்பிடச் சென்ற இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் K.K.பொன்னையாவை மூத்த குடிமகன் என்று கூடப் பாராமல் மிருகத்தனமாக தள்ளி இழுத்து காயப்படுத்தி பேருந்து படிக்கட்டில் தள்ளியுள்ளார் புளியங்குடி டிஎஸ்பி அசோக். பொதுவெளியில், ஓர் அமைப்பின் மாநில பொறுப்பாளரையே “கொளுத்திருவேன்” என தைரியமாக கொலை மிரட்டல் விடுக்கும் டிஎஸ்பி., அசோக், மூடிய அறையில், காவல் நிலையத்துக்குள் சாதாரண மக்களிடம் எந்தளவு மிருகத்தனத்தைக் காட்டக் கூடும் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்!
இந்து அமைப்பின் நிர்வாகியைத் தாக்குவதில் என்ன வெறித்தனம் முகத்தில் தெரிகிறது பாருங்கள்! கன்னியமிக்க காவல்துறையில் மனநலம் பாதிக்கப்பட்டது போல செயல்படும் இந்த அசோக் என்ற அரக்கனை காவல்துறையிலிருந்து டிஸ்மிஸ் செய்யக் கோரி அறவழி அமைதிப் போராட்டம், 28.2.23 (செவ்வாய்) மாலை 4 மணிக்கு சங்கரன்கோவில் தேரடித் திடல் முன்பு இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெறும். அணிதிரள்வோம் என்று, இந்து முன்னணி தென்காசி மாவட்டம் சார்பாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் வீடியோ ஒன்று வைரலானது.
சங்கரன் கோவிலில், கோமதியம்மன் கோவில் அருகே திராவிடர் கழக பொது கூட்டத்திற்கு அனுமதி அளித்த ஹிந்து முன்னணி நிர்வாகியை போலீஸ் அதிகாரி மிரட்டி கைது செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
முன்னதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டம் திட்டமிட்டபடி சங்கரன்கோவில் அருகே நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து அமைதியாக ஹிந்து முன்னணியினர் போராடினர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஹிந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பொன்னையா என்பவரை “கை நீட்டி பேசுகிறாயே நீ என்ன பெரிய ரௌடியா?” என்று புளியங்குடி துணை கண்காணிப்பாளர் அஷோக் கேட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். கை நீட்டி பேசுபவர்களை ரௌடிகள் என்று முத்திரை குத்தும் டிஎஸ்பி.,தான் முதலில் கை நீட்டிப் பேசி ரௌடிவுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் என்பது, வைரலாகி வரும் காணொளியில் தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் ஹிந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு பாஜக,, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி இருக்கும் இடம், மக்கள் கூடும் இடம் என்று கூறி, கடந்த வாரம் இதே தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த இயற்கை வள பாதுகாப்பு சங்கத்திற்கு போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறை, இறைவனை வசைபாடும் கும்பலுக்கு, மத உணர்வுகளை புண்படுத்தி, மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் கூட்டத்திற்கு கோவில் அருகிலேயே பாதுகாப்போடு அனுமதி கொடுத்தது மத விரோத செயலே.
வன்முறையை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே வன்முறையில் ஈடுபடுவது முறையல்ல. தொடர்நது காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஷோக் அவர்கள் பொது மக்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்வதாகவும், அத்து மீறி உள்நோக்கத்தோடு செயல்படுவதாகவும் சில ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூறுகிறார்கள்.
தாக்குதலுக்குள்ளான பொன்னையா அவர்கள் உள்ளிட்ட ஹிந்து முன்னணி நிர்வாகிகளிடம் கண்ணியகுறைவாக, சட்ட விரோதமாக நடந்து கொண்ட துணைக்கண்காணிப்பாளர் அஷோக் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக காவல்துறை தலைவர் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் அந்த அதிகாரியின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது இருக்க தென்காசி மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்.