இதய நோய் அதிகரிக்கக் காரணம் என்ன?: மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் விளக்கம்!

Published:

madurai meenakshi mision hospital heart doctors - 2026
#image_title

தனிப்பட்ட உடல்நல இடர்களை அறியாமலேயே தீவிர உடற்பயிற்சி செய்வதும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்: மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள்.

மனஅழுத்தம் மற்றும் மாசு உட்பட தொடர்ந்து வரும் உடல்நல அச்சுறுத்தல்களே இதயநோய் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் உயிரிழப்பிற்கு இதயநாள நோய்களே காரணமாக இருக்கின்றன. கடந்த தசாப்தத்தோடு ஒப்பிடுகையில், இந்த தசாப்தத்தில் உயிரிழப்புகள் 20% அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. எனினும், தீவிர உடற்பயிற்சி, அதிக புரதம் உள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது, நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அலட்சியம் செய்வது, ஆகியவற்றால் தான் இதய நோய்களில் 80% ஏற்படுகின்றன என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 – ம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக இதய தின நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் ஆரோக்கியமான நபர்கள், இளவயதினர் உட்பட ஒவ்வொருவரும் உரிய கால அளவுகளில் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என வலியுறுத்தினர்.

இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அளவு போன்ற காரணிகளோடு தொடர்புடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் அம்சங்களை அறிந்துகொள்வது முக்கியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். வாழ்க்கைமுறை, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு உடல்நலப் பரிசோதனையும் அதன் முடிவுகள் குறித்த அறிவும் அத்தியாவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதயவியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் என்.கணேசன், அதிகரித்து வரும் இடர் அம்சங்கள் பற்றி பேசுகையில், மனஅழுத்தமும் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களும், சமூக நலவாழ்வில் குறைபாடுகள் இருக்கும்போது இதய ஆரோக்கியத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இப்போதைய நவீன காலத்தில், தனிமை , குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் மகிழ்ச்சியற்ற உறவுகள் ஆகியவை சமூக நலவாழ்வை பாதிக்கும் அம்சங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். “கடந்த காலத்தில், போதுமான உடலுழைப்பையும், உடற்பயிற்சியையும் உறுதிசெய்வது, புகைப்பிடிப்பது கைவிடுவது மற்றும் கொலஸ்ட்ரால், இரத்தஅழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற அம்சங்கள் பெரிதும் வலியுறுத்தப்பட்டன.

எனினும், தற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது, போதுமான நேரம் உறங்குவது மற்றும் காற்று மற்றும் ஒளி மாசுவிற்கு வெளிப்படுவதை குறைப்பது ஆகியவற்றிற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பின்பற்றுவதும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை.” என்று அவர் கூறினார்.

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். எஸ். செல்வமணி பேசுகையில், “ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராஃபி (OCT) போன்ற ஊடுருவல் முறையிலான இமேஜிங் தொழில்நுட்பங்கள், கரோனரி / இதயநாளங்களில் மிகத்தெளிவான படங்களை எடுத்து வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றுவதாக உருவெடுத்திருக்கின்றன; இரத்தநாள கிழிசல், இதய தமனிகளில் ஏற்படும் உறைவு கட்டிகள் என எது காரணமாக இருப்பினும், அந்த பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணத்தை துல்லியமாக அடையாளம் காண்பதற்கு இப்படங்கள் உதவுகின்றன.

இந்த நவீன முன்னேற்றமானது, அவசியமின்றி இதய இரத்தநாளங்களில் ஸ்டென்ட்கள் பொருத்தப்படாமல் தடுக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருந்துகளின் பயனளிக்கும் தன்மையும் சிறப்பானதாக இருப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இத்தகைய நவீன முன்னேற்றங்கள், மருத்துவ இடையீட்டு செயல்முறைகள் வெற்றிபெறும் விகிதத்தை கணிசமாக அதிகரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.” என்று குறிப்பிட்டார்.

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர். சிவக்குமார் கூறியதாவது: “கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் முன்னோடித்துவ செயற்பணிக்காக இந்தியாவில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை புகழ்பெற்றிருக்கிறது.

சமீபத்தில், டவர் மற்றும் மிட்ராகிளிப் ஆகியவை உட்பட, மருத்துவ செயல்முறைகளிலும் நிபுணத்துவத்தை நாங்கள் மேம்படுத்தியிருக்கிறோம்.

டவர் என்பது, முழுமையாக திறக்காத, குறுகிவிட்ட பெருந்தமனி வால்வை மாற்றுவதற்கான ஒரு செயல் முறையாகும். மிட்ராகிளிப் என்பது, ஊடுருவல் அல்லாத, கதீட்டர் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையாகும்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

மனித இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளில் ஒன்றான மிட்ரல் வால்வு தொடர்பான சிக்கல்களுக்கு இது தீர்வு காண்கிறது. அறுவை சிகிச்சைகளில் அதிக ஆபத்துகளை கொண்டிருக்கின்ற வயது முதிர்ந்த நபர்களுக்கு இந்த மருத்துவ செயல்முறைகள் அதிக பயனளிப்பதாக இருப்பது நிரூபணமாகியிருக்கிறது.”

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர்களான டாக்டர். எம். சம்பத்குமார் மற்றும் டாக்டர். பி. ஜெயபாண்டியன் ஆகியோர் பேசுகையில்… உரிய காலஇடைவெளிகளில் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது மற்றும் அதன்மூலம் தனிநபருக்கான உடல்நல ஆபத்துகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

“உயர்இரத்த அழுத்த நோயாளிகளில் 30% மட்டுமே மருத்துவ பரிசோதனையின் மூலம் நோயறிதல் முடிவை பெறுகின்றனர். மற்றும் அவர்களுள் 30% நபர்கள் மட்டுமே அதற்கான மேலாண்மைக்கு மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி போன்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என்பது மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு மருந்துகளும், உடற்பயிற்சியும் இன்றியமையாதவை.” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உடற்பயிற்சி கூடங்களில் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, மாரத்தான் நிகழ்வுகளில் பங்கேற்பது போன்ற கடுமையான, தீவிர உடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது தனிப்பட்ட உடல்நல அம்சங்கள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஆபத்துகளை அறிந்திருப்பது முக்கியம் என்று எச்சரித்தனர்.

“தசை வளர்ச்சியை தூண்டுவதற்காக பெரிதும் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டுகள் மற்றும் அதிக புரதம் அடங்கிய உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது போன்றவை எதிர்மறை விளைவுகளை தருபவையாக இருக்கக்கூடும்” என்று அவர்கள் விளக்கமளித்தனர்.

இதய மயக்கவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். எஸ். குமார் மற்றும் இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர்.எம். கிருஷ்ணன் ஆகியோர் பேசுகையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் விரிவான உடல்நல பரிசோதனை திட்டத்தின் வெற்றியை பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். அவசியமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மீது வழிகாட்டலை இப்பரிசோதனைகள் வழங்குவதை சுட்டிக்காட்டினர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஒருவரது உணவில் செறிவான புரதம் கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றி பேசுகையில், “உணவுமுறை பரிந்துரைகளில் சமீப காலத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த காலத்தில், இதயத்திற்கு ஆரோக்கியமான உணவில் 60% மாவுச்சத்து, 25% புரதம் மற்றும் 15% கொழுப்பு அடங்கியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், தற்போதைய பரிந்துரையானது, 35% மாவுச்சத்து, 50% புரதம் மற்றும் 15% கொழுப்பு அடங்கிய உணவே இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என குறிப்பிடுகிறது.” என்று கூறினர்.

இம்மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். பி.கண்ணன் மற்றும் முதுநிலை இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். எம். ராஜன் ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

உலக இதய தின அனுசரிப்பையொட்டி மருத்துவமனை வளாகம் முழுவதும், இதய ஆரோக்கிய விழிப்புணர்வுடன் தொடர்புடைய நிறமான சிவப்பு நிற விளக்குகளால் ஒளிர்ந்தன. இம்மாதம் முழுவதிலும் சிறப்பு ஸ்க்ரீனிங் மற்றும் நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்தாலோசனை சேவைகள் என பல்வேறு சேவைகளையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கி வருகிறது.

இம்மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் ஒரு பிரத்யேக குழு, மதுரை மாநகரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு சிறப்புரையாற்றி ஆலோசனை குறிப்புகளை வழங்கி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img