சென்னையை உலுக்கிப் போட்ட மிச்சங் புயலின் கொடூரத்தையும், அரசின் செயலற்ற தன்மையையும் சொல்லி, கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒரு சாமானியப் பெண். இதற்கு அரசுத் துறைகள் என்ன பதில் தரப் போகின்றன?!
முகாம்களுக்கு போக விரும்பாதவர்கள் மொட்டை மாடியில் வாட்டர் டாங்க் நிழலில் இரவும் பகலுமாகக் கிடந்த கதை எந்த ஆட்சியாளருக்காவது தெரியுமா?
பெண் குழந்தைகள் அந்த நேரத்தில் வீட்டுக்குத் தூரமாக நாப்கின்கள் கிடைக்காமல் தவித்தது உங்களுக்குத் தெரியுமா?
முதல் தளத்தில் தண்ணீர் வந்ததோடு பாம்புகள் ஆமைகள், வந்ததை நீங்கள் அறிவீர்களா?
நீரின் அழுத்தம் மிகுதியில் பாத்ரூம் சிங் வழியாகவும் வீட்டுக்குள் தண்ணீர் வந்து கொஞ்சம் நஞ்சம் காய்ந்து கிடந்த மேல் தளமும் நாற்றத்துடன் கூடிய ஈரமானதை நீங்கள் அறிவீர்களா?
தண்ணீர் மட்டம் குறையக் குறைய கரப்பான் பூச்சிகளும் கட்டெறும்புகளும் வீடு முழுதும் சுற்றித்திரிந்து குழந்தைகள் தூங்க பயந்ததும் உங்களுக்குத் தெரியுமா?
படகுகளில் கொண்டு வந்து கொடுக்கப்பட்ட தண்ணீரை குடிக்கவே முடியாமலும் பாத்-ரூம் போக வேண்டிய சூழல் ஏற்படுமோ என்று பயந்து தண்ணீர் இல்லாமல் தொண்டையை மட்டும் நனைத்துக் கொண்ட கதை உங்களுக்குத் தெரியுமா?
அடுத்து உடுத்துவதற்குக் கூட உள்ளாடைகளோ அல்லது ஆடைகளோ இன்றி கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஒரே ஆடை அணிந்து அல்லாடிய கதை உங்களுக்குத் தெரியுமா?
தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகள், கல்யாண மண்டபங்களில் ஆண்கள் குடித்து விட்டு அந்நியப் பெண்களை பாலியல் சீண்டல் செய்ததும் உங்களுக்குத் தெரியுமா?
கஷ்டப்பட்டு வாங்கி வைத்திருந்த வாஷிங்மெஷின், பிரிட்ஜ், டூவீலர் அடுப்பு இனி அனைத்துமே மீண்டும் வாங்க வேண்டிய நிலைதான் உங்களுக்குத் தெரியுமா?
வடிகால் பணிகள் முடிந்தது என்பதை நம்பியதால்தானே தைரியத்துடன் அந்த இரவில் தூங்கப் போனோம். ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றாமல் இருந்திருந்தால் கூட, கொஞ்ச நஞ்ச பொருட்களையாவது காப்பாற்றி இருப்போமே! நீங்கள் செய்தது பச்சை நம்பிக்கை துரோகம் என்பதையாவது நீங்கள் அறிவீர்களா?
ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையை சாப்பிடு சாப்பிடு என்று தான் கெஞ்சுவாள். ஆனால் “தயவுசெய்து சாப்பிடாதே, சாப்பிட்டால் இயற்கை உபாதைக்கு என்ன செய்வாய்?” என்று பயமுறுத்தி உள்ளுக்குள் அழுது தீர்த்த அவலம்தான் உங்களுக்குத் தெரியுமா?
ஹெலிக்காப்டர் மேலே பறந்த போதெல்லாம் ஒரு போர்வையைத் தூக்கிப்போட மாட்டார்களா என்று மொட்டை மாடியில் குடும்பத்தோடு நின்று கையை ஆட்டி ஏமாந்த கதையும் உங்களுக்குத் தெரியுமா?
இயற்கை இடர்களை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் தான்! ஆனால் முன் எச்சரிக்கை செய்யாமல் இப்படிப் போனதை நினைத்து ஒவ்வொரு மனிதரும் வருந்தும் கதைதான் உங்களுக்குத் தெரியுமா?
குடும்பத் தலைமையில் ஆண்கள் இருக்கும் வீடுகளாவது பரவாயில்லை. பெண்கள் மட்டும் இருந்து கொண்டு, உதவிக்கு ஆளின்றி ஒண்டியாய்த் தவித்து உருக்குலைந்த கதைதான் உங்களுக்குத் தெரியுமா?
வெள்ள நீர், தரைத் தளத்தை நிரப்ப மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டது. ஆனால் முதல் தளத்தை நிரப்ப மூன்று விநாடிகள் கூட எடுத்துக் கொள்ளவில்லையே! இதாவது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
இனியும் நீங்கள் தரும் உதவித் தொகையோ அல்லது நிவாரணப் பொருளோ எதுவாயினும் போய் வாங்குவதற்குக் கூட வாகனம் ஏதுமில்லை என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமல் பாம்புகள் எந்த அறையில் பதுங்கி இருக்கிறதோ, கரப்பான் பூச்சிகள் எங்கிருந்து பறந்து வருகிறதோ என்று பயந்து பயந்து, மொட்டை மாடியிலேயே வெட்ட வெளியில் ஒரு புடவையை விரித்துப் படுத்துவிட்ட பாட்டைத்தான் நீங்கள் அறிவீர்களா?
சொல்லப் போனால் இனி வீட்டை விட்டு வெளியில் போக வேண்டுமெனில், போட்டுக்கொள்ள ஆடைகள் மட்டுமின்றி, காலுக்கு செருப்புகள் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
குளியலறையில் இருந்தெல்லாம் அந்தக் குழாய்களின் வழியாக முடிகளும் குப்பைகளும் வந்து சிக்கிக் கொண்டு, நீர் வெளியேற வழியின்றி மேலும் அடைந்து போய்விட்டதைத்தான் நீங்கள் அறிவீர்களா?
இனியும், நாங்களே சம்பாதித்து ஏதேனும் வாங்கிக் கொண்டாலும் கூட, இந்த ஐந்து நாட்கள் பட்ட அவலத்தை, மனவலியை, புத்திக்குள்ளிருந்து போக மறுக்கும் அதிர்ச்சியைத்தான் நீங்கள் உணர்வீர்களா?
நிவாரணம் என்று அறிவித்தவுடன் இந்த வலிகளெல்லாம் நிவாரணம் கண்டு விடுமா?! நீங்கள் செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?!