- கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு ஆம்னி பேருந்துகளை அவசர கதியில் மாற்றுவதா?
- இல்லாத பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த நெருக்கடி தரும் திமுக அரசு.
- போலி திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
சென்னை கிளாம்பாக்கத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது.
அதற்கான பணிகள் பெருமளவு முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவிக்கு வந்தது.
திமுக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மீதமிருந்த பணிகளை கூட முழுமையாக முடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தேர்தல் ஆதாயத்திற்காக அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்றவர்கள் செய்த பணிகளை ஸ்டிக்கர் ஓட்டி தங்கள் பணிகளாக காட்டுவதில் முனைப்பு காட்டும் திராவிட மாடல் திமுக அரசு இந்த பேருந்து நிலையத்திற்கும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிட்டது.
ஆனால் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே அடுத்தடுத்து பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல படாதபாடு படுகின்றனர்.
நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.
இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரும், சென்னைக்கு வருவோரும் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளை சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்க தமிழக அரசு திடீர் தடை விதித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என தமிழக அரசு நெருக்கடிக் கொடுத்து வருகிறது.
கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தை இயக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மட்டுமின்றி பொதுமககளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தைபூசம், குடியரசு தின விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால் ஆம்னி பேருந்து ஏறுவதற்காக கோயம்பேடு வந்த பயணிகளை தடுத்த போலீஸார், கிளாம்பாக்கம் செல்லுமாறு திருப்பியனுப்புகின்றனர். கிளாம்பாக்கத்திற்கு வந்து சேர மக்களுக்கு எந்த வசதியும் இல்லை. தமிழக அரசின் இந்த நெருக்கடியால் பயணிகள் கடும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர்.
கோயம்பேட்டில் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவசர கதியில் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மாற்ற வேண்டிய அவசியம் என்பது தான் மக்கள் எழுப்பும் கேள்வி.
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. விழாக் காலங்களில் 1200 பேருந்துகள் வரை இயக்கப்படும் நிலையில் ஒட்டு மொத்தமாக எல்லாபேருந்துகளையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை. 100 பேருந்துகளை மட்டுமே நிறுத்துவதற்கான இடவசதி செய்யப்பட்டுள்ளது.
வரதராஜபுரத்தில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்க பல மாதங்கள் ஆகும். அதுவரை பேருந்துகளை எங்கே நிறுத்த முடியும் என உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இந்த போலி திராவிட மாடல் அரசிடம் பதில் இல்லை.
ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பேருந்துகளை இயக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களை தமிழக அரசு மிரட்டுகிறது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களை மிரட்டுவதை விடுத்து அவர்களை அழைத்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். மக்களை வலுக்கட்டாயமாக கிளாம்பாக்கம் அனுப்பக்கூடாது.
கிளாம்பாக்கம் பேருந்துநிலைய பிரச்சனைகள் வரும் பொங்கலுக்குள் சரி செய்யப்படும் என அமைச்சர்கள் கூறினர். ஆனால் பொங்கல் முடிந்து தைபூசம் கொண்டாடடுகிறோம், ஆனால் பிரச்சனை தீர்க்கப்படாமல் இன்னமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் அந்த பகுதியில் பேருந்துகளை இயக்க போதிய சாலை வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல் அந்த பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்தஒரு வசதிகளும் செய்துதரப்படவில்லை.
கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை அவசரகதியில் திறந்த போலி திராவிட மாடல் திமுக அரசு அதனை மக்கள் பயன்படுத்த ஏதுவாக அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.