பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
அதிமுக., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும், அமமுக., தேனி, திருச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்ததாக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதில் 19 தொகுதிகளில் பாஜக., வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் சைக்கிள் சின்னத்திலும், பாமக 10 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்திலும், அமமுக 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மட்டும் சுயேச்சையாக தனிச் சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக, சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, நாங்கள் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்தோம். அதிகமான தொகுதிகளை தர பாஜகவினர் விருப்பம் தெரிவித்தனர். தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம். அதனால், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றார்.
முன்னதாக, பாஜக., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாமக., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி தொகுதியில் தேவதாஸ், சேலம் தொகுதியில் அண்ணாதுரை, திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா, மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான், அரக்கோணம் தொகுதியில் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி தொகுதியில் கணேஷ்குமார், விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.