மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஒரு தரப்பில் ஆதரவு இருந்தாலும், எதிர்ப்பு பெருமளவில் காணப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா கூறியதாவது: கேரளாவில் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் பெண்களை ஓரம் கட்ட முடியாது.
இப்பிரச்னையில், பிற மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டவர்களின் மத சுதந்திரத்தை காப்பாற்ற தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



