
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில், இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான இன்று அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறி, அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக பரணி தீபம் ஏற்றப் பட்டது. பின்னர் அண்ணாமலையார் கோவிலின் உள்பிராகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக பக்தர்கள் பலர் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.