ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி செங்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
இதே போல நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டரில் உள்ள சர்வசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.