சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் மூலம் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் லோடு செய்யும் பணியை திருச்சி மாவட்டத்தில் செய்து வருகிறது.
இந்த நிலையில் வங்கி ஏ.டி.எம்.களில் பணப்பறிமாற்றம் குறித்து திடீர் ஆய்வை மேற்கொண் டனர். அப்போது ஏ.டி.எம்.களில் இருக்கும் பணத்திற்கும் வங்கி கணக்கிற்கும் வித்தியாசங்கள் இருப்பது தெரிய வந்தது.
ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.20 லட்சம் இருப்பு இருக்க வேண்டிய நிலையில் ரூ.18 லட்சம் மட்டுமே இருந்தது. வாடிக்கையாளர்கள் எடுக்காத பட்சத்தில் ரூ.2 லட்சம் எப்படி மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது தான் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் லோடு செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் நூதன முறையில் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒரு நாள் ஒன்றுக்கு அதிக பட்சம் ரூ.37 லட்சம் வரையிலும், புறநகர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை லோடு செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பணம் லோடு செய்யும் போது ஊழியர்கள் அதில் இருந்து அவ்வப்போது ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை எடுத்துள்ளனர்.
அதே போன்று ஏ.டி.எம். எந்திரங்கள் பழுதானால் சரி செய்ய செல்லும் போதும் பணத்தை எடுத்துள்ளனர். இவ்வாறு 3 வருடங்களாக திருச்சி, சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி, சிட்டியூனியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் 23 ஏ.டி.எம்.களில் மொத்தம் ரூ. 1 கோடியே 34 லட்சம் ரூபாய் எடுத்துள்ளனர்.
இதைதொடர்ந்து தனியார் நிறுவன மேலாளர் அருள்ராஜ் திருச்சி மாநகரக குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். ஆய்வாளர்கள் சேரன், அன்புசெல்வன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஊழியர்கள் ஜேம்ஸ் (வயது36) பாலக்கரை, ரவிச்சந்திரன் (26) ஸ்ரீரங்கம், மூர்த்தி (40) ஸ்ரீரங்கம், சதீஷ் சத்திரம் பேருந்து நிலையம், ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதில் சதீஷ் தவிர மற்ற 3 பேரையும் காவல் துறையினர்கைது செய்தனர்.
சதீஷ் தலைமறைவாகி விட்டார். அவரை காவல் துறையினர்தேடி வருகிறார்கள். வங்கி ஏ.டி.எம்.மில் திருடிய பணத்தை வீடு, கார் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருப்பது தெரிய வந்தது. இதில் தலைமறைவாக உள்ள சதீஷ் ஏற்கனவே ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.6 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 வருடத்திற்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். தொடர்ந்து பழைய நண்பர்களுக்கு ஆசை காட்டி ஏ.டி.எம்.மில் பணம் கையாடல் செய்யும் தொழிலை கற்று கொடுத்து மோசடியில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது


