“கோவைக்கு பிரதமர் மோடி வருவதை அறிந்து, அவரைச் சந்தித்து, மத்திய அரசிடம் தாங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகளை விளக்கி, மனு கொடுக்க தொழில் துறையினர் திட்டமிட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பாகவே, இதுபற்றி அறிந்து, பிரதமரைச் சந்திக்க பா.ஜ., நிர்வாகிகள் மூலமாக முயற்சி செய்தனர். அதற்கு பலனும் கிடைத்தது. நேற்று ஒரே நாளில், 45 நிமிடங்களில், பல்வேறு தொழில் அமைப்புகளைச் சேர்ந்த, 34 பேரை பிரதமர் மோடி சந்தித்தார்.
தான் சந்தித்த அனைவரையும், டில்லியில் வந்து சந்திக்குமாறு கூறி, அவர்களிடமிருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார். ‘இந்த அரசு, கண்டிப்பாக உங்கள் பிரச்னையைத் தீர்க்கும்’ என்று உறுதி கூறியுள்ளார்.
கடந்த நாலே முக்கால் ஆண்டுகளாக, தமிழக முதல்வரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், மிகக்குறுகிய காலத்தில் பிரதமரைச் சந்திக்க முடிந்ததில், கோவை தொழில் துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிரதமர் மீது தொழில் துறையினர் வைத்துள்ள அபிமானம், இன்னும் ஒரு படி அதிகரித்துள்ளது.


