தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதா வயதை குறிக்கும் வகையில் 68 கிலோ ‘கேக்’ வெட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து ‘அம்மா’ உணவகங்களிலும் சர்க்கரை பொங்கலுடன் காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளும் இன்று இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மாநகராட்சி மருத்துவமனைகளில் இன்று பிறக்கும் குழந்தைகள் பெயரில் ரூ.10 ஆயிரம் ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க. வினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றனர்.


