மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கச் சொல்லும் மருந்துகளை மருந்தாளுனர்கள் முறையாகக் கொடுக்காமல் சுருட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிகவும் முக்கியமான திட்டம் இலவச மருத்துவ சேவை திட்டம்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையை பொருத்தமட்டில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து பயன் பெறுகின்றனர்.
சில நிரந்தர வெளி நோயாளிகளுக்கு ஏழு நாட்கள், பதினைந்து நாட்கள், முப்பது நாட்களுக்கு ஒருமுறை என்கிற முறையில் மருந்துகளை வழங்க மருந்தாளுனர்களுக்கு அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
சில வெளி நோயாளிகளுக்கு மருந்து அளிக்க மருத்துவர்கள் உத்தரவிட்ட சீட்டினை அந்த மருத்துவமனை மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களிடம் கொடுத்து மருந்தினை கேட்டால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ( மருந்து குறைவாக சரியான எண்ணிக்கை இல்லாமல் ) கொடுத்து விரட்டி விடுகின்றனராம்.
மருத்துவர்கள் பரிந்துரை செய்த நாட்களுக்கு ஏன் மருந்தினை கொடுக்க மறுக்கிறீர்கள்? என மருந்தாளுனர்களிடம் நோயாளிகள் கேட்டால் ஓசியில சிகிச்சை பெற்று மருந்து வாங்குகிற நீ எல்லாம் என்ன சட்டம் பேசுகிறாயா? என தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனராம்.
ஒரு சிலரிடம் நான்கு நாட்களுக்கு மேல் மருந்து கொடுக்கக் கூடாது என சட்டம் இருப்பதாக தெரிவித்தும் உள்ளனராம்.
அவர்கள் மீண்டும் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சென்று மருந்தாளுனர்கள் கூறியதைக் கூறி மருந்து வழங்க மறுக்கின்றனர் என முறையிட்டனராம்.
அதற்கு “மருத்துவர்களாகிய நாங்கள் நோயாளிக்கு எத்தனை நாட்களுக்கு மருந்து கொடுக்க சொல்கிறோமோ அதை சரியான எண்ணிக்கையில் கொடுப்பது மட்டுமே மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுனர்களின் வேலை. ஆனால் மருந்தாளுனர்கள் எப்போதுமே நாங்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை நோயாளிக்கு கொடுப்பது இல்லை. அவர்கள் எப்பவுமே அப்படித்தான் செய்வார்கள். நாங்கள் என்ன செய்வது?” என மருத்துவர்களும் புலம்பினராம்.
நான்கு நாட்களுக்கு மேல் மருந்து கொடுக்கக் கூடாது என சட்டம் இருப்பதாக மருந்தாளுனர்கள் கூறும் நிலையில் மருத்துவர்கள் நோயாளிக்கு நான்கு நாட்களுக்கு மேல் மருந்து அளிக்க ஏன் சீட்டினை கொடுக்கின்றனர்?
நோயாளிக்கு நான்கு நாட்களுக்கு மேல் மருந்து அளிக்க மருத்துவர்கள் சீட்டினை எழுதி கொடுக்கக் கூடாது என ஏன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் தலைவர் உத்தரவு போடவில்லை?
மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்து அளிக்க உத்தரவிட்ட சீட்டினை மருந்தாளுனர்கள் பெற்றுக்கொண்டு மருந்து கொடுத்ததாக கணக்கு எழுதி மருந்தை குறைவாக கொடுத்தால் மருந்தாளுனர்கள் சுருட்டும் மருந்துகள் எங்கே செல்கிறது ? எனும் கேள்வியே அனைவர் மத்தியிலும் கட்டாயம் எழும்!
மருந்தாளுனர்களால் சுருட்டப்படும் மருந்துகள் எங்கே செல்கிறது என்பது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் தலைவருக்கு தெரியாமலா இருக்கப் போகிறது?
மக்களின் வரிபணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையில் இன்னும் என்ன என்ன முறைகேடுகள் நடக்கிறதோ என்கிறது மதுரை மாநகரம்.
எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்!


