தனி நபர் தாக்குதல்கள், கொச்சைப் பேச்சுகள் ஏச்சுகளெல்லாம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று திமுக,வினர் நினைத்திருக்க, முதல்வர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் மொழியிலேயே பதிலடி கொடுக்க.. இப்போது அரண்டு போய்க் கிடக்கிறது திமுக., வட்டாரம்.
ஜெயலலிதா மரணத்தை வைத்தும், மத்திய அரசு மாநில அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை வைத்தும், திமுக., தனி நபர் தாக்குதல்களை அறுவறுக்கத்தக்க வகையில் நடத்தி வருகிறது. குறிப்பாக, அதிமுக., கூட்டணியில் இணைந்த அந்நாளே பாமக., ராமதாஸை பற்றி திமுக., தலைவரான ஸ்டாலின் பேசிய பேச்சுகள் அவர் மீது கடும் வெறுப்பையே ஏற்படுத்தின.
திமுக.,வில் வெற்றி கொண்டான் போன்ற நாலாந்தர பேச்சாளர்கள் தற்போது இல்லாததால், அந்த இடத்தை தானே இட்டு நிரப்ப கட்சித் தலைவர் ஸ்டாலின் முயன்று வருவதால், அவருக்கான எதிர்வினைகளை, அதே தகுதியில் இருக்கும் அதிமுக.,வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இறங்கியடிப்பது, இப்போது திமுகவினரை கலகலக்கச் செய்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் செயலின்மை போன்றவைகளையும் விமர்சித்து வாக்குகளைப் பெற முயற்சி செய்ய வேண்டிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தனிநபர் தாக்குதலாக மோடியின் சாதி, இனம், மொழி, குடும்பம் பற்றியெல்லாம் பேசியும், எடப்பாடியாரை அடிமை என்றும் கேவ்லமாகவும் பேசி வருவது ஸ்டாலினின் தகுதி தராதரத்தையே காட்டி வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி பேசிய ஸ்டாலினுக்கு அதே விதத்தில் கருணாநிதி மரணத்தைப் பற்றி பேசி பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் பேசுவது நியாயம் என்றால், எடப்பாடியின் பேச்சும் நூறு சதவீதம் நியாயமானதுதான்.
இந்நிலையில், கருணாநிதியின் மறைவை எடப்பாடி பழனிசாமி கொச்சைப் படுத்துவதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்திருப்பதை எவரும் மனதில் ஏற்றுக் கொண்டு, அனுதாபத்தைக் காட்டவில்லை!
கருணாநிதியின் நினைவிடத்திற்கு கூட இடம் கொடுக்காத அதிமுகவினர், இப்போது கருணாநிதியின் மறைவையும் கொச்சை படுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பியிருப்பதை எவரும் காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை!
நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய ஸ்டாலின், அங்கே பேசிய போது, காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னர் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இதனால் எரிச்சலடைந்துள்ள பா.ஜ.க.வினர், திமுகவை இந்துக்களின் எதிரி என தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதே திமுகவின் குறிக்கோள்!.
எந்த மதத்திற்கும் திமுக எதிரி இல்லை! சிலர் எதிர்ப்பதால் திமுக மத விரோதியாகவோ, தேச விரோதியாகவோ மாறி விடாது. இது போன்ற அவதூறுகளை தாண்டிதான் திமுக வளர்ச்சி அடைந்துள்ளது. அதிமுக ஆட்சியால் தமிழகம் எந்த நன்மையும் பெறவில்லை
தமிழகத்தின் நலனுக்காக 95 வயது வரை பாடுபட்ட கலைஞருக்கு நினைவிடம் அமைக்கக் கூட அதிமுக அரசு அனுமதி மறுத்தது! இப்போது கலைஞரின் மறைவையும் கொச்சை படுத்துகிறது என்று வேதனையுடன் புலம்பித் தள்ளினார்.
அது போல், முதலமைச்சர் வரம்பு மீறிப் பேசுவதை தங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று திருச்சி சிவாவும் கூறியுள்ளார்.
கலைஞருக்கு உடல்நலம் குன்றியபோது மிகவும் வெளிப்படையாக சிகிச்சை அளிக்கப்பட்டது! அது குறித்து முதலமைச்சர் வரம்பு மீறிப் பேசுவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார்.
இந்த விதத்தில், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவது தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும், தங்களை நோக்கி அதே போன்ற கேள்விகளும் விமர்சனமும் வரும்போது, ரவுடித்தனத்தையே வெளிப்படுத்துவோம் என்ற பாசிஸ வெறி பிடித்த சிந்தனையைக் கொண்டிருக்கிறது திமுக., என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.