ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
பெண்கள் மேம்பாடு குறித்து பல அறிஞர்கள் கூறியுள்ளனர். சுவாமி விவேகானந்தர், “பெண்களின் நிலமை உயரவில்லை என்றால் உலகம் முன்னேற முடியாது. ஒரு பறவை ஒரே இறக்கையை வைத்துக் கொண்டு பறக்க இயலாது,” என்றார்.
அறிஞர்கள் ஒரே மாதிரியே சிந்திப்பார்கள் என்பதற்கு சாட்சியாகவே ராஷ்டிர சந்த் துகடோஜி மஹாராஜ் 1953-ஆம் ஆண்டு எழுதிய மராட்டிய நூலான கிராம் கீதாவில் பெண்களின் மேம்பாடு என்னும் தலைப்பிலான அத்தியாயம் உள்ளது.
அவர் தம் பாடல்களில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
தொட்டிலை ஆட்டும் பெண்களின் கைகள், உலகையே ஆளும் வல்லமை படைத்தவை,என்கிறார். பெண்களின் தொலைநோக்கு சிந்தனையால் அவர்கள் தங்களுக்கு வரும் சிக்கல்களை அருமையாய் சமாளித்து விடுவர், என்று குறிப்பிடுகிறார்.
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் உயர்கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு வாழ்க்கையில் உரிய இடமும், அந்தஸ்தும் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார், துகடோஜி மஹாராஜ். பெண்களின் பொறுமையும், கருணையும் போற்றப்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறார்.
ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் இடையில் ஒரு நல்ல சகோதரத்துவமான உறவு ஏற்பட வழிகாட்ட வேண்டும். இருபாலருக்கும் நீதி கற்பிக்கும் கல்வி, நல்நெறிமுறைகள், நல்லொழுக்க முறைகள் பயிற்றுவிக்க வேண்டும். இருபாலாரும் சேர்ந்தே படிக்கும் வழி செய்து தர வேண்டும் என்று நல்வழி கூறுகிறார்.
பெண்களின் முன்னேற்றமானது அடுத்தவர்கள் கொடுக்கும் பரிசுகளிலுமோ, காணிக்கைகளிலுமோ அல்ல, பெண்களின் கையில் தான் உள்ளது என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
இதனால், பெண்கள் தங்கள் திறமைகளில் நம்பிக்கை வைத்தும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சி யிடனும் வீறு கொண்டு எழவேண்டிய தருணமே இது. புறப்படுவோம் புவியசைக்க!!