பருப்பு உருண்டை ரசம்
தேவை:
ரசம் தயாரிக்க:
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
பருப்பு உருண்டை தயாரிக்க: துவரம்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தேங்காய்த் துருவல், மல்லி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பைச் சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும். மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர்விட்டு இதை நைஸாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து எடுத்துக்கொண்டு அதனுடன் அரைத்த விழுது, உப்பைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
உருண்டை செய்ய கொடுத்துள்ள துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்த பருப்புக் கலவையைப் போட்டுக் கிளறவும். கலவை கெட்டியானதும் கீழே இறக்கி நன்கு பிசைந்துகொள்ளவும். பின்னர் இதை சிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்து ரசத்துடன் சேர்க்கவும்.
குறிப்பு: சாதத்தில் ரசம்விட்டு உருண்டைகளைத் தொட்டுச் சாப்பிடலாம். சைடிஷ் தேவையில்லை.