spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை

இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை

தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதக் குழுக்களின் பின்னணியில் இந்த நாட்டுக்கு எதிரான, பாரத நாட்டின் வல்லமை வளர்ச்சிக்கு எதிரான ஏதோ ஒரு சக்தி பின்னால் இருந்து இயங்குவது நன்றாகத் தெரிகிறது. அந்த சக்தி, இளைஞர் சக்தியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறது. மாணவப் பருவத்தை திசை திருப்பி, ஏற்கெனவே என் தலைமுறை உள்ளிட்ட இரண்டு தலைமுறையை நாசமாக்கிவிட்ட அரசியல் இயக்கங்களின் சக்தியை விட வலிமையானதாகத் தெரிகிறது. சாதிக் கட்சிகளின் சுயலாபத்தில், சாதீயம் பேசும் சாக்கடைகளின் பின்னணியில் இயங்குவது நன்றாகத் தெரிகிறது.  இந்த நிலையில்தான் இந்தக் கடிதத்தையும் கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. அதனால், ஜெ.மோ.வின் வாசகனாக இதை அப்படியே எடுத்துப் போட்டுவிட்டேன்!

இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,
தமிழக அரசியல் களத்தில் தமிழ்த்தேசியம் ஒரு தவிர்க்க முடியாத உந்துசக்தியாக மாறக்கூடிய காலகட்டத்தில் அதை எவ்வாறு சரியான திசையில் வழிப்படுத்துவது என்பது குறித்த சிந்தனைகள் அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன்.
உலகெங்கும் பரந்துவிரிந்துள்ள தமிழினத்தின் ஆதி ஊற்றாக தமிழகம் விளங்குவதால் அத்தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டிய உணர்வு மற்றும் அறம் சார்ந்த கடப்பாட்டை அது கொண்டுள்ளது.அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதே இன்று தமிழகத்திற்கு முன்னுள்ள சவாலாகும்.அதற்குரிய அரசநயம்(diplomacy) தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதா என்பதுதான் நேர்மையுடன் எழுப்பவேண்டிய கேள்வியாகும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்நலன்கள் பாதிக்கப்படும்போது தமிழகத்திலுள்ள தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாடு தனியாகப் பிரிந்துவிடும் என்று கூறுவதை வழமையாகவே வைத்துள்ளனர்.இன்று இவ்வாறான சிந்தனை தமிழக இளையதலைமுறையினரிடையேயும் பரவ ஆரம்பித்துள்ளமை இணையத்தளங்களை நோக்கும்போது தெரிகின்றது.இது சரியானதுதானா?பயனுடையதுதானா என்று அவர்களில் எவரும் சிந்தித்துப்பார்ப்பதில்லை.
இலங்கையில் தமிழர்களுடைய தனிநாட்டுக்கான நியாயங்களும் இந்தியாவில் பிரிவினைக்கான கோரிக்கையும் எவ்வாறு வேறுபடுகின்றன என ஆராய்ந்தால் அவற்றுக்கிடையிலுள்ள பெரும் வேறுபாடுகளை அறியலாம்.
1)இலங்கை ஒரு தனிப்பெரும்பான்மை இனத்தைக் கொண்டநாடு.இலங்கையின் மக்கள் தொகையில் சிங்களவர்கள் 75 சதவீதமானவர்கள்.இந்தியா அவ்வாறு எந்த ஒரு தனிப்பெரும்பான்மை இனத்தையும் கொண்ட நாடு அல்ல.இந்தியாவில் அதிகமானோர் பேசும் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோரை ஒரு மொழிவாரி இனமாகக்கொண்டால் கூட(அவ்வாறு மொழிவாரி இனமாக ஹிந்திபேசுவோர் அடையாளப்படுத்தப்படுவதில்லை என்பது வேறுவிடயம்) அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் மட்டுமே.ஹிந்தி அல்லாத மற்றைய மொழிச்சமூகங்கள் மிகச்சாதாரணமான அரசியல் ஒற்றுமை மூலமே ஹிந்தி தொடர்பான எந்த ஆதிக்கத்தையும் முறியடித்துவிட முடியும்.
2)மதம்.சிங்களவர்களில் பெரும்பான்மையோர் பௌத்தர்களாகவும்(தீவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம்)தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவும்(மொத்த மக்கள் தொகையில் 1981 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி 15.48 சதவீதம்.இது போரிற்கு பிந்திய தற்போதைய மதிப்பீட்டின்படி 12.61 சதவீதமாக குறைந்துவிட்டது.)இருப்பது மட்டுமன்றி சிங்களவர்களில் இந்துக்களோ தமிழர்களில் பௌத்தர்களோ கிடையாது.அதாவது இலங்கையில் இரு இனங்களுக்கும் மதத்தினாலான இணைப்பு அமையவில்லை.ஆனால் இந்தியாவிலோ காஷ்மீர்,நாகாலாந்து போன்ற சில மாநிலங்களைத்தவிர ஏனைய மாநிலங்களில் பெரும்பான்மை மதமாக இந்துமதம் இருப்பதனால் அது ஒரு பலமான இணைப்பு சக்தியாக விளங்குகின்றது.
3)பொருளாதாரவளம்.இலங்கைதீவில் தமிழர்களின் தாயகத்தைவிட சிங்களப்பிரதேசங்கள் அதிக இயற்கை வளங்கள் உடையன.இது சிங்களவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்துகிறது.ஆனால் இந்தியாவில் ஹிந்தி பேசும் மாநிலங்கள் அரசியலில் முக்கிய இடத்தை வகித்த போதும் அவற்றிற்குப் பொருளாதாரரீதியான மட்டுப்பாடுகள் உள்ளன.ஹிந்திபேசும் மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டவை.இவற்றிற்குக் கடற்கரையே கிடையாதென்பது பொருளாதாரத்தில் அவை மற்றைய மாநிலங்களைச் சார்ந்து இயங்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதால் அவற்றிற்கு இடையே ஒருவிதமான சமநிலை பேணப்படுவதைக்காணலாம்.
4)பொது உளவியல்.ஒரு தேசத்தின் கட்டமைப்பில் புறநிலைக் காரணங்களுக்கு இணையாக முக்கியபங்கை ஆற்றுவது பொதுவகமாகும்.அதாவது பொதுமனநிலை.முறைப்படி தமது வரலாற்றை எழுதிப்பேணிய மிகச்சில பண்டை சமூகங்களில் சிங்கள இனமும் ஒன்றாகும்.கிபி மூன்றாம் நான்காம் நூற்றாண்டளவில் சிங்களவர்களின் முதல் வரலாற்றுப்பதிவான தீபவம்சம் தொகுக்கப்படுகிறது.ஆறாம் நூற்றாண்டில் மகாநாமதேரர் மகாவம்சத்தை எழுதுகிறார்.இதன் தொடர்ச்சியாக சூளவம்சம்,ராஜாவலிய என்று பௌத்தபிக்குகள் சிங்கள பௌத்த வரலாற்றை பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை எழுதிவந்துள்ளார்கள்.மகாவம்சத்தின்படி சிங்கள இனத்தின் மூதாதையரான விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் லாட்ட என்ற நாட்டிலிருந்து கப்பலில் நாடுகடத்தப்பட்டு கரையோரமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் தரையிறங்கி அங்கிருந்தும் விரட்டப்பட்டு இறுதியாக இலங்கையை வந்தடைகின்றார்கள்.இதில் முக்கியமானது எப்போது அவர்கள் வந்தடைந்தார்கள் என்பதுதான் .சரியாக புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அதேநாளில் அவர்கள் இத்தீவில் காலடி எடுத்து வைத்தார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது..விஜயனும் அவனுடைய தோழர்களும் வருவதற்கு முன்பு இலங்கைக்கு மூன்று முறை புத்தர் வருகைதந்ததாகவும் இத்தீவு மக்கள் பௌத்த தர்மத்தை பேணிப்பாதுகாப்பார்கள் என்று அவர் பிரகடனப்படுத்தியதாகவும் மகாவம்சம் தெரிவிக்கிறது.
சிங்களப்பொதுமனதில் மகாவம்சம் இரண்டு முக்கிய விடயங்களை கட்டியெழுப்பியுள்ளது.முதலாவது தமது மூதாதையர் நாட்டைவிட்டுவிரட்டப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இந்தியாவின் எந்தவொரு பிரதேசத்தினும் நிலப்பகுதியினும் நீட்சியாக தம்மைக்கருதுவதில்லை.அவ்வாறான பூர்வீக இடம் தொடர்பான பற்றுதலும் அவர்களுக்கு இருப்பதுமில்லை.இரண்டாவது இலங்கைத்தீவென்பது பௌத்தத்தை பேணிப்பாதுகாத்து உலகிற்கு பரப்பவேண்டிய நிலமென்பதும் அதனை நிறைவேற்றவேண்டிய பொறுப்பை புத்தர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் என்பதுமான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
புத்தர் மறைந்ததினத்தன்று விஜயனும் அவனுடைய தோழர்களும் இலங்கையை வந்தடைந்தமை அவர்களைப் பொறுத்தவரை பெரும் குறியீட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு.மகாநாமதேரர் வாழ்ந்த ஆறாம் நூற்றாண்டு இந்துமத மறுமலர்ச்சியின் ஆரம்பகாலகட்டம் என்பதும் பௌத்தம்,சமணம் என்பன இந்தியாவில் செல்வாக்கு இழக்க ஆரம்பித்த காலகட்டமென்பதையும் கருதும்போது மகாநாமதேரரின் எழுத்துக்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமானதல்ல.இலங்கையின் சிங்கள பௌத்தமக்களின் மனதில் இந்திய உபகண்டத்தில் பௌத்தமதத்தின் வீழ்ச்சி பிராமணர்களின் சதியினாலேயே ஏற்பட்டது என்ற நம்பிக்கை ஆழமாகப்பதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பௌத்தம் செல்வாக்கிழந்தமை தொடர்பாக சிங்கள பௌத்த பிக்குகளின் கருத்துகளை அவதானித்தால் இதை அறியலாம்.அவற்றின் சாரமாக பிராமணர்களின் சதி என்ற கோட்பாடே வலியுறுத்தப்படும்.இதிலிருந்தே இந்தியாமீதான வெறுப்பும் தமிழர்கள் மீதான வெறுப்பும் தொடங்குகின்றது.சிங்கள பொதுமனத்தின் உளவியலில் இருந்து சிறுவயதில் இருந்தே ஊட்டப்படும் மகாவம்ச சிந்தனைகளை அகற்றுவதென்பது மிகவும் கடினமாகும்.அத்துடன் அப்பொதுவகமே மகாவம்சத்தினைக்கொண்டுதான் கட்டியெழுப்பபட்டதென்பதை கவனத்தில் கொள்ளாமல் சிங்கள மக்களையோ,அவர்களின் அரசியலையோ புரிந்து கொள்ளமுடியாது.மறுபுறமாக இலங்கைத்தமிழர்களின் பொதுமனம் தன்னை இந்தியாவின் நீட்சியாக கருதுவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.1987 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழ்வீடுகளில் விவேகானந்தர்,காந்தி,சுபாஷ் சந்திரபோஸ்,நேரு,ராஜாஜி என்று இந்தியத் தலைவர்களின் படங்களையே காணலாம்.பெரும்பாலான வீடுகளில் குறைந்தபட்சம் யாராவது ஒரு இந்தியத்தலைவரின் படமாவது சுவரில் கொழுவப்பட்டிருக்கும்.இது அவர்களின் மனச்சாய்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.இலங்கையின் அரசியலை புரிந்துகொள்வதற்கு இந்த உளவியலையும் புரிந்து கொள்வது மிகமுக்கியமானது.
இதற்கு நேரெதிராக இந்தியப் பொதுமனம் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களையும் ஒரு பண்பாட்டுவெளியாகக் காணுகின்றது.மகாவம்சத்திற்கு முரணாக இந்தியாவின் ஆரம்பகால இதிகாசங்களான இராமாயணம்,மகாபாரதம் என்பன பலவேறு மக்களையும் பிரதேசங்களையும் தொடர்புபடுத்துவதில் பெரும்பங்கை ஆற்றியுள்ளன.இராமாயணம் தெற்குநோக்கி ப் பிரதேசங்களையும் மக்களையும் தொடர்புபடுத்தியே செல்கின்றது.மறுபுறத்தில் மகாபாரதம் இந்தியாவின் பல்வேறுபிராந்தியங்களின் மன்னர்களை குருசேத்திரத்தில் ஒன்று குவிக்கின்றது.தூரதெற்கிலிருந்து பாண்டியமன்னனும் போரிற்கு சென்று உயிர்துறக்கிறான் என்ற காட்சியையும் மகாபாரதம் காட்டுகின்றது.இவ்வாறாகப் பல்வேறு வேற்றுமைகளுக்கு இடையிலும் பண்பாட்டு இணைவுகளினூடாக இந்திய பொதுமனம் உருவாகிவந்துள்ளது.அதன் உளவியல் என்பது இலங்கையின் மக்களினங்களின் உளவியலைப்போன்று ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியதல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
5)வரலாற்றுப்போக்கு.இன,மொழி,மத,பண்பாட்டு வேறுபாடுகள் மட்டுமே ஒருதனிநாட்டுக்கான தேவையையோ உரிமையையோ உருவாக்கிவிடுவதில்லை.இலங்கைத் தீவின் வரலாற்றுப்போக்கு தமிழ் மக்களின் உரிமைகளை அழித்து,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் மூலம் பாரம்பரியதாயகத்தில் தமிழர் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி,அவர்களை ஒரு இன அழிப்புக்கு உள்ளாக்கிய திசையினூடாக நகர்ந்திருக்கின்றது.மறுபுறத்தில் தமிழகத்தமிழர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்து தமது வரலாற்று நிலத்தில் தங்களைத்தாங்களே ஆட்சிசெய்துவருகின்றார்கள்.இந்தியாவில் மாநிலங்கள் மேலும் அதிக அதிகாரங்களைப் பெற்று கூட்டாட்சியை செழுமைப்படுத்தக் கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.அத்துடன் கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்களின் அரசியல் பலம் நடுவண் அரசில் அதிகரித்தே வந்துள்ளதுடன் தமிழ்நாடு பொருளாதாரவளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.அவர்களின் வரலாற்றுப்போக்கு வேறொருதிசையினூடாக நகர்ந்திருக்கிறது.
தமிழகத்தமிழர்களின் நிலைக்கும் ஈழத்தமிழர்களின் நிலைக்கும் மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடு உள்ளது.இதனைக் கருத்திற்கொள்ளாது தமிழ்நாடு தனிநாடாகும் என்பதுபோன்ற பேச்சுக்கள் தமிழகத்தமிழரிற்கு பிழையான புரிதலை ஏற்படுத்துவதுடன் ஈழத்தமிழர்களின் விடியலுக்கும் தடைக்கல்லாகவே மாறிவிடும்.
சரி,ஒருவாதத்திற்காக இவர்கள் கூறுவதுபோன்று தமிழ்நாடு தனிநாடாக உருவாகிவிடுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.அதனால் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுமா?அல்லது மேலும் பாதிக்கப்படுமா எனப்பார்ப்போம்.
இந்தியாவில் காஷ்மீரிலும் சில வடகிழக்கு மாநிலங்களிலும் தவிர ஏனைய மாநிலங்களில் தனிநாட்டுக்கான முனைப்பு என்பது இல்லை.அப்படி இருந்தாலும் அது ஒருசிலரால் முன்வைக்கப்படும் மக்களாதரவற்ற நிலைப்பாடாகவே இருக்கிறது.இவ்வாறான நிலையில் தமிழ்நாடு தனியாகப்பிரிந்தால் கூட இந்தியாவின் ஏனைய பகுதிகள் தொடர்ந்து ஒரே நாடாகவே நீடிக்கும்.இந்தியாவின் ஒருமாநிலமாக இருக்கும்போதே தமிழ் நாட்டின் நலனை உறுதி செய்வதற்கு எவ்வளவுதூரம் போராடவேண்டியுள்ளது என்று காவிரி,முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் அறியலாம்.இவ்வாறிருக்கையில் தனிநாடு என்பது இவ்வாறான பிரச்சனைகளில் தமிழகத்திற்கு இருக்கக்கூடிய ஓரளவு சாதகமான நிலையையும் இல்லாமற் செய்வதற்கே வழிவகுக்கும்.அத்துடன் இதேபோன்ற புதிய பிரச்சனைகளையும் உருவாக்குவதற்கு ஊக்குவிக்கும்.
தமிழ்நாடு தன்னில் ஒரு மாநிலமாக இருக்கும்போதே சிங்களவர்களுடன் ஒத்துழைக்கும் இந்தியா அது தனிநாடானால் எவ்வாறுநடந்து கொள்ளும் என்பதற்கு பதிலளிப்பது கடினமானதல்ல.
இந்தச் சூழ்நிலை தமிழர்களை ஒருபுறம் பலம்வாய்ந்த இந்தியநாட்டிற்கும் மறுபுறம் இனவாதத்திலேயே ஊறிப்போன சிங்களநாட்டிற்கும் இடையில் பாக்குவெட்டிக்கு நடுவில் வைக்கப்பட்ட பாக்கிற்கு இணையாக மாற்றிவிடும் என்பதே உண்மையாகும்.
இந்தியா மொழிரீதியான தேசிய இனங்களைக் கொண்ட நாடு.இத்தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடுகளை உருவாக்கவேண்டும் என்றும் சிலகுரல்கள் கேட்கின்றன.இந்தக்காட்சியையும் பார்த்துவிடுவோம்.மொழியடிப்படையிலான தேசிய இனங்கள் எல்லாம் தனிநாடுகளாக மாறிவிட்டால் என்ன நடைபெறும்?வடமேற்கில் மதவாதத்தில் ஊறிய பாகிஸ்தான் போன்ற நாடுகளும்,வடக்கில் தொடர்ச்சியாக ஆதிக்க எண்ணத்துடன் செயற்பட்டுவரும் சீனாவும்,வடகிழக்கில் தனது நிலப்பரப்புக்கு பொருந்தாத விகிதத்தில் சனத்தொகை பெருத்துத்தடுமாறும் பங்களாதேஷும் அந்நாடுகளை சுதந்திரமாக இருக்க விட்டுவிடுமா?ஆட்டுக்கொட்டகையை ஓநாய்களுக்கு திறந்துவிட்டது போன்றதாகிவிடும்.இவ்வாறான ஆபத்தெல்லாம் வட இந்திய பிரதேசங்களுக்குதான் ஏற்படும் என்பதில்லை.பதின்மூன்றாம் நூற்றாண்டில் வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்பாளர்களிடம் தில்லி வீழ்ந்து ஒருநூற்றாண்டு காலத்தில் மதுரை மாலிக்கபூரிடம் வீழ்ந்தது என்ற வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது.எனவே இந்தியாவில் உள்ள மொழிவாரித்தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனிநாடுகளாகவேண்டும் என்பது அடிப்படை விவேகமற்றதென்பதுடன் அனைவரையும் பேரழிவிற்குள் தள்ளிவிடக்கூடிய சிந்தனையாகும்.
அப்படியானால் இந்தியாவில் தமிழ்தேசியம் தேவையற்றதா என்ற கேள்வி எழலாம்.உண்மையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் உள்ளது.ஆனால் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்பதை சரியாகப்புரிந்து வரையறுத்துக்கொள்ளவேண்டும்.தமிழ்த்தேசியம் என்றால் தமிழர்நல அரசியல் என்பதுதான்.அதில் இருந்துதான் சமஷ்டியா,சுயாட்சியா,தனிநாடா என்பதெல்லாம் தீர்மானமாகின்றதே தவிர தமிழ்த்தேசியம் என்றாலே பிரிந்து சென்று தனிநாட்டை உருவாக்குதல் என்று சிந்திப்பது அறியாமையே தவிர வேறொன்றில்லை.இந்தியாவை பொறுத்தவரைத் தமிழர்களின் நலன்கள் தனித்தமிழ் நாட்டுக்கோரிக்கையால் பேணப்படப்போவதில்லை.மேலும்,அது தமிழர்களின் நலன்களை பாதிக்கக்கூடியது என்பதே உண்மையாகும்.
தற்போது பரவலாகவுள்ள சிந்தனையில் மிகமுக்கியமான மாற்றம் ஏற்படவேண்டும்.தமிழ்த்தேசியம் என்றால் இந்தியத்தேசியத்திற்கு எதிரானது என்று கருதுவதோ அல்லது இந்தியத்தேசியம் என்றால் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கருதுவதோ ஒருபோதுமே பலனளிக்கப்போவதில்லை.இன்றுள்ள பலசிக்கல்களுக்கு அவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதாக மாற்றப்பட்டுள்ளதே முக்கியகாரணமாகியுள்ளது.அடிப்படையில் இந்தியத்தேசியமும் தமிழ்த்தேசியமும் ஒன்றின் நலன்களை ஒன்றுபாதுகாக்க கூடியவையாகவே இருக்கின்றன.ஆனால் குறுங்குழு மனப்பான்மையுடைய கொள்கை வகுப்பாளர்களும்,சிந்தனையற்ற உணர்வாளர்களும் இவை இரண்டையும் முரண்பாடானதாகக்கருதி தமது செயற்திட்டங்களை உருவாக்குவதே தற்போதைய அனைத்து நலன்சார் பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
இந்தியத்தேசியம் என்பது ஒரு பண்பாட்டுத்தேசியம்.இந்தப்பண்பாட்டிலிருந்து தமிழர்களை தனியே பிரித்துவிடமுடியாது.அவ்வாறே தமிழர்கள் இல்லாமல் இந்தியப்பண்பாட்டையே புரிந்துகொள்ளமுடியாது.
இந்தியா இன,மொழி,மத,சாதி எனப்பல்வேறு அடையாளங்களைக்கொண்ட சமூகங்களால் ஆனதென்பதால் ஏதாவது ஒரு அடையாளத்தை மையப்படுத்திய ஆதிக்க அரசியல் என்பதை உருவாக்குவது மிகவும் கடினமாகும்.இவ்வாறான ஒரு சாதகமான சூழலில் அரசனயத்துடன் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு தமது அரசியல் பலத்தை பயன்படுத்தும் எந்தவொரு சமூகமும் தனது நலன்களை வென்றெடுப்பது சாத்தியமே.தமிழ்நாட்டுத்தமிழர்கள் இந்தத்திசையிலேயே சிந்திக்கவேண்டும்.
அமெரிக்காவின் மக்கள் தொகையில் யூதர்கள் ஏறத்தாழ 2 சதவீதத்தினர் மட்டுமே.ஆனால் அவர்களால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கமுடிகின்றது.இத்தனைக்கும் யூதர்கள் அமெரிக்காவின் பெரும்பான்மை சமூகத்தினரான வெள்ளையர்களுடன் இனரீதியாகவும் மதரீதியாகவும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.அவ்வாறிருந்தபோதும் அமெரிக்காவின் நலன்களுடன் தமது நலன்களையும் வெற்றிகரமாக இணைத்து முன்னெடுக்ககூடிய புத்திசாலித்தனம் அவர்களிடம் இருக்கின்றது.நோபல் பரிசுகளில் 20 சதவீதத்திற்கு அதிகமானவற்றைப்பெற்ற உலகமக்கள் தொகையில் 0.2 சதவீதம் மட்டுமேயுள்ள அச்சமூகத்திடம் இருந்து நாம் கற்றுக்கோள்ளவேண்டிய சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்றாகும்.
அமெரிக்காவில் நேரடியான அரசியல் பலமற்ற யூதர்களால் அந்நாட்டின் கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்தமுடியுமாயின் ஏறத்தாழ இந்தியமக்கள் தொகையில் 6 சதவீதத்தையுடைய 7 கோடி மக்களையும்,சக்திவாய்ந்த ஒரு மாநிலத்தையும்,ஒரு யூனியன் பிரதேசத்தையும் உடைய தமிழினத்தால் இந்தியாவின் கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்தமுடியாதா?
நெடுமாறன்,வைகோ,சீமான் போன்ற தலைவர்களில் ஈழத்தமிழர்கள் பெருமதிப்பையும் பேரன்பையும் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.பாரததேசத்தின் அழிந்துவிடாத தர்மத்தின் குரலாக அவர்கள் வரலாற்றில் இடம்பெறுவார்கள் என்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை.ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக விடக்கூடிய ஒரு தவறை,அரசியல் விவேகமற்றதன்மையை,தந்திரோபாயச்சறுக்கலை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
தமிழர்களின் நலன்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக நினைத்தோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள்.அவ்வாறான முடிவுகளை எடுத்த,எடுக்கின்ற ஆட்சியாளர்களிலும் அதிகாரவர்க்கத்தினரிலும் எத்தனைபேர் இந்தியாவின் நலன்களில் உண்மையான அக்கறையுடையவர்கள் என்று சிந்திப்பதில்லை.ஊழலையும்,அதிகாரத்துஷ்பிரயோகத்தையும் வாழ்க்கைமுறையாகக்கொண்டு நாட்டின்நலன்களை விற்று பிழைப்பவர்களே அவர்களில் பெரும்பான்மையானோர் என்பது தெரியாதா?இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவுடன் இப்படிப்பட்டவர்கள் அதைப்பற்றி கவலையடைந்து தங்களின் கோரிக்கைகளின் பக்கம் கவனம் திருப்புவார்கள் என்று நினைப்பதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை.இவ்வாறான ஆட்சியாளர்கள்,அதிகாரவர்க்கத்தினர்,அரசியல் தரகர்கள்,ஊடகவியலாளர்கள் ஆகியோரிடமிருந்து இந்தியதேசத்தையும் அதன் மக்களையும் வேறுபடுத்திப்பார்த்தேயாக வேண்டும்.
தமிழ் உணர்வுடைய சிறு அமைப்புகள் தமிழகத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் தமது தீவிர எதிர்ப்பிரச்சாரத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை கரைத்துவிட்டதுடன் அதனுடன் கூட்டணியமைத்திருந்த திமுகவையும் பலவீனப்படுத்தி தற்காப்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன.இது தமிழகத்தின் அரசியல் சமன்பாடுகளை மாற்றியுள்ளது.தமிழ்த்தேசிய அமைப்புகள் தமது அரசியல் பலத்தைப் பெருக்கிகொண்டால் ஜனநாயக வழியினூடாகவே தமது இலக்குகளை அடையமுடியும் என்பதற்கு இது ஒரு வெள்ளோட்டமாகவும் அமைந்துள்ளது.
இந்தியா என்பது ஒரு யானை அதன் பாகனாக யார்யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.அதனால் அந்த யானையின் தும்பிக்கை என்னுடையது,தலை என்னுடையது,கால் என்னுடையது என்று வேறுவேறாக வெட்டி எடுப்பதால் எவருக்கும் பயனில்லை.
தமிழ்த்தேசியவாதிகளின் நோக்கம் எப்படி அந்த யானையின் பாகனாவது அல்லது குறைந்தபட்சம் அந்தப்பாகனை தமிழர் நலன்களையும்,இலக்குகளையும் எட்டுவதற்குரிய விதத்தில் யானையை செலுத்துபவனாக மாற்றுவதற்கு எவ்வாறு அரசியல் பலத்தை பயன்படுத்துவது என்பதாகவே இருக்கவேண்டும்.
வளமான வலிமையான இந்தியா அதில் முதன்மையான தமிழகம் என்பதே குறிக்கோளாக இருக்கவேண்டும்.
“ இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க … ”
ந.சிவேந்திரன்
அன்புள்ள சிவேந்திரன்
ஈழத்திலிருந்து இப்படி ஒரு கடிதம் வந்திருப்பது நிறைவை அளிக்கிறது. வெறும் உணர்ச்சிவேகங்களுக்கு அப்பாற்பட்டு யோசிப்பதன் விளைவு இது. இன்று ஈழம் என்ற சொல் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைச் சக்திகளின் ஆயுதமாக ஆகியிருக்கும் நிலையில் இந்தப்பார்வை முக்கியமான ஒன்று
நான் எப்போதும் நம்பி சொல்லிவருவது, வலிமையான இந்தியா என்பது மட்டுமே வலிமையான தமிழ்ச்சமூகத்தின் பீடமாக இருக்க முடியும். தமிழர்கள் இந்தியா எங்கும்பரவி வலிமையாக இருக்கிறார்கள். அவர்களின் வெற்றி இந்தியாவின் கூட்டு அதிகாரத்தை தன் வசம் திருப்பும் முகமாக ஒருங்கிணைக்கப்படுவதே இன்றைய தேவையாக இருக்க முடியும். பிரிவினை கோரிக்கைகளுக்குப்பின்னால் நாமறியா ஐயத்திற்குரிய சக்திகள் இருக்கின்றன. அவை தமிழகத்தையும் இந்தியாவையும் அழிவை நோக்கிக் கொண்டுசெல்லும் நோக்கம் கொண்டவை
நீங்கள் சொல்லும் கடைசி வரி ஈராயிரம் வருடம் முன்பே சொல்லப்பட்டுவிட்டது. நமக்குக் கிடைக்கும் பழந்தமிழிலக்கியத்தின் ஆகப்பழைய பகுதி என்பது புறநாநூற்றின் முதல் இருபது பாடல்கள். அவற்றிலேயே இந்தியா என்ற பண்பாட்டு தேசத்தின் நிலவியல் எல்லைகள் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டன. அதில் உள்ள ஓர் சிறந்த கூறாகத் தமிழ்கூறும் நல்லுலகம் அடையாளப்படுத்தப்படுவது மேலும் பல நூற்றாண்டுகள் கழித்து சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் அளித்த பாயிரத்திலும்தான்
ஜெ

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe