குறையொன்றுமில்லை பாடல் பிறந்த கதை

Published:

periyar rajaji - 2026

குறையொன்றுமில்லை பாடல் பிறந்த கதை; 1925. நாடெங்கிலும் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்டம் புது எழுச்சி கொண்டிருந்த காலகட்டம்.

அந்நிய அரசின் நீதிமன்றங்களை அன்றைய வக்கீல்கள் முழுமையாகப் புறக்கணித்து வந்த காலம். தற்போதைய ஆந்திர மாநிலத்திலிருக்கும் சித்தூரிலிருந்த ஒரு காங்கிரஸ் மேலவை உறுப்பினரும் மூதறிஞர் ராஜாஜியின் நண்பருமான ஒரு வக்கீல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமரர் ராஜாஜி சித்தூர் செல்கிறார்.

காந்தியின் கட்டளையை மீறி ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு ‘தாழ்த்தப்பட்ட பஞ்சமனுக்கு’ அப்பீலில் ஆஜராவதாக அவர் துணிந்து முடிவெடுத்திருந்தார்.

அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி என்ற எண்ணத்திற்கு அவர் வந்திருந்தார் என்பதும் கடைசி வரை அதை அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் அவரது மேன்மை.

அந்த மனிதன் அப்படி என்ன தவறிழைத்துவிட்டான்? தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து விட்டதால் அவன் திருப்பதி கோவிலுக்குள் நுழைந்து இறைவனைப் பார்த்து வணங்க அனுமதியற்ற அவலமான காலகட்டம்.

அப்போதிருந்த நீதிமன்றம் அதை மீறும் ‘பஞ்சமர்களை’ சிறைக்கு அனுப்பிய காலம். அந்த மனிதன் பத்து வருடங்களாக திருப்பதி கோவிலுக்குள் செல்லத் துடிக்கிறான். அனுமதி இல்லை. ஒரு நாள் ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் பக்திமேலிட கோவிலுக்குள் நுழைய காவலர் கைது செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

அவனுக்காக அப்பீல் செய்த அந்த சித்தூர் வக்கீல் குற்ற வழக்குகளில் ஜாம்பவான் ஆகிய ராஜாஜிக்கு அந்த அப்பீலை நடாத்தித் தரும்படி வேண்டுகிறார். ராஜாஜிக்கு மிகப்பெரிய சவால். ஏழு வருடங்களாக காந்தியின் கட்டளைக்கிணங்கி தான் புறக்கணித்து வந்த நீதிமன்றப் பணியை இந்த ஒரு வழக்கிற்காக மீண்டும் ஏற்பதா? வேண்டாமா? கட்சியா? நியாயமா?

அரிசனங்களின் ஆலயப்பிரவேசம் அவசியமானது என்ற அவரது கொள்கைக்கு முன்னால் காந்தியின் கட்டளை தோற்கிறது. அந்த ஏழைக்காக சித்தூர் செசன்ஸ் கோர்ட்டில் அந்த மேல்முறையீட்டில் ஆஜராக ராஜாஜி முடிவெடுக்கிறார். ஆனால் அவரது வக்கீல் தொழிலுக்கான உரிமத்தை பல்லாயிரக் கணக்கான காங்கிரஸ் வக்கீல்கள் போல அவரும் பார் கவுன்சிலிடம் திரும்பத் தந்துவிட்டாரே?

எப்படி ஆஜராவது என்கிறார் அந்த சித்தூர் வக்கீல். கவலை வேண்டாம் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் வக்கீலாக இல்லாமல் வக்காலத்து இல்லாமல் தனிமனிதனாக ஒரு குற்றவாளிக்கு ஆஜராக வழி உண்டு என்பதை சுட்டிக்காட்டி அவர் சித்தூர் சென்ற நாள் 22-12-1925.

ஆங்கிலேய நீதிபதி அவருக்கு விதிகளின் படி அனுமதி அளிக்க மூதறிஞர் ராஜாஜி அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தோடு வக்கீல் உடையின்றி சிவில் உடையோடு அவ்வழக்கை நடத்தி அந்த மனிதனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார்.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

அவனைத் தன்னோடு திருக்கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார். தெய்வ தரிசனம் அவனுக்குப் பரவசத்தையும் இவருக்கு மகிழ்வையும் தருகிறது. அந்த உணர்வு மேலீட்டில் மூதறிஞர் எழுதிய பாடல்தான் ‘ குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ கீர்த்தனை.

பிற்பாடு தனக்கு மாப்பிள்ளை ஆகியவரும் காந்தியின் மகனுமான தேவதாஸ் காந்திக்கு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து இந்த சம்பவத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதுகிறார். அது காந்தியாரின் பார்வைக்குச் செல்கிறது.

ஒரு உன்னதமான காரியத்தைச் செய்த்தற்காக அந்த மகாத்மா இந்த உத்தமரைப் பாராட்டுகிறார். அக்கடிதங்களை சபர்மதி ஆசிரமத்தில் தான் பார்த்ததாக ஒரு முறை இரயில் பயணத்தில் நான் சந்தித்த ஒரு அன்பர் சொன்னார்.

இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து முதன்முதலாக ராஜாஜியின் நினைவாக தி இந்து நாளிதழில் 2002 ம் வருடம் டிசம்பர் 24ம் தேதி ராஜாஜியின் பேரன் கோபால் காந்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

சற்றே நினைத்துப்பாருங்கள். 1925 ல் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் யாருக்கும் தெரியாமல் போகிறது. பிற்பாடு 1967ல் கல்கி வார இதழ் ராஜாஜி எழுதிய இப்பாடலை முதல் தடவையாக பதிப்பித்தது. ஆனாலும் இப்பாடலை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது இசையரசி எம். எஸ். சுப்புலக்ஷ்மி தான். 1979ம் வருடம் HMV நிறுவனம் எம்.எஸ். பாடிய ஸ்ரீவேங்கடேச பஞ்சரத்னமாலா என்ற ஒலித்தட்டில் இப்பாடலை அவர் அற்புதமாகப் பாடி அருமையான அப்பாடலுக்கு மேலும் மெருகேற்றியிருந்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

சிவரஞ்சனி, காப்பி மற்றும் சிந்துபைரவி ஆகிய மூன்று ராகங்களில் அமைந்த ராகமாலிகைப் பாடல் கேட்பவர்களை உன்மத்தம் அடையச் செய்ய வல்லது.

Related articles

Recent articles

spot_img