தஞ்சாவூர் நகரில் சுவாமி ட்ரான்ஸ்போர்ட் என்ற பஸ் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வந்த செல்வந்தரின் மகன் T N R என்று அனைவராலும் அறியப்பட்டவர் திரு T N ராமச்சந்திரன் அவர்கள்.
B.Com மற்றும் B L முடித்தபின் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். பாரதியின் சிஷ்யரான திரிலோக சீதாராமன் என்ற தமிழ் அறிஞரின் அறிமுகம் கிடைத்த பின் மெல்ல மெல்ல தமிழ்பால் T N Rக்கு காதல் ஏற்பட்டது. அதன் பின் தமிழில் தேவாரம், திருவாசகம், திருக்குறள் என்று பல்வேறு பாடல்களை கற்றறிந்தும், சைவ சித்தாந்தத்தில் பாண்டித்தியமும் பெற்றார்.
பெரிய புராணத்தில் நிபுணத்துவம் பெற்று இருந்ததால் சேக்கிழார் அடிப்பொடி என்று அழைக்கப்பட்டார்.
சைவ சித்தாந்தத்தை கரைத்துக் குடித்தவர் பாரதியில் கரை கண்டவர். பாரதியின் ஒவ்வொரு வரியை வைத்து ஒருமணி நேரம் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
ஆங்கில மொழியிலும் ஆங்கில இலக்கியத்திலும் மிகப் பெரும் புலமை பெற்றவர். ஷேக்ஸ்பியரும், வில்லியம்சும், கீட்சும், மில்டனும் இவருக்கு தலைகீழ் பாடங்கள்.
பெரிய புராணத்தையும், தேவாரத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். “ஷேக்ஸ்பியரும் சைவசித்தாந்தமும்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
தஞ்சாவூர் வீட்டில் கிட்டத்தட்ட நான்காயிரம் புத்தகங்களில் உள்ள லைப்ரரி வைத்திருந்தார். தன்னிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு வழங்கிவிட்டார்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த பெரியவர் T N R இன்று இரவு சுமார் 8 மணியளவில் சிவபதம் அடைந்தார். மறைந்த T N R க்கு நான்கு மகன்கள்.
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவரும், என் மரியாதைக்குரிய நண்பரும், ஸ்ரீ தொலைக்காட்சியில் அரசு கையில் ஆலயம் நிகழ்ச்சியை வழங்கி வருபவரும், சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத் துறையிடம் இருந்து மீட்டு தீட்சிதர்கள் வசம் ஒப்படைத்தவருமான திரு டி ஆர் ரமேஷ் அவர்கள் T N R ன் மூன்றாவது மகன்.
நாளை காலை சுமார் 8 மணியளவில் “கம்பர் அடிப்பொடி” பெரியவர் T N R இறுதி காரியங்கள் மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது மகன் இல்லத்தில் தொடங்குகிறது.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த பேராசிரியர் பெருந்தகை சாமி தியாகராஜன் T N R ஐ தன் குருவாக மதித்து வாழ்கிறார்.
தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் நபர்கள் தமிழ் அறிஞராக அறியப்படும் தமிழகத்தில், உண்மையான தமிழறிஞர் T N R க்கு, அவர் வாழ்ந்த காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காதது மிகவும் வருத்தப் படக் கூடியது.
டி என் ஆர் ஐ இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு என ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இழப்பு தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகப்பெரிய, ஈடுசெய்ய முடியாத இழப்பு. பெரியவர் டி என் ஆர் ஆன்மா சிவனடி சேர பிராத்திக்கிறேன்.
- ஓமாம்புலியூர் ஜெயராமன்
மூத்த தமிழறிஞர், தலைச்சிறந்த மொழி பெயர்ப்பாளர், சைவ சித்தாந்த சாகரம், நடமாடும் பல்கலைக்கழகம், சேக்கிழார் தொண்டரடிப் பொடி டாக்டர் டி.என். இராமசந்திரன் அவர்கள் இன்று மாலை 7:45 மணியளவில் சிவபதம் அடைந்தார். திரு டி.என்.ஆர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஒரு சகாப்தம் முடிவிற்கு வந்தது என்பது மட்டுமின்றி பண்பாடு, வரலாறு, பாரம்பரியம் தெரிந்த மிகவும் அரிதான ஒரு தமிழ் அறிஞரை இழந்து விட்டோம் என்ற வெறுமை ஏற்பட்டுள்ளது. மொழிக்கு அப்பாற்பட்டு சைவ சித்தாந்த ஆசான் ஒருவரை ஆன்மிக உலகம் இழந்து விட்டது.
பாரத நாட்டு மொழிகள் மட்டுமின்றி பல ஐரோப்பிய மொழிகளிலும் புலமைப் பெற்ற ஒரு ஞானி திரு டி.என். இராமசந்திரன் அவர்கள். நம் ஸ்ரீடிவியில் அரசு கையில் ஆலயங்கள் நிகழ்ச்சியில் பங்குபெறும் திரு டி.ஆர். இரமேஷ் அவர்களின் தந்தையார் திரு டி.என்.இராமசந்திரன் அவர்கள்.
பாரதி, கம்பன், சேக்கிழார், சங்க இலக்கியங்கள் என்று எதைப்பற்றிக் கேட்டாலும் அடுத்த நொடியே பிரவாகமாக ஓடி வரும் தமிழ் நதி வறண்டு விட்டது. இந்த நதி இறைவனின் ஜடை மீது இருக்கும் கங்கையில் கலந்து விட்டது.
சேக்கிழார் தொண்டரடிப் பொடி திரு டி.என்.இராமசந்திரன் அவர்களின் மறைவுக்கு ஸ்ரீடிவி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் தமிழறிஞரும் சைவ சித்தாந்த விற்பன்னருமான சேக்கிழார் தொண்டரடிப் பொடி திரு டி.என்.இராமசந்திரன் அவர்கள் பரிபூரணம் அடைந்தார்
சேக்கிழார் தொண்டரடிப் பொடி திரு டி.என்.இராமசந்திரன் அவர்களைப் பற்றிய குறும்படம்