பாரதியாரின் கண்ணன் பாட்டு பகுதி – 32
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
கண்ணன் என் காதலன் 3
காட்டிலே தேடுதல் – விளக்கம்
பாரதியார் இயற்கையை அழகுறப் பாடிய ஓர் கவிஞர். பாஞ்சாலி சபதத்தில் மாலைக்கால வர்ணனை செய்யும் இடத்தில், அர்ச்சுனன், திரௌபதிக்குக் கூறுவதுபோல இந்த பாடற்பகுதியை அமைத்திருப்பார்.
‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
உவகையுற நவநவமாய் தோன்றுங் காட்சி;
யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரிய பொருள்கொடுத்தும் இயற்ற வல்லார்?
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.
‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅவள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.
என்று மாலை வானத்தின் வனப்பைப் பாடுவார். நம்மில் எத்தனைபேர் இந்த மாலை வனப்பைக் காண மட்டும் கடற்கரைக்குச் சென்றிருப்போம்? மாலை வனப்பு மட்டுமல்ல ‘குயில்பாட்டில்’ காலை வனப்பைப் பின்வரும் வரிகளில் சொல்லுவார்.
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; –
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே,
இதைப்போல இந்தக் கண்ணன் பாட்டில் காடுகளின் வனப்பைப் பாசியிருக்கிறார். நாயகி, நாயகனைத்தேடி அடர்ந்த இருண்ட காட்டில் அலைகிறாள். அவளுக்கு தான் எங்கே செல்கிறோம் என்ற திசைகூடத் தெரியவில்லை. அங்கே வானுயர்ந்த மரங்கள்; நினைத்திராத சுவையுடைய கனிகள்; நாற்புறமும் மறைத்த வண்ணம் நிற்கும் மலைகள்; கலகலவென பாடியபடி நடந்து வரும் நதிகள் (அதாவது நதிகளில் பெருவெள்ளம் இல்லை); நட்ட நடுவில் நெருப்பைப் போன்ற சிவந்த நிறமுடைய பூக்கள்; நீள நீளமாய் கிடக்கும் இலைக் கடல்கள்; அங்கேயே கிடந்து ஊறித்திளைத்திட வேண்டும் என ஆவலைத்தூண்டும் நீர்ச்சுனைகள்; முட்கள் நிறைந்து இருக்கும் புதர்கள்; நம் மனதில் ஆசையை ஏற்படுத்தும் மாங்கள்; நம் மனம் பதற உறுமுகின்ற புலிகள்; இனிமையான குரலில் இசைக்கும் பரவைகள்; அங்கே நீளமாய்ப் படுத்திருக்கின்ற பாம்பு; இப்படிப்பட்ட திக்குத்தெரியாத காட்டில் உன்னைத் தேடி அலைகின்றேன்.
தன்விருப்பப்படி காட்டில் சுற்றித் திரியும் சிங்க ராஜா; அதன் உறுமலில் கலங்கி நிற்கும் யானை; யானையின் முன்னே மருண்டோடும் மான்கள்; இவற்றோடு மோதிவிடாமல் ஒதுங்கிப் போகும் தவளைகள்; இப்படிப்பட்ட இருண்ட காட்டில் உன்னைத் தேடி அலைந்து நான் சோர்ந்து விழலானேன். அப்போது கையில் கொலை வேலோடு வேடன் ஒருவன் என்னெதிரே வந்தான். அவன் என்னை அணைத்து, புணர முனைந்தபோது நான் அவனிடத்தில் என்னை விட்டுவிடும்படிக் கெஞ்சினேன். அவன் திடீரென கண்ணனாக மாறி என் முன்னே நின்றான். மணிவண்ணா உன் அருள் வாழி.
இந்தப்பாடலில் பாரதியாரின் இயற்கை மீது கொண்டுள்ள ஆர்வம் தெரிகிறது. இலையுதிக்காடுகளில் மரங்களில் இருந்து இலைகள் கடல்போல விழுந்துகிடப்பதை தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார் பாருங்கள். ஒரு நதி பாடிக்கொண்டே நகர்ந்து வருகிறது என்பதில் பல உள்ளர்த்தங்களை அடக்கிப் பாட பாரதியால் மட்டுமே முடியும்.
கவிதையின் தலைப்பில் இப்பாடல் பயாநகம், அற்புதம் ஆகிய ரசங்களை உள்ளடக்கியது என பாரதியார் குறித்துள்ளார். பயம் மனிதர்களோடு உடன்பிறந்தது. எதையாவது பார்த்து பயப்படாதவர்கள் இவ்வுலகத்தில் இல்லை. இப்பாடலில் காட்டின் அழகும் பயங்கரமும் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குமேலே தொல்லை செய்யும் ஒரு வேடவன் வேறு.
இறுதியில் நாயகி மனக்குழப்பம் நீங்கி கண்ணனை அடைகிறாள். ‘பயாநகம்’ மாறி ‘அற்புதமாக’ மாறிவிடுகிறது. இருவித ரசங்களின் கலப்பும் நமக்கு ஒருவித ரசனையைத் தருகிறது.