உன் பார்வை வீச்சில்… பல நாள்கள் பகற்கனவு கொண்டிருந்தேன்! எத்திக்கில் திரும்பினாலும் தித்திக்கும் உந்தன்முகம் வசீகரித்துக்கொண்டே இருக்கும்! நீ புன்னகைத்துப் பார்க்கையில் விழும் கன்னக் குழியில் விழுந்துகிடந்தேன்! தன்னுணர்வின் அச்சத்தால் எழ முயன்று களைத்துவிட்டேன்! கைதூக்கி விடவும் காதல் கனியவில்லை! கவன ஈர்ப்புக்காய் கடத்திய காலங்கள்… காலனின் கயிற்றுக்கு அருகே கொண்டு சென்றுவிடுமோ? கிடப்பில் வைத்ததால் செல்லரித்த காகிதமாய் என் காதல்! மருந்தாகி நோய் தீர்க்கும் என்னை மறுத்து ஒதுக்கிவிட்டாய்! அதன் பயன்பாடு காலாவதியாகி விஷமாகிப் போன தன்மை! இப்போதெல்லாம்… என்னில் இருக்கும் உன் செல்வாக்கை நீ இழந்துவருகிறாய்! என்னுள் இருக்கும் உன் இடம் நிரப்பப்பட்டு வருகிறது! உன் வசீகரிக்கும் குரலை ஐபேடில் அசத்தல் இசை பிடித்துக் கொண்டது..! உன்னைத் தழுவும் இன்பக் கனவை தலையணைகள் ஆக்கிரமித்தன! என் தூக்கத்தைக் கொன்று நீ பிடித்திருந்த இடத்தை நேற்றிரவு ஓர் எலியும்கூடப் பிடித்துக் கொண்டது.. ஆனாலும்… உன்னைச் சுற்றியே உழலும் நினைவுகளை ஆக்கிரமித்து அகற்றிக்கொள்ள வழி தெரியாமல் தவிக்கிறேன்…!
செல்வாக்கு இழப்பு !
Popular Categories



