நல்லோரை வாயாரப் பாராட்டு – நாடு
நலம்பெறவே உழைப்போரைச் சீராட்டு
பொல்லாரைப் பொய்யாரைக் கூடாதே – அவரைப்
புகழ்வோரின் பக்கமும்நீ போகாதே.
தேசத்தின் ஆற்றுமணல் அள்ளாதே – அத்
திருடர்கள் உதவியைநீ நாடாதே
காசுக்காய் மானத்தைத் தள்ளாதே – உயர்
காரியத்தில் பின்வாங்கிப் போகாதே
ஓட்டுக்காய் கைக்கூலி வாங்காதே – மன
உண்மைக்கு மாற்றாகப் பேசாதே
நாட்டுக்காய் பக்திசெயச் சொன்னவனாம் – நம்
ஞானகுரு பாரதிசொல் மாறாதே.
பாரதியார் நற்கவிதை கட்டுரைகள் – தினம்
படிக்கின்ற தோர்பழக்கம் கொண்டுவிட்டால்
பேரமைதி கொண்டுநாம் வாழ்ந்திடலாம் – ஒர்
பின்னடைவும் இல்லாமல் ஓங்கிடலாம்.
- கவிதை: மீ.விசுவநாதன்