ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்தால், சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும், என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது, ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும், எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அனுமதி கேட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசு அனுப்பிய மனுவை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரித்துவிட்டதாக கூறி, அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், ராஜிவ் காந்தி உட்பட 15 பேரை கொன்ற வழக்கில் தொடர்புடைய இவர்களை விடுவித்தால், அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனவும் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.