இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ஆனந்த் தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் பட்டது. இதில், 68 பேர் கைது செய்யப் பட்டனர்.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 68 பேர் கைது செய்யப்பட்டனர்! கோயமுத்தூரில் இந்துமுன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனந்தை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, கோட்டத் தலைவர் தங்க மனோகர், கோட்டச் செயலர் சக்திவேல், மாவட்ட பொதுச் செயலர் பிரமநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற 68 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழகத்தில் மத மோதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழக அரசு இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் மூலம் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.