சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ‘கைது’ உத்தரவு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இந்த உத்தரவு திருப்பூரை மனதில் கொண்டே பிறப்பிக்கப்பட்டது என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, திருப்பூரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தடுக்கக் கோரி வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, அனுமதியில்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களை கைது செய்து அப்புறப் படுத்தலாம் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக்காரர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எடுத்துக் கொண்டு, மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை மிரட்டும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், நீதிபதிகள் நேற்று தாங்கள் பிறப்பித்த உத்தரவு, திருப்பூர் சம்பந்தப்பட்டது என்றும், தமிழகம் முழுவதற்கும் பொருந்தும் வகையில் உத்தரவு வெளியிடவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், திருப்பூர் போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகக் கூறி, வழக்கை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வரும் 11ம் தேதி அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.