
தமது மாநிலத்தைச் சேர்ந்த நபரையே மாநிலத்துக்குள் புக விடாமல், அடித்துத் துரத்தியுள்ளனர் கேரள மாநில போலீஸார். ஆனால் வெகு தொலைவு நடந்து வந்த அந்த நபரை தமிழக போலீசார் இருக்க இடம் கொடுத்து பசிக்கு உணவும் அளித்து காப்பாற்றினர். மனதை உருக்கும் இந்தச் சம்பவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் நடைபெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள புளியரை சுங்கச்சாவடிக்கு சோர்வாக நடந்து வந்துள்ளார் ஓர் இளைஞர். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது அவர், தமக்கு திருவனந்தபுரம் பகுதியில் பூந்துரா, மாணிக்யவிளாகம்தான் சொந்த ஊர் என்றும், தமது பெயர் நௌஷத் என்றும், 35 வயதான தமது தந்தை பெயர் பஷி பாய் என்றும் கூறியுள்ளார்.

தாம் தமது நண்பருடன் நாகர்கோவில் வழியே கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் கூறியுள்ளார். அப்படி வந்த போது, கேரளத்தில் இருந்து எந்த அனுமதியும் பெறாமல் சாதாரணமாக எப்போதும் வருவது போல் வந்ததாகக் கூறியுள்ளார்.
அவர் குறித்த விவரங்கள், அவரது அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்த பின்னர்,அவரை கேரளத்துக்குச் செல்ல தமிழக போலீஸார் அனுமதித்துள்ளனர். இதை அடுத்து அவர் ஆரியங்காவு வழியாக கேரளம் நோக்கிச் சென்றுள்ளார்.

ஆனால், அவரை கேரள மாநில எல்லைக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. அவரை வனத்துறையினரும் ஆரியங்காவு சோதனைச் சாவடி போலீசாரும் அடித்ததுடன், கேரளத்துக்குள் அனுமதிக்காமல் துரத்தி அடித்துள்ளனர். இதை அடுத்து மீண்டும் அவர் தாம் வந்த மலைப் பாதை வழியிலேயே தமிழகத்துக்கு திரும்பியுள்ளார். பின்னர், தமிழக எல்லையில் மலை மேல் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலில் அவர் தங்கியுள்ளார்!
சோதனைக்காக சென்ற தென்காசி மாவட்ட போலீஸார் அவரைக் கண்டு மீண்டும் விசாரித்து அவரது நிலையைக் கண்டு மனமிரங்கி, மலை அடிவார கிராமத்தில் இருந்து உணவு வாங்கிச் சென்று கொடுத்து உதவினர். இந்த விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் அந்த நபருக்கு உதவ வேண்டும் என்று கோரினர்.


