
திருச்சி மாவட்டம் லால்குடியில் ஓடும் காரில் கர்ப்பிணி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஹரிஹரன் என்பவர், மதுரையை சேர்ந்த கீதா சோப்ரா என்ற பெண்ணை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருணம் செய்து கொண்டனர். பிறகு இருவரும் லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் கீதாவை ஹரிஹரன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். இப்போது அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கீதா வீட்டில் தனியாக இருந்த போது உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று அவரை காரில் கடத்திச் சென்றது. இது குறித்து ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பெண்ணின், அப்பா, அம்மாவே அவரை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காரை துரத்திச் சென்ற காவல்துறையினர் துவரங்குறிச்சி செக்போஸ்ட் அருகே மடக்கிப்பிடித்தனர்.
கீதாவை கடத்திய தந்தை மாரிராஜன், தாய் விஜயகுமாரி , அவரது உறவினர்கள் கார்த்திக் , குமரேசன் , கார் டிரைவர் தினேஷ் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கீதாவின் திருமணம் பிடிக்காததால் கடத்திச் சென்றுவிட அவர்கள் முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.