சென்னையில் உள்ள வேளச்சேரி அண்ணாநகர் பகுதியில் உள்ள நடைபாதையில், 55 வயது பெண்மணி தலையில் பலத்த காயத்துடன், இரத்த வெள்ளத்தில் இருப்பதாக வேளச்சேரி காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இந்த பெண்மணி நேற்று முன்தினம் இரவன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில், உயிரிழந்த பெண்மணியின் பெயர் செல்வி (வயது 55) என்றும், இவர் வேளச்சேரி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவருடன் கும்பகோணத்தை சார்ந்த பரணீதரன் (வயது 40) என்பவரும் வசித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் கணவன் – மனைவி போல நடைபாதையில் தங்கியிருந்து, வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் போட்டு பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த பரணீதரனை காவல் துறையினர் கைது செய்து விசாரிக்கையில், கடந்த 5 வருடமாக நானும் – செல்வியும், கணவன் மனைவியாக வசித்து வந்தோம். பல நேரங்களில் இருவரும் ஒன்றாக மது அருந்திய நிலையில், கடந்த சில மாதமாக செல்வியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு யாருடனும் பழக்கம் உள்ளதா? என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.
சம்பவத்தன்று போதையில் செல்வி என்னுடன் வாய்தகராறில் ஈடுபடவே, ஆத்திரமடைந்த நான் அருகில் இருந்த கட்டையை எடுத்து, அவரது தலையில் தாக்கிவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். இதன்பின்னர் பரணீதரனின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.