சென்னை: அரக்கோணம் மின்சார ரயிலில் வந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், கைகளில் அரிவாள், கத்தியால் விரட்டி விரட்டி வெட்டியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று அம்பத்தூர் அருகே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் கத்தியுடனும், வாள் போன்ற நீண்ட அரிவாளுடனும் விரட்டி விரட்டி வெட்டினர்.
இதைப் பார்த்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை வீசித் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கைகளில் ஆயுதங்களுடன் வந்த மாணவர்கள், ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களைத் துரத்தி துரத்தி வெட்டினர். இதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அண்மையில்தான் இவ்வாறு கையில் கத்தியுடன் சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலைய நடைமேடையில் ரயிலில் பயணித்தபடி தரையில் கிழித்து தீப்பொறி பறக்க கோடு போட்டு பயணிகளை அச்சுறுத்திய மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.