நானும் ஒரு சமூக விரோதிதான் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், தானும் சமூக விரோதிதான் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்திற்கான தேவை குறித்து, குமாரசாமியிடம் பேச இருப்பதாகவும், காலா பட பிரச்னையை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்ட கமல், போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், 99 நாட்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, போராட்டத்துக்கான உதவிகளைச் செய்துவந்தது மாவட்ட காவல் துறை. நூறாவது நாளிலும் அமைதிப் போராட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப் படும் என்று கூறியிருந்தனர் மக்கள்.
எனவே அதற்கு ஏற்ப, வழக்கமான அமைதி வழிப் போராட்டம் என நினைத்து, குறைவான காவலர்களையே பாதுகாப்புக்கு நிறுத்தி, காவல் துறை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், ரகசியமாக வன்முறை போராட்டக் குழுக்களில் இருந்து ஊடுருவிய சிலர், முகத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு துணியால் கட்டிக் கொண்டு, கம்பு கட்டை ஆயுதங்களுடன் ஊர்வலத்தின் துவக்கத்தில் இருந்தே கலந்து கொண்டு, வன்முறையை அரங்கேற்றினார்கள். போலீஸாரை ஓட ஓட விரட்டி கடுமையாகத் தாக்கி, கற்களை எறிந்து காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டார்கள்.
இதை அடுத்தே துப்பாக்கிச் சூடு அளவுக்கு அன்றைய தினம் சென்றது. 144 தடை உத்தரவு இருக்கும் போது, இப்படி எல்லாம் வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப் படும் என்பது அந்த ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், ஊர்வலத்தில் வன்முறையை நடத்தச் சொல்லி தூண்டிவிட்டவர்களுக்கும் தெரியாமலா இருக்கும்.
இதனால்தான் ரஜினி காந்த் தனது கருத்தை தெளிவாகச் சொன்னார். போராட்டம் வேண்டாம், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும். போலீஸார் மீது வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு வரை சென்றது என்று தமிழகத்தின் நலன் கருதி தொலைநோக்கோடு ரஜினி சொன்ன கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள் அரசியல்வாதிகள் சிலர். குறிப்பாக சீமான் உள்ளிட்டவர்கள். எவரெல்லாம் ரஜினியின் கருத்தை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லோருமே சமூக விரோதிகள்தான் என்று ஒரு தரப்பு ஆணித்தரமாக தங்கள் கருத்துகளைக் கூறியது.
இந்நிலையில், கமல்ஹாசன் தாமும் ஒரு சமூக விரோதிதான் என்பதை, ரஜினியின் கருத்தை மறுதலித்து, போராட்டம் வேண்டும் என்று சமூகத்தை பதற்றத்தில் தள்ளி உறுதிப் படுத்தியிருக்கிறார்.
மேலும், ரஜினியின் கருத்து தனிப்பட்ட கருத்து என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன். ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை. அவர் எந்த அமைப்பிலும் இல்லை. அமைப்பு ரீதியாக இயங்கவும் இல்லை. ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.


