மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி காலமானார்

Published:

rs narayanaswami - 2026

சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி சென்னையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 85.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் ரங்கநாதபுரம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேச ஐயருக்குப் பிறந்த 11 குழந்தைகளில் ஒருவர் ஆர்.எஸ். நாராயண ஸ்வாமி. இவரது தாய் மாமா விஷ்ணம்பேட்டையை (திருக்காட்டுப் பள்ளிக்கும் திருவையாறுக்கும் இடையில் காவிரி கரையில் உள்ள ஊர்) பூர்வீகமாகக் கொண்ட வைத்யநாத ஐயர். இவரை மதுரை வைத்யநாத ஐயர் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். ஆம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பட்டியல் இனத்தோர் வழிபட ஆலயப் பிரவேசத்தை முன்னின்று நடத்திய அதே வைத்யநாத ஐயர்தான்.

படிப்பை முடித்துவிட்டு, இந்தியன் எக்ஸ்பிரஸில் (Indian Express) மதுரையில் பணிக்கு சேர்ந்தார். தன் நேர்மையான பத்திரிகை பணியால் அதன் செய்தி ஆசிரியராக  உயர்ந்தார். அந்தக் கால கட்டத்தில் தான் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன்  தொடர்பு ஏற்பட்டது. சங்கத்தின் மூத்த கார்யகர்த்தர் மதுரை அண்ணாஜியுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பின்னர் பாஜகவில் சிறிது காலம் இருந்தார்.1991ல் தென் சென்னை வேட்பாளராக நாடாளுமன்றத்திற்குப் போட்டி இட்டார்.

பின்னர் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இணைந்து தான் இவ்வுலகை விட்டு மறையும் இன்றைய நாள் வரை விஎச்பி.,க்காக களப் பணி செய்தார். கடந்த வாரம் அவர் எழுதிய பாரத தரிசனம் எனும் புத்தகம் மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நூல் வெளியீடு கண்டது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

அன்னாரின் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (03.08.2018) காலை 9 மணி அளவில் ஆழ்வார்பேட்டை, சீதம்மாள் காலனியிலுள்ள வீட்டில் இருந்து தொடங்குகிறது.

rsnarayasami - 2026

ஆர்.எஸ். நாராயணஸ்வாமியுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் பாஜக., மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன். அவர் தனது இரங்கல் குறிபில்,  திரு ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் மதுரையில் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் பணி புரிந்த காலத்தில் எனக்கு அறிமுகமானார். பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் அவர்கள் 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை வந்திருந்த போது நாராயணஸ்வாமி அவர்களது இல்லத்தில் தான் தங்கி இருந்தார்.

மீனாட்சிபுரத்தில் ஒட்டு மொத்த மதமாற்றம் நடைபெற்ற செய்தியை உலகறியச் செய்ததில் அவருக்கும் பங்குண்டு. சிறுபான்மை அல்லாதோரின் கல்விக் கூடங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை முதன் முதலாக அவர் எடுத்துச் சொல்லியதன் விளைவாகத் தமிழகத்தில் தொடங்கியது தான் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு.

நாராயணஸ்வாமி அவர்கள் அப்பழுக்கற்ற தேச பக்தர். ஹிந்து சிந்தனாவாதி. எந்தக் கருத்தைச் சொல்லும் போதும் உணர்ச்சி வயப்படக் கூடியவர். அவர் எழுதிய “பாரத தேச சரித்திரம்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (29-07-2018) பேசிய போது கூட அவரது அரை மணி நேர உரை உணர்ச்சி மயமாக இருந்தது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன்.- என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img