தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால்தான் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 25 ஆயிரம் நபர்களுக்கு 3 செண்ட் நிலம் இலவசமாகக் கிடைக்குமாம். செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ வாக ஆனாலும், ஆட்சி மாறினால்தான் கிடைக்குமாம்! இதை அடுத்து 3 செண்ட் நிலம் குறித்துப் பேசிய அரவக்குறிச்சி மக்கள் தற்போது நம்பிக்கையை இழந்துவிட்டனராம்!.
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முக்கிய் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி! காரணம் அ.தி.மு.க ஆட்சியில் 3 முறை எம்.எல்.ஏ ஆனதுடன், 4½ வருடம் அதே ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியும் வகித்தவர் செந்தில் பாலாஜி!
அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போதுதான், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பகீர் குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. சுமார் 12 ஆயிரம் பேர்களுக்கு தலா ரூ 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை முதல் பேட்ஜ்ஜிலும், இரண்டாவது பேட்ஜ் ஆக 3 லட்சம் முதல் 4 ½ லட்சம் ரூபாய் வரை நடத்துநர் மற்றும் ஓட்டுநராக பணியமர்த்த பெறப் பட்டதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டப் பட்டது.
செந்தில்குமார் என்ற பெயரில் ம.தி.மு.க.,வில் இருந்து திமுக.,வுக்கு மாறியவர். கரூர் ஒன்றிய கவுன்சிலராக 5 வருடம் இருந்து, அதிமுக., மாவட்ட செயலாளராக ராஜா என். பழனிசாமி இருந்தபோது, அக் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது மூலம் அதிமுக.,வில் இணைந்தவர் செந்தில் பாலாஜி.
அதன் பின்னர் அவரது அரசியல் வளர்ச்சி கிடு கிடுவென போனது. அப்போதைய அம்மா பேரவை மாவட்டச் செயலாளராக இருந்த நாகராஜன் மூலம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சென்னையிலேயே சந்தித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையால், தனக்கென்று ஒரு பாதையை அமைத்தார். ஜெயலலிதாவின் கவனத்தைக் கவரும் பொருட்டு, அவருடைய பிறந்த தினத்தில் ரத்த தானம், கண் தானம் எல்லாவற்றையும் கடந்து, உடல் தானம் செய்து அம்மாவின் கவனத்தில் இடம்பெற்றார். தொடர்ந்து மீடியாக்கள் பலம் மூலம் பிரபலம் அடைந்தார் செந்தில் பாலாஜி.
தொடர்ந்து, அதிமுக.,வில் மாவட்ட மாணவரணி, மாவட்ட செயலாளர் என பதவிகள் வந்தன. முதன் முதலில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆனார். பின்னர், அப்போதைய தி.மு.க ஆட்சியில் தி.மு.க எம்.பி., கே.சி.பழனிச்சாமி மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை எதிர்த்து மணல் கொள்ளை, குடிநீர் பிரச்னை என பல்வேறு பிரச்னைகளைக் கையிலெடுத்து, உண்ணாவிரதம் இருந்து, காவல் துறை தாக்குதலுக்கு ஆளாகி கவனம் பெற்றார். பின்னர் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆகி, ஜெயலலிதா ஆசியில் அமைச்சர் ஆனார்.
தமிழக அமைச்சராக பொறுப்பு வகித்த போதும், திடீரென அவரது அமைச்சர் பதவி பறிக்கப் பட்டது. இன்று வரை அதற்கான காரணம் எவருக்கும் தெரியவில்லை என்கின்றனர் அதிமுக.,வினர்.
எத்தனையோ காரணங்களை அடுக்கும் அவர்கள், தன்னை மீறி, எவரும் எந்தப் பொறுப்பும் வகிக்கக் கூடாது, அப்படி முயற்சித்தால் அவர்கள் மீது நடவடிக்கை! அவரை மீறி ஜெயலலிதா வரை பிரச்னை சென்றால், எதுவும் தெரியாதது போல, அப்படியா? நான் உடனே சரி செய்கின்றேன் என்று வாக்குறுதி! என்றெல்லாம் நடித்தவர். 2011இல் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதனை தோற்கடித்தார்! 2016ல் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தோற்கடிக்க முயற்சித்தார்… இப்படி பல குற்றச்சாட்டுகள் அவர் மீது!
இந்நிலையில் எந்தக் கட்சி அவருக்கு பதவிகள் கொடுத்ததோ, அதையெல்லாம் சிறிதும் நினைத்துப் பார்க்காமல், திமுக., வில் ஐக்கியமாகி விட்ட செந்தில் பாலாஜிக்கு ஒரே கனவு தற்போது வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆவதுதானாம்! காரணம், கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவி கொடுத்த ஸ்டாலினிடம், அரவக்குறிச்சி தொகுதி வேண்டும் என்று கேட்டு வாங்கினார் என்கிறார்கள்.
இதை அடுத்து மேற்கொள்ளப் பட்ட புதிய வியூகம் தான், 25 ஆயிரம் நபர்களுக்கு 3 செண்ட் நிலம் கொடுப்பது. இப்போது அரவக்குறிச்சி தொகுதியின் ஹைலைட் இதுதான்! இந்த யோசனையை ஸ்டாலினிடம் சொல்லி, ஸ்பெஷலாக ஸ்டாலின் வாயாலேயே அறிவிக்க வைத்துவிட்டார். ஆனால், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளில் இல்லையா என்று, அந்த மூன்று தொகுதியில் உள்ள வேட்பாளர்கள், ஏன் எங்கள் தொகுதியிலும் அப்படி ஓர் அறிவிப்பை ஸ்டாலின் சொல்லட்டுமே என்று கேட்டுள்ளனர். ஆனால், இது அரவக்குறிச்சிக்கு மட்டும்தான் என்று கூறப்பட்டதாம்.
இந்நிலையில், நேற்று இரவு வரை, நான் வெற்றி பெற்றால் 3 செண்ட் நிலம் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறிக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள். தற்போது திடீரென்று ஸ்டாலின் முதல்வரானால்தான் என்று டிராக் மாறிப் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் மக்களும் இந்தப் பரபரப்புப் பேச்சை மாற்றத் தொடங்கியுள்ளனர். மூன்று செண்ட் நிலம் என்ற சுருதி இப்போது மக்களிடம் தேயத் தொடங்கியிருக்கிறது!