திசையன்விளையில் குடும்பம் நடத்த மனைவி வராதததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தான்மொழியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 29). கூலி தொழிலாளி.
இவர் ஆவுடையாள்புரத்தில் வசித்து வரும் தனது அத்தை மகளான பேச்சியம்மாளை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்தாராம். இதில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, பேச்சியம்மாள் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்கு ஆவுடையாள்புரத்திற்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையே பாலகிருஷ்ணன், பேச்சியம்மாள் வீட்டிற்கு பலமுறை சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பேச்சியம்மாளை அழைத்தாராம். ஆனால் பேச்சியம்மாள் மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



