திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்! செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜன் ஆகியோரைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து திமுகவில் இணைந்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.
என்ன மிஸ்டர் தங்க தமிழ்ச்செல்வன்..? திமுக., வுல சேரணும்னு முடிவு செஞ்சிட்டீங்க .. ஆனா அதுக்காக கட்சியில சேர்ந்ததும் இப்படியா கட்சித் தலைவர் ஸ்டாலினை கேலியும் கிண்டலும் செய்வீங்க? என்று கேட்கும் விதமாக தங்க தமிழ்ச்செல்வன் சமூக ஊடக கருத்து தெரிவித்துள்ளார்.
“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிப்பவர் மு.க.ஸ்டாலின்” என்று கூறியுள்ள தங்க தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் இப்போது சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யப் பட்டு வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார் தங்க.தமிழ்ச்செல்வன்! ஆனால் அவரால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சுமுகமாக செல்ல முடியவில்லை. அவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவ்வப்போது தடலடியாக குறை கூறிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தினகரனை விமர்சித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே இருந்த பனிப்போர் வெய்யில் போராக மாறி வெளிச்சத்துக்கு வந்தது. கட்சியை விட்டு நீக்கவா அல்லது நீயாகப் போகிறாயா என்ற மிரட்டல் அளவுக்கு வந்தார் டிடிவி தினகரன். உன்னால் முடிந்தால் நீயாக என்னை வெளியில் அனுப்பு பார்ப்போம் என்று சவால் விட்டார் தங்க தமிழ்ச்செல்வன்.
இந்நிலையில், அமமுக கட்சியை விட்டு விலகிச் செல்ல தங்க தமிழ்ச்செல்வன் முடிவெடுத்தார். அமமுவில் அவரது பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க உள்ளோம். தங்க தமிழ்ச் செல்வன் கட்சியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று பேட்டி அளித்தார் தினகரன்.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தன் தாய்க் கழகமான அதிமுக.,வில் இணையவுள்ளார் என்றும், எடப்பாடி பழனிசாமி அவரை சற்று பொறுமையாக இருக்கும்படி சொன்னதாகவும் தகவல்கள் பரவின. காரணம் அதே தேனி மாவட்ட அதிமுக.,வின் பெரும்புள்ளியாக வலம் வரும் ஓ.பன்னீர்செல்வம் தங்க தமிழ்ச்செல்வன் இணைப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால் அதிமுக.,வுக்குச் செல்ல தடைகள் இருப்பதாகக் கூறப்பட்டன.
இந்நிலையில், தங்க தமிழ்செல்வனுக்கு வலை வீசியது திமுக., அதன்படி, இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருடன் தேனி மாவட்ட அமமுக., நிர்வாகிகள் சிலரும் திமுகவில் இணைந்தனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த 2001, 2011, 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தீவிர சசிகலா விசுவாசி; டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவர் என்றெல்லாம் பேரெடுத்த தங்க தமிழ்ச்செல்வன், தினகரனின் தவறுகளை சுட்டிக் காட்டப் போக, அதுவும் பொதுவில் விவாதிக்கப் போக, இப்போது கட்சியை விட்டே வெளியேறி நேர் எதிர் முகாமில் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது!
திமுக.,வில் இணைந்தவுடனேயே, தனது பேஸ்புக் பக்கத்தில் திமுக., சார்பிலான படங்கள், பின்னணி, தகவல்களை மாற்றி விட்டார் தங்க தமிழ்ச்செல்வன். தொடர்ந்து, ஒரு பதிவில், “ஆளுமை மிக்க தலைவரை ஏற்று திமுகவில் இணைந்துள்ளேன்!” – என்று கூறியுள்ளார்.