எச்சரிக்கை: கீழே கிடந்த மாஸ்க்கால் 5 பேருக்கு கொரோனா!
வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.
அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொற்று பரவியது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் 20 வயதான இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த வழியாக போலீசார் ரோந்து வந்துள்ளனர்.
ஆனால், தான் மாஸ்க் அணியவில்லை என்ற நிலையில், தனக்கு போலீஸார் அபராதம் விதிப்பார்களே என்று பயந்து போனார் அந்த இளைஞர்.
திடீரென கீழே ஒரு மாஸ்க் இருந்ததைக் கவனித்துள்ளார் அந்த இளைஞர். போலீசாருக்கு பயந்து போய், கீழே கிடந்த அந்த முகக் கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார்.
அப்படியே வீட்டுக்குச் சென்ற அவரால் வீட்டிலிருந்த அவரது பெற்றோர், தம்பி, தங்கைக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற விவரம் அதிகாரிகளுக்கு தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.