முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் வந்த காரில் தொங்கியபடி வந்த மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங்: வலுக்கும் கண்டனங்கள்!

Published:

mayor and commis - 2026

சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்று திரும்பிய முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் வந்த அமைச்சரின் காரில் சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் தொங்கியபடி பயணித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே நேற்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து பல இடங்கள் பாதிக்கப் பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பெரும் பாதிப்புகள் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உடனுக்குடன் சரி செய்ய களத்தில் இறங்கி பணி செய்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஓரிரு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பிறகு காசிமேடு சென்று மீனவ கிராமங்களை பார்வையிட்டதுடன், சேதமடைந்த படகுகளையும் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, எம்.பி., கலாநிதி, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், அதிகாரிகளும் சென்றனர். பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்து, புயல் சேதத்தை முன்னெச்சரிக்கையுடன் தடுப்பதில் செயல்பட்ட அரசின் நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் விளக்கினார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

பின்னர், ஸ்டாலின் அங்கிருந்து காரில் கிளம்பிச் சென்றார். அப்போது முன்னே சென்ற கான்வாயில் பிரியா தொங்கியபடி பயணித்தார். அவருக்கு பின்னால், கமிஷனர் ககன்தீப் சிங்கும் காரில் தொங்கியபடி பயணம் செய்தார். இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் படம் பிடித்தபோது, அதனைக் கண்ட மேயர் பிரியா வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டார். இந்தப் படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இது குறித்த கிண்டலும் கேலியும் அதிகரித்து வருகிறது.

தமிழக பாஜக., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இது குறித்துக் கூறியபோது, காசிமேட்டில் புயல் நிலவரங்களை பார்வையிட சென்ற முதல்வரின் வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் தொங்கியபடி சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களும் சென்ற காட்சி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அரசியல்வாதியாக மேயர் பிரியா வாகனத்தில் தொங்கி கொண்டு சென்றதை கூட நம்மால் கடந்து சென்று விட முடியும். ஆனால் மிக மூத்த இந்திய ஆட்சி பணி அதிகாரி (IAS) ஒருவர் வாகனத்தில் தொங்கியபடி சென்றுள்ளது அவரின் அந்தஸ்துக்கு, பணியின் கௌரவத்திற்கு உகந்ததல்ல. என்றே நான் கருதுகிறேன். முதலமைச்சரின் வாகனத்திலோ, தன் வாகனத்திலோ அவர் சென்றிருக்க வேண்டும். முதலமைச்சருக்கு தெரிந்து இந்த நிகழ்வு நடந்திருக்குமானால் துரதிர்ஷ்டவசமானது. தெரியாமல் நடந்திருந்தால் முதலமைச்சர் கண்டிக்க வேண்டிய நிகழ்வு இது…என்றார்.

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

Related articles

Recent articles

spot_img