ஈரோடு மாவட்டம் ஆலத்தூர் மேடு பகுதியில் பஞ்சாலை ஒன்று உள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களான ஜெய்கணேஷ், கோவிந்தராஜ், தங்கப்பாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் நள்ளிரவு வேலை முடித்துவிட்டு காரில் கிளம்பி சென்றனர். காரை கோவிந்தராஜன் ஓட்டினார்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கோவிந்த ராஜனின் கட்டுப்பாட்டை மீறி கார் தாறுமாறாக இங்குமங்கும் ஓடியது. எதிரே காபி கொட்டை ஏற்றி வந்துகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் தங்கப்பாண்டியன், சங்கர், ஜெய்கணேஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால், வீரராகவன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால்தான் விபத்து நடந்துள்ளதாக முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர்.


