கடையநல்லூர் அருகே காதல் தகராறில் காதலியின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் நாகராஜ் ( வயது 54). இவரது மகள் சுப்புலட்சுமி ( 23 ). இவரும் கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் ராஜ் ( 27) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர் .
இந்நிலையில் நாகராஜ் தனது மகளுக்கு சீவநல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்து கொண்டார். இதனை அறிந்த முருகன் ராஜ் தானும் சுப்புலட்சுமியும் ஒன்றாக இருந்த போட்டோவை திருமணம் பேசி முடிக்கப்பட்டவருக்கு அனுப்பியுள்ளார் .
இதனை அறிந்த நாகராஜ் கடந்த மாதம் 30ஆம் தேதி கண்மணியாபுரம் சென்று முருகன்ராஜிடம் கடிந்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் நாகராஜ், முருகன்ராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
நாகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முருகன்ராஜ் தென்காசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர் . இதில் நாகராஜ் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .