பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் ஏற்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினர் எச்.ராஜா வெள்ளிக்கிழமை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குடும்பத்தினருடன் வந்து வழிபாடு நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியது,
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை அதன் தன்மை மாறாமல் மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புடன் மாநில அரசு இணைந்து புதுப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓராண்டாகியும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சொரிமுத்து அய்யனார் கோயில் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்தக் கோயிலின் புனரமைப்பிற்காக ரூ. 15 கோடி நிதி ஒத்துக்கப்பட்டுள்ளதாக அறிவிப்போடு உள்ளது. 1954ஆம் ஆண்டுக்குப்பின் இங்கு புனரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. தொடர்ந்து வழிபாடு நடக்கும் கோயில்கள் எப்படி சிதிலமாக முடியும். இந்து அறநிலையத்துறை இந்து விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட வனத்துறை துணை இயக்குநர் கெடுபிடியோடு நடந்துகொள்கிறார். உடனடியாக பக்தர்களை எந்தவித கெடுபிடியும் இன்றி வழிபட அனுமதிக்க வேண்டும்.
தற்போதை அரசில் எந்தத் திட்டங்களும் செயல்படாமல் அறிவிப்போடு மட்டும் உள்ளது. திட்டங்களை செயல்படுத்தாமல் முதல்வர் பேரறிவாளனோடு கட்டிப்பிடித்து சடுகுடு விளையாடுகிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை. குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டவர் தண்டனைக் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதில் உச்சநீதிமன்றம் 142 ஆவது பிரிவை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. ஒரு கொலைக் குற்றவாளியை முதலமைச்சர் சந்திப்பது குற்றமாகும். பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுவதில் என்ன இருக்கிறது. திமுக தமிழர்களுக்கு எதிரானது. அதனால்தான் இலங்கையைச் சேர்ந்த பேரறிவாளனை ஆதரிக்கிறது. பொன்னாகுடி கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குடும்பத்தினரை திமுக தலைவர்கள் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது என்றார்.





