நன்றாக செயல்படக்கூடிய உயர் கல்வித்துறையில் தேவையின்றி அரசியலை கலக்க வேண்டாம் என
துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் மசோதா குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் புதிய சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது. மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அரசு விரைவில் அனுப்பி வைக்க உள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது,
நன்றாக செயல்படக்கூடிய உயர் கல்வித்துறையில் தேவையின்றி அரசியலை கலக்க வேண்டாம்.
மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் மசோதா என்பது திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காண்பிக்கிறது. துணைவேந்தர் பதவியை பிடித்த நபர்களுக்கு கொடுக்கும் வியாபாரமாக திமுக அரசு பார்க்கிறது. முந்தைய திமுக அரசு துணைவேந்தர் பதவியை எந்த அளவிற்கு வியாபாரமாக மாற்றியிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக கவர்னர் பல நல்ல துணை வேந்தர்களை நியமனம் செய்துள்ளார். எந்த துணைவேந்தரையும் கவர்னர் நேரடியாக தேர்வு செய்யவில்லை, தேர்வுக் குழு பரிசீலனையின் பேரிலேயே தேர்வு செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.





