அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது -ஜெயக்குமார் விளக்கம்

Published:

500x300 1846927 senthilmurugan - 2026

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் மோதல் ஏதும் இல்லை.கூட்டணி தொடர்வதாகவும், தமிழ்நாட்டில் மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுக கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்தும் விவாதித்தோம். மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டியது குறித்து ஆலோசித்தோம்.

தமிழ்நாட்டில் மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தி உருவாகி உள்ளது. எனவே இந்த ஆட்சியின் அவலங்களையும், எங்கள் முந்தைய ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அதுபற்றி உரிய நேரத்தில் அறிவிப்போம். பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையான கருத்தும் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக, பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை. மோதல் இருப்பதாக யார் சொன்னது? அப்படி எதுவும் இல்லை.

ஏதோ ஐடி பிரிவில் உள்ள சிலர், பக்குவப்படாத சிலர் சில கருத்துக்களை சொன்னார்கள். அதற்கு நாங்களும் பதில் கருத்து கூறி விட்டோம். அதனால் கூட்டணி தொடர்கிறது.

அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி. இந்த கூட்டணி தொடரும். அண்ணாமலை, தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது.

ஓ.பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இந்த நிலையில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்பு செயலாளர் செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்நிலையில் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் செந்தில் முருகன் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img