
போலீஸ் ஆள் சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால், தன்னை கொல்ல சதி நடந்திருப்பதாக தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கல்பனா நாயக் குற்றம்சாட்டி உள்ளார். இது தமிழகத்தில் மக்களிடமும், அரசியல் மட்டத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 2024ம் வருடம் ஜூலை 29ம் தேதி அன்று, இங்கு திடீரென தீ விபத்து நிகழ்ந்த்தால், பெரும் பரபரப்பு நிலவியது. ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 15, 2024 அன்று இப்புகாரை டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கல்பனா நாயக் அனுப்பிவைத்துள்ளார். இதை அடுத்து, அவரின் புகார் மீது விரிவான விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டார். ஆனால் 6 மாதங்கள் கடந்த பிறகும் விசாரணை முடிவுகள் வெளிவரவில்லை. எனினும், இந்தத் தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக கல்பனா நாயக் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், தீ விபத்தை சுட்டிக்காட்டிய ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்ததால் தம்மை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏடிஜிபி கல்பனா நாயக், இதுகுறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது…
ஜூலை 29, 2024 அன்று, சென்னையில் எனது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை, நான் வெளிக்கொண்டு வந்த சில நாட்களில், இந்த தீவிபத்து நடந்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த இந்த ஆட்சேர்ப்பை நான் தடுத்ததால், தமிழக அரசுக்கு ஏற்படவிருந்த அவமானம் தடுக்கப்பட்டது. ஆனால் அது, என் உயிருக்கு ஆபத்தையும், அரசு சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 29 அன்று, சென்னையில் உள்ள எனது அறைக்கு சென்ற போது, அங்கு தீவிபத்து நடந்திருந்தது. எரிந்த என் நாற்காலியைக் கண்டபோது, அதிர்ச்சி அடைந்தேன். நான் சிறிது நேரத்திற்கு முன்பு அறைக்கு வந்திருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். ஏசி.,யில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக நடந்த இந்த தீவிபத்து, என் அலுவலகத்தை அழித்து விட்டது. விபத்து நடந்த ஒரு நாளிலேயே, போலீஸ் ஆட்சேர்ப்பு பட்டியல், எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது.
மூத்த அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவினால், மற்ற போலீசாரின் நிலைமையை சிந்திக்க வேண்டும். – இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் நடந்த விசாரணையில் 31 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கல்பனா நாயக் அறையில் வேண்டும் என்றே திட்டமிட்டு தீ வைத்ததாக ஆதாரங்கள் இல்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தீ வைக்கவில்லை. தீ விபத்து நடந்த அன்றே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு நாசவேலை காரணமல்ல.
அறையின் மின்கசிவு கசிந்தது என்பதற்கான தடயங்கள் இருந்ததாக தடயவியல் துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. – என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.