சாதிக் கொடுமை காரணமாக, இறந்துபோன தனது அம்மாவின் உடலை தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் ஒடிசாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது!
ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி சின்ஹானியா(45) கணவர் இறந்தவிட்ட நிலையில், தன் 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன்னர், தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி, தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது மகன் சரோஜ் முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டார். யாரும் உதவ முன்வரவில்லை. அவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் எவரும் உதவ முன்வரவில்லை என்று கூறப் படுகிறது.
வேறு வழியின்றி சரோஜ் தனது அம்மாவின் உடலை சைக்கிளில் வைத்தார். பின்புற கெரியரில் இரண்டு கம்புகளை முட்டுக் கொடுத்து, அதன்மேல் மரக்கட்டையை வைத்து தாயின் உடலைக் கிடத்தினார். பின் தன் தலையில் ஒரு துண்டைப் போட்டுக் கொண்டு நான்கைந்து கி.மீ நடந்தே சைக்கிளை உருட்டிச் சென்று, உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்.
அவர் செல்லும் வழியில் எதிர்ப்பட்டவர்கள் யார் இது என்று கேட்டபோது, குரல் உடைந்த நிலையில், ’என் அம்மா’ என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார் சரோஜ்.
பின்னர் எவர் உதவியும் இன்றி, தனி நபராக காட்டுக்குள் தாயின் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியானதும், தகவலைப் படித்து பலரும் சோக மயமாகினர்.