Home Blog Page 4

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

1781972 congress1 - 2026

இன்று ஈரான் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தார்மீக நிலைப்பாடு அவர்களுடைய முந்தைய நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது குழப்பம் அளிப்பதாக இருக்கிறது. (சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் நடந்த) ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

இது அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றும், இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடக்கும் நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு செய்யப்பட்டது என்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

அப்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடை என்ற அழுத்தத்திற்கு பயந்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டது.

அப்போது ஈரான், பாகிஸ்தான், இந்தியாவை இணைத்து எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இவையெல்லாம் அத்தியாவசியமான மூலோபாயங்கள் என்று சொல்லப்பட்டது. அதே கட்சி இப்போது மத்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளை கோழைத்தனமானது என்று விமர்சிப்பது சாரமற்றது.

வசுதைவ குடும்பம் என்ற சொல்லாடலை மேற்கோள் காட்டி தார்மீக பொறுப்பை துறந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகிறார்.

ஆனால் அதே தார்மீக துடிப்பை அவர் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்ட போது காட்டாதது ஏன்?

காஷ்மீரில் 1980ல் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்த போதும் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருந்தது ஏன்?

  • பல்பீர் பூஞ்ச் – எழுதிய கட்டுரையில் இருந்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

1001314268 - 2026

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி இயங்க இருக்கும் வாராந்திர ரயிலின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
வரும் மார்ச் 18 புதன்கிழமை முதல் எர்ணாகுளம் வேளாங்கண்ணி சேவை துவங்குகிறது
மார்ச் 19 வியாழன் முதல் வேளாங்கண்ணி எர்ணாகுளம் சேவை துவங்குகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது .

இந்த விரைவு ரயில் கோட்டயம் கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக ஏற்கனவே சிறப்பு ரயில் இயங்கிய வழித்தடத்தில் இயங்கும்.

இதற்கான புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டது.முன்பதிவு நாளை முதல் துவங்கி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொல்லம் ராஜபாளையம் விருதுநகர் காரைக்குடி வழியாக வாரத்தில் இரண்டு நாள் இயங்கும் விரைவு ரயிலே மூன்றாவது நாள் சேவையாக மதுரை தஞ்சாவூர் வழியாக இயங்க இருக்கிறது அதே புதிய எர்ணாகுளம்-வேளாங்கன்னி பெட்டிகளை பயன்படுத்தி அதே கோச் வடிவிலேயே இயங்கும் . தென்காசி ராஜபாளையம் பகுதி மக்கள் பகல் நேரத்தில் மதுரை திருச்சி தஞ்சாவூர் செல்லலாம்.

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

1001314347 - 2026

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை நாளை சனிக்கிழமை 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மார்ச்15முதல்19வரை ஐந்து நாட்கள் பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகள் வரும் 15ம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு முந்தைய நாளான சனிக்கிழமை 14ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறப்பார். சன்னிதானத்தில் தீபம் ஏற்றி ஐயப்பனின் தவ அலங்காரத்தை கலைந்து பக்தர்களுக்கு பஸ்தபிரசாதம் வழங்குவார் தொடர்ந்து 18 படி கீழிறங்கி தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வருவார் அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மறுநாள் (15ம் தேதி) முதல் 19ம் தேதி வரை தினமும் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தாமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும். தரிசனத்திற்கும், சன்னிதானத்தில் தங்குவதற்கான அறைகளுக்கும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பங்குனி மாத பூஜையில் பக்தர்கள் பங்கெடுக்க ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சபரிமலைக்கு செல்லலாம் அல்லது பம்பை நிலக்கடலில் உடனடி முன்பதிவு மூலம் முன்பதிவு செய்து சபரிமலை செல்லலாம் .

தற்போது கேரளாவில் பலத்த வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் பாம்பை நதியில் தண்ணீர் வெகுவாக குறைந்து விட்டது சபரிமலை பம்பை எரிமேலி உட்பட பல்வேறு பகுதிகளில் 42 டிகிரி செல்சியதற்கும் மேல் வெயில் வாட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழக அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல செயல்படுவதை கண்டிப்பதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் நேற்று அவசரஅவசரமாக தமிழக அரசின் உள்துறை செயலர் மற்றும் காவல்துறை டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து பத்திரிக்கை சந்திப்பு நடத்தினர்.

அதில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை எல்லாம் தெரிவித்து அரசியல்வாதிகள் போல பேட்டி அளித்தது அதிர்ச்சி இருக்கிறது.

மாநில அரசின் நடவடிக்கையை சென்ற ஆட்சியுடன் ஒப்பீடு செய்வது அரசியல்வாதிகளின் செயல்பாடு. அதனை அரசு அதிகாரிகளை கொண்டு தமிழக அரசு செய்ய வைத்துள்ளதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் ஆளும்கட்சியின் ஏவல்துறை போல தங்களது சுதந்திரத்தை இழந்து நிற்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிறது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டு மக்கள் வெகுண்டெழும்போது அதனை சமாளிக்க பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை திசைதிருப்ப அதிகாரிகளே அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.

இன்றும் காவல்துறையின் சட்டமீறல்கள், லாக்கப் மரணங்கள், பொதுமக்களை பகிரங்கமாக மிரட்டும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வந்தபோதும் காவல்துறை உயரதிகாரிகளும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேசத்திற்கு அச்சுறுத்தலான மதஅடிப்படை பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடனமாடுகிறார்கள். கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த சிலிண்டர் வெடிகுண்டு வழக்கை திசைதிருப்ப நடந்த நாடகம் இதற்கு எடுத்துக்காட்டு.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் தேசிய பாதுகாப்பு படையால் (NIA) தான் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக நுண்ணறிவு பிரிவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

சிறைச்சாலை முதல் காவல்நிலையம் வரை அலுவலகத்தில் புகுந்து தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் பயமின்றி நடமாடுகின்றனர். நீதிமன்றத்தில் கொலைகள் இந்த ஐந்தாண்டுகளில் தான் அதிகம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதிகள் , கூலிக்கு கொலை செய்யும் குற்றவாளிகள் தமிழகத்தில் பெருகியுள்ளனர்.

பல வழக்குகளில் புகாரை பதிய காவல்துறை மறுத்ததுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதனால் வழக்குகள் குறைந்தது போல் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது தமிழக அரசு. காவல்துறை காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததை நீதிமன்றம் கண்டித்தது எல்லாம் நாம் கண்ட உண்மை தானே! இவையெல்லாம் காவல்துறைக்கு கிடைத்த விருதுகளா?

நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, மன்னிப்பு கேட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கெஞ்சியதும் இந்த ஐந்தாண்டுகளில் தானே நடந்தது. அதேசமயம் நீதிமன்றத் தீர்ப்பு என்று காரணம் காட்டி மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகமாக பயன்படுத்தி பல கோவில்களை இடித்ததும் இதே ஐந்தாண்டுகளில் தான்.

ஆளும்கட்சி ரவுடிகள் பத்திரிகையாளர்களை கடத்தியதும், செய்தியாளர்களை தாக்குவதும், பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுப்பதும் அனைவரும் அறிந்ததே. அத்தகையோர் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிலும் கனிமவள கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்தது தானே உண்மை.

ஆளும்கட்சியின் ஆதரவோடு பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தும் போக்கு நடைபெற்றதும் இந்த ஐந்தாண்டுகளில் தானே! அத்தகைய குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கஞ்சா முதலான போதை பொருட்கள் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை கொண்டு செல்வது பகிரங்கமாக நடக்கிறது. அதற்கு ஏஜெண்ட்கள் நியமிக்கும் அளவு போதை தொழில் வளர்ந்துள்ளது. ஆனால் இது எல்லாம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது யாரை காப்பாற்ற?

அண்ணா பல்கலைக்கழகம் முதல் விளாத்திகுளம் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஏராளம். ஆனால் இதில் காவல்துறையின் நடவடிக்கைகள் தாமதமாக காரணம் என்ன?

கடந்த ஐந்தாண்டுகளில் போதையால் நடந்த கொலை, கொள்ளை, கத்திகுத்து மனித உயிர்ப்பு அதிகம். ஆனால் காவல்துறைக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலையில் இவற்றின் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்?

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக கருத்திட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்து கைது செய்தது.

அதேசமயம் பிரதமர் மீதும் நீதிபதிகள் மீதும் இந்திய குடியரசு தலைவரைக் கூட அவமதித்தவர்கள், அவதூறாக கருத்து பதிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக தான் காவல்துறை ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது.

இந்துமுன்னணி உட்பட பல அமைப்புகள் ஜனநாயக வழியில் ஆர்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தே வந்துள்ளது. நீதிமன்றத்தின் மூலமே அனுமதி பெற்றே ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. ஆனால் ஆளும்கட்சி அதன் கூட்டணி கட்சியினர் எவ்வளவு ஆபாசமாக, தேசத்திற்கு எதிராக பேசினாலும் வழக்கு பதிய வில்லையே.

இதுபோல் காவல்துறையின் நூற்றுக்கணக்கான செயல்பாடுகள் மக்களின் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு காவல்துறையின் கைகள் ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கட்டப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

எனவே காவல்துறை அதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காக பலிகடா ஆக்கப்படுவதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல செயல்படக்கூடாது.

அரசியல் வாதிகள் அதிகாரம் ஐந்தாண்டுகள் தான். அரசு அதிகாரிகள் பதவி, அதிகாரம் என்பது மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

crowd in petrol bunk - 2026

ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் சென்னையில், ஏதாவது ஒரு புயல் எச்சரிக்கை வந்தால் போதும், உடனே டப்பா டப்பாவாக பால் பாக்கெட்களை ஒரு சிலரே தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். நாளைக்கு காய்கறியே கிடைக்காது என்பது போலவும், காய்கறி இல்லாமல் மறுநாள் உயிரே வாழ முடியாது என்பது போலவும் கதறிக் கொண்டு, ஒட்டுமொத்தமாக காய்கறிகளை அள்ளிக் கொண்டு போவார்கள். கடைகளிலும், ஷாப்பிங் மால்களிலும்  ஒரே நேரத்தில் பலர் முட்டிமோதி பொருட்களை வாங்க அலைமோதுவதை வாடிக்கையாகப் பார்த்து வருகிறோம். எல்லாவற்றுக்கும் காரணம், சுய நலன் என்பது மட்டுமின்றி, அறியாமையும், வதந்திகளை அப்படியே நம்பிக் கொண்டு பதற்றம் அடைவதும் தான்!

எவரோ ஒருவர், ஒரு குறிப்பிட்ட பெட்ரோ பங்கில் பெட்ரோல் போடப் போன போது, ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டார்கள் எனச் சொல்லி, பெட்ரோலே இனி கிடைக்காது, தேவைப்படும் அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று வதந்தி கிளப்பி, தெருவில் உள்ள அனைவரும் வேறு இடத்திற்குச் சென்று பெட்ரோல் போட அலைவதையும், போதாக் குறைக்கு போன் போட்டு, ‘சீக்கிரம் போயி வாங்கிடு’ என்று பீதியைக் கிளப்புவதையும் இப்போது பார்த்து வருகிறோம். 

பால் ஓரிரு நாள் தான் கெடாமல் இருக்கும். பத்து பாக்கெட் வாங்கி வைத்து பத்து நாட்களுக்கு ஒருவரே பயன்படுத்த முடியுமா? புயல் வந்தால் மின் தடையும் கூடவே வருமென்பது தெரியாதா என்ன? கோவிட் போன்ற மிக மோசமான காலகட்டத்தையும் கடந்து வந்திருக்கிறது நம் நாடு. அப்போதெல்லாம் எப்படி நடந்து கொண்டு இன்றளவும் நாம் ஜீவித்திருக்கிறோம் என்பதை உணர்ந்து சிந்திக்கக் கூடவா தோன்றாது!?

ஒட்டுமொத்தமாக சிலிண்டர்களை பதுக்கி வைத்து பின்னாளில் அதிக விலைக்கு விற்கலாம் என்று கணக்குப் போட்டு சிலிண்டர்களைப் பதுக்கிய இருவரை மதுரை அருகே ‘அத்தியாவசியப் பொருள்கள் தடுப்புச் சட்ட’த்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். எத்தனை எத்தனை மக்கள் இப்போது கேன்களிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் பெட்ரோலை வாங்கிக் கொண்டு ஆலாய்ப் பறக்கிறார்கள். உண்மையில், பெட்ரோல் ஆவியாகக் கூடிய தன்மை கொண்டது. ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்தால் சில நாட்களில் அனைத்தும் ஆவியாகிவிடும், பிறகு எங்கே அதை பயன்படுத்த முடியும்?!

சாதாரணமாக கேன்களில் அவசரத் தேவைக்குக் கூட பெட்ரோலைத் தரமாட்டார்கள். ஆனால் தமிழகத்திலோ இப்போது லாரிகளிலும், டிரம்களிலும் 500 லிட்டர் பிடிக்கும் தண்ணீர் டின்களிலும் அல்லவா பெட்ரோலை வாங்கிக் கொண்டு செல்வதாக செய்திகள்!

இந்திய சட்டப்படி பெட்ரோல் பங்குகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத கேன்களில் பெட்ரோல் அல்லது டீசல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது. இது 1934 ஆம் ஆண்டின் பெட்ரோலியச் சட்டம் (Petroleum Act, 1934) மற்றும் 2002 ஆம் ஆண்டின் பெட்ரோலிய விதிகள் (Petroleum Rules, 2002) ஆகியவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. 

முக்கிய சட்டங்கள் மற்றும் தண்டனைகள் :

குற்றம்: அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் எரிபொருளை நிரப்புவது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி தடையாகும்.

தண்டனை: விதிகளின்படி, இந்தத் தடையை மீறினால் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். கடுமையான விதிமீறல்களுக்கு சிறைத்தண்டனை சுமார் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

நிர்வாக நடவடிக்கை: விதிமீறலில் ஈடுபடும் பெட்ரோல் பங்கின் உரிமம் ரத்து செய்யப்படலாம் அல்லது விற்பனை இடைநிறுத்தம் செய்யப்படலாம். 

ஏன் பெட்ரோல் பாட்டில்களில் தரப்படுவதில்லை?

தீ விபத்து அபாயம்: பிளாஸ்டிக் பாட்டில்கள் பெட்ரோலின் வேதியியல் தன்மையால் உருகலாம் அல்லது வெடிக்கலாம். இது மிக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் என்பதால் பொதுப் பாதுகாப்பிற்காக இந்தத் தடை உள்ளது.

சட்டம் ஒழுங்கு: குற்றச் செயல்களுக்கு (எடுத்துக்காட்டாக பெட்ரோல் குண்டு தயாரித்தல்) பெட்ரோல் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது இத்தடையை கடுமையாக்குகிறது.

கள்ளச்சந்தை: பெட்ரோல் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்வதைத் தடுக்கவும் இது உதவுகிறது

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

crowd in petrol bunk - 2026

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகப் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், வழக்கமாக வாங்குவது போல் மக்கள் இயல்பு வாழ்க்கையின் படி நடந்தாலே செயற்கை தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது – அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்நிறுவனத்தில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IndianOil) தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இந்தியஆயிலின் அனைத்து பெட்ரோலிய முனையங்களும் மற்றும் விநியோக மையங்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புடன் உள்ளன.

சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், திடீர் தேவையால் ஏற்பட்ட இந்த நிலையை சமாளிக்க பாதிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னுரிமையுடன் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியஆயில்
தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களின் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு எரிபொருள் கிடைப்பதை வழக்கு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அச்சத்தில் அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்குமாறு இந்தியஆயில் கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன மற்றும் விநியோகச் சங்கிலி சீராக செயல்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்கள் அல்லது அனுமதி பெறாத பாத்திரங்களில் பெட்ரோலை சேமித்து வைப்பது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இந்தியஆயில் வலியுறுத்துகிறது. இது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக் கூடும்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் எரிபொருள் தடையில்லா கிடைப்பையும் உறுதி செய்வதில் இந்தியஆயில் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது, மேலும் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு M.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை பெட்ரோலிய முனையங்களிலும் (IOC, BPC & HPC) போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருகிறது; தொடர்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

grand canyon of usa - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          அமெரிக்காவில் கிராண்ட் கேனயான் என்ற ஒரு மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு மிகவும் பிரபலமானது. பூமி தோன்றியபோது இந்தப் பள்ளத்தாக்கு உருவாகத் தொடங்கியிருக்க வேண்டும். இது அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கொலராடோ நதியால் செதுக்கப்பட்ட ஒரு செங்குத்தான பக்கவாட்டு பள்ளத்தாக்கு ஆகும். கிராண்ட் கேன்யன் 446 கிமீ நீளம், 29 கிமீ அகலம் கொண்டது மற்றும் 1,857 மீட்டர் ஆழத்தைக் கொண்டது.

          இந்த மாபெரும் செங்குத்துப் பாறை பள்ளத்தாக்கில் ஒரு இடத்திற்கு விஷ்ணுப் பாறைகள் அல்லது விஷ்ணு கோவில் என்று பெயர்.  இது அமெரிக்காவின் அரிசோனாவின் கோகோனினோ கவுண்டியில் உள்ள கிராண்ட் கேன்யன் எனப்படும் மாபெரும் செங்குத்துப் பாறை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 2,296 மீட்டர் உயர சிகரமாகும்.

          விஷ்ணு கோயில், கேப் ராயல் அல்லது ராயல் முனையிலிருந்து சுமார் 3.2 கிலோமீட்டர் தெற்கே-தென்கிழக்கே, பள்ளத்தாக்கின் வடக்கு விளிம்பில், ஃப்ரேயா கோட்டைக்கு தெற்கே 2.4 கிலோமீட்டர் தொலைவிலும், அதன் அருகிலுள்ள உயரமான அண்டை நாடான வோட்டன்ஸ் சிம்மாசனத்திலிருந்து (Wottans Throne) 3.2 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கிலும் அமைந்துள்ளது. இது கொலராடோ நதியிலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோப்பன் காலநிலை வகைப்பாடு அமைப்பின் படி, விஷ்ணு கோயில் குளிர்ந்த அரை வறண்ட காலநிலை மண்டலத்தில் அமைந்துள்ளது. ஆய்வாளர் ஃபிரடெரிக் சாமுவேல் டெல்லன்பாக்கின் கூற்றுப்படி, விஷ்ணு கோயில் “அறியப்பட்ட உலகில் இயற்கையால் செதுக்கப்பட்ட இடங்களில் மிகவும் அற்புதமான தொகுப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.”

          விஷ்ணு கோயில் பிரபஞ்சத்தின் மீட்பரான இந்து தெய்வமான விஷ்ணுவின் பெயரிடப்பட்டது. இந்த இடப்பெயர் 1880ஆம் ஆண்டில் கிளாரன்ஸ் டட்டனால் பயன்படுத்தப்பட்டது, அவர் கிராண்ட் கேன்யனில் உள்ள புவியியல் அம்சங்களுக்கு புராண தெய்வங்களின் பெயரிடும் பாரம்பரியத்தைத் தொடங்கியபோது இந்த மலை ஒரு கிழக்கு நாடுகளில் உள்ள கோவிலை அல்லது பகோடாவை ஒத்திருப்பதாகக் கருதினார், இந்த புவியியல் அம்சத்தின் இடப்பெயர் 1906ஆம் ஆண்டில் அமெரிக்க புவியியல் பெயர்கள் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

          விஷ்ணு கோயிலின் சிகரம் கிரீம் நிற, பாறை வடிவ, பெர்மியன் கோகோனினோ மணற்கல்லால் கைபாப் சுண்ணாம்பு குபோலா கேப்ராக் கொண்டது. கிராண்ட் கேன்யனில் உள்ள அடுக்குகளில் மூன்றாவது இளைய மணற்கல், 265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மணல் திட்டுகளாக படிந்துள்ளது. கோகோனினோ மணற்கல்லுக்குக் கீழே சாய்வு வடிவ, பெர்மியன் ஹெர்மிட் உருவாக்கம் உள்ளது, இது பென்சில்வேனியன்-பெர்மியன் சுப்பாய் குழுவை மேலடுக்குகிறது. மேலும் கீழே மிசிசிப்பியன் ரெட்வால் சுண்ணாம்புக்கல், கேம்ப்ரியன் டோன்டோ குழு மற்றும் இறுதியாக சிற்றோடை மட்டத்தில் புரோட்டரோசோயிக் உன்கார் குழு ஆகியவற்றின் அடுக்குகள் உள்ளன. விஷ்ணு கோயிலிலிருந்து வரும் மழைப்பொழிவு அதன் மேற்குப் பக்கத்தில் விஷ்ணு க்ரீக் வழியாகவும், கிழக்குப் பக்கத்தில் உன்கார் க்ரீக் வழியாகவும் தெற்கே கொலராடோ நதியில் கலக்கிறது.

          இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் விஷ்ணு, ப்ரும்மா, ராம் பெயரில் பாறைகள். சந்திரனில் சிவசக்தி தலம் – இஅவையெல்லாம் சனாதனத்தின் பெருமை அல்லவா!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

vaiko - 2026

மதிமுகவுக்கு 4 தொகுதி ஒதுக்கீடு!
சட்டமன்ற தேர்தலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து.
3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 4இல் வென்றது.
– என்கிறது செய்தி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், தனிச் சின்னத்தில் களம் காண வேண்டும் எனவும் தொடர்ச்சியாக மதிமுக விருப்பம் தெரிவித்து வந்தது. ஆனால், திமுக கூட்டணியில் 4 தொகுதிகளே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

சட்டசபை தேர்தல்களில் மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை:-

  • 1996 – 177 (தனி அணி)
  • 2001 – 211 (தனி அணி)
  • 2006 – 35 (அதிமுக கூட்டணி)
  • 2011 – தேர்தல் புறக்கணிப்பு
  • 2016 – 28 (மக்கள் நலக்கூட்டணி)
  • 2021 – 6 (திமுக கூட்டணி, திமுக சின்னம்)
  • 2026 – 4 (திமுக கூட்டணி, 3ல் திமுக சின்னம், 1 தனிச்சின்னம்)

“எந்த சமரசமும் செய்து கொள்ளலில்லை – திமுக ஒதுக்கிய தொகுதிகளை ஏற்கிறோம்!”- வை.கோ.

திமுக ஒதுக்கியது 4 தொகுதி! அதில் 3 ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி!

இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?

நான்கில் மூன்று தொகுதியில் – உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் – நாளை ஒருவேளை வென்றாலும் – திமுக என்ன உத்தரவிடுகிறதோ அந்தக் “கொறடா” (WHIP) உத்தரவின்படிதான் உங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டசபைக்குள் வோட்டளிக்க முடியும்.

அதாவது தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் -“உதயசூரியன்”- சின்னத்தில் நின்று வென்றதால் (அப்படி வெல்வார்கள் என்றால்) திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள்.

நான்கில் மூன்றுபேர் திமுக சின்னத்தில் போட்டியிடுவதால் உங்கள் கட்சிப் பெயரையும் மதிமுக – என்பதில் இருந்து மு.தி.மு.க என்று மாற்றிவிடலாமே வை.கோ? அதாவது ‘முக்கால்’ திமுக!

ஆனால் ஒரு சந்தோஷமான விஷயம்…. 2016 சட்டமன்றத் தேர்தலின் போது நீங்கள் எகிறி எகிறிப் பேசியதற்கு – “கருணாநிதி வேறு தொழில் செய்யப் போகலாம் – உலகின் பழமையான தொழில்”-… என்றெல்லாம் பேசியதற்கு…

பத்து வருடம் ஆனாலும் பகையை மறக்காமல் வச்சி செய்துவிட்டது திமுக!

திமுகவிடமும் – கருணாநிதியிடமும் நான் பாராட்டும் ஒரே அம்சம் – இந்தப் “பகை மறவாமல் பழியெடுக்கும்” – அரசியல் போர்க்குணம்தான்.

2016 ல் அந்த எகிறு எகிறிய உங்களை – இன்று பெட்டிப் பாம்பாக 4 தொகுதிகள் மட்டும் கொடுத்து – அதிலும் 3 தொகுதிகளில் “உதயசூரியன்” சின்னத்தில் போட்டியிட வைத்து ஆப்பு வைத்துவிட்டது பாருங்கள் திமுக!

அதுதான் திமுகவிடம் மற்ற கட்சிகள் கற்க வேண்டிய அற்புதமான அரசியல் பாடம்!

அரசியலில் – “பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே”- எல்லாம் வேலைக்கு ஆகாது.

“பகையை மறவாய் நெஞ்சே”- என்பதே சித்தாந்த அரசியலில் பாலபாடம்!

ஒரு கதை நினைவு வருகிறது:-

அதுவரை தான் காணாத அபூர்வமான பழத்தைக் கொண்டு வந்து காட்ட வேண்டும் – என்றான் ஒரு மன்னன்.

ஆனால் ஒரு நிபந்தனை! அந்தப் பழம் ஏற்கனவே தான் சுவைத்தறிந்த பழமாக இருந்தால் – அதைக் கொண்டு வந்தவனின் ஆசன வாயில் வைத்து ராஜா திணித்து விடுவான்!

ஒருவன் அன்னாசிப் பழத்தைக் கொண்டு வந்தான்! அது ராஜா ஏற்கனவே சுவை அறிந்த பழம்! எனவே மேலே முட்களுடன் அன்னாசிப் பழத்தை அப்படியே அதைக் கொண்டு வந்தவனின் ஆசனவாயில் வைத்துத் திணிக்கச் செய்தான் ராஜா!

கொண்டு வந்தவன் உடையின் பின்பகுதியில் ரத்தம் வழிய வழிய – அந்த நிலையிலும் பெருங்குரலில் சிரித்தான்!

“ஏனடா சிரிக்கிறாய்?”- என்றான் ராஜா.

“மகாராஜா! பின்னால் வரிசையில் பலாப்பழத்தை வைத்துக் கொண்டு ஒருவன் நிற்கிறான் – அவன் நிலைமையை நினைத்துச் சிரித்தேன்!”

அந்த நிலைதான் வை.கோ வுக்கு!

அதே மக்கள் நலக் கூட்டணியில் 2016ல் வை.கோ வுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட இரண்டு கம்யூனிஸ்டுகள், விசிக கதி என்னாகும்? ஆனானப்பட்ட வைகோ கட்சிக்கே வெறும் 4 சீட் – அதிலும் 3 உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்!

அநேகமாக CPI, CPM, விசிக இவைகளுக்கு தலா 4 சீட் கொடுத்தால் அதிகம் என்பது எனது கணிப்பு.

தேமுதிகவுக்கு 6 சீட் என்பது – 2016 ல் மக்கள் நலக் கூட்டணியில் அவர்கள் “தருமன்” (விஜயகாந்த்) ஆக இருந்தார் என்பதால்!

அர்ஜூனனை (வைகோ) ஒருவழி ஆக்கியாயிற்று! மற்றபடி பீமன் (விசிக) நகுல – சகாதேவர்கள் (CPI – CPM) ஆகியோரை சின்னாபின்னப்படுத்தி ஒருவழி செய்துவிடும் திமுக!

அரசியலில் – “பகை மறவாமை”- திமுக பின்பற்றும் ராஜதந்திர அருங்குணம்!

  • முரளி சீத்தாராமன்

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

modi in nda meeting at trichy - 2026

மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு

திருச்சி தேஜகூ., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, மேற்காசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன. எந்தவொரு சூழலிலும் நாட்டு மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும்.

தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. மோசடி, போதைப் பொருள், ஏமாற்றத்தை நோக்கி திமுக அழைத்துச் செல்கிறது. – என்று பேசினார்.

தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் தொடர்ந்து பாடுபடுவோம்!

முன்னதாக, கேரளா மாநிலத்தில் இருந்து பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணி அளவில் திருச்சி வந்தார். தமிழர் பாரம்பரியமான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில், 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களை மோடி தொடக்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியது: அருமையான இந்த திருச்சி மாநகருக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் இன்றைய நாள் முக்கியமானதாகும்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் திட்டங்கள் அடிக்கல் நாட்டப்படுவதில் மகிழ்ச்சி. இந்த கட்டமைப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக கேஸ் வழங்குவதை உறுதி செய்யும்.

பெட்ரோலிய திட்டங்கள் மூலம் காற்று மாசுபாடு குறையும்; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்; 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையானதாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும்.

மேம்பட்ட இந்தியாவை, மேம்பட்ட தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. தமிழகத்தின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் மேன்மைக்கு அல்லும் பகலும் உழைக்கிறோம்; தொடர்ந்து பாடுபடுவோம்.

திருச்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நிகழ்ச்சி தமிழகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. இன்று, 5,650 ரூபாய் கோடி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டங்கள் இணைப்பு திறனை மேம்படுத்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தால் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயனளிக்கும். 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும். இயற்கை எரிவாயு, இயற்கைக்கு உகந்தது. காற்று மாசினை குறைக்கும். இந்த திட்டம், 4 கோடி மரங்கள் நடுவதற்கு இணையானது.

சென்னையில் ஐஓசி நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று. தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் , இந்த ஆலையானது தொழிற்சாலைகளின் தேவையை நிறைவேற்றி வைக்கும். மசகு எண்ணெய் இறக்குமதி குறைப்பதோடு, நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தும்.

370 கிமீ., தூரத்திற்கு ஊரக சாலையை துவக்கி வைத்துள்ளோம். பிரதமரின் ஊரக சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களால் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் சிரமமின்றி பயணிக்க முடியும். விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்கவும், மூலப்பொருட்களை வாங்க முடியும். ஒவ்வொரு சாலையும், ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தி எளிதாக வாழும் திறனை அதிகரிக்கிறது.

கடந்தாண்டு ஆடி திருவாதிரை விழாவிற்கு கங்கைகொண்ட சோழபுரம் வந்தது மகிழ்ச்சி. மன்னர் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவிலின் கட்டுமானத்தின் ஆயிரமாவது ஆண்டை கொண்டாடினோம். இக்கோவில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

அங்கு நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தற்போதைய நெடுஞ்சாலை, கோவிலுக்கு அருகில் இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு குறித்த கவலை எழுப்பியது. புதிய புற வழிச்சாலை அமைப்பால் மற்ற வாகனங்கள் , கோவிலுக்கு அப்பால் திருப்பிவிடப்படும். அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

மதுரை வந்த போது, அம்ரித் பாரத் திட்டத்தின்படி மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் துவக்கிவைக்கப்பட்டது. இன்று புதிய ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டது. இவை நாகர்கோயில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது. இந்த புதிய ரயில் சேவையால் சுற்றுலா துறை வளர்ச்சி அடைவதோடு,உள்ளூர் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். தமிழக மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம். மேலும் தொடர்ந்து பாடுபடுவோம். – இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புதிய திட்டங்கள் :

  • நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 3,680 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • சென்னை அடுத்த மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, மசகு எண்ணெய் கலவை ஆலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 370 கி.மீ., நீளமுள்ள, 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார்.
  • தேசிய நெடுஞ்சாலை 81ல், கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பசுமை புறவழிச்சாலை அமைக்க, அடிக்கல் நாட்டினார்.
  • இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு, எல்.முருகன் நினைவுப்பரிசு வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்தார். பொருநை அருங்காடசியகம் நினைவு சின்னத்தை பிரசாக வழங்கினார்.

தமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

  • நாகா்கோவில் – சாா்லபள்ளி அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06357)
  • கோவை போத்தனூா் – தன்பத் அம்ரித் பாரத் சிறப்பு ரயில் (06619)
  • ராமேசுவரம் – மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06621)
  • திருநெல்வேலி – மங்களூா் சிறப்பு விரைவு ரயில் (06708)
  • மயிலாடுதுறை – காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் (06835)
  • நீலகிரி, ஈரோட்டில் ரூ. 3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு உள்ளிட்ட புதிய திட்டங்களையும் மோடி தொடக்கி வைத்தார்.

தேஜகூ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது,

இன்று தமிழகத்தில் பெண்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன. சமீபத்தில், ஒரு சிறுமியை கூட விட்டுவைக்காத ஒரு திமுக உறுப்பினரை பற்றிய கொடூரமான செய்தியை நாம் அனைவரும் பார்த்தோம். இன்று பெண்களை பலவந்தப்படுத்திவிட்டு குற்றவாளிகள் பயமின்றி அலைகிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், தமிழக பெண்கள் பயமின்றி வாழ்வதை NDA அரசு உறுதி செய்யும். நாம் சிறப்பான சட்டம் ஒழுங்கை உறுதி செய்வோம். மக்கள் அல்ல, குற்றவாளிகள் தான் இனி பயத்தில் வாழ வேண்டும்

ஒட்டுமொத்த தமிழகமும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடிவு செய்துவிட்டது. மக்களுக்கு அனைத்து குடும்பங்களுக்காகவும் பணியாற்றக்கூடிய அரசு தேவை, ஒரே குடும்பத்திற்கு வேலை செய்யும் அரசு தேவையில்லை. அதோடு அவர்களுக்கு தெரியும், NDA கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று – திருச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது,

மக்களுக்கு நமஸ்காரம். மக்களே நீங்கள் தான் என் கடவுள். கேரளாவை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதனை பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி அரசு நனவாக்கி உள்ளது. இந்த அழகான இடத்திற்கு இப்போது தான் சரியான பெயர் கிடைத்துள்ளது. அனைவரின் முயற்சிகளுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளம் என பெயரை மத்திய அரசு மாற்றியிருப்பது, மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

மேற்காசியாவில் தற்போது நடப்பது குறித்து அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான நமது சகோதரர் மற்றும் சகோதரிகள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது எல்லாம் நமது நாட்டு மக்களுக்கு பிரச்னை வருகிறதோ, அப்போது அவர்களை பாதுகாக்க நாங்கள் அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறோம். இன்றைய இந்தியா, நாட்டு மக்களை பிரச்னையில் தள்ளாது. போரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அளித்துள்ளோம்.

வளைகுடாவில் உள்ள நமது நட்பு நாடுகள், நமது குடிமக்களின் நலன்களை பாதுகாத்து வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. நமது தூதரகங்கள் 24 மணிநேரமும் அவர்களுக்கு உணவு, வசிப்பிடம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.

உலகளாவிய பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டும் என்றே, ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.இதனால், நமது மக்கள் அங்கு சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் மோடியை திட்டுவார்கள். இது தான் அவர்களின் எண்ணம்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள். தற்போது, உங்களுக்கு சேவை செய்ய பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். வளர்ந்த கேரள மாநிலத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.

கேரள வெள்ளத்தின் போது மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. தங்கள் உயிரை பணயம் வைத்தும் பல உயிர்களை காப்பாற்றிய அவர்களின் துணிச்சலை உலகம் கண்டது. நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீனவர் சமூகத்தினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. எங்கள் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம். இது வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடித்தளமாகவும் மாறும். வளர்ச்சி அடைந்த கேரளத்தை உறுவாக்க வழிவகுக்கும். தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதும் அவர்களுக்கு எளிதாகிவிட்டது. முந்தைய ஆட்சி காலத்தில் பல ஆண்டுகளாக மீனவர் சமூகத்தை புறக்கணித்தனர்.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பாஜ-தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், கேரளத்திற்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருகிறது – என்று பிரதமர் மோடி பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

இதுதான் திமுகவுக்கு கடைசி தேர்தல்: இபிஎஸ்

திருச்சியில் என்டிஏ பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது:

”திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். இந்தத் தேர்தல்தான் கருணாநிதி குடும்பத்துக்கு கடைசித் தேர்தல். திமுக கூட்டணியில் வெவ்வேறு கொள்கை உடைய கட்சிகள்தான் உள்ளன. கூட்டணி அமைக்கும் கட்சிகள் திமுகவிடம் அடிமையாக உள்ளன.

விவசாயிகள் பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் – ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.”

திருச்சி என்டி பொதுக் கூட்டம்: அன்புமணி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் பேசியது என்ன?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்; மதுவால் குற்றங்கள் அதிகரிப்பு; தமிழகத்தில் போதையால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.

அரசு மதுவை விற்கவில்லை; திணிக்கிறது. பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக உயர்த்தி கொண்டிருக்கிறார்; 2 மாதங்களில் தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்பார்; என்.டி.ஏ. ஆட்சி தமிழகத்தில் மலரும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்குமான உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டோடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்புடைய பிரதேசம்; இன்னும் சொல்லப் போனால் இரண்டாம் சங்க காலத்திற்கு முன்பே நமது வேளிர்கள் ஆட்சி நடைபெற்றது.

திராவிட குஜராத் ஆக, திராவிடர்கள் ஆட்சி நடைபெற்ற அந்தப் பகுதியில் இருக்கும் துவாரகாவை தமிழ் பேசும் வேளிர்கள் ஆட்சி செய்தார்கள். நம் சங்க இலக்கியங்களிலே குறிப்பாக புறநானூற்றிலே துவரை என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.

அங்கிருந்து வந்து வேளிர்களாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்தார்கள்; பாரி வள்ளல் வேள்பாரி வேளிர் மன்னர்தான்; தகடூரை ஆட்சி செய்த அதியமானும் வேளிர் வம்சம்தான்.

வேளிர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஆட்சி செய்தார்கள்; அந்தப் பகுதியில் இருந்து நம்முடைய பிரதமர் வந்திருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: பிரதமர் மோடி எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறாரோ அப்பொழுதெல்லாம் தாய் மாமன் சீர் கொண்டு வருவது போல திட்டங்களை கொண்டு வருகிறார். இன்றைக்கும் ரூ.5,600 கோடிக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்; மதுரைக்கு வரும் போது ரூ.4,400 கோடிக்கு திட்டங்கள் கொண்டு வந்தார்.

தாய் மாமன் வீட்டு சீர் கூட லேட் ஆகத்தான் வரும்; ஆனால் பாரத பிரதமரின் சீர் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல்; குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்.

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

pm modi in madurai meet - 2026

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை 5:45க்கு திருச்சி வருகிறார். அங்கே, அரசு நிகழ்ச்சியில் ரூ. 5,650 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். 

நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 

சென்னை அடுத்த மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள மசகு எண்ணெய் கலவை ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ., நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறார். 

தேசிய நெடுஞ்சாலை 81ல் கங்கைகொண்டசோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

மாலை, 6:30க்கு திருச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவு:

திருச்சிராப்பள்ளியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிபிசிஎல் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட முக்கியத்  திட்டங்களும் இதில் அடங்கும். 89 கிராம  சாலைத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும்.

திருச்சியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறேன். தமிழகம் முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை பார்த்து, தி.மு.க., பதற்றம் அடைந்துள்ளது.  தி.மு.க.,வின் தவறான நிர்வாகமும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் குறித்து, தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். அதனால் தான் நம்பிக்கையும், முன்னேற்றமும் உடைய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்களுடன் மக்கள் அதிகமாக இணைந்து வருகின்றனர்.