Home Blog Page 5

நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

hindu munnani meeting in nellai - 2026

இந்து முன்னணியின் மாநில பொதுக் குழு ஜூன் 21 ஞாயிறு இன்று, திருநெல்வேலி பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவிற்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், பொதுக்குழு தீர்மானங்களை படித்தார். தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர்கள் ஜெ.எஸ். கிஷோர்குமார், செந்தில்குமார் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். இந்து முன்னணியின் தென் பாரத அமைப்பாளர் க.பக்தன், மாநில பொதுச் செயலாளர்கள் நா. முருகானந்தம், டி. மனோகர், மாநில அமைப்பாளர் எஸ். இராஜேஷ், மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சதீஷ், கிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாசார்ய சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஆகியோர் ஆசியுரை ஆற்றினார்கள்.

பக்திப் பாடகர் வீரமணியின் நான்காவது தலைமுறை இளம் பாடகர் அபிஷேக் தேசபக்திப் பாடல் பாடினார். நிறைவாக மாநில துணைத் தலைவர் டாக்டர் அரசு ராஜா நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்தப் பொதுக்குழுவில் இந்து முன்னணி மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சமுதாயத் தலைவர்கள், ஆன்மீக அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பொதுக்குழுவில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை…

தீர்மானம் 1: போதை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

திருச்சியில் கால் டாக்சி ஓட்டுனர், மதுபோதையில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, சுயநினைவற்ற நிலையில் வீட்டின் அருகே வீசிச் சென்ற சம்பவம்… தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் இரண்டு பேர், இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம்… என, கடந்த திமுக ஆட்சியில் நிலவியது போல பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. இப்படி அராஜகம் செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் காவல்துறையை இந்து முன்னணியின் மாநில பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கடந்த திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை களைகட்டுகிறது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு என்ற இளைஞர் போதைக் கும்பலால் அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது போதை ஆசாமிகளுக்குத் தெரிகிறது. போதைப்பொருட்களை எவரிடம் விற்க வேண்டும் என்பது போதை வியாபாரிகளுக்குத் தெரிகிறது. ஆனால் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒன்றுமே தெரியாது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

கஞ்சா, போதைப் பொருட்களால் தமிழகம் சீரழிந்து போவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை செயல்படுத்தும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: திருச்செந்தூரில் திண்டாடும் பக்தர்கள்-தமிழக அரசே நடவடிக்கை எடு !

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூரில் சமீப காலமாக பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் தற்போது சாதாரண நாட்களில் கூட பல மணி நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள். திருச்செந்தூர் முருகனை தரிசிக்கவேண்டும் என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகளும், பக்தர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்து வழக்கறிஞர் முன்னணி குழுவினர் ஆய்வு செய்ததில், தங்கும் விடுதியில் பக்தர்களுக்கு பல்வேறு இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படுவது தெரியவந்தது. விடுதிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டாலும் அதிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது.

கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் முறைகேடாக பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. கடற்கரை, பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவறைகள், குளியலறைகள் வேண்டுமென்றே பூட்டி வைக்கப்பட்டும், பயன்படுத்த முடியாத வகையில் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது. கோவில் பணத்தில் ரூ 25 லட்சம் கையாடல் செய்ததாக சமீபத்தில் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் இந்தப் பிரச்சனை மூடிமறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கைவிடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சபரிமலை, திருப்பதி போன்ற திருக்கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தாலும் பக்தர்கள் பெரிய சிரமத்திற்கு உள்ளாகாமல் தரிசனம் செய்கின்றனர். ஆனால் திருச்செந்தூரில் பக்தர்கள் வேண்டுமென்றே பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பவர்கள் குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தற்போது வரை குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.

எனவே திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

தீர்மானம் 3: நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இஸ்லாமியர்களின் தர்காவை காரணம் காட்டி கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை. முந்தைய திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அப்போதைய திமுக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. தற்போது புதிய அரசு பதவி ஏற்று உள்ளது. தமிழகம் முழுவதும் இந்துக்கள் வாக்களித்து த.வெ.க அரசை ஆட்சி பீடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த வருடம் 2026 ல் வரக்கூடிய கார்த்திகை மாதம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்படும் அரசாக த.வெ.க அரசு செயல்பட்டு இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற, புதிய அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: தமிழகத்தில் உள்ள கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் த.வெ.க அரசுக்கு வேண்டுகோள்!

பாரத நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகமான திருக்கோயில்கள் உள்ளன. 2000 ஆண்டுகள், 1000 ஆண்டுகள் பழமையான நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. கடந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சியில், நிறைய கோவில்கள் சிதிலமடைந்து, பராமரிப்பின்றி, ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது. நம்முடைய முன்னோர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் கோயிலுக்கு வழங்கிய பல லட்சக்கணக்கான நிலங்கள் அரசியல்வாதிகளின் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான வாடகை, குத்தகை பாக்கி கூட வசூலிக்கப்படாமல் உள்ளது.

அதேபோல கோயிலுக்கு வழங்கப்பட்ட நகைகளை கடந்த ஆட்சியில் உருக்குகிறோம் என்ற பெயரில் அதிலிருந்து வைரம், வைடூரியம், முத்துக்கள், நவரத்தினங்கள் களவாடப்பட்டுள்ளன. பழமையான கோவில்களில் இருந்த விக்கிரகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இதைப்பற்றி கோயில் நிர்வாகம் அதாவது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புகார் கூட கொடுக்கப்படவில்லை. பல கோவில்களில் கடவுளை தரிசனம் செய்யும் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. காசு ஒன்றே குறிக்கோளாகச் செயல்படுகிறார்கள்.

தமிழக அரசு இந்த நிலையை மாற்றி கோயிலுக்கு தனி வாரியம் அமைத்து கோயில்கள் சுதந்திரமாக செயல்படவும் கோவில் சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பக்தர்கள் எந்தவித சிரமம் இல்லாமலும், கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்யவும், பழமை மாறாமல் கோயிலை புதுப்பிக்கச் செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி மாநில பொதுக்குழு, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: நெல்லையப்பர் திருக்கோவில் மதில் சுவரை ஒட்டியுள்ள கடைகளை அகற்ற வேண்டும் !

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் கோவில் மதில் சுவரை ஒட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் மதில் சுவரை துளையிட்டும், சேதப்படுத்தியும், கோவில் மதில் சுவரை பராமரிக்க முடியாத வகையிலும் இந்த கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் மதில்சுவருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மேலமாடவீதியில் இருந்த ஒரு சில கடைகள் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாட வீதிகளில் நடைபெற வேண்டிய உற்சவங்கள் தடைபட்டு நிற்கிறது.

எனவே கோவில் மதில் சுவரை காப்பாற்றும் வகையில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் மதில்சுவரை ஒட்டி அமைந்துள்ள அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தி அந்த வியாபாரிகளுக்கு வேறு இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும், நெல்லை மாவட்ட நிர்வாகத்தையும், திருக்கோவில் நிர்வாகத்தையும், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6: மதசார்பற்ற நாட்டிலே மதத்துக்கு ஒரு சட்டமா? பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்.

கோவா, உத்தரகாண்ட், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 44-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மதம், ஜாதி, மொழி, இன வேறுபாடுகளைத் தாண்டி சமமான சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நீதியை வலுப்படுத்தும் எனக் கருதுகிறது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுப்பு, பராமரிப்பு போன்ற தனிநபர் சட்டங்களில் அனைவருக்கும் ஒரே சட்டம் அமல்படுத்தப்படுவது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதிப்படுத்தவும் உதவும்.

தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை விரைவாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7: சாதியை காரணம் காட்டி பள்ளிகளில் சாமி கயிறுகளை தடை செய்வதற்கு கண்டனம்

சாதி பிரிவினைகளை தடுக்கும் வகையில் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வரக்கூடாது எனவும், எந்தவிதமான மத அடையாளங்களையும் அணிந்து வரக் கூடாது எனவும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். பள்ளிகளில் சாதி ரீதியாக பிரிவினை கூடாது என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக மத அடையாளங்களை அணிந்து வரக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, அரசியல் சாசனம் உறுதி அளிக்கிறது. இதனை மறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

பள்ளிக் கூடங்களில் இந்து மாணவர்கள் தங்கள் நெற்றியில் திலகம் வைத்து வருவார்கள். குலதெய்வங்களின் கயிறுகள், உள்ளூர் கோயிலில் காப்பு கட்டும் கயிறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிந்து வருவார்கள். இது ஆன்மிகத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்த விஷயமாகும். கயிறு கட்டி வர வேண்டாம் என சொல்லும் அரசு, முஸ்லிம் மாணவர்கள் குல்லா, மாணவிகள் புர்கா அணிந்து வருவது மற்றும் கிறிஸ்தவ மாணவ மாணவியர் சிலுவை அணிந்து வரக்கூடாது என சிறுபான்மை மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்குமா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பல இந்து குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு அவர்களை தினமும் பைபிள் வாசகங்களை பாட வைக்கின்றனர். இது மதத்தை கட்டாயமாக திணிப்பது தானே. எனவே, கிறிஸ்தவ பள்ளியை பொது கல்வி பட்டியலில் இருந்து நீக்கி கிறிஸ்தவ பள்ளியாக அறிவிக்க அமைச்சர் தயாரா?

இது எல்லோருக்குமான ஆட்சி என்பதை உறுதி செய்யும் விதமாக மத அடையாளங்களை அணிந்து கொண்டு பள்ளிகளுக்கு வரக் கூடாது என்ற அறிவிப்பை கல்வித் துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 8 தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும்

நதிகளில் தாமிரபரணி தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதிகை மலையில் உற்பத்தியாகி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பயணித்து தென்தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,000 ஏக்கர் நிலங்கள் இந்த ஆற்றின் பாசனத்தை நம்பியே உள்ளன. இரு மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்கும் ஒரே நீராதாரம் தாமிரபரணி. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீருக்கு இதனையே சார்ந்துள்ளனர். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நதி, தமிழரின் பண்பாட்டுடனும் வழிபாட்டுடனும் பின்னிப்பிணைந்த புண்ணிய நதியாகும்.

மக்களின் வாழ்வாதாரமாகவும், தெய்வீகமாகவும் போற்றப்படும் இந்த ஜீவநதியின் தூய்மை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள், நகராட்சிக் கழிவுநீர், பிளாஸ்டிக் குப்பைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இது குடிநீரின் தரத்தையும், விவசாயத்தையும், நீர்வாழ் உயிரினங்களையும் நேரடியாக பாதிக்கிறது. எனவே, தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகளை முற்றிலும் தடுத்து, நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை சேமித்து வறண்ட பகுதிகளுக்கு வழங்கும் இந்த மக்கள் நலத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.

தென் தமிழக மக்களின் உயிர்நாடியான தாமிரபரணியை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு ஒருமனதாக வலியுறுத்துகிறது

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

sabarimalai and pamba - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இன்று திங்கட்கிழமை ஆனி மாத பிறப்பு பூஜை வழிபாடுகள் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். கேரளாவில் பம்பை வனப்பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை கனமழையாகப் பெய்தது. அதனால், பம்பை நதி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை ஜூன் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது . கோவில் திருநடையை மேல்சாந்தி திறந்து வைத்ததும் ஆழியில் நெய் தீபம் ஏற்றி கோவிலில் தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். நேற்று எந்த சிறப்பு பூஜையும் இல்லை.

இன்று ஜூன் 15-ஆம் தேதி ஆனி மாதம் பிறந்ததையொட்டி காலை 5 மணியிலிருந்து சிறப்பு பூஜைகள் தொடங்கியது. ஜூன் 19 வரை காலை 4 மணிக்கு நடை திறந்து மதியம் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை படி பூஜை நடைபெறும். (இது 15முதல் 19 தேதி வரை தினமும் நடைபெறும்). நெய் அபிஷேகம் காலை நேரத்தில் மட்டும் நடைபெறும். காலை 5:15 முதல் 7 மணி வரை, பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும். (இது 15முதல் 19தேதி வரை தினமும் நடைபெறும்).

இரவு தினமும் 9:50 மணிக்கு ஹரிவராசனம் கீர்த்தனை பாடி, 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் ஜூன் 15முதல் 19 தேதி வரை தினமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.முன் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர் சபரிமலை வரும் பக்தர்களுக்காக பத்தனம்திட்டா உட்பட முக்கிய ஊர்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பரிசுகள் இயக்கப்படுகின்றன

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

pakistanis and delhi terror links - 2026

அடுக்களையில் இருந்து அதிரடி படை

— ராகுல் பண்டிதா —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

அந்த காணொளியை முதலில் பார்த்தபோது சிறப்பாக எதுவும் தெரியவில்லை. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் டெலிகிராம் தளங்களில் வழக்கமாக வெளியாகும் காணொளி என்று புலனாய்வுத் துறையினரும் பயங்கரவாதத்தை பற்றி எழுதும் செய்தியாளர்களும் நினைத்தனர். பாகிஸ்தானில் தலை முதல் கால் வரை புர்கா அணிந்த பெண்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி. அதன் பின்னணியில் இஸ்லாமிய சமய பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது அந்த காணொளியில்.

சில நிமிடங்களுக்கு பிறகு கேமரா ஒரு பெண்ணிடம் நின்றுள்ளது. அவள் கைவிரலில் இரண்டு மோதிரங்கள் போட்டிருந்ததை காட்டியது. அதுவரை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்த புலனாய்வுத் துறையினர் கவனமாக பார்க்க தொடங்கினார். அவர்களிடையே ஒரு அமைதியின்மை , சலனம் ஏற்பட்டது.

இந்திய புலனாய்வுத் துறையினர் அந்த பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லக்சர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஹாரிஸ் தார் – இன் மனைவிதான் அவள். பயங்கரவாத அமைப்புகளான லக்சர் இ தொய்பா , ஜெய் இ முகமத் ஆகியவற்றின் மூத்த தலைவர்களின் மனைவிமார்கள் இப்போது அந்த அமைப்புகளின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்கள் என்பதை காஷ்மீர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

அந்த அதிகாரியின் கூற்றுப்படி பெண்களின் தற்கொலை படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டு கிடங்குகள் , ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களை தாக்குவது, காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளை செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்கு தருவது, ஆதரவாளர்களை திரட்டி அவர்களை பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்த பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஜெய்ஸ் , லக்சர் அமைப்பினர் பெண்கள் படைக்கு ஆள் சேர்க்க பாகிஸ்தான் முழுக்கவும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சிகளை பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தினரும் முன்னின்று நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத வலை பின்னலை உடைத்தெறிந்து வருகிறது இந்திய அரசு . அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பெண்கள் படை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் ஒப்பிட்டளவில் பாதுகாப்பு படையினரின் கண்ணுக்கு தெரியாதபடி மறைவாக உள்ளனர் . குறிப்பாக ஆசிரியர், மருத்துவர் போன்ற சமூகப் பணியாளர் போர்வையில் அவர்கள் பாதுகாப்பு படையினரின் கண்களில் மண்ணை தூவி விட்டு சுலபமாக நகர்கின்றனர்.

பெண்கள் என்ற சுலபமான போர்வையைப் பற்றி பயங்கரவாத அமைப்புகள் நீண்ட காலமாகவே நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எல் டி டி இ யின் பெண் புலிகள் படை தொடங்கிய பூக்கோ ஹராம் (நைஜீரியாவை மையமாகக் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு) வரை உள்ள பெண்கள் படை இதை வெளிப்படுத்துகின்றது. ஆனால் காஷ்மீரில் பழமைவாத சமூக அமைப்பு இதற்கு எதிராக இருந்தது. காஷ்மீரில் ஊடுருவல் செய்யும் பயங்கரவாதிகள் தொடங்கி கல்லெறிபவர்கள் வரை அனைவரும் ஆண்களே. அவர்கள் பயங்கரவாத அமைப்புகளின் வலைப்பின்னலில் வெளிப்படையான முகமாக இருப்பார்கள். பின்னர் ஒரு நாள் அவர்கள் திடீரென காணாமல் போவார்கள். பிறகு சமூக வலைதளங்களில் நீண்ட துப்பாக்கிகளை ஏந்திய படங்கள் வெளியாகும். அவர்கள் தீவிரவாதியாக திரும்பி வந்ததை அறிவிப்பார்கள்.

இதற்கு நேர் எதிராக பெண்கள் வன்முறைக்கு அருகில் ஆனால் அதில் ஈடுபடாமல் அவற்றின் ஆதரவாளராக, வன்முறையாளர்களுக்கு செய்தி தொடர்பாளராக இருப்பார்கள். காஷ்மீரில் நடக்கும் கிசுகிசுப்பில் அந்த வீட்டுக்கு அடிக்கடி வரும் காதலன், காதலனால் மனமுடைந்த பெண்கள், அவர்களது குமுறல்கள் பல நேரங்களில் பாதுகாப்பு படையினருக்கு உதவியாக இருந்து பயங்கரவாதிகளை கைது செய்யவும் சுட்டுக் கொள்ளவும் உதவி உள்ளன.

லக்சர் பயங்கரவாதி அபு தூஜானா , ஜெய்ஸ் உயர்மட்ட தலைவன் சாகித் சௌகத் போன்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது அவர்களுடன் தொடர்பிலிருந்து பெண்கள் கொடுத்த துப்பால். 2019 ல் இஷ்ரத் முனீர் ஷா என்ற இளம் பெண்ணை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவளது துரோகத்தால்தான் ஜீனத்துல் இஸ்லாம் என்ற பயங்கரவாத தலைவன் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டான் என்பது அவர்களது குற்றச்சாட்டு.

புல்வாமா தாக்குதலை விசாரணை செய்த என் ஐ ஏ சம்பவ இடத்தில் உமர் பாரூக் இன் அலைபேசியை கண்டெடுத்தனர். அவன்தான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். ஜெய்ஸ் பயங்கரவாத அமைப்பை ஆரம்பித்த மசூத் ஹசாரின் சகோதரி மகன். அலைபேசியில் இருந்த படங்களில் 22 வயதுள்ள ஒரு உள்ளூர் பெண்ணான இன்சா ஜான் என்பவளுடன் நெருக்கமாக இருக்கும் படமும் இருந்தது. அதை கொண்டு அவளை பிடித்தனர். அந்த பெண்ணின் சகோதரி மகளுடனும் அவன் நெருக்கமாக இருந்த படங்களை காட்டிய போது அவள் மனம் மாறி அவனைப் பற்றி பேச தொடங்கினாள்.

அவளுடன் உறவின் இருந்த போது பாரூக் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் பாகிஸ்தானில் உள்ள தனது தாய் , மனைவி அபீரா பிவியை அறிமுகம் செய்தானாம் . அவளுக்கு இன்சா ஜானிடம் பொறாமை வருவதற்கு பதிலாக , பாரூக்கின் தேவைகள் எல்லாவற்றையும் அவன் விரும்பியபடி நிறைவேற்றித் தருவது உன் கடமை , என்று அபீரா கூறினாள் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலையும் சொன்னாள் . பின்னாளில் உமர் பாரூக் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டான்.

உமர் பாரூக்கின் மனைவி அபீரா பிவி , மசூத் ஹசாரின் சகோதரியண சதியா அசார் (இவளது கணவன் யூசுப் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்டான் ) ஆகியோர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட பெண்களுக்கு மூளை சலவை செய்யும் பணியில் முன்னணியில் உள்ளனர். ஜெய்ஸ் அமைப்பு 2025 அக்டோபரில் ஜமாத் உல் மோமினத் என்ற பெயரில் பெண்கள் பிரிவை அறிவித்தது. டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பந்தப்பட்ட டாக்டர் ஷாஹீன் ஷாஹித் என்ற லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் அபீரா பிவியுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவள் மேலும் பல பெண்களை அபீராவுக்கு அறிமுகம் செய்து பெண்கள் தற்கொலை படையை தயார் செய்துள்ளாள் . அவள் கைது செய்யப்பட்ட பின்பு இது தெரிய வந்துள்ளது. எத்தனை பெண்கள் என்பது தெரியவில்லை.

பாகிஸ்தானில் சுமார் 5000 பெண்களை தங்கள் படையில் ஜெய்ஸ் சேர்த்துள்ளதாக தெரிகிறது. தற்கொலை படையினராகவும் வெளிப்படையான பணியில் சந்தேகம் வராதபடி அவர்கள் செயல்படுகிறார்கள். கராச்சி, பாவால்பூர், முசாபராபாத், கோட்லி, மான்சீரா பகுதிகளில் பெண்கள் அமைப்பின் மையங்கள் உள்ளன என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ஸியை போலவே லக்சரும் அதே பாணியில் பெண்கள் படையை ஆரம்பித்துள்ளது. தாயீபத் என்ற பெயரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூரில் துவங்கப்பட்டுள்ளது. இபாத் சயீத் என்ற பெண்மணி அதன் உஸ்தாஹ – வாக ( தலைவர்) செயல்படுகிறார். முஸ்லிம் பெண்கள் லீக், முஸ்லிம் கேர்ள்ஸ் லீக் என்ற இரண்டும் லக்சரின் முன்னணி அமைப்புகள். மரியம் ரஹ்மான் என்றவள் பெண் கல்வி என்ற போர்வையில் இளம்பெண்களை குறி வைத்து செயல்படுகிறார் என்று உளவுத்துறையினர் கூறுகின்றனர். ஆன்லைனில் நடக்கும் இந்த வகுப்புகளில் பயங்கரவாத செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது , நேரடியாக பயங்கரவாத செயல்களில் பங்கேற்பது பற்றி பெண்களுக்கு போதிக்கப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மோசமாக காட்டப்படுகின்றன.

முன்பு போல் ஆட்களை நேரடியாக தேர்வு செய்வது, கூட்டங்கள் கருத்தரங்குகளை நடத்துவது, ஆயுதம் மற்றும் இதர பயிற்சிகளை முகாம்களில் சொல்லித் தருவதெல்லாம் மாறிவிட்டது. தினசரி வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட டிஜிட்டல் கட்டமைப்பு , மறைமுக குறியீட்டு செய்தி பரிவர்த்தனை மூலம் இளைஞர்களும் இளைஞிகளும் இஸ்லாமிய பயங்கரவாத கருத்தியலுக்கு ஆதரவாக மூளை செலவை செய்யப்படுகிறார்கள். மூடிய அல்லது அனுமதி வரையறுக்கப்பட்ட இறுகிய குழுவில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த குழுக்களில் ஊடுருவதும் கண்காணிப்பதும் கடினமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

புலனாய்வு துறையின் அறிக்கையில் மீண்டும் மீண்டும் இரண்டு பெயர்கள் தென்படுகின்றன. ஒருவன் அப்துல்லா எனப்படும் அபு ஹூரைரா. மற்றவன் கர்கோஸ் (முயல்) என்று சொல்லப்படும் உமர் ஹாரிஸ். உமர் ஹாரிஸ் லக்சர் பயங்கரவாதி என்பதால் மட்டுமல்ல சாதாரண சமுதாயத்தில் கலந்து மறைந்து விடுபவன். இவன் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா பகுதியை சேர்ந்தவன் . இவன் லக்சரில் சேர்ந்தது கருத்தியல் காரணத்தால் அல்ல. பல கலவரங்கள் , அடிதடி வழக்குகளில் பாகிஸ்தான் காவல்துறையினரால் தேடப்படுபவன். பாதுகாப்புக்காக லக்சரில் சேர்ந்தான் என்று சொல்லப்படுகிறது. தள்ள கடத்தல்காரர்களையும் , தனி வாழ்வில் தோல்வியுற்றவர்களையும் , தேடப்படும் கிரிமினல் குற்றவாளிகளையும், லக்சர் அமைப்பு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றங்களிலிருந்து மீட்பு தருவதாகவும் கூறி பயங்கரவாத கருத்தியலுக்குள் இழுத்துக் கொள்கிறது.

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் . காஷ்மீரின் இரண்டு பக்கங்களுக்கும் அடிக்கடி போய் வருவான். ஸ்ரீநகருக்கும் வருவான். ஆதரவாளர்களின் உதவியால் மறைவிடத்தில் தங்குவான். பாதுகாப்பு படையினரின் கண்களில் படுவதற்குள் வேறொரு இடத்துக்கும் முயல் போல் எகிறி விடுவான். எனவே அவனுக்கு கர்கோஸ் (முயல் )என்ற பட்டப் பெயர்.

அவன் இந்திய பகுதியில் நுழைந்த பிறகு இங்குள்ள லக்சர் ஆதரவாளரின் பெண்ணை மணந்து கொண்டான். இதன் மூலம் குடும்ப கட்டமைப்புக்குள் நுழைந்தான். அவனது செயல்கள் எல்லாம் மோசடியானவை மறைமுகமானவை. அவனது திருமணம் காஷ்மீரில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில் (ராஜஸ்தான்) நடந்தது. ‘சஜத்’ என்ற பெயரில் அவன் திருமணம் செய்து கொண்டான். பயங்கரவாதிகள் துப்பாக்கி , பயங்கரவாத கருத்தியல் மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையில் உள்ளதாக திட்டமிட்ட ரீதியில் நாடகமாடுகின்றனர் என்பதற்கு உதாரணம் இது.

இவன் இந்தியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் இந்தோனேஷியாவுக்கு போனான். 2004 – 25 இல் சவுதி அரேபியாவில் வெளிப்பட்டான். இதெல்லாம் உளவு அமைப்பினரின் தகவல்கள் மற்றும் விசாரணையில் பின்னால் தெரியவந்தது. பயங்கரவாதிகள் எப்படி சாதாரண சிவில் சமூகத்தின் ஊடாக புகுந்து போலி அடையாளங்கள், ஆதரவாளர்கள் மூலம் எல்லைகளை சுலபமாக கடந்து சென்று விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.

அபு ஹூரைரா பஞ்சாபில் பிடிபட்டான். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் , ராஜஸ்தான் அதற்கும் அப்பால் பல்வேறு மாநிலங்களில் அவனுக்கு ஆதரவாளர்களும் மறைவிடங்களும் நம்பிக்கைக்குரியவர்களும் இருப்பதால்தான் அவன் தன் அடையாளத்தை மறைத்து பயணிக்கவும், பயங்கரவாத வலை பின்னலை உருவாக்கவும் முடிந்துள்ளது. பிடிபட்ட அவனது கூட்டாளி ஒருவனால் அவன் 2010 ல் இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவன் காஷ்மீரில் செயல்பட்டதும், காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தவுடன் தப்பி சென்றதும், பல மாநிலங்களுக்கு பயணித்ததும், அங்கு அவனுக்கு தேவையான எல்லா விதமான வசதிகளையும் செய்தது முஸ்லிம் பெண்களின் உதவியால் நடந்துள்ளது.

காஷ்மீர் காடுகளில் ஆண் பயங்கரவாதிகளுக்கு பதிலாக துப்பாக்கியும் வெடிகுண்டும் ஏந்திய பெண் பயங்கரவாதிகள் தோன்றுவதும் பயங்கரவாதத்தின் முகம் இப்போது ஆண் முகத்திலிருந்து பெண் முகமாக மாறுவது கவலை அளிக்கும் விஷயம். ஆனால் அதைவிட கவலை அளிக்கும் விஷயம் பயங்கரவாத அமைப்புகளில் அமைதியான , சாதாரண வாழ்க்கையில் உள்ள பெண்கள் உள்ளிழுக்கப்படுவதால் மோதல் கடினமாகவும் சிக்கலாகவும் மாறி வருகிறது.

காஷ்மீர் காடுகளில், பூந்தோட்டங்களில், மலைகளில் மறைந்து இருந்து ஊடுருவல் மூலம் பயங்கரவாதம் வெளிப்பட்டது. இப்போது கிடைத்துள்ள கள நிலவரம் குறித்த தகவல்கள் மற்றும் காணொளிகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால் இனி சாதாரண சமூக வாழ்க்கையில் இருந்து பயங்கரவாத முகம் வெளிப்படும். டாக்டர் ஷாஹீன் சயத் , அபு ஹூரைரா போன்றவர்கள் இதை தான் சொல்கிறார்கள் . சாதாரண சமூக வாழ்க்கை அசாதாரணமாக மாறி வருகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

இதுவரை பயங்கரவாதத்தின் முதுகெலுங்காக இருந்த (ஆண்) பயங்கரவாதிகள் என்ற நிலை மாறி, இவர்களை அடையாளம் காண்பதும் கண்காணிப்பதும் தடுப்பதும் ஓரளவுக்கு சுலபமானது , டாக்டர் சாஹின் சயத் போன்ற மருத்துவர்கள் ஆசிரியர்கள் பொறியாளர்கள் என்று சமூக அந்தஸ்துடன் கூடிய பெண்கள் வருவது மிகவும் ஆபத்தான விஷயம் என்று உளவுத்துறையினர் கூறுகிறார்கள்.


நன்றி : ஓப்பன் மேகசீன்


FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2026பகுதி 1

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

கால்பந்துத் திருவிழா தொடங்கியுள்ளது.  இந்த 2026 பீஃபா உலகக்கோப்பை (2026 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (பீஃபா) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து கோப்பையின் 23-ஆவது பீஃபா உலகக் கோப்பைப் போட்டியாகும்.

இந்தப் போட்டி 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவில் பதினொரு நகரங்களிலும், மெக்சிக்கோவில் மூன்று நகரங்களிலும், கனடாவில் இரண்டு நகரங்களிலுமாக மொத்தம் பதினாறு நகரங்களால் கூட்டாக நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி மூன்று நாடுகளால் நடத்தப்படும் முதல் பீஃபா உலகக் கோப்பையாகவும், முன்பு 32ஆக இருந்த அணிகளின் எண்ணிக்கை இந்த முறை 48ஆக உயர்ந்து, தற்போது 48 அணிகளை உள்ளடக்கிய முதல் போட்டியாகவும் இருக்கும்.

2002 ஆண்டிற்குப் பிறகு பல நாடுகள் இணைந்து நடத்தும் முதல் ஆண்கள் உலகக் கோப்பை இதுவாகும். இதற்கு முன்னர் 1970, 1986 போட்டிகளை நடத்தியதன் மூலம், ஆண்கள் உலகக் கோப்பையை மூன்று முறை நடத்தும் அல்லது இணைந்து நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெறும்.

இதற்கு முன்னர் 1994இல் அமெரிக்கா ஆண்கள் உலகக் கோப்பையை நடத்தியது. இதற்கு மாறாக, கனடா ஆண்கள் போட்டியை நடத்துவது அல்லது இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கோப்பை நவம்பர், திசம்பர் மாதங்களில் தனித்துவமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு அதன் பாரம்பரிய வட அரைக்கோள கோடைக்கால அட்டவணைக்குத் திரும்புகிறது.

போட்டியை நடத்தும் நாடுகள் என்பதால், கனடா, மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அனைத்தும் தானாகவே தகுதி பெற்றன. கேப் வர்டி, குராசோ, ஜோர்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் தங்களது முதல் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கின்றன. 2022இல் தனது மூன்றாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வென்ற அணி அர்ஜென்டினா அணியாகும்.

இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் பந்து சிறப்புத் தன்மைகள்

இந்தஉலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பந்தின் பெயர் ‘ட்ரையோண்டா’ (Trionda) ஆகும்.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு (AI) சென்சார் – பந்தின் நடுவே 500 HZ மோஷன் சென்சார் சிப் (IMU) பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு நொடிக்கு 500 முறை துல்லியமான தகவல்களை (வேகம், சுழற்சி, உதைக்கப்பட்ட நேரம்) வழங்கி, ‘ஆஃப்சைட்’ மற்றும் கோல் தொடர்பான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

சார்ஜ் செய்யும் வசதி: இந்த பந்து ஒரு மின்னணு சாதனம் போல செயல்படுவதால், ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக இதற்கு சார்ஜ் செய்யப்பட வேண்டும்.

புதிய வடிவமைப்பு: உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவாக, 4 பேனல்கள் (Panels) மட்டுமே இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறப்பு அமைப்பு: பந்தில் உள்ள ஆழமான பள்ளங்கள், அது காற்றில் நிலையாகப் பறக்க உதவுகின்றன. மேலும், வீரர்கள் பந்தை அதிகளவில் சுழற்றவும் (Spin) இது வழிவகுக்கிறது.

வடிவமைப்பு கலாச்சாரம்: கனடா (மேப்பிள் இலை), மெக்சிகோ (கழுகு), அமெரிக்கா (நட்சத்திரம்) ஆகிய மூன்று நாடுகளைக் குறிக்கும் வகையில் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பந்தின் எடையை மாற்றாமல், அதன் கட்டுப்பாட்டை வீரர்களுக்கு மிகவும் எளிதாக்கியுள்ளது.

குழுநிலைப் போட்டிகள் 2026 ஜூன் 11 முதல் ஜூன் 27 வரை நடைபெறுகின்றன. போட்டியிடும் அணிகள், நான்கு அணிகள் கொண்ட பன்னிரண்டு குழுக்களாக (குழுக்கள் A முதல் L வரை) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள், ஒன்றோடு ஒன்று தொடர் சுழல்முறையில் மோதுகின்றன. குழு நிலவரங்களின்படி, ஒரு வெற்றிக்கு மூன்று புள்ளிகளும், சமநிலைக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும்; தோல்விக்கு புள்ளிகள் ஏதும் இல்லை. குழுப் போட்டிகள் முடிவடைந்த பிறகு, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளும், அனைத்துக் குழுக்களிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்த சிறந்த எட்டு அணிகளும் வெளியேற்றச் சுற்றிற்கு முன்னேறும்.

வெளியேற்றச்சுற்றில் 32 அணிகள் பங்கேற்கும். இதிலிருந்து 16 அணிகள் அடுத்த சுற்றிற்குத் தேர்வாகும். அதன் பின்னர் காலிறுதி; பின்னர் அரையிறுதி; அதன் பின்னர் மூன்றாம் இடத்தைத் தேர்வு செய்யும் ஆட்டம்; பின்னர் இறுதிப்போட்டி அமெரிக்காவில், நியூஜெர்சியில் உள்ள ரூதர்ஃபோர்ட், மெட்லைஃப் மைதானத்தில் ஜூலை 19, 2026 அமெரிக்க நேரப்படி மாலை 0300 மணிக்கு நடைபெறும்.

ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

pm narendra modi - 2026
#image_title

4398 நாட்கள் நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை  ஜூன் 10 இன்று, பாரதப் பிரதமர் நரேந்திர  மோடி முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார். 

2014ம் ஆண்டு மே 26ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியான நாட்கள், அவர் பிரதமராக பொறுப்பில் இருக்கிறார். 

முன்னதாக, இந்திரா 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்தார். அப்படி, முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று, நரேந்திர மோடி முறியடித்தார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, 1952 மே 13ம் தேதி முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். பிறகு தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பிரதமராகப் பணியாற்றினார். இந்நிலையில் இன்று நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடிக்கிறார்.

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை தில்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது. தேஜ கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பிற முக்கிய மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். 

பிரதமர் மோடி தனது 12 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை 4,399 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் தொடர்கிறது…

இந்தியாவில் நீண்ட காலம் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை
32 சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 19 முறை உரையாற்றியுள்ளார்
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர்
தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு தேர்தலில் கூட தோல்வியடையாதவர்
மாநில முதலமைச்சராக முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்த ஒரே பிரதமர்

4,399 நாட்கள் : ஒரு நாட்டின் போக்கையே மாற்றியமைத்த நாட்கள்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து; அதன் மூலம் மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்தது!
500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
UPI – உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பு
GST – ஒரே நாடு, ஒரே வரி 
நக்ஸல் அச்சுறுத்தல் இல்லாத இந்தியா
வந்தே பாரத் – இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்
திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத இந்தியா
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரம்

தலைமைத்துவம் – ஒரு வரலாற்றுச் சாதனைப் பயணம்!
மாற்றத்தை ஏற்படுத்திய 4,399 நாட்கள் 

இந்தியாவின் நீண்ட காலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்
சீர்திருத்தங்கள் முதல் சிறப்பான பலன்கள் வரை
58 கோடிக்கும் அதிகமான ‘ஜன் தன்’ (Jan Dhan) கணக்குகள்
44 கோடிக்கும் அதிகமான ‘ஆயுஷ்மான்’ (Ayushman) அட்டைகள்
74-லிருந்து 164-ஆக உயர்ந்த விமான நிலையங்கள்
102 கோடிக்கும் அதிகமான இணைய இணைப்புகள்
1,000 கி.மீ-லிருந்து 7,332 கி.மீ-க்கும் அதிகமான விரைவுச் சாலைகள் (Expressways)
1.4 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனங்கள்
21,801 கி.மீ-லிருந்து 69,873 கி.மீ-க்கும் அதிகமான ரயில்வே மின்மயமாக்கல்
6 கோடி -> 33 கோடிக்கும் அதிகமான மொபைல் உற்பத்தி அலகுகள்
₹86,647-லிருந்து ₹2,43,180-ஆக உயர்ந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
₹700 கோடி-லிருந்து ₹38,424 கோடியாக உயர்ந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி
நிதிச் சேர்க்கை முதல் டிஜிட்டல் அதிகாரமளித்தல் வரை; உள்கட்டமைப்பு முதல் புத்தாக்கம் வரை.
இந்தியாவின் எழுச்சியை வேகப்படுத்திய 4,399 நாட்கள்

அமெரிக்கா வாழ்த்து!

நீண்ட கால பிரதமர் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்…
”இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். மூன்று முறை மக்களாட்சி  ஆணையைப் பெற்று, 140 கோடி மக்களின் நம்பிக்கையின் மூலம் 4,399 நாட்கள் தலைமை தாங்கியுள்ளார். 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது முதல் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக மாற்றியது வரை, பிரதமர் மோடியின் பதவிக்காலம் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Dhinasari Home page

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 564/8 (கே.எல். ராகுல் 100, சாய் சுதர்ஷன் 81, ஷுப்மன் கில் 126, ரிஷப் பந்த் 81, வாஷிங்க்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 51, முகம்மது சலீம் 6/140) ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸ் 152 (ரஹ்மத் ஷா 60, மானவ் சுத்தர் 6/33, பிரசித் கிருஷ்னா 3/37( இரண்டாவது இன்னிங்க்ஸ் 112 (செதிகுல்லா அடல் 42, ரஹ்மானுல்லா குர்பாஸ் 24, வாஷிங்க்டன் சுந்தர் 4/36, குல்தீப் யாதவ் 3/30). இந்திய அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          விராட் கோலி, ரோஹித் ஷர்மா, டெஸ்ட் ஆட்டங்களின் வல்லுநர்கள் புஜாரா, ரஹானே, சுழல் பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜதேஜா, பும்ரா இல்லாத இந்திய அணி. தொடக்க வீரர்களாக யசஷ்வீ ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல்; மூன்றாவது இடத்தில் சாய் சுதர்ஷன்; ஷுப்மன் கில் அணித்தலைவராக நான்காவது இடத்தில்;  வேகப்பந்துவீச்சாளர்களாக சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இன்று விளையாடினர். புதிய சுழப் பந்துவீச்சாளராக மானவ் சுத்தர் இந்த டெஸ்டில் களமிறங்கினார். அதிகாரபூர்வமற்ற இந்த டெஸ்டில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது.

          ஜெய்ஸ்வால் 24 ரன்னிற்கு ஆட்டமிழக்க, கே. எல் ராகுல் (100 ரன்) மற்றும் சாய் சுதர்ஷன் (81 ரன்) சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு பின்னர் வந்த கில் (126 ரன்) மாற்றும் ரிஷப் பந்த் (81 ரன்)இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கட் இழப்பிற்கு 368 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் இந்திய அணி 564 ரன்னிற்கு ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக் அறிவிக்க, ஆஃப்கானிஸ்தான் அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 113 ரன் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் அந்த அணி முதல் இன்னிங்க்சை 152 ரன்னிற்கு ஆட்டமிழந்தது. அதனால் ஃபாலோஆன் முறையில் இரண்டாம் இன்னிங்க்ஸை தொடர்ந்து ஆடியது.

          இரண்டாம் இன்னிங்க்ஸில் வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்த ஆஃப்கானிஸ்தான் அணி 112 ரன்னிற்கு ஆட்டமிழந்து, ஒரு இன்னிங்க்ஸ் 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

          அடுத்து இந்திய அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் ஆட்டங்களை ஆடவிருக்கிறது. முதல் ஒருநாள் ஆட்டம் 13.06.2026 அன்று தர்மசாலாவிலும் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் 17.06.2026 அன்று லக்னோவிலும் மூன்றாவது ஒருநாள் ஆட்டம் 20.06.2026 அன்று சென்னையிலும் நடக்கவுள்ளது.

          ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:  ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சனாதன தர்மத்தை ஒழிப்பதையே  தங்கள் குறிக்கோளாகவும் செயல்பாடாகவும் கொண்ட சிலர் உள்ளனர்.

நிரந்தரப் பிரகாச வடிவமான சூரிய ஒளியை அழிப்பேன் என்பது எத்தனை     முட்டாள்தனமோ, இதுவும் அத்தகையதே. சனாதனம் என்றால் சாஸ்வதம், நித்தியம், காலத்தால் அழியாதது. தர்மம் என்றால் உலகளாவிய பிரபஞ்ச ஒழுங்கு.  இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. இருப்பினும் தம்முடைய மதங்களைப் பரப்புவதற்காக,  ஆழமாக வேரூன்றிய இந்து தர்மத்தை வேரறுக்க விரோத சக்திகள் இடைவிடாமல்  பணி செய்து வருகின்றன. தம் லட்சியத்தை நிறைவேற்ற சில நூறாண்டு காலமாக முயன்று வருகின்றன. ஆசை காட்டுதல், அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம், வன்முறை,   இயலாவிட்டால் கொன்றழிப்பது ஆகியவற்றின் மூலம் அவர்கள் தம் குறிக்கோளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

பெரும் இழப்புகளைச் சந்தித்த போதிலும் சனாதன தர்மம் உறுதியுடனும் உயிர்ப்புடனும் நிலைத்திருக்கிறது. இதைச் சகித்துக்கொள்ள முடியாத அவர்கள்  திரிபுகளையும் தீய நோக்கிலான விளக்கங்களையும் பரப்பி நம் புத்தியைச் சிதைக்க முயன்றனர். நம்மிடையே சுய வெறுப்பை விதைக்கத் தந்திரமான கதைகளைக் கட்டிவிட்டு,  நம்முடைய புனித நூல்கள்,  மத நிறுவனங்கள், ஆன்மீக ஆசிரியர்கள், கோவில்கள் ஆகியவற்றின் மகத்துவம் குறித்துத் தவறான கருத்துக்களைப் பரப்பி அறிவாற்றலை அழிக்கத் திட்டம் தீட்டினர். 

தங்களைப் பகுத்தறிவாளர்கள், விஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டு  அதே சமயம் தீவிர மதச் சார்புடையவர்களாக வாழும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மேதாவிகள்  திட்டமிட்ட சதித்திட்டங்களை வகுத்தனர். சாதிப் பாகுபாடு  என்பதை நம்மிடம் உள்ள ஒரு அடிப்படைப் பிழையாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். அது உண்மைதானே?  என்று நம்மை ஒப்புக்கொள்ள வைக்கும் ஏமாற்று உத்திகளைப் பயன்படுத்தித்  தொடர்ந்து நம்மைத் தவறான பாதையில் இட்டுச் செல்கிறார்கள். நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே  சாதி அமைப்பு ஒரு குறைபாடு என்றும்,  நம் பெருமையை உண்மையாக வெளிப்படுத்த இந்தக் குறையைச் சரிசெய்ய வேண்டும் என்றும் நம்புவதைக் காண்கிறோம்.

சாதி என்ற குறிப்பிட்ட அடையாளம் இல்லாவிட்டாலும்  உலகம் முழுவதும் உள்ள சமூகங்களில் ஏதோ ஒரு வகையான பிரிவினை  இருக்கவே செய்கிறது. வரலாறு குறித்த கடந்த காலப் புரிதலும், நிகழ்காலப் புரிதலும் இல்லாத இளைஞர்கள் பெரும்பாலும் இந்த எதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரு மகத்தான மரபைச் சேர்ந்தவர்கள் என்பதை உணரும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.  

பாரத தேசம் பல யுகங்களுக்கு முன்பே தர்க்கம், தத்துவம் போன்ற விசாரணைகள் மூலம் அற்புதமான சாஸ்திரங்களை வெளியிட்டு அறிவியல் உலகில் முன்னோடியாக விளங்கியது.  யோகா,  ஆயுர்வேதம்,  இல்லற தர்மம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,  வேதாந்த சிந்தனை, நியாய, வைசேஷிக தரிசனம்,  மந்திர ரகசியம்,  கோவில் கட்டிடக்கலை, ஜோதிடம்,  கணிதம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று, அனைத்தையும் ஒருங்கிணைந்த சூத்திரத்தில் இணைத்து, ஹிந்து மதமாக உருவாக்கிய அற்புதப் பரம்பரை நமது. இவற்றை உணர  முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நம்மைத் தாக்கிய வெளிநாட்டு சக்திகள்  இந்தத் தொடர்பின்மைக்கு ஆரம்பக் காரணமாக இருந்தன.  அவர்களைப் பின்பற்றிய போலி தேசியவாதிகள் அதற்கு அடுத்தபடியாக அமைந்தனர்.

வாழ்க்கை முறைகள்,  ரசனைகள்,  ஆர்வங்கள்,  திறன்கள், கால நேரங்கள் ஆகியவை எல்லோருக்கும் ஒன்று போல் இருக்காது. இந்த இயற்கையான உண்மையை முனிவர்கள் புரிந்து கொண்டிருந்தனர்.  ஒருவருடைய வாழ்க்கை முறை மற்றதை விட உயர்ந்தது என்று ஒருவர் கருதுவதால் மட்டுமே அனைவரும் அதே மாதிரியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற யதார்த்தமற்ற கருத்தை அவர்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. சமூகத்தில் பல்வேறு வாழ்க்கை முறைகள் இணைந்து இருக்க முடியும் என்பதையும்,  அவ்வாறு இருப்பது அவசியம் என்பதையும்,  அதன் மூலம் தனிநபர்கள் ஒருவருக்கொருவர் பயனடைய முடியும் என்பதையும் அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.

இந்த புரிதலின் அடிப்படையிலேயே பல்வேறு ‘வர்ணங்களும்’ சாதிகளும் உருவாயின. பலவிதமான மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு மலர் மாலையைப் போலவே,  பன்முகத்தன்மைக்கு மத்தியிலும் ஒற்றுமையை நிலைநாட்டும் ஒரு அமைப்பாக சனாதன தர்மம்  திகழ்கிறது. இவை உயர்வு, தாழ்வு என்ற படிநிலையைக் குறிக்காமல்  வெவ்வேறு வகையிலான பணிகளையும் பொறுப்புகளையுமே குறிக்கின்றன. ஆனால்  வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ளத் தவறி,  தங்கள் சொந்த மதத்தின் மீது கொண்ட மோகத்தாலும், பிறருடைய நற்பண்புகளையும் குறைகளாகக் காணும் வக்கிரமான மனப்பான்மையாலும் உந்தப்பட்டு சமத்துவமின்மை  குறித்த போலியான பிம்பங்களை உருவாக்கினர். தனிநபர்களின் தவறுகளை ஒட்டுமொத்த அமைப்பின் மீது சுமத்தினார்கள். தம் சொந்த மத தேசங்களில் உள்மோதல்களாலும், பரஸ்பர பகையாலும் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு அழியும் உண்மையை மூடி மறைத்தார்கள்.

இந்தச் சூழலில்,  சுவாமி விவேகானந்தர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துத் திரும்பியபோது கூறிய வார்த்தைகளை நினைவுகூர்வது அவசியம்: “உலகெங்கிலும் பல மதங்களையும்  கலாச்சாரங்களையும்,  நாடுகளையும் கண்டேன்.  ஆனால் இந்தியாவைப் போலச் சிறந்த நாடு வேறெதுவும் இல்லை. நம் மதத்தில் சில குறைகள் இருக்கலாம்.  ஆனால் பிற கலாச்சாரங்களுடன் ஒப்பிடுகையில் அவை மிகச் சிறியவையே.  மேலும் அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன. இந்து மதம் மட்டுமே குறைபாடுகள் மிகக் குறைவாகவும்  அதே சமயம் உண்மையாகவே திருத்தக்கூடிய வகையிலும் உள்ள ஒரு மதம்”

உடல்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவருக்கும் உள்ளே இருக்கும் ‘ஆத்ம சைதன்யம்’ ஒன்றே. உலகியல் நடத்தைகளில் வெளிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் பரமார்த்தமான இறுதி இலக்கில் ஒரே தத்துவமே நிலவுகிறது என்ற ஆழமான தத்துவ உண்மையை வெளியிட்ட அற்புதமான தெய்வீகப் பார்வை சநாதன தர்மத்திற்கு மட்டுமே உரித்தானது என்பதை மறக்கக்கூடாது.  

கடந்த காலங்களில் வெவ்வேறு உடல்களில் வாழ்ந்து,  இன்று தற்போதைய உடலில் வசித்து  எதிர்காலப் பிறவிகளில் என்ன வடிவத்தை எடுப்போம் என்பது தெரியாமல் இருப்பது என்ற உண்மையை விளக்கும் மறுபிறவிக் கொள்கை, சனாதன தர்மத்திற்கு மட்டுமே உரிய தனித்துவமான ஒன்று. இந்த வாழ்க்கையில் வழங்கப்பட்ட உடலையும் பரம்பரையையும் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் ஒரு மதத்தில்  பகைமைக்கு இடம் எங்கே?

சானாதன தர்மத்தை வெறுப்பவர்கள், எந்த மதத்தவரை திருப்திப்படுத்த தீய கருத்துக்களைப் பரப்ப முயல்கிறார்கள் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே உள்ளது. இந்துக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளை உணராத ஒரு சமூகமாகவே பார்க்கப்படுகிறார்கள்.  சுயநலத்திற்காகத் தங்கள் சொந்த அழிவைக் கூடப் பொருட்படுத்தாத மக்களாக அவர்கள் கருதப்படுகிறார்கள். அதிகாரத்தை இழந்தவர்களும்,   புதிதாகப் பெற்றவர்களும் சட்டமன்றத்தில், ‘சநாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுப்பதும், வேறு சிலர் அதை ஆதரிப்பதும் இந்தப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

நம் புராதன கோவில்களின் வருவாயில் வசதியாக இயங்கி,  அவற்றைச் சூறையாடித் தவறாகப் பயன்படுத்தும் அரசுகள்  அந்தக் கோவில்களின் அடித்தளமாக விளங்கும் சனாதன தர்மத்தை அழிப்பதாக வெளிப்படையாகச் சபதம் செய்ய முடிகிறது என்றால்,  அது உறக்கத்தில் இருக்கும் இந்துக்களின் ஆழ்ந்த அலட்சியத்தையே காட்டுகிறது.

இலவசங்கள், தள்ளுபடிகள், மானியங்கள் போன்ற வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு மாநிலத்தின் கூட்டு நலன்கள் சிதைக்கப்படுகின்றன என்ற உண்மையை உணராமல் இருப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே. ‘நாட்டின் வளங்கள் அழிந்தாலும் சரி, நாடு துண்டாடப்பட்டாலும் சரி,  நமது மதங்கள் மேலோங்கி நின்றால் போதும்’ என்று நம்புபவர்களின் ஆதரவுடன்  நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் சனாதன தர்மத்திற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் அரசுகள் சில மாநிலங்களில் ஆட்சியில் நீடிக்கின்றன.

இத்தகைய கசப்பான உண்மைகளை இந்து சமூகம் எப்போது முழுமையாக உணரப்  போகிறது?

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

(தலையங்கம், ருஷிபீடம் ஜூன் 2026)

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

annamalai k - 2026

–பத்மன்

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை என்று அதிமுகவில் இருந்து பாதிப்பின்றி விலகி, பாஜகவில் சேர்ந்து, பின்னர் அதன் தமிழகத் தலைவர் ஆகவே ஆகிவிட்ட நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். பாஜகவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.

அதேநேரத்தில் வேறு சில விஷயங்களையும் ஆராய வேண்டியுள்ளது. அண்ணாமலை பாஜகவில் சேராமல் நேரடியாக தனிக்கட்சி தொடங்கியிருந்தால் மக்களிடையே இந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்க முடியாது. இப்போது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நடிகர் விஜய் தொடங்கிய தவெக பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில் அண்ணாமலையின் புதிய கட்சி அரசியல் களத்தில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே!

விஜய்யுடன் ஒப்பிட்டால் அவருக்குக் கிடைத்திருக்கும் கண்மூடித்தனமான மக்கள் செல்வாக்கு அதாவது பாபுலாரிட்டி, அண்ணாமலைக்கு கிடைக்காது. அவ்வாறின்றி கொள்கை ரீதியில் வழிநடத்தப்படும் கட்சி எனில் என்ன கொள்கை?

மேலும் தமிழகத்தில் திமுகவும் பின்னர் அதிமுகவும் வளர்ச்சி கண்டதற்கு கொள்கையைத் தாண்டிய கவர்ச்சி அரசியலே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கொள்கை அல்லது மக்கள் நலன் பேசும் எல்லோரையும் மக்கள் முழுமூச்சாக ஏற்றுக் கொள்வார்களா என்பதற்கு உத்தரவாதமில்லை. உதாரணத்துக்கு சீமான், விஜயகாந்த்.

ஆகையால் தமிழகத்தைப் பொருத்தவரை கொள்கை வாதம் பேசும் பாஜகவுக்கு அண்ணாமலை போன்ற மக்கள் செல்வாக்கைப் பெற்று அதனை மேலும் வளர்க்கும் தலைவர்களும், அண்ணாமலை போன்ற அரசியலில் சாதிக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு பாஜக போன்ற கருத்தியல் சார்ந்த, கடினங்களைத் தாண்டி வளரும் கட்சியும் பரஸ்பர அவசியம்.

நடந்தது நடந்துவிட்டது, இனி? என் வழி தனி வழி என்றுபோன அண்ணாமலை அவரது வழி என்ன என்பதைத் தெளிவாக வெட்டவெளிச்சமாக்கட்டும்.

தேசிய, தமிழக வளர்ச்சிக்கு அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம்/ கட்சி சிறப்பான பங்காற்ற வாழ்த்துகள். அதேநேரத்தில் தமிழுணர்வும், ஹிந்து சமுதாயச் சிந்தனையும் கொண்ட தேசியவாதியான என்போன்றோருக்கு, தமிழகத்தில் இனி பாரதிய ஜனதாவின் நிலைப்பாடும் செயல்பாடும் எவ்விதம் அமையும் என்பதுதான் அக்கறை செலுத்த வேண்டிய விஷயம்.

ரஜனிகாந்த் தனிக்கட்சி தொடங்காததால், தங்கள் கட்சியில் இணைந்த அண்ணாமலையை இந்த அளவுக்கு வளர்த்து, உயர்த்திய பாஜக அதன் பயன்களைச் சரியாக அறுவடை செய்யவில்லை. தமிழகத்தில் திமுகவைத் தோற்கடிக்க பாஜகவுக்கு கூட்டணி தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் அதிமுகவின் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அண்ணாமலைக்கும் சீட் கொடுக்காமல், குறைந்த சீட்டுகளுக்கு பாஜக ஒப்புக்கொண்டது மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைத்தது.

தமிழக பாஜக, அண்ணாமலை தலைமையில் அதிமுக அல்லாத கூட்டணி அமைத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். ஒருவேளை அது திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிளந்து திமுகவுக்கே சாதமாகப் போயிருந்தாலும்கூட பாஜகவுக்கு இந்த அளவுக்குப் பாதகம் விளைந்திருக்காது. அவ்வாறின்றி, இதேபோல் மட்டமான தேர்தல் முடிவு கிடைத்திருந்தால், அப்போது அண்ணாமலையை மாற்றியிருக்கலாம். தவறில்லை.

அதிமுக கூட்டணிக்காக பாஜக நீர்த்துப் போகாது இருந்திருந்தால், தீய திராவிடத்துக்கு எதிரான ஹிந்து தேசியவாதத்துக்கான வலு எவ்வகையிலேனும் கூடியிருக்கும்.

போனது போகட்டும்! இனி… சித்தாந்தவாதிகள் என்போரில் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரையும், பதவி சுகத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டு கட்சி வளர்ச்சியையும், கட்சித் தொண்டர்கள் நலனையும் கண்டுகொள்ளாத சிலரையும், கட்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்காக அன்றி சுய வளர்ச்சி, சுய லாபத்துக்காக மட்டுமே கட்சியில் சேர்ந்து, அவ்வகையில் செயல்பட்டுவரும் கணிசமானோரையும், பலவிதமான லாபிகள் நடத்துவோரையும் தயவுதாட்சண்யமின்றி களையெடுக்க பாஜக முன்வர வேண்டும்.

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

தேசிய அளவில் வெறும் 2 சீட்டுகள் என்று கடும் பின்னடைவைக் கண்டு, பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டி இந்த அளவுக்கு அசைக்க முடியாத ஆலமரமாக வளரந்துள்ளது பாரதீய ஜனதா. அதன் தமிழக விழுதைச் சற்று சரிசெய்ய வேண்டியுள்ளது. அந்தச் சற்று சாமான்யமானது அல்ல, ஆனால் சாத்தியமானதே!

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

annamalai welcome amit sha in combatore - 2026
  • B.R. மகாதேவன்

பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் பிரச்னை தேர்தல் வெற்றிகள், வியூகங்கள், கூட்டணிகள், லாபிகள், கொள்கைகள் தொடர்பானவை அல்ல.

அது அதிகாரப் பகிர்வு தொடர்பானது. பணி சுதந்தரம், சர்வ அதிகாரம் தொடர்பானது.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

முழு அதிகாரமும் தன்னிடம் இருக்கவேண்டும் என்பது ஹிட்லரின் விருப்பம் மட்டுமல்ல; காந்தியின் விருப்பமும் கூட (காந்தியின் உதாரணத்தை விரும்பாதவர்களுக்கு: இராஜ ராஜ சோழன் கூட ஒருவகையில் சர்வ அதிகாரம் கொண்டவர்தான்). எனவே சர்வாதிகாரம் என்பது சரியா தவறா என்பது யார் முன்வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது மட்டுமே.

அண்ணாமலை சர்வ அதிகாரத்தை / சுதந்தரத்தை விரும்பினாரா..?

அரசியல் சமரசங்களை அவர் முன் யூகித்திருக்கவில்லையா?

என்னால் கட்சியை வளர்க்க முடியும் என்று நம்பி என்னிடம் பொறுப்பை ஒப்படைக்கிறீர்களென்றால் என் வழியில் செய்ய அனுமதியுங்கள். இதுதானா அண்ணாமலையின் எளிய வேண்டுகோள்.

ஏன் இதில் மோதல் வந்தது?

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  1. முன்னாள் தலைவர்களைக் கையாண்ட விதம்.

எல்.முருகன், இல.கணேசன், சி.பி.ஆர்., தமிழிசை, ம.வெங்கடேசன் என பலரும் பல்வேறு பொறுப்புகள் கொடுத்து கெளரவமாக வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் (பொன்னார், ஹெச்.ராஜா போன்றவர்கள் கொஞ்சம் பின்னரங்குக்குச் சென்றனர்).

இதை முன்னாள் தலைவர்களுக்குச் செய்த மரியாதை என்றும் சொல்லலாம். கொஞ்சம் விலகி நில்லுங்கள் என்று கை காட்டியதாகவும் சொல்லலாம்.

உள் அரங்கில் இது தொடர்பாகப் பேசப்பட்டவை ஆரோக்கியமாக இருந்திருக்கவில்லை. இதுவே பின்னர் வெளிப்படவும் செய்தது.

*

  1. ஊழல் எதிர்ப்புப் போராட்டம்

திமுகவை எதிர்ப்பது தொடர்பாக வகுக்கப்பட்ட டி.எம்.கே. ஃபைல்ஸ் நடவடிக்கை முழுக்கவும் அண்ணாமலையின் விருப்பம் மட்டுமே.

மத்திய தலைவர்களும் மாநிலத்தில் சிலரும் விரும்பியிருக்கவில்லை.

இரு தரப்பினருக்கும் அவரவர் பக்க நியாயங்கள் இதில் இருந்தன.

காமன் வெல்த் ஊழல், கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என பல ஊழல்களை அம்பலப்படுத்தித்தான் பாஜக 2014-ல் காங்கிரஸையே வீழ்த்தியிருந்தது. நானும் லஞ்சம் வாங்கமாட்டேன்; யாரையும் வாங்கவும் விடமாட்டேன் என்பதுதான் நரேந்திர மோதியின் முத்திரை முழக்கம். இன்றுவரை அவர் அதை திறமையாக அமல்படுத்தியும் வந்திருக்கிறார்.

ஆனால் தமிழகத்துக்கு இந்த ஊழல் எதிர்ப்பு பலன் தராது என்று பல தலைவர்கள் சொன்னார்கள். அதற்கு அவர்களிடம் பல புள்ளிவிவரங்கள் இருந்தன.

திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழலில் கரை கண்டவை. இருந்தும் தமிழக மக்கள் மாறி மாறி இந்த இரண்டு கழகங்களின் பின்னால் மட்டுமே அணி திரண்டனர். இங்கிருந்த கம்யூனிஸ்ட்கள் கூட இந்த ஊழலை ஒரு பொருட்டாக மதித்து ஒருபோதும் களமாடியதில்லை. காங்கிரஸின் நிலைமை வேறு. விசிக, பாமக கூட ஊழலைப் பிரதான விஷயமாக முன்வைத்துக் களமாடியதில்லை.

திமுகவை எதிர்க்கப் பல வழிகள். அதில் ஊழல் எதிர்ப்பும் ஒரு ஓரமாக இருக்கும். இதுதான் தமிழக அரசியல் கள நிலைமை.

தமிழக மக்களுமேகூட ஒப்பீட்டளவில் பிற மாநிலத்தினரைவிட ஊழலில் திளைப்பவர்களே. வோட்டுக்கு காசு; டிவி, கிரைண்டர், ஃபேன் இலவசங்கள்; 2000 ரூபாய் வெள்ள நிவாரண நிதியை எட்டாவது மாடியில் இருந்தவர்கள் கூட காரில் வந்து வாங்கிச் செல்லும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகுந்தவர்கள். அமைச்சர் எவ்வழி மக்கள் அவ்வழி… அல்லது மக்கள் எவ்வழி அமைச்சர்கள் அவ்வழி.

எனவே இந்தக் களச் சூழலில் ஊழல் எதிர்ப்புக்கு இத்தனை முக்கியத்துவம் வேண்டாம் என்று மத்திய தலைமையும் மாநில சக தலைவர்களும் சொன்னபோது, நான் மேனேஜர் அல்ல என்று அண்ணாமலை தெளிவாக பதில் சொன்னார்.

அவர் ஒரு காவல்துறை அதிகாரி. அவருடைய எல்லைக்குள் முழு அதிகாரம் அவரிடமே இருக்கும். இருக்கவேண்டும். பாஜகவிலும் அதையே எதிர்பார்த்தார்.

மத்திய தலைமை இதை விரும்பவில்லை.

மக்கள் ஒருவேளை ஊழல் கட்சிகளை எதிர்ப்பதில் ஆர்வத்துடன் இருந்திருந்தால் மத்திய பாஜக நிச்சயம் அண்ணாமலையின் ஊழல் ஒழிப்பு முயற்சிக்கு முழு ஆதரவு தந்திருப்பார்கள்.

இன்னொரு வகையில் பார்த்தால், மத்திய பாஜகவுமே ஊழல் தொடர்பான முழக்கங்களை ஆட்சிக்கு வந்ததோடு நிறுத்திக் கொண்டுவிட்டார்கள்.

சுப்ரமணியம் ஸ்வாமிக்கு மத்திய தலைமையுடன் விரிசலுக்கான பல காரணங்களில் ஒன்று: ஊழல்வாதிகளைத் தண்டிப்பதில் பாஜக தீவிரம் காட்டவில்லை என்பதுதான். அண்ணாமலைக்கும் இது சார்ந்த வருத்தம் உண்டு.

போதாக்குறையாக ஊழல் வழக்குப் பேச்சு வெளியே வந்ததும் முதல்வர் உட்பட திமுகவினர் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று நேராக பிரதமரையோ நிர்மலா சீதாராமனையோ சந்தித்து காலில் விழுந்துவிட்டு வந்துவிடுவார்கள்.

காங்கிரஸ் காலத்தில் நியமிக்கப்பட்ட வருமான மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதோடு வழக்கை ஓரங்கட்டுவார்கள். அல்லது நீர்த்துப் போகவைப்பார்கள்.

இந்த விஷயத்தில் யார் பக்கம் அதிக நியாயம் இருக்கிறது… யார் பக்கம் குறைவாக இருக்கிறது என்ற முடிவெல்லாம் அவ்வளவு எளிதில் எடுக்கமுடியாது.

மக்கள் ஊழலைப் பெரிதாக நினைக்கவில்லை; எனவே டி.எம்.கே. ஃபைல்ஸ் முயற்சி தேவையில்லை என்று மத்திய தலைமை சொல்லியிருக்கலாம்.

திமுகவை அடக்கி வைக்க இதுவே வழி என்று அண்ணாமலை நினைத்திருக்கலாம்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது மத்திய அரசா… மாநில அரசா… மத்திய பாஜகவா… மாநில பாஜகவா..? யார் எடுக்கும் முடிவு அமலாகவேண்டும் என்ற சிக்கலாக இது மாறியிருக்கிறது.

*

  1. காட்சி ஊடகம் மற்றும் பிற ஊடகங்களைக் கையாள்வது எப்படி..?

இந்த விஷயத்திலும் அண்ணாமலை மிகத் தெளிவாக கட்சித் தலைவர் என்ற வகையில், தான் மட்டுமே ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார்.

முன்பெல்லாம் தமிழைசை கட்சித் தலைவராக இருப்பார். ஹெச். ராஜா ஒரு கருத்து சொல்வார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தமிழிசை சொல்வார். இப்படியாக கட்சி ஜனநாயக வழியில் இயங்கி வந்தது. இதை அண்ணாமலை விரும்பவில்லை. எனவே டி.வி. விவாதங்களில் பாஜக பெயரில் யாரும் கலந்துகொள்ளவேண்டாம் என்று சொன்னார்.

இதை அண்ணாமலையின் பிராண்ட் பில்டிங் நடவடிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம். கட்சியின் தீர்மானம் தெளிவாக, ஒன்றாக இருந்தால்தான் நல்லது. ஆளாளுக்கு ஒன்று பேசுவது சரியல்ல என்ற நடவடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், திரையுலகத்தைப் பற்றிப் பேசவேண்டாம் என்று அண்ணாமலை முடிவு செய்தார். இது நமது பிரம்மாஸ்திரத்தை நாமே பரணில் போடுவதற்கு சமம்.

உண்மையில் தமிழகத்தில் திமுகவின் பலமே அதன் பிரசார யுக்திகள்தான். அதிலும் திரை உலகமும் பிற பிரபலங்களும் திமுகவின் ஊதுகுழல்களாகவே எப்போதும் செயல்பட்டனர். மக்கள் மனதில் பாஜக மீதான விலகலை அதைக் கொண்டே செய்துகாட்டினார்கள். அப்போது நிச்சயமாக பாஜக அவர்களை அந்தக் களத்தில் மோதி வீழ்த்த முயற்சி செய்திருக்கவேண்டும்.

எதிரியின் பலம் யானைப் படையென்றால் நாமும் வலுவான யானைப் படை கொண்டு மோதியாகவேண்டும். போரின் அடிப்படை அரிச்சுவடிப் பாடம் இது.

ஆனால், அண்ணாமலை காட்சி ஊடகங்கள் பற்றிப் பேசவே கூடாது என்று சொன்னார். உண்மையில் ஊடகங்களைக் கையாள்வதில் மத்திய பாஜகவுமே பெருமளவுக்குத் தோற்றுத்தான் போயிருக்கிறது. கருத்து சுதந்தரம், கலை சுதந்தரம் என்ற பெயரில் இந்து, இந்தியா, மோதி, பாஜக, இந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ். எல்லாம் தாக்கப்பட்ட அளவுக்கு வேறு யாரும் தாக்கப்பட்டதில்லை. மத்திய பாஜகவும் இந்தப் போரில் உரிய கவனம் செலுத்தியதே இல்லை.

ஆனால், தேசம் முழுவதும் வெற்றி முகத்தில் இருந்த மத்திய பாஜக அந்த விஷயத்தில் அப்படி இருந்ததில் ஒருவகையில் எந்தத் தவறும் இல்லை. தமிழக பாஜகவும் அப்படி இருந்தது மிக மிகப் பெரிய தவறு. ஏனென்றால் இங்கு வெற்றி பெற காட்சி ஊடகப் பிரசாரங்கள், பதிலடிகள் பெரிதும் உதவியிருக்கும்.

உண்மையில் ஊழலை ஒழிப்பதில் ஆர்வம் கொண்டவர் என்ற வகையில் திரையுலகில் புழங்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்கவாவது களம் இறங்கியிருக்கவேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவே இல்லை. தினகரனுடனான அவருடைய நட்பைக்கூடப் புறம் தள்ளிவிடலாம். ஆனால், திரையுலகை அவர் எதிர்க்காமல் இருப்பதென்பது நம் வெற்றி வாய்ப்பை நாமே கை கழுவுவது போன்றது.

ஆளுங்கட்சி தனது அரசியல் செல்வாக்கை வைத்து திரையுலகை தன் ஏகபோக ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. இதைத் தகர்ப்பதைத் தவிர ஒரு துணிச்சலான காவலருக்கு வேறு என்ன இலக்கு இருந்திருக்கமுடியும்?

  1. பிராமணர்களுடன் அண்ணாமலைக்கு மோதலா..?

இல்லை.

அண்ணாமலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எல்லா ஜாதியிலும் ஆட்கள் இருப்பதுபோல் பிராமண ஜாதியிலும் உண்டு. ஊடகங்களில் அதிகம் பேசும் எதிர்த்துப் நபர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதால் பிராமண லாபி அண்ணாமலைக்கு எதிரானது என்று திராவிட மாஃபியா அழகாக ஒரு கட்டுக்கதையை முன்னெடுத்தது. அதை திராவிட சிந்தனையில் ஊறிய பலரும் இன்றும் சுமந்துகொண்டும் இருக்கிறார்கள்.

ஊடகங்களில் பாஜக சார்பில் யாரும் பேசவேண்டாம் என்று அண்ணாமலை தன்னுடைய தலைமைக் காலத்தில் முடிவெடுத்ததென்பது பிராமணர்கள் பேசுவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்தார் என்று சொன்னால் எப்படிப் பிழையாக இருக்குமோ அதுபோன்றதுதான் பிராமண சமூக ஊடகவியாளர்கள் சிலர் எதிர்ப்பதை பிராமண லாபியின் எதிர்ப்பாகச் சொல்வதும் பிழையான பார்வையே.

*

  1. 2024 தேர்தல் முடிவுகள்.

ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டிருந்தது; ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்டிருந்தது. 400 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும் என்ற நல்லெண்ணம் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு பல நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. என் மண் என் மக்கள் யாத்திரையில் அது மக்கள் மத்தில் கொண்டு செல்லப்பட்டிருந்தது (அல்லது அப்படி நம்பப்பட்டது).

திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 2016-2021 காலகட்ட மோதி எதிர்ப்பு வெகுவாக வலுவிழந்துவிட்டிருந்தது. கழகங்கள் இல்லா தமிழகம் என்ற முழக்கம் அழுத்தமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அண்ணாமலை என்ன எதிர்ப்பார்ப்புடன் தலைமைப் பதவிக்கு வந்திருந்தாரோ அதற்கான இறுதித் தேர்வு.

நம் கூட்டணிக்கு 18 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. தனியாக 11 % மாக வாக்கு அதிகரித்திருக்கிறது.

முன்பு எவ்வளவு இருந்தது?

3%.

முன்பு எத்தனை இடங்களில் போட்டியிட்டோம்?

2019-ல் ஐந்து இடங்கள். 2014-ல் 9 இடங்கள்.

2014-ல் ஒன்றில் வெற்றி… இல்லையா?

ஆமாம்.

இப்போது?

11% வாக்கு உயர்ந்திருக்கிறது.

போட்டியிட்ட இடங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறது?

ஏகதேசம் நான்கு மடங்கு.

ஆக அதனால் வாக்கு சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. கண்டெஸ்டட் வோட் ஷேரில் என்ன மாற்றம்?

  • 2009: ~7.1% • 2014: ~24% • 2019: 28.52% • 2024: 19.6%

ஆக முன்னேற்றம் எதுவுமில்லை. நல்லது நாம் கடினமாக உழைத்தோம். மக்கள் வாக்களிக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்வோம்.

இதுதான் மத்திய பாஜக 2024 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொண்ட விதம்.

எந்த நிலையிலும் கொடுத்த வாக்கை / டார்கெட்டை நிறைவேற்றவில்லையே ஏன் என்று கேட்கவே இல்லை. அமித்ஷாவும் சேர்ந்து களமாடிக் கிடைத்த தோல்வி அல்லவா? அவர்களுக்கும் அதில் பொறுப்பு இருக்கிறதே. தனிமைப்படுத்தி யாரையும் தண்டிக்க அவர்கள் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

*

  1. கடைசியாக மிக முக்கியமான விஷயம்: இறுதியாக ஏற்றப்பட்ட மயில் பீலி: அதிமுகவுடனான கூட்டணி.

அண்ணாமலை இதை விரும்பவில்லை. நான் தலைவராக இருக்கும்வரை அது நடக்காது என்றார். சரி என்று தலைமை முடிவெடுத்தது.

இங்கும் தில்லியா… தமிழகமா; அண்ணாமலையா… அமித்ஷாவா என்ற கேள்வியே எழுந்தது.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி. மத்திய அரசின் திட்டங்கள், முடிவுகளை மாநில அரசு நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அதைத்தான் மத்திய அரசு விரும்பும்.

காங்கிரஸ் தன் சொல் பேச்சு கேட்காத மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. பாஜக, ஆட்சியில் அதைச் செய்ததில்லை. கட்சியில் அதைச் செய்திருக்கிறது.

செய்யும்.

இந்தக் கூட்டணி ஜெயிக்காது என்று சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை என்று கண்ணோடு கண் பார்த்து, சொல்லாமல் சொல்லிவிட்டு அண்ணாமலை விடைபெற்றிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடு என்று அவர் சொன்னார். உண்மையில் அது தமிழ்த் திமிர்.

தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.

ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்?

விஜய்+அதிமுக கூட்டணி அமைத்திருப்பார்கள். அல்லது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக முன்பே விஜய் பக்கம் நகர்ந்திருப்பார்கள். இப்போது அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருப்பதால் இந்து வோட்டுகள் ஓரணியில் சேர்ந்துவிடும். திமுக கூட்டணி பிரிந்தால் அதிமுக வென்றுவிடும் என்று சரியாக முடிவெடுத்துத்தான் விஜயுடன் தேர்தலுக்கு முன்பாக இணையவில்லை.

பாஜகவும் அதிமுகவும் சேர்ந்திருக்காவிட்டால் எளிதில் திமுகவை கை கழுவியிருப்பார்கள். அல்லது அவர்கள் சேர்ந்து இருந்திருந்து, திமுகவே வென்றிருக்கும்.

47 இடங்களில் அதிமுக வென்றது. அதில் 44 இடங்களில் இரண்டாம் இடம் திமுக. ஆக பாஜக அதிமுக பிரிந்து நின்றிருந்தால் அதிமுக இவற்றில் தோற்றிருக்கும்; திமுக வென்றிருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால் பாஜக முழுவதுமாகத் தனிமைப்பட்டுத்தான் போயிருக்கும். தினகரன், பாமக எல்லாம் நிச்சயம் அதிமுக இருக்கும் இடத்தில்தான் சேர்ந்திருப்பார்கள். அல்லது விஜய் பக்கம் நகர்ந்திருப்பார்கள்.

உன் வழியில் போயிருந்தால் இதுதானே நடந்திருக்கும் என்று அமித்ஷாவும் கண்ணோடு கண் பார்த்துக் கேட்டிருப்பார்.

நம் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று பதில் சொல்ல முற்பட்டிருந்தால் அதை அமித்ஷா கேட்டிருக்க வாய்ப்பில்லை.

*

உண்மையில், இந்த ஆறு விஷயங்களிலும் மத்திய பாஜக பக்கம் அதாவது அமித்ஷா பக்கம் இருக்கும் நியாயங்கள் மிக அதிகம்.

அதாவது தமிழகத்தில் தொடர் தோல்விக்கான முக்கிய காரணங்கள் வேறு. அமித்ஷாவின் அணுகுமுறையா… அண்ணாமலையின் அணுகுமுறையா எது சரி என்ற கேள்விக்கே இடமில்லை. இருவருடைய அணுகுமுறையும் தோற்ற இடத்தில் யாரை உயர்ந்தவராகச் சொல்லமுடியும்?

அமித்ஷா பிற மாநிலங்களில் தொடர் வெற்றியைப் பெற்றுக் காட்டியிருக்கிறார். அந்த வகையில் அவரே பாஸ்.

மத்திய பாஜக, தமிழகத்துக்கு எவ்வளவோ செய்தும் தமிழக மக்கள் உரிய நன்றியும் மரியாதையும் காட்டாமல் இருப்பதுபோலவே தமிழக பாஜகவிலும் பலர் இருக்கிறார்கள்.

திராவிடர்களைப் போலத்தானே திராவிட பாஜகவும் இருக்கமுடியும்.

இங்கு திராவிட இயக்க அணுகுமுறையே வென்று வந்திருக்கிறது. எனவே, அண்ணாமலை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

என் மண்… என் மக்கள் என்று அவர் முழங்கியது அமித்ஷாவைப் பார்த்துத்தான் என்று இருக்கும்வரையில் இதில் வருத்தப்பட அதிகம் எதுவும் இல்லை. இரு தனி நபர் ஆளுமைகளுக்கு இடையிலான மோதல் என்று அதைத் தாண்டிவிடலாம்.

இந்திய தேசியம் நோக்கி, பாரத மாதாவை நோக்கிச் சொன்னதாக அது ஆகாமல் இருக்கவேண்டும்.

*

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது.

மாணிக் தாகூர் தொடங்கி எதிர் தரப்பில் பலரும் சொல்வது என்னவென்றால், இது பாஜகவின் நாடகம். தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்றவே முடியவில்லை என்பதால் அண்ணாமலை பிரிந்து தனிக் கட்சி காண்கிறார். பாஜகவை எதிர்ப்பதால் அவருக்கு தமிழகத்தில் செல்வாக்கு கிடைக்கும். அவர் கால் ஊன்றியபின் பாஜகவுக்கு அதை மடை மாற்றித் தருவார் என்று சொல்கிறார்கள்.

இதற்கு 100% சாத்தியம் இருக்கிறது.

ஆனால் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதுபோல் ஒரு டீலிங் செய்யப்பட்டது. அதாவது, மோதியை சல்லிக்கட்டு நாயகராக்கலாம். தமிழகத்தில் அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை பன்னீர் செல்வம்-எடப்பாடி கொண்டு நிரப்பலாம். அந்த ஆட்சியை ஐந்தாண்டு நடக்க அனுமதித்து பாஜக மெள்ள கால் ஊன்றலாம் என்று ஒரு வியூகம் வகுக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவை(யும்) இயக்கிய சர்ச் வெகு எளிதாக பாஜகவை குழிக்குள் தள்ளியது. இலங்கை பிரச்னையில் திமுகவும் காங்கிரஸும் துரோகம் செய்திருக்க, பாஜகவையும் மோதியையும் 2016-2021 காலகட்டத்தில் தமிழக விரோதிகளாகக் கட்டமைப்பதில் தமிழ் தேசிய சக்திகள் வெற்றிபெற்றுவிட்டன. இதை பாஜகவின் ஆதரவில் நடந்த அதிமுகவின் ஆட்சியை கொண்டே சாதிக்கவும் செய்தன.

இப்போதும் பாஜகவும் அண்ணாமலையும் எதிர்ப்பதுபோல் காட்டிக் கொண்டு களமாடத் தீர்மானித்திருக்கலாம். ஜாக்கி சான் படங்களில் இப்படித்தான் அவரும் அவருடைய நண்பரும் தமக்குள் சண்டைபோல் போலியாகக் காட்டிக்கொண்டு வில்லன் கையில் இருக்கும் துப்பாக்கியைத் தட்டிப் பறித்து அவனை வீழ்த்துவார்கள். இது ஒரு நல்ல போர் தந்திரம் தான்.

ஆனால், பாஜகவும் அதிமுகவும் இணைந்து நடத்திய ஆட்சியில் பாஜக வீழ்த்தப்பட்டதுபோல் இப்போதும் ஆகிவிடக்கூடாது. ஏனென்றால் எதிரி, நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தவைத்த கதைகள் ஏராளம்.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
ஆனால், மிக மோசமானதற்குத் தயாராக இருப்போம்.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை.

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

annamalai bjp tn leader - 2026

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார். அறிவித்த அன்று காலையில் அதில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 20,000 க்கு கீழே இருந்தது. அவரின் அரசியல் அறிவிப்பு மற்றும் கோரிக்கைக்கு பின்னர் அதில் இணைந்தவர்களின் எண்ணிக்கை அன்றைய இரவிற்குள் 10 லட்சத்தை தாண்டியது. 

விஜய் இதுபோல ஒரு முன்னெருப்பை சில வாரங்களுக்கு முன்பிருந்து விளம்பரப்படுத்தி ஆரம்பித்தபோது, 22 லட்சம் பேர் சேர்ந்தார்கள். எந்த அறிவிப்பும் இல்லாமல் அண்ணாமலை விலகிய செய்தி பலரை சேராமாலே இது என்பது குறிப்பிடத்தக்கது. சில நண்பர்கள் இது ஒரு கோடியை ரொடும்.என்கிறார்கள், அபப்டி எனக்கு தோன்றவில்லை, ஆனால் விஜயின் இலக்கை மிஞ்சிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த குறியீடு அவருக்கான ஆதரவு தளத்தை, தாகத்தை, தாக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 

இது மூப்பனார் தொடங்கிய TMC போல ஒரு தேசியவாதத்தை ஆதரிக்கும் கட்சி. உணமையான செக்யூலரிஸம் என இந்து தர்மத்தின்படி நம்பிக்கை, வழிபாட்டு உரிமையில் தலையிடாத ஒரு நிலையை ஏற்றிருக்கும். பாஜகவும் இதே கொள்கையை கொண்ட கட்சியாக இருந்தாலும், திமுக அதற்கு மதசாயம் பூசியதால், அதை உடைக்க முடியவில்லை, ஆம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவைதான் செக்யூலர் பார்டி. ஏனெனில் பாஜகாவால் திமுகவை உதைக்க முடியவில்லை. 

தவெக என்பது எப்படி மெஷினரிகளால் கிரியேட் செய்த திமுகவின் கார்பன் காப்பியோ, TMC எப்படி காங்கிரஸின் காப்பியோ அதுபோல அண்ணாமலையுன் புதிய கட்சி பாஜகவின் கார்பன் காப்பியாக இருக்கும். அப்போது எதற்கு தனி கட்சி என்றால், பாஜக என்ற தேசிய கட்சிக்கு தமிழகம் என்பதைவிட இந்தியா என்பது முன்னுரிமை என்பதால், தமிழகத்தின் நலன்கள் சமரசம் செய்துகொள்ளப்பட்டது. திமுகவில் குடும்ப நலன்களுக்காக கட்சி சமரசம் செய்துகொண்டது போல என்பதனால் தவெக கொள்கையில் எதிரிகளல்ல, அரசியில் எதிரிகள். 

அண்ணாமலைக்கு இந்த திறமை இருந்ததால்தான் அவருக்கு கட்சியில் சேரும்போதே பதவி, அடுத்த ஒரு வருடத்தில் மாநில தலைவர் பதவி, முன்பு எந்த தலைவருக்கும் இல்லாத சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை முழுதாக கொடுக்கவில்லை (2024 வேட்பாளர் தேர்வு, அதிமுகவுடன் கூட்டணி என்று தாமதித்ததால் கொடுக்க வேண்டிய நேரத்தில் (தேர்தலுக்கு மிக அருகில்) கொடுக்கவில்லை. அது தேசிய கட்சிகளுக்குள்ள சாபம்.

ஆனால் அந்த தேர்தலில் 2014 ஆண்டு பாஜக கூட்டணி பெற்ற சீட்டுக்களை வாங்க முடியவில்லை, ஓட்டுக்களைத்தான் அண்ணாமலையால் வாங்க முடிந்தது என்றால், அது தவறு.  அந்த தேர்தலில் பாஜக தேமுதிகவின் ஜூனியர் பார்ட்னர், அதனால் பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%.ஆனால் 2024 ல் பாஜக தலைமையில் அமைந்த கூட்டணியில் பாஜக பெற்றது 11.34%. அதில் பாமகவை கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் பாஜக சற்றேறக்குறைய 18% வாங்கி இருக்கும். பாஜகவின் மத்திய தலைமை பாமகவை கூட்டணியில் சேர்க்க காரணம், அதிமுகவின் வெற்றியை தடுப்பதுதான் பிராதானமாக இருந்தது என்பதால், அண்ணாமலைக்கு தேவையான சுதந்திரம் அங்கேயும் கிடைக்கவில்லை.

அதுவல்லாமல் பாஜகவிற்கு தொடந்து மதசாயம் பூசிய திமுக மீது பல வழக்குகள் இருந்தும், பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதை வெற்றி பெற அனுமதித்தது. அதிலும் TR பாலு, கனிமொழிக்கு எளிதாக வெல்லும் வாய்ப்புகளை பாஜக தாரை வார்த்து கொடுத்தது. அப்போதே அவர்களை தண்டித்து இருந்தால் பாஜக அன்றே சில தொகுதிகளிலாவது ஜெய்த்திருக்கும். 

அவையெல்லாம் முடிந்துபோனவை. ஆனால் தமிழக சட்டமன்றத்திற்கு களத்தை திமுக எதிர்ப்பை முன்னிறுத்தி, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி என்ற நிலையில் தயார் செய்து வைத்தபோது, அதிமுக கூட்டணி மூலம் அதை தவெகவிற்கு தாரை வார்த்து கொடுத்தது. அதுவும் பாஜக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காகவல்ல, திமுக மீண்டும் ஆட்சியில் அமராமல் இருப்பதற்காக ஒரு பக்கம், மறுபக்கம் அதிமுக, தவெகவுடன் சேராமல் தடுப்பதற்காக மறுபுறம்.

இப்படி தமிழக பாஜக என்பது மத்திய தலைமையின் தேவைக்காக என்றபோது, அதனால் தமிழக பாஜக அதற்கான வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டது, அதுவே வருங்காலத்திலும் தொடரும் என்பது எதார்த்தம். அது தேசிய நோக்கில் சரிதான் என்றாலும், தமிழகத்தின் நலன் சமரசம் செய்துகொள்ளப்பட்டது. 

இன்று தவெக ஆட்சியில் உள்ளது. ஆனால் அதற்குரிய் அனுபவமோ, திமுக விட்டுச்சென்ற மிக மோசமான நிதி நிலையால், துளிகூட அரசு ஆளுமை என்ன மற்ற வகைகளில் கூட அனுபவம் இல்லாததால் தவெக கட்சி தடுமாறுகிறது, தடம் மாறுகிறது. அதன் செயல்பாடுகள் வெறும் வாய்ச்சவாடல் என்பதால் அது மீண்டும் இடைத்தேர்தலில், அதுவும் திருச்சியில் வெல்லுமா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகிவிட்டது. 

ஏனெனில் அதன் வாக்குகள் சரிவடைந்துள்ளதாக செய்திகள் இருந்தாலும் அதனுடன் இப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, அடுத்து மதிமுக என்று  இருப்பதாலும், ஆளும் கட்சி என்பதாலும், அதற்கு வெற்றிபெற வாய்ப்புகள் போதுமானது. ஆனால் அதன் செயல்பாடுகள், கொடுத்த வாக்குறுதிகளில் ஏமாற்று என்று அதே திமுக பாலிசியால் அதற்கு மக்களிடம் எதிர்ப்பு மிக குறுகிய காலத்தில் எழுந்துள்ளது. 

இந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட எதிர்ப்புக்கு முக்கிய காரணம் திமுகவின் சிறப்பான எதிர்கட்சி என்ற அதன் செயல்பாடுகளே என்பதை நாம் மறைக்க முடியாது. முதலில் அந்த எதெப்பு ஆளும் கட்சிக்கு சாதகத்தைத்தான் கொடுத்தது, ஆனால் தவெகவின் நிர்வாக செயலற்ற இயாலமையால் அது எதிராக திரும்பி வருகிறது. இப்போதுள்ள திமுகவின் மைனாரிட்டி, கூட்டணி இழப்பால் அதனால் தேர்தலில் வெல்லும் நிலையில் இருந்து சருக்கிவிட்டது. அதே சூழலில் அதிமுக கிட்டத்தட்ட தனது இருப்பை இழந்துவிட்டது என்றதால், அதனாலும் வெல்ல முடியாது. 

இந்த சூழலில் இந்த தேர்தலில் அண்ணாமலை கட்சி போட்டியிட்டால், கனிசமான தவெக வாக்குகளை இழக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் மூலம் எதிர்கட்சி வாக்குகள் சிதையாமல் சேர்ந்தால், அது ஜெய்க்க வாய்ப்புண்டு. திமுக, அதிமுக, பாஜக என்று மூன்றும் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தால், அது ஒரு மிக வலுவான ஒரு டஃப் ஃபைட்டை தவெகவிற்கு கொடுத்து வெற்றிபெற முடியும். திமுக தேர்தல் வெற்றிக்கு தேவைப்பட்டால் காவடி எடுக்கவும் தயங்காது.

தவெகவின் செயல்பாடுகள் வரப்போகும் நாட்களில் அதன் செயல்பாடுகளை பொறுத்தே, எதிரே இருக்கும் கட்சிகளுக்கான வாய்ப்பு என்பது முடிவாகும். தற்போது கைகாட்டும் தவெகவின் ஆட்சி என்பது திரிணமுள் காங்கிரஸ் கட்சியின் நிலையை நோக்கி செல்கிறது என்றால், அந்த ஆதரவு அண்ணாமலை பக்கம் மாறும். அதாவது திராவிட கட்சிகளின் கூட்டணியில் பாஜக ஒரு பக்கம், அண்ணாமலை ஒரு பக்கம் என்று மாறலாம். இப்போது நாம் முன்பு சொன்ன மெஷினரிகளின் நோக்கம் என்பது தவெக ஒரு பக்கம், திமுக ஒரு பக்கம் என்று தமிழக அரசியலை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது என்றால் RSS இன் இந்த மூவ் வெற்றி பெறுமேயானால், மெஷினரிகளுக்கு தமிகத்தில் எழுதப்பட்ட முடிவுரையல்லவா?

நான் 1984 லிருந்து பாஜக ஆதரவாளன். ஆனால் தமிழகத்தில் 2004 வரை திமுகவின் ஆதரவாளன் என்பதை விட அதிமுகவின் எதிர்ப்பாளர். அதன் பின் நடந்த திமுகவின் விலகலாலும், 2006-11 ல் நடந்த திமுகவின் கேடுகெட்ட ஆட்சியால் அந்த கட்சியை தோற்கடிக்கும் கூட்டணிக்கு வாக்களித்து வருகிறேன். மத்திய பாஜகவின் வெகுசில நடவடிக்கைகள் தவிர முழுமையாக பாஜகவை ஆதரித்து வருகிறேன், இனிமேலும் அது தொடரும். 

ஆனால் தமிழகத்தில் அண்ணாமலையின் வழி என்பது மாற்று வழியில்லாத கட்டாயம் என்பதால் முழு மனதோடு ஆதரிக்கிறேன். இது என்ன ரெட்டை குதிரை சவாரியா என்றால் இதுவரை எந்த பதவியையும் கட்சியில் ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, எனக்கு என்னைவிட கடை பெரிது, கட்சியைவிட நாடு பெரிது என்பதால் நாளை மோடியை விட நல்ல தலைவர் நாட்டிற்கு கிடைத்தால் அவரையும் ஆதரிப்பேன். 

இன்றுவரை மட்டுமல்ல, அடுத்த 4 ஆண்டுகளுக்கு மோடிக்கான மாற்று யாருமில்லை. நாளை நல்ல ஒரு தலைவர் வந்துவிட்டால், அப்போதும் மோடி என்றா மாபெரும் தலைவரை, அவர் செய்த இமாலய சாதனையை நான் ஒரளவிற்கு புரிந்தவன் என்பதால், அவர்தான் இந்தியாவின் தேசத்தந்தை, என்று நம்புகிறேன். இன்றும் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், அதற்கு மின் வந்த வாஜ்பாய் அவர்களை நேசிக்கிறேன். 

ராஜீவ் காந்தியை இன்னும் நன்றியோடு நேசிப்பதால் நான் மோடிக்கு எதிரானவன் என்று சொல்கிறவர்களை பற்றி எனக்கு  கவலையில்லை. ஆம், இப்போது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதல்ல எ(ந)மது நோக்கம், திராவிஷத்தால் தரம் தாழ்ந்துபோன தமிழகத்தை, தலை நிமிர செய்ய முடியாவிட்டாலும், தரம் குறைந்த நிலையை மாற்ற என்னால் முடியாது, ஆனால் அண்னாமலையால் முடியும் என்று நம்புகிறேன். அவர் பின்னால் காலடி எடுத்து வைக்கிறேன்.

அதற்காக அவர் பின்னால் வராத பாஜகவினரை நான் குற்றம் சொல்ல மாட்டேன், அது அவரவர் புரிதல், நம்ம்பிக்கை, தேவை போன்றவற்றை பொறுத்தது. அதனால் அவர்களையும் மதிக்கிறேன். அதே சமயம் எனக்கு சென்ற தேர்தலில், அதிமுகவோடு பாஜக கூட்டு சேர்ந்ததை நான் அண்ணாமலையின் பார்வைக்கு மாறாக ஆதரித்தேன். ஆனால் என் நோக்கம் திமுகவை வீழ்த்தியாக வேண்டும்  என்ற பாதி வெற்றியை பெற்றாலும், மீதி வெற்றியை பெற முடியாமல் போனதிற்கு என் புரிதல் தவறு என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

அப்படியெனில் அண்ணாமலையை 100% ஏற்கிறீர்களா என்றால், என் அப்பா, அம்மா, மனைவி, மகள்கள் என்று அவர்களிடமே எனக்கு 100% உடன்பாடு இல்லை எனும்போது, எப்படி அண்ணாமலையிடம் அது வரும்?  அப்படி நான் இருப்பதாக சொன்னால், நான் அவரிடம் எதிர்பார்க்கும் எனது தேவைக்காக அதை சமரசம் செய்துகொள்கிறேன் என்பதோ அல்லது எனக்கு சுயமாக எந்த புரிதலும் இல்லை என்பதோ அர்த்தமாகிவிடும். 

மோடி ஆட்சி மீது எனக்கு பெரும் சேடிஸ்பேக்‌ஷன் இருக்கிறது என்றாலும், சில விஷயங்களில் முரண்பாடுகள் உண்டு, அதை நான் எப்போதும் சொல்ல தயங்கியதில்லை. அதே சமயம், அவர் சூழலில் நாம் இல்லாததால், அதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம் என்பதையும் ஏற்கிறேன் என்பதால் எதிர்க்கவில்லை. அதுவே தொடரும்..

இது நான் சுத்தமானவன் என்று யாருக்கு நிரூபிக்க எழுதப்பட்ட பதிவு அல்ல, இப்படி ஒரு பார்வையும்.உண்டு என்று நண்பர்களுக்கு புரியவைக்க.

எனவே இங்கே யார் சரி ஒருவருக்கொருவர் சண்டை போடுவதை விட, சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. எனவே நீஙகள் எந்த கட்சியாகவோ, அமைப்பாகவோ இருக்கலாம். அதில் தொடர்வதில் எந்த சிக்கலுமில்ல, நான் இன்றும் பாஜககாரன் தான், மோடி அரசின் ஆதரவாளந்தான். ஆனால் தமிழகற்றிற்கு தேவையான மேம்பட்ட இந்த நோக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். இது சரியாக சென்றால், அடுத்து தொடங்கப்படும் கட்சியில் சேர்ந்து பயணிப்போம்… 

மேலும் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் பொறாமை. என்னைவிட ஒரு அறிவாளியை பார்த்தால், பாராட்டுவதற்கு பதிலாக, பொறாமையே நம்மிட. மேலிடுகிறது. அதற்கு மெக்கல்லெந் கல்வியை போதித்த திராவிஷத்தின் 60 ஆண்டு ஆட்சி காரணம். என்னைவிட அண்ணாமலை 14 வருடம் சிறியவர். நான் பேண்ட் போட்டிருந்தபோது ட்ராயர் போட்டதை பார்த்தவன். ஆனால், அவரின் அறிவும், திறமையும் என்னைவிட அதிகம், நான் செய்ய நினைத்ததை அண்ணாமலை செய்வதால், இன்னும் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால், அவரை தலைவராக ஏற்க எனக்கு எந்த கூச்சமுமில்லை, மாறாக பெருமைபப்டுகிறேன். எனவே அசரின் இந்த இயத்தில் சேர்கிறேன் 

இப்போதுவரை இந்த அமைப்பில் சேர்ந்தவர்கள் 12,39,777. இது விரைவில் 22 லட்சத்தை, ஒரு லட்சியத்தை அடையும் என்று நம்புவதால், வரவேற்கிறேன். அதே சமயம், முதலில் உங்கள் குடும்பத்தி தேவையை பூர்த்தி செய்துவிட்டு, அதற்கு மேல் உள்ள நேரத்தை இந்த பொ(பு)து நலனுக்காக அர்ப்பணியுங்கள். பொது நலன் என்பது சுய நலனை அடைய ஒரு பொதுவான மாற்றுவழியே..

வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன்.. #Indea

— முரு. தெய்வசிகாமணி