Home Blog Page 5

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

annamalai speech in madurandhagam - 2026

கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் திறப்பு விழாவில் அது வேலை செய்யாமல் போகவே, மின் தூக்கி ஆபரேட்டரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதுகில் அடித்ததாகவும் செய்தி பரவியது. இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்தார் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் ….

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்கும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து, ₹3.55 கோடி பணம், இதற்காகச் செலவிட்டுள்ளதாக, திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறது.

சுமார் 60 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு, தலா 20 பேர் பயணம் செய்யும் இரண்டு மின்தூக்கிகள் அமைக்க, உண்மையில் ₹3.55 கோடி செலவு ஆகுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த மின் தூக்கிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்க, அமைச்சர் திரு. சேகர்பாபு, அமைச்சர் திரு. கோவி. செழியன் ஆகியோர் முற்பட்ட நிலையில், மின்தூக்கிகள் வேலை செய்யவில்லை. மின்தூக்கி வேலை செய்யாததால், அதனை இயக்குபவரை, அமைச்சர் திரு. சேகர்பாபு, முதுகில் அறைந்திருக்கிறார். பக்தர்களின் காணிக்கை பணம் ₹3.55 கோடி செலவிட்டும், இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்தும், மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது?

வயதான பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின்தூக்கிகளில் கூட, கமிஷன் அடித்திருக்கிறார்களா? 20 பேர் வரை பயணம் செய்யலாம் என்று கூறியிருந்த நிலையில், 10 பேரைக் கூட தாங்கும் சக்தி, அந்த மின்தூக்கிகளுக்கு இல்லை என்றால், இந்த மின்தூக்கிகளின் தரம் குறித்த கேள்வி எழுகிறது.

இவற்றில் எந்த நம்பிக்கையில், வயதான பக்தர்கள் பயணம் செய்வார்கள்? உடனடியாக, இந்த இரண்டு மின்தூக்கிகளையும் முறையாக தரப் பரிசோதனை செய்து, அறிக்கை வெளியிட வேண்டும். உண்மையில் 20 பேர் எடையைத் தாங்கும் சக்தி இந்த ஒவ்வொரு மின்தூக்கிகளுக்கும் இருக்கிறதா என்பது பக்தர்களுக்குத் தெரிய வேண்டும்.

மேலும், இதற்காகச் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ₹3.55 கோடிக்கான முழு கணக்குகளையும், இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிட்டு, சேகர் பாபு பதில் கொடுத்தார்.

இதனை பகிர்ந்த அண்ணாமலை, செல்லத்தட்டு சேகர்பாபு என்ற விதத்தில் கிண்டல் செய்து இன்று ஒரு பதிவினை வெளியிட்டார் அதில்,

சுவாமிமலை திருக்கோவிலில், மின்தூக்கி அமைப்பதில் நடந்திருக்கும் ஊழல் குறித்து, அமைச்சர் திரு. சேகர்பாபு புதுவிதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைக்கிறோம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர் திரு. சேகர்பாபு, தற்போது பல்டி அடித்து, உபயதாரர்கள் நிதி என்று முதன்முறையாக கூறியிருக்கிறார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சட்டசபையில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், எப்படி இரண்டு ஆண்டு காலமானது என்ற கேள்வி ஒருபுறம். ஒரு மின்தூக்கி 20 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எப்போது அது 13 பேர் என்றானது?

அதுமட்டுமின்றி, நேற்றைய தினம், அதிக எடை என்ற காரணத்தால், மின்தூக்கி செயல்படாமல் நின்ற போது, அதில் 10 பேர் கூட இல்லையே? சரி. அமைச்சர் கூறியிருப்பதைப் போல, கடந்த இரண்டு ஆண்டுகளில், உபயதாரர்கள் வழங்கிய ₹2,000 கோடி நிதியில், திமுக அரசு செய்த 12,200 திருப்பணிகள் எவை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியில் செலவிட்ட திருப்பணிகள் எவை என்ற பட்டியல் வழங்கத் தயாரா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த திருப்பணிகள் அனைத்துமே உபயதாரர்கள் நிதியில்தான் நடந்தது என்றால், கோவில்களின் நிதி, சொத்துக்கள், உருக்கிய தங்கம் அனைத்தும் எங்கே சென்றது? இறுதியாக, மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, தட்டிக் கொடுத்தேன் என்கிறார் அமைச்சர் திரு. சேகர்பாபு.

இப்படித்தான் ஒரு முறை, முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மெட்ரோ ரெயிலில் ஒரு இளைஞரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார். அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கோரிக்கை மனு கொடுத்த ஒரு ஏழைத்தாயின் தலையில் அடித்தார்.

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்? – என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

TN Governor RN Ravi
TN Governor RN Ravi

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அன்புச் சகோதர சகோதரிகளே! தமிழ்நாட்டுச் சொந்தங்களே! உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஒட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை. 

மகாகவி பாரதியாரையும், கவிச்சக்கரவர்த்தி கம்பரையும், அருட்பிரகாச வள்ளலாரையும், ஐயா வைகுண்டரையும், பொய்யாமொழிப் புலவராம் வள்ளுவப் பேராசானையும், கணியன் பூங்குன்றனாரையும். தமிழ்த் தாத்தா உ வே சாமிநாதய்யரையும், ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியாரையும், பூலித்தேவனையும், மருது சகோதரர்களையும், வீரமங்கை வேலுநாச்சியாரையும் வீரபாண்டிய கட்டபொம்மனையும், இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜிக்குப் பக்கபலமாக நின்ற தமிழ்வீரர்களையும், இன்னும் இன்னும் இன்னும் ……….. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிபோல், பெயர்களும் நினைவுகளும் கருத்துகளும் புதையல்களாக என் உள்ளத்தில் மண்டுகின்றன. கடந்த 54 மாதங்களில், உங்களோடும் உங்கள் வழியாக இந்தப் பெருமக்களோடும் வாழ்ந்தேன். மகிழ்ந்தேன், செம்மாந்த நெறிகளில் திளைத்தேன், அன்பின் அரவணைப்பில் ஆழ்ந்து கலந்தேன்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கு ஆளுநராகப் பொறுப்பேற்று வந்தபோது, கோவிட் பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீர்ந்திருக்கவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. யாரைச் சந்தித்தாலும், எங்கே போனாலும், புன்னகைகள்தாம் என்னைச் சூழ்ந்தன. 

தெரிந்தவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள் என்றெல்லாம் இல்லாமல், எளிய மக்கள் எல்லோரும், குழந்தைகள் உட்பட, முகத்தில் முறுவலோடும், கண்களில் ஆர்வத்தோடும், நெஞ்சங்களில் நேசத்தோடும் பழகுகிற பாங்கினைக் கண்டேன். மனித நேய உறவினால் பொலியும் மாபெரும் தமிழ் குடும்பத்தில் ஒருவனாகவே உணர்ந்தேன், இன்றும் உணர்கிறேன்.

‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்னும் மகாகவியின் வரிகளின் மகத்துவத்தை முழுமையாக உணரமுடிந்தது. வெறும் ஏட்டுக் கல்வியாக இல்லாமல். கல்வியின் துல்லியத்தையும் ஞானத்தையும் நீங்கள் உணர்ந்துள்ளீர்கள், தக்க நிலையில் வெளிப்படுத்தவும் செய்கிறீர்கள். பாரத தேசத்தவர் யாரும் இராமனுடைய செல்வாக்கோ, கிருஷ்ணனுடைய செல்வாக்கோ இல்லாமல் இருக்கமுடியாது. மிகச் சிறிய வயதிலிருந்தே பகவத் கீதையையும் துளசிதாசரின் ராம சரித மானசத்தையும் பயின்று பழகிய எனக்கு, கம்பரின் காவியம் மேலும் விசாலமான பார்வையை அருளியது. ‘அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்’ என்னும் அவரின் வரிகளை, அவரின் கவித்துவத்திலும் காவிய நாடகத்திலும் அறவழி வாசகங்களிலுமே கண்டேன். அலகிலா விளையாட்டுடைய அந்த அருந்தமிழ்ப் பெருமகனார் மீதும், அவர் காட்டுகிற இராமன் மீதுமான காதல் தான்.

சென்னை மக்கள் மாளிகையில், கம்பர் வனம் அமைத்து, கவிச்சக்கரவர்த்திக்குச் சிலை வைத்துப் பணியச் செய்தது. திருவாசகத்தை முற்றோதல் செய்வது போல, கம்பராமாயணத்தை, குறைந்த பட்சம் சில பகுதிகளையாவது ஓதிக் களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இளைய தலைமுறையையும் மாணவ சமுதாயத்தையும் இவ்வாறு செய்யச் செய்தால், அறம்- பொருள்-இன்பம் தழைக்கும் என்பதில் ஐயமில்லை.

சங்கப் புலவர்களின் சமுதாய நோக்கம், திருவள்ளுவரின் மாண்பு, தமிழின் சமகால இலக்கியங்கள், மரபு சார்ந்த தமிழ்ப் பழக்கங்கள் என்று தமிழின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழ் மக்களின் பரிமாணங்களையும் நேரடியாக அறிகிற பேறும், அறிஞர்களோடு கலந்து அளவளாவுகிற பேறும் நிறையவே எனக்குக் கிட்டியுள்ளன. உண்மையிலேயே ஆனந்தத்தில் திளைக்கச் செய்த தருணங்கள். 

‘கல்வி என்பது என்ன?’ என்றொரு கேள்வி எழுந்தது. சுவாமி விவேகானந்தர் அதற்கு விடை சொன்னார். ‘ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உள்ள தெய்விகத்தை மலரச் செய்வதே கல்வி’ என்றார். தமிழையும், சங்க இலக்கியம் தொடங்கி சமய இலக்கியம் வரையான தமிழ்ப் புதையலையும் வாசித்தால், இத்தகைய கல்வியைப் பெறலாம்.

அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு – உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள் கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன். ஊர்களின் அமைப்பு, அளவு, வட்டார வழக்குகள் போன்றவை மாறுபட்டாலும், உங்கள் அனைவரின் அன்பும், உழைப்பும், உழைப்பில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் மாறவேயில்லை. மாணவர்களிடம் இருக்கிற துள்ளலையும் சிரிப்பையும் வயது முதிர்ந்தவர்களிடமும் கண்டேன்; உயர் தொழில்நுட்ப விவாதங்களில் காண்கிற நுணுக்கங்களை, உழவாரப் பணியிலும் பார்த்தேன். நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்திருந்தது.

தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள். நவீனகால மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். ‘செயற்கை நுண்ணறிவை’ தொழில்நுட்ப இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள். பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சென்றபோது இதைக் கண்டேன். மாணவர்களோடும் போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமாபவர்களோடும் பல்வேறு வகையான பயிற்சிகளுக்குத் தயாராபவர்களோடும் உரையாடிய நிகழ்ச்சிகளில், அவர்களின் ஆற்றலும் திறமையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. இத்தகைய உரையாடல் நிகழ்வுகள் எனக்குள் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தோற்றுவித்தன. ஆங்கிலத்தில், ‘என்ரிச்சிங் எக்ஸ்பீரியன்ஸ்’ என்பார்களே, அப்படிப்பட்ட மேம்பாட்டு அனுபவம்.

தமிழ்நாட்டின் மேன்மைகளில், ஆகச் சிறந்த மேன்மை, கோயில்கள்! தில்லைச் சிதம்பர நடராஜரும் திருவரங்க ரங்கராஜரும் தமிழன்னையின், தமிழ் மக்களின் குடும்ப உறுப்பினர்கள். தமிழ்கூறு நல்லுலகை எப்போதும் பாதுகாத்து அருள்பாலிப்பார்கள். திருக்கோயில்களில் சுவரோவியங்களும், அறவழிக் காட்சிகளும், கல்வெட்டுகளும் பாரதப் பண்பாட்டுக் காணப்படுகிற சிற்பங்களும், கருவூலங்கள். இவற்றையெல்லாம் பாதுகாப்பது மட்டுமில்லாமல், இளைஞர்களும் அறிஞர்களும் மேலும் மேலும் பயின்று, ஆராய்ந்து, பாரதத் திருமரபின் ஞானப் பெருக்கத்திற்கு உதவவேண்டும்.

தேசிய நீரோட்டத்திற்குத் தலைவெள்ளம் தந்தவர்கள் தமிழர்கள். பூலித்தேவனும் கட்டபொம்மனும் வீரமங்கை வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் எவ்வாறெல்லாம் பாடுபட்டனர், எப்படியெல்லாம் குரல் கொடுத்தனர் என்பதை என்னைக் காட்டிலும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். 1857ஆம் ஆண்டின் சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக, 1806ஆம் ஆண்டே வேலூர் புரட்சி எழுந்தது.

தமிழிலக்கியங்கள், பாரத நாட்டைப் பற்றிக் கூறும்போது ‘நாவலந்தீவு’ என்னும் பெயரைப் பயன்படுத்துகின்றன. நிலவியல் ஆய்வுகளின்படி, இந்திய தீபகற்பத்தை, இப்பெயரோடு பொருத்தலாம். மருது சகோதரர்கள், ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

செக்கிழுத்த செம்மல் வ உ சியும் பாரத மாதாவுக்குக் கோவில் கட்ட விழைந்த சுப்பிரமணிய சிவாவும், கொடி காத்த குமரனும், சமுதாய விலங்குகளையும் நோய்ப் பிணிகளையும் அகற்ற முற்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும், வானரப் படை வைத்து தேசியத்திற்குப் பணி செய்த ருக்மிணி லட்சுமிபதியும், காந்தியத்தையும் பெண்ணியத்தையும் பேணி வளர்த்த அம்புஜம்மாளும் இன்னும் பலரும் தேசிய நீரோட்டத்தில் நீந்தித் திளைத்தவர்கள்; நாமும் அவ்வாறே ஆனந்தப்படவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்.

அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டேபோகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை, நீங்கள் காட்டிய அன்பு. உங்களின் அன்பை விரிக்க வார்த்தைகள் போதா- என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதா!

அன்பானவர்களே!  அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன்.

அன்புடன்

என்றும் உங்கள் சகோதரன்

ஆர்.என் ரவி.

இக்கணம் – தேவை சிக்கனம்!

write thoughts - 2026
#image_title

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

இந்தியாவிலும் கடந்த வாரம் LPG விலை வீடு மற்றும் வர்த்தக சிலிண்டர் முறையே ₹60 மற்றும் ₹115 உயர்த்தப்பட்டது…

பெட்ரோல் டீசலை பொறுத்தவரை இந்தியாவில் 2014க்கு முன்பு 2 வாரங்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பு வைக்கப்படிருந்தது..

இந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி கிடங்குகள் பெருமளவில் கட்டப்பட்டு விசாகப்பட்டினம், மங்களூர், பாடூர் உள்ளிட்ட இடங்களில் கிட்டத்தட்ட 74 நாட்களுக்கு தேவையான அளவுக்கு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது…

ரஷ்யாவில் இருந்து குரூட் வரத்து அதிகரிக்க தொடங்கியிருப்பதால் பெட்ரோல் டீசலுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை… ஆனால் எரிவாயு தட்டுப்பாடு தலை தூக்கத் தொடங்கியுள்ளது…

கடந்த ஏழேட்டு ஆண்டுகளாக தட்டுப்பாடு இன்றி பதிவு செய்யப்பட்டு அடுத்த நாளே விநியோகம் செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர்கள் தற்போது ஒரு வாரம் வரை தாமதமாகிறது…

போர் இன்னும் நீளும் வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது… ஆதலால் நாடு முழுவதும் LPG தட்டுப்பாடு வரும் நாட்களில் அதிகரிக்கலாம்…

அதற்காக உடனே பதட்டமடைந்து… “சென்னையில் மழை பெய்யும்” என்று அறிவிக்கப்பட்ட உடனேயே சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் புகுந்து பிரட் பாக்கெட், பால் பாக்கெட், சேமியா பாக்கெட் எல்லாவற்றையும் காசு கொடுத்து மொத்தமாக சூரையாடி கொண்டு வந்து வீட்டுக்குள் சேர்த்து வைக்கும் சென்னையன்ஸ் போல.. உடனடியாக வீடுகளில் LPG சிலிண்டர்களை புக் பண்ணி குவிக்க வேண்டாம்…

வீடுகளில் கேன்களில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வாங்கி குவித்து வைக்க வேண்டாம்… கடுமையான வெயில் காலத்தில் அது ஆபத்தானது…

முடிந்தவரை இந்த போர் சூழ்நிலை மாறும் வரை கேஸ் பயன்பாட்டை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று யோசித்து செயல்பட்டால் எல்லோருக்கும் நல்லது…

முடிந்தவரை கேஸ் அடுப்புக்கு பதில் இண்டக் ஷன் ஸ்டவ், எலக்ட்ரிக் கெட்டில், மைக்ரோ வேவ் ஓவன், OTG போன்றவற்றை பயன்படுத்தி சமையல் வேலைகளை செய்யலாம்..

அதே போல பக்கத்தில் இருக்கும் கடைகள், டியூசன் செண்டர், வங்கி, வழிபாட்டு தளங்கள் ஆகியவற்றுக்கு போவதற்கு கார், பைக் எடுப்பதற்கு பதில் சைக்கிளில் போக தொடங்கலாம் அல்லது நடந்து போகலாம்… செலவு குறைவு.. உடல் ஆரோக்கியதுக்கும் நல்லது, காற்று மாசும் குறையும்…

வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி வாகனங்களை பயன்படுத்து வதையும் அவசியம் குறைக்கலாம்…

  • தஞ்சை ராஜேஷ்

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

t20world champions - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
இறுதி ஆட்டம் 08.03.2026

அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் பல சந்தேகங்கள்.

  • இதுவரை எந்த அணியும் மூன்றாவது முறை டி20 கோப்பையை வென்றதில்லை.
  • சொந்த மண்ணில் எந்த அணியும் கோப்பையை வென்றதில்லை.
  • அகமதாபாத் இந்தியாவிற்கு ஒரு ராசி இல்லாத மைதானம்; .ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை கோட்டை விட்ட மைதானம்
  • நடப்பு டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியுற்ற ஒரே ஒரு ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.
  • டி20 உலக கோப்பைகளில் இதுவரை இந்திய அணி நியூசி., அணியை வென்றது இல்லை.
  • டி20 உலக கோப்பைகளில் இதுவரை தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை.
  • நடப்பு சாம்பியன் அணி தொடர்ந்து கோப்பையை வென்றதில்லை.
  • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து ஐசிசி இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியை தான் சந்தித்தது

உலகக் கோப்பை டி20 ஆட்டங்களுக்கு முன்னர் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியை அடித்து துவைத்தது நியூசிலாந்து அணி. மேலும் அகமதாபாத் மைதானத்தில் இதற்கு முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்திய அணி தோற்றது. எனவே கோப்பையை இந்திய அணி ஜெயிப்பது சந்தேகம் என்பதுதான் பலருடைய கருத்தாக இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல இந்திய அணி தான் வழக்கமாகத் தங்கும் ஓட்டலை மாற்றியது. அபிஷேக ஷர்மாவை தொடக்க வீரராக இறக்கலாமா வேண்டாமா என சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள். வருண் சக்ரவர்த்தி என்ன விதமாக பந்துவீசவேண்டும் என பல ஆலோசனைகள்.

இந்தக் குழப்பமெல்லாம் முதல் ஆறு ஓவர் வரைகள் மட்டுமே. ஆட்டத்தின் 10ஆவது ஓவர் வீசப்படும்போது இந்திய அணி வெற்றி பெறும் என்பதில் இருந்த ஐயங்கள் பறந்தோடின.

பூவா – தலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதிரடி மட்டையாளர்களைக் கொண்ட இந்திய அணியை முதலில் மட்டையாடச் சொல்வது என்ன விதமான லாஜிக் எனத் தெரியவில்லை.

ஒரு வேளை தனது பந்து வீச்சால் இந்திய அணியை 100 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என அந்த அணி எண்ணியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்னவோ அப்படியே தலைகீழாக.

இந்திய அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்கள். தொடக்க வீரர்கள் அபிஷேக ஷர்மா (21 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சஞ்சு சாம்சன் (46 பந்துகளில் 89 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) இருவரும் அதிரடியாக ஆடினர். நாலாவது ஓவர் முடிவில் இந்திய அணி 50 ரன்கள் அடித்திருந்தது. பவர்பிளே முடிவில், அதாவது 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது.

சாம்சனுடன் இணைந்த இஷான் கிஷன் (25 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) வேகமாக ரன் சேர்த்தார். அணி 7.2 ஓவர்களில் 100 ரன், 11.3 ஓவர்களில் 150 ரன் சேர்த்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டது. இதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் பந்துவீ ச்சாளர்கள் அதிக ரன் கொடுக்காமல் பந்து வீசினர். கடைசி ஓவரில் ஷிவம் துபே முதல் பந்தில் ஃபோர், இரண்டாவது மூன்றாவது பந்துகளில் சிக்சர்கள், நாலாவது பந்திலும், ஆறாவது பந்திலும் ஃபோர்கள் அடித்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 25 5ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் (52 ரன்), டரில் மிட்சல் (17 ரன்) மற்றும் மிட்செல் சாண்ட்னர் (43 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டையிலக்க ரன்கள் அடித்தனர். பிறர் சரியாக ஆடவில்லை. இந்திய பந்து வீச்சாளர்களில் பும்ரா சிறப்பாகப் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி 15 ரன் கொடுத்து 4 விக்கட்டுகள் வீழ்த்தினார். அக்சர் படேல் (3 ஓவர்கள், 27 ரன், 3 விக்கட்டுகள்) சிறப்பாக பந்துவீசிய மற்றொரு பந்துவீச்சாளர்.

இஷான் கிஷன் மூன்று கேட்சுகளும் திலக் வர்மா இரண்டு கேட்சுகளும் பிடித்தனர். மொத்தத்தில் இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக விளையாடியது. ஜஸ்பிரீத் பும்ரா ஆட்ட நாயகனாகவும் சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்.

உலகக்கோப்பை நாயகன் ஜஸ்ப்ரீத் பும்ரா!

டி 20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்பதாக மாற்றி விட்டார்கள். பிட்ச் அதற்கேற்ப அமைத்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்குமாறு கிரிக்கெட்டை குழப்பி வைத்திருக்கும் நிலையில் பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபம். போதாக்குறைக்கு பவர்பிளே ஓவர் என்று இரண்டு பேருக்கு மேல் வெளி வட்டத்தில் இல்லாத விதி வேறு. நோ பால் வீசினால் ஃப்ரீ ஹிட்!

பிட்ச்சும் சரி ஆட்ட விதிகளும் சரி, பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. இந்த நிலையில் எந்த பிட்ச்சாக இருந்தாலும் சிறப்பாக பந்து வீசுகிறார் ஜஸ்ப்ரீத் பும்ரா! சரியான அளவில் ஆஃப் ஸ்டிக் நோக்கி வீசுவது, கொஞ்சம் திரும்ப வைத்து லெக் ஸ்டம்ப் நோக்கி தாக்குவது, சரியான அளவில் போட்டு பேட்ஸ்மேன் தூக்கி அடிக்கத்தூண்டி கேட்ச் ஆக வைப்பது, யார்க்கர் போட்டு ஸ்டம்ப்பை தகர்ப்பது, ஒரு பவுன்சர், அப்படியே ஒரு ஸ்லோ பவுன்சர், ஸ்லோ பால் யார்க்கர் இப்படி, விதவிதமாக பந்து வீசி, பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைக்கிறார்.

விக்கெட் இழக்காமல் இருந்தால் போதும் என்று பேட்ஸ்மேன் நினைத்தால், ரன்கள் வராமல் சிக்கனமாக பந்து வீச்சு இருக்கும். அதன் விளைவு விக்கெட் விழாவிட்டாலும் பிரஷரை ஏற்றி விட்டு அடுத்த பவுலரை அட்டாக் செய்யப் போய் விக்கெட் விழ உதவியாக இருப்பது என்று தனது பங்களிப்பை அசத்தலாகச் செய்கிறார் பும்ரா.

பந்து வீச்சில்தான் ஆக்ரோஷம், ஆனால் இவர் முகத்தில் எப்போதும் தவழும் புன்னகை. தன் பந்தில் யாராவது கேட்ச் மிஸ் செய்தாலும், பீல்டிங்கில் தவறு செய்தாலும், அதற்காக தன் கோபத்தையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தாமல் வெறும் ஒரு புன்னகையுடன் அடுத்த பந்தை வீச தயாராகிவிடுவார். இத்தகைய அவரது உறுதியான தன்மையே அவருக்கு மேன் ஆஃப் த மேட்ச், மேன் ஆஃப் த சீரிஸ் என்று பல விருதுகளை அள்ளித் தருகிறது.

இப்போதும் கூட, இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணம் இந்த புன்னகைப் புயல் ஜஸ்பிரிட் பூம்ரா தான்!

இதுவரை டி 20 கோப்பை வென்ற நாடுகள்!

வருடம்வெற்றிரன்னர்நடத்திய நாடு
2007இந்தியாபாகிஸ்தான்தென் ஆப்பிரிக்கா
2009பாகிஸ்தான்இலங்கைஇங்கிலாந்து
2010இங்கிலாந்துஆஸ்திரேலியாமேற்கு இந்திய தீவுகள்
2012மேற்கு இந்திய தீவுகள்இலங்கைஇலங்கை
2014இலங்கைஇந்தியாவங்கதேசம்
2016மேற்கு இந்திய தீவுகள்இங்கிலாந்துஇந்தியா
2021ஆஸ்திரேலியாநியூசிலாந்துயுஏஇ, ஓமன்
2022இங்கிலாந்துபாகிஸ்தான்ஆஸ்திரேலியா
2024இந்தியாதென் ஆப்பிரிக்காயுஎஸ்ஏ, மேற்கு இந்திய தீவுகள்
2026இந்தியாநியூசிலாந்துஇந்தியா, இலங்கை

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

icc t20 worldcup - 2026

மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.. இன்று நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தினியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.

டி20 உலக கோப்பை: போட்டியில் மீண்டும் உலக சாம்பியன் ஆனது இந்தியா.. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி..

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து 4 எட்டு 6 ரன்கள் அடங்கும். அவருக்கு துணையாக அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 52 கண்கள் குடித்தார் அதில் 6 நான்கு ரன்களும் 3 சிக்ஸ்களும் அடங்கும். இந்த இணை 7 ஓவரில் 98 ரன்கள் சேர்த்தது. இதுவே இந்திய அணி வெற்றி பெற மிகச்சிறந்த அடித்தளமாக அமைந்தது. அபிஷேக் ஷர்மாவை தொடர்ந்து அந்த இஷான் கிஷன் 25 பந்தில் 54 ரன்கள் எடுத்தார் அதில் தலா நான்கு 4 மற்றும் சிக்ஸ் அடங்கும். இதனால் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.

256 ரன்கள் இலக்காக கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டும் உலக சாம்பியன் ஆனது.

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஈரான் விஷயத்தில் மத்திய அரசைக் குறை கூறும் சோனியா; சரியானதா?

amitsha in parliament - 2026

— ராம் மாதவ் –

தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த வார துவக்கத்தில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இந்திய அரசு இரங்கல் தெரிவிக்காததை விமர்சித்து கட்டுரை எழுதி உள்ளார் (3 மார்ச் – இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு). ‘நடு நிலைமையை கைவிட்டு விட்ட’தாகவும் ‘நமது அயலுறவு கொள்கை செல்லும் திசை, நம்பகத்தன்மை’ பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஈரான் மோதலை அந்த பிராந்தியத்தில் நிலவும் புவியரசியலுடன் விரிவான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது போன்ற நேரங்களில் நடுநிலை மட்டும் போதாது. நாம் எந்த பக்கசாய்வும் இல்லாதவர்கள் என்பது வெளிப்பட வேண்டும். இதைதான் அண்மையில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் – வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்கா பிடித்த போதும் , ஈரானின் உச்சபட்ச தலைவர் உட்பட எண்ணற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலின் போதும் – இந்திய அரசு கடைபிடித்தது. ‘ஆழ்ந்த கவலையை’ வெளிப்படுத்தியது, ‘பேச்சுவார்த்தை , ராஜதந்திர நடவடிக்கை’களை மேற்கொள்ள வேண்டும் என்றது. ‘அனைத்து தரப்பி’னரும் ‘நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மோதலை அதிகரிக்கக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று கூறியது.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் அரசு மற்றும் மக்களிடையே நல்லுறவு நிலவுகிறது. அதே வேளையில், முறையான அரசு நடவடிக்கைகள், புவியரசியல் நிதர்சனங்கள், அது சார்ந்த நலன்கள் மற்றும் ஆதாயங்களை உணர்ச்சி கொத்தளிப்பில் பலியிட முடியாது. உலகத்திற்கு சற்றும் அறிமுகம் இல்லாத ஒரு ஆட்சி முறையை ஈரான் பின்பற்றுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் நிலவிய பன்னிருவர் ஷியா மரபை எந்த மாற்றமும் இல்லாமல் இறுக்கமாக பின்பற்றுகிறது. 12 வது இமாமாக இருந்த இமாம் மஹ்தி 869 ஆண்டில் கண்ணுக்கு புலப்படாத ‘அமானுஷ்ய மறைவு நிலை’யை அடைந்தார். அந்த நிலையிலிருந்து ஷியா பிரிவை வழி நடத்தி வருகிறார். இறைவன் இமாம் மஹ்தியை உயிருடன் வைத்திருப்பதாகவும் இறைவன் விரும்பும் போது இமாமை மீண்டும் தோன்ற செய்வார் என்ற நம்பிக்கை ஷியா பிரிவு முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது.

இமாம் திரும்பி வரும் வரையில் அந்த சமயப் பிரிவு வேலாயத் – இ- ஃ பகிஹ் – இஸ்லாமிய நீதி முறைமையை – பின்பற்ற வேண்டும். 1979 இல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு ஆயதுல்லா ரூஹோல்லா கொமெய்னி தன்னை வலி – இ – மகிஹ்வாக அறிவித்து கொண்டு மேல் சொன்ன இஸ்லாமிய அரசமைப்பை நடைமுறைப்படுத்தினார். அவருக்கு அடுத்து வந்த கமேனி (அண்மையில் கொல்லப்பட்டவர்) எல்லா அதிகாரமும் தன் கைவசம் கொண்டு வந்து உச்சபட்ச தலைவராக ஆனார்.

சோனியா காந்தியின் கட்டுரையில் கமேனியை ‘அரசின் தலைவர்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போதும் உச்சபட்ச தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் ஈரானின் ஜனாதிபதிகள் மற்ற நாடுகளுக்கு விஜயம் செய்யும்போது அரசின் தலைவர் என்ற வகையில் அவர்களுக்கு அரசு முறையிலான மரியாதைகள் வழங்கப்படும். ஈரானிய ஜனாதிபதிகள் முகமது கதாமி 2003 லும் மம்முத் அஹமதிநெஜாத் 2008 லும் ஹாசன் ரூஹானி 2018 லும் இந்தியா வந்தபோது அரசின் தலைவர்கள் என்ற வகையில், அரசு முறைமைப்படி , உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். அந்த காரணத்தினால் தான் இந்தியா தனது அயலுறவுத்துறை செயலாளரை ஈரானிய தூதரகத்துக்கு அனுப்பி இரங்கல் பதிவேட்டில் கையெழுத்திட செய்தது. அதன் மூலம் அந்த உச்சபட்ச தலைவரின் மரணத்திற்கு தனது கண்டனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.

சோனியா காந்தி கட்டுரையில் 1994 மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் விஷயமாக இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முன்வைத்தபோது ஈரான் அதை தடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசின் நிலைப்பாட்டையும் கமேனியின் நிலைப்பாட்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது . கடந்த பத்தாண்டுகளில் கமேனி காஷ்மீர் விஷயமாகவும் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பற்றியும் இந்திய அரசின் செயல்பாட்டையும் பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2019 இல் ஜம்மு-காஷ்மீரில் இருந்த 370 சட்டப்பிரிவை நீக்கியபோது கமேனி டிவிட்டரில் , ‘காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் நிலை எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு நியாயமான கொள்கையை பின்பற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களும் அடக்குமுறையும் நிகழாமல் தடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்’ என்று பதிவிட்டார்.

2020 ல் சி ஏ ஏ ( குடியுரிமை சட்ட திருத்தம் ) தொடர்பாக தில்லியில் எதிர்ப்பு எழுந்த போது கமேனி மீண்டும் ட்விட்டர் மூலம் இந்தியா முஸ்லிம்களை ‘திரள்படுகொலை’ செய்வதாக குற்றம் சாட்டினார். ‘உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் திரளப்படுகொலை செய்யப்படுவதை கண்டு துயரத்தில் ஆழந்துள்ளன. [இந்திய அரசு] முஸ்லிம்களை திரள்படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும்’ என்றார் . ‘தீவிரவாத ஹிந்துக்களையும் அவர்களது கட்சிகளையும் இந்திய அரசு எதிர்க்க வேண்டும் . முஸ்லிம்கள் திரள்படுகொலையை தடுக்க வேண்டும்’ என்று அவர் பதிவிட்டார்.

2024 ல் கமேனி இந்தியாவை காசா, மியான்மருடன் ஒப்பிட்டு, ‘மியான்மர், காசா , இந்தியாவில் முஸ்லிம்கள் துன்பப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் நாம் நம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ள அருகதை அற்றவர்கள் ஆவோம்’ என்று மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது மேற்கண்ட கூற்றுக்களை இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் ‘தவறான புரிதலால்’ சொல்லப்படுகின்றன என்றும் ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியது. அவரது கூற்றை உறுதியாக மறுத்த அயலுறவு அமைச்சகம், ‘சிறுபான்மையினரை பற்றி விமர்சிக்கும் நாடுகள் தங்கள் நாட்டில் சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றன என்பதை முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிலடி கொடுத்தது.

2015 ல் சவுதி அரேபியாவில் ‘இனப்படுகொலை’ நடப்பதாக கமேனி குற்றம் சாட்டிய போது சவுதி அரேபியா அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியது. அதேபோல் அவர் மீண்டும் மீண்டும் ‘அமெரிக்கா அழியட்டும்’ , ‘ இஸ்ரேல் சாகட்டும்’ என்று வெறுப்பை வெளிப்படுத்திய போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது போன்ற பேச்சால் பலருக்கும் அவரை பிடிக்காமல் போனது. இறுதியில் அவரது மரணத்திற்கு ஜி 7 நாடுகளும் பல இஸ்லாமிய நாடுகளும் இன்னும் பிற நாடுகளும் இரங்கல் தெரிவிக்காதது சோகமானது.

மேற்சொன்னதை எல்லாம் மீறி இந்திய அரசு ஈரானிய அரசுடன் நல்லுறவை வளர்த்து வந்தது. ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி 2024 இல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது இந்தியா ஒரு நாள் துக்கம் அனுஷ்டித்தது. பிரதமர் மோடி , செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாகவும் ‘இந்த சோதனையான காலத்தில் இந்தியா ஈரானுக்கு துணை நிற்கும்’ என்றும் தனது இரங்கல் செய்திகள் குறிப்பிட்டிருந்தார்.

சோனியா காந்தி ‘நம்முடைய மரபை’ கைவிட்டதாக இந்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது முற்றிலும் தவறானது. வருகின்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு காங்கிரசின் பாரம்பரிய சிறுபான்மையினர் கொள்கையை அந்த கட்டுரையில் எதிரொலித்ததாகவே கருத வேண்டியுள்ளது.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்

கட்டுரையாளர் இந்தியா பவுண்டேசனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.

தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

governor rn ravi at sahajanandar function - 2026

தமிழகம் இதுவரை கண்ட ஆளுநர்களில், மிகச் சிறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் தற்போது பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி,  தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டு அவரது சேவை மேலும் அதிகம் தேவைப்படும் மேற்கு வங்கத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

தைரியமான ஓர் ஆளுநராக தன் பதவிக் காலம் முழுமைக்கும் இருந்தவர். ஆளுநர் என்ற பதவிக்கு மிகச்சிறந்த பொருத்தமானவராக,  அந்தப் பதவியின் கௌரவத்தை பொறுப்பை சரியான வகையில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த நபராகவே தமிழர்களாகிய நாம் அவரைப் பார்க்க முடிந்தது. ராஜ் பவன் என இருந்ததை மக்கள் பவன் என மாற்றி,  எளியோரும் அந்த ஆளுநர் மாளிகையில் அடி எடுத்து வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களை ஒரு கௌரவம் நிறைந்தவர்களாக மனதில் எண்ண வைத்த செயல்பாடு ரவீந்திர நாராயணன் ரவிக்கு உரியது. அந்த வகையில் மக்கள் உள்ளங்களை வென்ற மகத்தான நிர்வாகி என்று உறுதியாகச் சொல்லலாம்.

தம் பதவிக் காலத்தில் ஆர். என். ரவி செய்த செயல்கள் மகத்தானவை.  அதுவும் அயோக்கியர்கள் முழுக்க நிறைந்த தமிழக அரசியல் களத்தில் தனி ஒருவராக நின்று தாக்குப் பிடித்த தன்மைக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். இவருக்கு முன் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை, வயதான காலத்திலும் இந்த அயோக்கியர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மத்திய அரசு திட்ட நிதியில் கட்டப்பட்ட கழிவறைகளின் உறுதித் தன்மையை சோதனையிடச் சென்றவரை, ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்த்தார் என்ற ரீதியில் மிகக் கேவலமான முறையில் தங்களது ஊடகங்களை வைத்து பிரச்சாரம் செய்த அயோக்கியர்கள் நிறைந்த களம் இது. இந்தக் களத்தில் ஆளுநராக ஆர் என் ரவி வந்தபோது, இவர் எப்படி சமாளிக்க போகிறார் என்ற சந்தேகம் நமக்கும் எழவே செய்தது. 

rn ravi in thiruppullani - 2026
#image_title

ஆனால் பொறுப்பாக, பொறுமையாக, நிகழ்வுகளைக் கையாண்டதில் ஆர் என் ரவி மக்கள் உள்ளங்களை வெகுவாகவே வென்றார். 

தமிழக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியதில் ஆளுநரின் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பது வெளித் தெரிந்தது. தமிழக அரசியல் சக்திகள், தங்கள் ஊடகங்களை வைத்துக்கொண்டு ஒன்றிய அரசு என பிரச்சாரம் செய்து இந்திய தேசியத்தில் இருந்து தனித்து செயல்பட்டு அச்சுறுத்திய போதெல்லாம், அதற்கு சரியான பதிலடி தந்தவர்.  பிரிவினைவாதிகளுக்கு தமிழக அரசு துணைபோவது போலச் செயல்பட்ட போதெல்லாம், அதை ஓர் இந்தியனாக எதிர்கொண்டு சரியான திசைக்கு திருப்ப முயன்றவர். 

தமிழக அரசியல் களத்தில் அவமானப்படுத்தப்பட்ட போதும்  அவற்றை தாங்கிக் கொண்டு, பொறுமையாக விஷயங்களை அணுகினார்.  

தமிழ் தமிழ் என்று மொழியின் மீது ஏதோ பற்று கொண்டவர்களைப் போல அரசியல் அலட்டல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வந்த  ஆளும் தரப்பின் மத்தியில்,  உண்மையாகவே தமிழ் மொழியின் மீது ஈடுபாடு கொண்டு  ஆளுநர் மாளிகையின் கதவுகளை இலக்கியவாதிகளுக்கு திறந்து விட்டு தமிழ் வளர்ச்சியில் தன் பங்கை சரியாக செலுத்தினார். தமிழ் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  பலரை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து கௌரவித்தார்.  தமிழில் செம்மையாகப் பல புத்தக முயற்சிகளை ஆதரித்தார். 

isha yoga rn ravi participated - 2026

முக்கியமாக இதற்கு முன்பு இருந்த ஆளுநர் புரோகித்தைப் போல் பல்கலை., துணை வேந்தர் நியமனங்களில் ஊழலற்ற நடைமுறையை கொண்டு வர பெரிதும் துணை நின்றார்.  

இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் எத்தனையோ குட்டிக்கரணம் அடித்தும்  நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி உலுக்கிய போதும், நீதியை தங்களுக்கு சாதகமாக வளைத்த போதும் உறுதியாக நின்று  உண்மை நின்றிட பாடுபட்டார்  ஆர்.என்.ரவி.

சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் பரிந்துரையை ஆளுநர் எவ்வளவு காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம் என்பதை இந்திய அளவுக்கான சட்டப் பிரச்சினை ஆக்கி குடியரசுத் தலைவர் – உச்ச நீதிமன்றம் என விளக்கங்களை வெளியிடும் அளவுக்கு தேசிய அளவிலான தீர்வுக்கு வழி வகுத்தார். 

tn governor ravi in vallalar vllage - 2026

தமிழகத்தின் பாரம்பரிய கலை வரலாற்று பொக்கிஷங்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒவ்வொரு ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பலரை ஊக்குவித்து பல அமைப்புகளையும் உயிர் கொடுத்து கை தூக்கி விட்டார்.  அவ்வாறு, ஆளுநர் பரவலான மக்களை சென்றடைந்தார். 

இத்தகைய ஒரு சிறந்த நபர், நம் தமிழகத்தை விட்டுச் செல்வது நமக்கெல்லாம் சற்று வருத்தம் அளிக்கவே செய்கிறது. 

தமிழக அரசியல் அனுபவம், அவருக்கு மனக்கசப்பையே அளித்திருக்கும். என்றாலும் பொறுமை இழக்காமல், தமது ஐபிஎஸ்., என்ற கடந்த கால கரடுமுரடு அனுபவங்களை ஒதுக்கித் தள்ளி மென்மையான மனிதராகவே நிகழ்வுகளை அணுகினார். 

தன்னால் ஏற்க முடியாத சர்ச்சைக்குரிய மசோதாக்களைத் தவிர, மற்ற அனைத்து மசோதாக்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கினார். முக்கியமாக, ஆளுநர் உரைகளின் போது அவர் காட்டிய உறுதிப்பாடு வியக்கத்தக்கது. உண்மைக்கு மாறானது,  தேசியத்துக்கு எதிரானது என்று அவர் கருதிய வாசகங்களை  கவர்னர் உரைகளின் போது அப்படியே வாசிப்பது தர்மசங்கடமானது என்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்தது  குறிப்பிடத்தக்க செயல்பாடுதான்.  அந்த வகையில் ஒரு முன்னுதாரணத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். 

1083247 ravi33 - 2026

இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சட்டசபையிலிருந்து வெளியேறியபோது, பின்னாலிருந்து ஓர் அமைச்சர்  ‘போய்யா’ என்ற மோசமான உடல் மொழியில் காட்டிய சைகையை இந்தத் தமிழகம் பார்த்தது.  அப்போதும் உடனடி அரசியல் எதிர்வினை ஆற்றாமல் தனது போது பதவிக்கு உரிய கௌரவத்தை காப்பாற்றினார். 

உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் இப்படிப்பட்ட முதிர்ச்சியைக் காண்பது அரிது. 

ஆர் என் ரவி போன்றவர்களை தமிழகமும் தமிழக மக்களும் தான் தவற விடுகிறார்கள்.  தேர்தல் அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில்  ஆளுநர் ரவியின் செயல்பாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தமிழகத்தில் உள்ள தேசியவாதிகளுக்கு தெரிந்திருக்கிறது! அதனால் தான் இந்த நேரத்தில் அவர் மாற்றம் தேவையா என்கின்ற ஒரு சர்ச்சையையும் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள்.  அதற்காக உள்துறை அமைச்சகத்துக்கும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அது நாம் புரிந்து கொள்ள தக்கதே.  எனினும் தமிழகத்தை விட மிக மோசமான நிலையில் இருக்கும் மேற்கு வங்கத்திற்கு அவரது சேவை மிக முக்கிய தேவை என்பதை மத்திய அரசு உணர்ந்து இருப்பதையே இந்தப் இடமாற்றம் காட்டுகிறது. 

வரும் காலத்தில்  பாரத அரசின் குடியரசுத் தலைவராகவே பதவி வகிக்கும் அளவுக்கு நற்தகுதி அவருக்கு இருக்கிறது. அவரது எதிர்காலம் மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலமும் அதன் மூலம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்!

சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

vijay sangeetha thrisha - 2026

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் ஒரே காரில் சென்று பங்கேற்றனர். இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த மாதம் ஒரு பேட்டியில் தமிழக பாஜக., தலைவர், விஜய் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அவர் திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்” என்றார். அதற்கு கண்டனங்கள் பல எழுந்தன. பாஜக.,வினரே கண்டனங்களைத் தெரிவித்தனர். த்ரிஷாவும் தன் பங்குக்கு அரசியலில் இல்லாத என்னை அரசியல் கருத்துக்கு இழுக்காதீர் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்த விஷயம் அப்போது பேசுபொருளானது. 

அவர் தாக்கல் செய்த மனுவில் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்து வந்தார். அதனை தான் 2021 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்தேன். அதன் பிறகு அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை முறித்துக் கொள்வதாக எனக்கு வாக்குறுதி அளித்தார். ஆனாலும் விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தார். இதனால், தான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பலமுறை கேட்டும் விஜய் அந்த உறவில் தொடர்ந்து வந்தார். கடந்த 2021 முதல் விஜய் தன்னை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் காயப்படுத்தினார். அதுமட்டுமின்றி 2021 இல் இருந்து என்னை தனியாக வாழுமாறு நிர்ப்பந்தித்தார். விஜயுடன் அடிக்கடி வெளிநாட்டு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியது.

என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கில் இரண்டாவது மனுதாரராக சேர்ப்பேன். எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணத்தை மீறிய உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன் என்று சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டார்.

சங்கீதா தன் மனுவில் ஒரு நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அந்த நடிகை யார் என்று அவர் அப்போது சொல்லவில்லை என்றாலும், நடிகை திரிஷா மட்டுமே விஜய்யுடனான படங்களை சமூகத் தளங்களில் பகிர்ந்து வந்ததால் அது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்நிலையில், விஜய் ஆமாண்டா, நான் அப்படித்தான் என்று வீம்புக்கு செய்வதைப் போல், திரிஷாவுடன் நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்து கொண்டு மேலும் பரபரப்பைக் கொளுத்தியுள்ளார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் ஒரு சமூகத் தளக் கருத்து, தஞ்சை ராஜேஷ் என்பவர் பெயரில் வைரலானது. அக் கருத்து…

விஜய்க்கு ஒரு குணம் உண்டு… எதை சொல்லி மற்றவர்கள் விமர்சிக்கிறார்களோ… “ஆமாண்டா.. நான் அப்படித்தான் பண்ணுவேன்.. உன்னால் என்ன பண்ண முடியும்” என்ற முரட்டுத்தனம்…

முன்பு ஒரு முறை எச் ராஜா அவர்கள் இவரது பெயர் ஜோசப் விஜய் என்று சொன்னதும்…

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தன்னுடைய பெயர், லெட்டர்பேட் எல்லாவற்றிலும் “விஜய்” என்று மட்டும் குறிப்பிட்டு வந்தவர்… அடுத்த நாளே “ஜோசப் விஜய்” என்று புதிய லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டார்.,..

அதே போல் இப்போது இவர் மனைவியை துன்புறுத்தி, தனிமையில் விட்டுவிட்டு திரிஷா வுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும்.. இந்த புகைப்படங்கள் வெளியாகி தனக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் திருமதி சங்கீதா விவாகரத்து கோரிய செய்திகள் பொது வெளியில் பேசப்படுவதால்….

இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரிஷாவுடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டு… “ஆமாம்டா.. நான் இந்த நடிகை உடன் தான் இருக்கிறேன்.. உங்களால் என்னடா செய்ய முடியும்” என்ற மெசேஜை சொல்லி இருக்கிறார்…

தேர்தல் அரசியலில் இறங்கி விட்டு… பல்வேறு வயதினரின், அனைத்து பாலினத்தவரின் ஓட்டுகளையும் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விஜய்.. இப்படி கள்ள உறவை கெத்தாக வெளியே சொல்லி சவால் விடும் துணிச்சல் எதனால் வந்தது…

சமூக வலை தளங்களில்…

“அவருக்கு தங்கச்சியா இருப்போம் அக்காவா இருப்போம் பொண்டாட்டியா கூட இருப்போம்” என்றும்…

“குப்பை அள்ளுறவனே 4 பொண்டாட்டி வைக்கும் போது காசு வைத்திருக்கும் அவர் 10 பொண்டாட்டி வச்சிருந்தாலும் தப்பில்ல” என்றும்…

இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு “என் குழந்தையை விட எனக்கு அவரைதான் பிடிக்கும்” என்றும்,

“என் புருசனை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும்.. ஹாஹாஹா ” என்றும்…

விஜய் என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் வெறி பிடித்த அழிவு சக்தி கூட்டம் தன்னிடம் இருக்கும் துணிச்சலில் தான் அவர் இதை எல்லாம் செய்கிறார்…

அவர் ஆரம்பத்தில் இருந்தே.. தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் தனது ரசிகர்களை மட்டும் engage செய்யும் விதமாக செயல்பாடுகிறார்… ரசிகர்களை தாண்டி பொதுமக்கள் என்று ஒரு சமுதாயம் இருக்கிறது… அவர்களின் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றால் தான் அரசியலில் அங்கீகாரம் பெற முடியும் என்ற உண்மையை அவர் ஏற்கவில்லை… தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் தன்னுடைய ரசிகர்கள் என்று ஆழமாக நம்புகிறார்…

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் எல்லாரும் தன்னுடைய ரசிகர்கள் என்று உறுதியாக நம்புகிறார்…

அதனால்… தான் என்ன செய்தாலும் அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி..

திருமதி சங்கீதா மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோரின் மன வலியை வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கும் விதமாகவும், பொது வெளியில் தன்னை விமர்சிப்பவர்களிடம் சவால் விடும் வகையிலும் இப்படி தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்துகிறார்…

தன்னுடைய மனுவில் நடிகையின் பெயரை கூட குறிப்பிடாமல் கண்ணியம் காத்துள்ளார் திருமதி சங்கீதா.. இது போல இவர் வேண்டுமென்றே அவரது வயிற்றிரிச்சலை கொட்டினால்… நாளைக்கே சங்கீதா மீடியா முன்பு வந்து நின்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி அழுதால் விஜய் என்ன செய்வார்..

தேர்தல் அரசியலில் இதெல்லாம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்… ரசிகரல்லாத மற்றவர்களின் வெறுப்புக்கும் அருவருப்புக்கும் ஆளாவார்…

இது நடிகர் வடிவேலுக்கு நேர்ந்ததை போல.. தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தால்… அப்போதும் இந்த அருவருப்பால் ஒதுக்கிய மக்களின் ஆதரவை பெற முடியாமல் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது…

அகத்தால் அழிந்தான் ராவணேஸ்வரன்.. எண்ணத்தால் கெட்டான் துரியோதனன்..

ஆணவம் அறிவுக்கு சத்ரு என்பதை விஜய் இப்போது புரிந்து கொள்ள மாட்டார்.

இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று மார்ச் 6இல் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.

விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6, 7) காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – நாகப்பட்டினம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6, 7) பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் – விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06134), மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகச் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
அரையிறுதி ஆட்டங்கள் 05.03.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          முதல் அரையிறுதி ஆட்டம் 04.03.2026 அன்று கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறினார்கள். முதலிரண்டு விக்கட்டுகள் இரண்டாவது ஓவரில் விழுந்தன.

தொடக்க மட்டையாளர்கள் எய்டன் மர்க்ரம் (20 பந்துகளில் 18 ரன்), க்விண்டன் டி காக் (8 பந்துகளில் 10 ரன்), ரியன் ரிக்கிள்டன் (பூஜ்யம் ரன்), டேவிட் மில்லர் (6 பந்துகளில் 6 ரன்) என நிலைத்து ஆட்டமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டிவால்ட் ப்ருவிஸ் (27 பந்துகளில் 34 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (24 பந்துகளில் 29 ரன்) மற்றும் மார்கோ யான்சன் (30 பந்துகளில் 55 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் டிம் செய்ஃபர்ட் (33 பந்துகளில் 58 ரன்), ஃபின் ஆலன் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ரவின் ரச்சீந்திரா (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 12.5 ஓவர்களில் 173 ரன் எடுத்து நியூசிமாந்து அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா அபார வெற்றி

          மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (9 ரன்) இந்த ஆட்டத்திலும் குறைந்த ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் மூன்றாவது ஓவரில் ஒரு கேட்ச் கொடுத்து அவுட் ஆக இருந்தார்.

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ப்ரூக் அந்த சுலபமான கேட்சை பிடிக்கத் தவறினார். அவர் 14ஆவது ஓவர் வரை விளையாடி 42 பந்துகளில் 89 ரன் அடித்தார். அதில் 8 ஃபோர்கள் 7 சிக்சர்கள். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினர். இஷான் கிஷன் (18 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), ஷிவம் துபே (25 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) (இவர் சற்று முன்னதாக மட்டையாட அனுப்பப்பட்டார்), ஹார்திக் பாண்ட்யா (12 பந்துகளில் 27 ரன்), திலக் வர்மா (7 பந்துகளில் 21 ரன்)என அனைவருமே அதிரடியாக ஆடினர். சரியாக விளையாடாதவர், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (6 பந்தில் 11 ரன்) தான். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 253 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணி பில் சால்ட் (5 ரன்), ஜாஸ் பட்லர் (25 ரன்) மற்றும் ஹாரி ப்ரூக் (7 ரன்) ஆகியோரை பவர் பிளே ஓவர்களுக்குள் இழந்து 64 ரன் மட்டுமே எடுத்தது. ஜேகப் பெதல் (48 பந்துகளில் 105 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) சிறப்பாக ஆடினார். 15 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, இரண்டு விக்கட்டுகளையும் எடுத்து, ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 146 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 64 ரன் கொடுத்தார். இது ஒரு மோசமான சாதனையாகும். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்.

          இறுதி ஆட்டம் இந்தியம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 0700 மணிக்கு நடைபெறும்.