ஆடி அமாவாசைத் திருவிழாவையொட்டி சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது தாணிப்பாறை பீட் ஆகும். இங்கு கடந்த ஆக.,10 இல் காட்டுத் தீ பரவியது. இதனால் பக்தர்கள் ஆக.,11 இல் தாணிப்பாறை வழியாக அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வனத்துறையால் தடை விதிக்கப்பட்டது.
தற்போது காட்டுத் தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. எனவே, ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு ஆக.,12,13 ஆகிய இருநாட்கள் மட்டும் பக்தர்கள் தாணிப்பாறை வழியாக மட்டும் அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது – என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட தணிப்பாறைப் பகுதியில் 10.08.2026 நேற்று, காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து, இத்தீ மலையின் கீழ்ப் பகுதியை நோக்கிப் பரவி வந்தது; தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் வீசும் காற்றின் வேகம், திசை மற்றும் சூழலைத் கண்காணிக்கும் பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட்டனர் .
தீ பரவிய சூழலில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, நிலைமை பாதுகாப்பானதாகவும் இயல்பானதாகவும் மாறும் வரை, 11.08.2026 வரை பொதுமக்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தொடர்ந்து எரிந்த தீ மற்றும் கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, 11.08.2026 காலை 08:00 மணிக்கு முன்னதாக பக்தர்கள் அல்லது பார்வையாளர்கள் சதுரகிரி மலைப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், நுழைவு நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை, அப்பகுதியில் நிலவும் தீயின் தீவிரம் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலையைப் பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக சட்டசபையை கிறிஸ்தவ மயமாக்க முயற்சியா? தமிழ் மொழியின் மாண்பினை இழிவுபடுத்திய நிதியமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
ஆட்சி அதிகாரத்தில் அகங்காரம் கூடாது. தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நா. மரிய வில்சன் அவர்கள் வெளிப்படுத்திய கோபமும், அதனுடன் இணைந்த மதச்சார்புடைய கருத்துக்களும் மாநிலத்தின் அரசியல் பண்பாட்டிற்கே அவமானமாக அமைந்துள்ளன.
பட்ஜெட் விவாதத்தின் போது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் பிழையின்றி பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தமிழ் ஆர்வலர் என்ற முறையில் எழுப்பப்பட்ட நியாயமான விமர்சனமே. ஆனால் அதற்கு பதிலளித்த அமைச்சர், “நான் பிறப்பால் கிறிஸ்தவன். எனக்கு கிறிஸ்தவம் அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழியை கற்றுக்கொடுத்திருக்கிறது என பேசியிருக்கிறார். கிறிஸ்துவ மொழி அன்பு கருணை இரக்கம் சொல்லித் தந்தது என்றால்,
தமிழ் மொழி எதுவும் சொல்லித் தரவில்லை என்பதே பொருளாக அமையும். சனாதன தர்மமும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வழிமுறைகளை போதிக்கிறது. ஒவ்வொரு மதமும் அன்பை, இரக்கத்தை, பொறுமையை வலியுறுத்துகிறது. ஆனால் தன் மதம் மட்டும் தான் இவற்றை கற்றுக்கொடுத்தது என்ற உணர்வை உருவாக்குவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது.
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” என்பதை உலகே அறியும். கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்னாலேயே தமிழ் மொழி தோன்றியது. தான் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை உயர்த்திப் பிடிக்கிறேன் என்ற நோக்கில் தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் திரு.மரிய வில்சன். எனக்கு தமிழ் சரியாக வராது அதை பேச முயற்சிக்கிறேன் எனும் பொருள்படும்படி பேசி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம், அதை விடுத்து அமைச்சர் என்பதே அவையில் மறந்து காட்டுக்கூச்சல் போட்டிருக்கிறார்.
சட்டசபை கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையை கொண்டு வரும் பொழுது ஜெபமாலையை கொண்டு வந்தார். அது மத நம்பிக்கை என்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தமிழில் பிழை இல்லாமல் பேசுங்கள் என சட்டமன்ற உறுப்பினர் கூற உடனடியாக கிறிஸ்துவத்தை அவர் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது பற்றி கேள்வி எழுகிறது.
இதிகாசங்களும், காப்பியங்களும், தேவாரமும், திருவாசகமும், திருவருட்பாவும், திருவெம்பாவையும் இன்னும் பல இலக்கியங்கள் பக்தியை உள்ளடக்கியது தமிழ் மொழி. தமிழ்மொழி தெரியாத ஒரு தலைமுறை உருவாகி வந்துள்ளது தான் திராவிட அரசியல் ஆட்சி செய்ததன் சாதனை எனும் வேதனை என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் மொழியின் அருமை தெரியாமல் நிதியமைச்சர் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
“பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது” என்று கூறியது மட்டுமல்லாமல், தனது பேச்சு நடையை யாருக்காகவும் மாற்ற மாட்டேன் என்று ஆவேசமாக அறிவித்ததோடு, சபை மாண்பு என்பதே சிறிதும் இன்றி ஒலிபெருக்கியை தள்ளி விடுவது அவர் ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரின் பொறுப்புக்கு அழகல்ல. சபாநாயகரே அவரை அமைதிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதவி வகிப்பவர், தமிழை இழிவுபடுத்தி தனது மதத்தை உயர்த்திப் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
கல்வித்துறையில் 25 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்று அவரே கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பழக்கப்பட்டவர் என்பதால் தமிழில் சில பிழைகள் ஏற்படலாம். ஆனால் அதை ஒப்புக்கொண்டு சரி செய்ய முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமிழ் படித்தவர்களுக்கே அன்பு தெரியாது என்று சொல்வது ஆணவத்தின் உச்சம். மேலும், சொத்து தகராறில் தனது சொந்த அண்ணன் குடும்பத்தினரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், “அன்பு மொழி” பற்றி பேசுவது இரட்டை வேடமாகவே தென்படுகிறது.
சட்டப்பேரவை என்பது அனைத்து மக்களின் பிரதிநிதித்துவ அரங்கம். அங்கு மதத்தை முன்னிறுத்தி தமிழை இழிவுபடுத்துவது மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தானது.
நிதியமைச்சர் பதவி என்பது பொறுப்பானது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதே அந்தப் பதவிக்கு அழகு. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மையை அமைச்சர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அரசியல் விவாதங்களை மதரீதியாக மாற்றி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.
தமிழுக்காக எதையும் செய்வோம், தமிழ் எங்கள் உயிர் எனவெல்லாம் போலி அறிக்கைகளை விடும் தி.மு.கவினரும், போலி தமிழ் ஆர்வலர்களும் அமைச்சரின் இந்த பேச்சுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காததன் காரணம் சிறுபான்மை கிறிஸ்துவ தாஜா அரசியல் தான். இதனை உணர்ந்துதான் யாரும் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே உரையில் கிறிஸ்துவத்தை இடைச்செருகலாக அமைச்சர் கொண்டு வந்தாரோ என மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
உலகம் போற்றும் தமிழ் மொழியை குறைத்து மதிப்பிட்டதற்காக நிதி அமைச்சர் மரியவில்சன் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இனிமேல் இது போன்று ஆணவ பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும் : இடதுசாரிகளின் இரட்டை வேடம்
— முனைவர் பிரஜேஷ் பணிக்கர் – தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
37 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் நிர்வாகத்தில் உள்ள ஊழலை அகற்றவும் அரசியல் சீர்திருத்தமும் ஜனநாயக சுதந்திரமும் கோரி பெய்ஜிங் நகர சாலையில் இறங்கினார்கள்.
தியானமென் சதுக்கத்தின் உள்ளும் புறமும் கூடி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராணுவத்தைக் கொண்டு நசுக்கியது சீன மக்கள் குடியரசு. இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கும் அரசு சாராத சுதந்திரமான கணக்கிற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருந்தாலும் ஒரு உண்மை மட்டும் மறுக்க முடியாமல் இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசின் நடவடிக்கையில் கொல்லப்பட்டார்கள் என்பதே அது.
மூன்று தசாப்தங்களை கடந்த பிறகும் கூட , 1989 ஜூன் 4 தேதி நடந்ததை பற்றி , இன்றும் சீனாவில் மிகவும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட விஷயமாகவே அது இருக்கிறது. பொது விவாதங்களில் அந்த படுகொலை பற்றி பேச முடியாதபடி தடை உள்ளது. மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினாலும் கடுமையான நடவடிக்கை பாய்கிறது. பொது சமூகத்தின் நினைவே அரசின் தணிக்கையால் ஒடுக்கப்பட்டுள்ளது.
அந்த போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டு நசுக்கியதற்காக சீன அரசு மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக சமூக அமைதியை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டது என்று அதை நியாயப்படுத்தி வருகிறது. சீன அரசின் பதிவுகளில் வன்முறையை கொண்டு மாணவர்கள் போராட்டம் நசுக்கப்பட்டதை , சோக நிகழ்வாக கூட இல்லாமல் , நியாயப்படுத்திய விளக்கப்படுகிறது.
அரசியல் சீர்திருத்தம் கோரிய நிராயுதபாணியான மாணவர்கள் மீது சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய கொடூரத்தை உலகமே அதிர்ச்சியுடன் கண்டனம் செய்த போது இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் கட்சி அதைக் கண்டனம் செய்யவில்லை . அதற்கு மாறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலை ஆதரித்தது. ராணுவ நடவடிக்கை பொது அமைதியை காக்க தேவைப்பட்டது என்று தீர்மானம் போட்டது.
அமைதியாக நடந்த மாணவர் போராட்டம் கொடூரமாக நசுக்க பட்டதை கண்டு ஜனநாயக உலகம் அதிர்ந்து நின்ற போது அந்த கொடூரத்தை நிகழ்த்திய அரசை சிபிஎம் ஆதரித்தது.
37 ஆண்டுகள் கடந்த பின்னரும் தியானமென் சதுக்கப் படுகொலை இந்திய இடதுசாரிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்று அது பளிச்சென்று வெளிச்சமாகி உள்ளது. குடிமை சமூகத்தின் உரிமைகள், அரசு எதிர்ப்பு போராட்டங்கள், ஜனநாயக உரிமைகளை பற்றி பேசுவோருக்கு தியானமென் சதுக்கம் அசௌகரியத்தை தருவதாகவே உள்ளது. ஜனநாயக கொள்கைகள், பேச்சுக்கள் எல்லாம் கம்யூனிஸ கருத்தியல் விசுவாசத்தின் முன்பு கைவிடப்பட்டன.
சிபிஎம் 1989 சம்பவத்தை ஆதரித்தது ஏதோ உணர்வெழுச்சியில் நடந்தது அல்ல. உலகமே அந்த சம்பவத்தை கண்டனம் செய்த போது கம்யூனிச கட்சிகள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு சீன அரசின் செயலுக்கு முட்டு கொடுத்தன. தியானமென் சதுக்க படுகொலையை ஆதரித்தது சிபிஎம் கட்சியின் நிலைப்பாடு மட்டுமல்ல பல கம்யூனிஸ்ட் தலைவர்களின் கருத்தியல் நிலைப்பாடாகவே அது இருக்கிறது.
தியானமென் சதுக்க படுகொலை நடந்து மூன்று தசாப்தங்களுக்கு பிறகு 2021 இல் கேரளாவில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எம் வி கோவிந்தன் சட்டமன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாக பதிவு செய்துள்ளார். அந்த படுகொலை சம்பவம் பற்றி பரவலாக உள்ள பதிவுகளை மறுத்து , ஆர்ப்பாட்டம் நடந்த தியானமென் சதுக்கத்தில் ரத்தக்கறை எதுவும் படியவில்லை என்ற சிபிஎம்மின் நிலைப்பாட்டை உறுதியாக சட்டமன்றத்தில் சொன்னார்.
” அங்கு இக்கட்டான சூழல் நிலவியது. எதிர் புரட்சியாளர்கள் சோவியத் ருசியாவில் ஏற்பட்டதை போன்ற சூழலை சீனாவிலும் கொண்டு வர முயன்றனர். சீன அரசு அதை வெற்றிகரமாக தடுத்து விட்டது. சோசியலிச பொருளாதார வழியில் தொடர்ந்து பயணிக்க பாதை அமைத்தது”, என்று அவர் சட்டமன்றத்தில் கூறினார்.
சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த அறிக்கை சீன அரசின் செயலை நியாயப்படுத்துவது மட்டுமின்றி வேறொரு விஷயத்தையும் மறைமுகமாக உறுதிப்படுத்தியது. கருத்தியல் காரணங்களால் ஜனநாயக பூர்வமான மாணவர் போராட்டத்தை வன்முறை கொண்டும் நசுக்கலாம், அப்படி ஒடுக்கியதை நியாயப்படுத்தலாம் என்பதே அது.
இந்த ( கடந்த) வாரம் அதே எம் வி கோவிந்தன் கேரளா சிபிஎம்மின் மாநில செயலாளர் என்ற முறையில் பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் சந்திப்பில் டில்லி ஜந்தர்மந்தரில் நடந்த மாணவர் போராட்டத்தை பற்றி பேசினார். இந்த போராட்டம் ‘வரலாற்றில் குறிப்பிடத்தக்கது’ என்று கூறிய கோவிந்தன் தில்லி போராட்டம் ‘புதிய அத்தியாயத்தை’ ஆரம்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த போராட்டத்தில் தலையிட்டுள்ளது. ₹ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும்’ இது வலு சேர்ப்பதாக உள்ளது, என்றார்.
பல இடங்களில் ஆட்சியாளர்கள் போராடிய மாணவர்களை ஏ கே 47 துப்பாக்கி மூலம் எதிர்கொண்டனர் என்று கோவிந்தன் குற்றம் சாட்டினார். ‘ இப்போது தான் முதல் முறையாக மிளகாய் பொடி குண்டு என்பதை கேள்விப்படுகிறேன்’ , என்று கூறிய அவர் வீரிய வகை மிளகாய் பொடி போராட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என்ற பத்திரிகை செய்தியை பற்றி குறிப்பிட்டார். இந்தப் ‘போராட்டத்தின் உயிராக’ இடதுசாரி மாணவர் அமைப்புகள் செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.
கண்ணிலும் கருத்திலும் படாமல் தப்ப முடியாத மாற்றம் இது. 2021 இல் இதே அரசியல் தலைவர் தியானமென் சதுக்கத்தில் நடந்த மாணவர் போராட்டத்தை வன்முறை கொண்டு நசுக்கிய சீன அரசின் செயலை நியாயப் படுத்தினார். உலகம் முழுவதும் ஜனநாயக படுகொலை என்று கண்டனம் செய்ததை புறம் தள்ளினார். இதே தலைவர் இன்று ஜனநாயகம் , அரசமைப்பு கொடுத்த உரிமை என்று டில்லி மாணவர் போராட்டத்தை பற்றி கூறுகிறார்.
இதுபோன்ற இரட்டை தன்மை இடதுசாரி அரசியலில் அடையாளமாக நீண்ட காலம் இருக்கிறது. தீ நுண்மீ (கொரோனா – கோவிட் 19 ) காலத்தில் கேரள அரசில் சுகாதார துறை அமைச்சராக இருந்த பெண்மணி சட்டமன்றத்தில், ‘(கம்யூனிச) வடகொரியா இந்த சிக்கலை (தீநுண்மீ) சிறப்பாக கையாண்டது’ என்று பேசினார். சபைக்கு வெளியே இந்திய மாநிலங்கள் பலவும் , குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம், இந்த சிக்கலை எதிர்கொள்வதில் திணறின என்று குறிப்பிட்டார்.
மற்றொரு சிபிஎம் அமைச்சர் , கூபாவில் இருந்து (கியூபா – கம்யூனிச அரசு) கோவிட் 19 க்கான மருந்துகளை தருவிக்க கேரளா அரசு முயல வேண்டும். ஏனெனில் மற்ற நாடுகளை விட கூபா நாட்டு அரசும் அதன் மருத்துவர்களும் இந்த பிரச்சினையை சிறப்பாக எதிர்கொண்டனர், என்றார். அவர் பேசிய பின் கொஞ்சம் காலத்திலேயே கூபாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெடித்தது. பல தசாப்தங்களாக இல்லாத வகையில் மிகப் பெரிய போராட்டமாக அது வெளிப்பட்டது. தீநுண்மீ பிரச்சனையை கூபா அரசு சரியாக கையாள தெரியாமல் தோல்வியடைந்தது , அதை தொடர்ந்த பொருளாதார சரிவுகள் ஆகியவற்றுக்கு எதிராக அந்த நாட்டு மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக அது இருந்தது.
இந்திய இடதுகளின் இரட்டை வேடம் அண்மையில் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முன்னின்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மிக தெளிவாக வெளிப்பட்டது. வினாத்தாள் கசிவு, தேர்வு சம்பந்தமான முறைகேடுகள் பலவற்றை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அது விரைவில் அரசியல் தன்மை பெற்றது.
இடதுசாரி கட்சிகளும் அவற்றின் மாணவர் அமைப்புகளும் தாங்கள் தான் மாணவர்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றி போராடுபவர்கள் என்றும் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் என்றும் கூறிக்கொண்டு அவர்களுக்கே உரிய தீவிரபாணியில் போராட்டத்தில் சேர்ந்தனர். தேர்வுகள், மாணவர்கள் போராட்டத்திற்கான அரசின் எதிர்வினை பற்றி இடதுசாரிகளின் வரலாற்றை சற்று பார்ப்பது அவசியம். இடதுசாரி அரசுகளும் இடதுசாரி மாணவர் அமைப்புகளும் இது போன்ற போராட்டங்களையும் சச்சரவுகளையும் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எப்படி அணுகினார்கள் என்ற வரலாற்றை யாரும் பார்ப்பதில்லை. நினைவில் கொள்வதில்லை.
சிறந்த உதாரணம் கேரளாவில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி. இது கேரளத்தில் உள்ள மிகப் பழமையான கல்வி அமைப்பு. கேரள பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. இந்த கல்லூரியில் பல தசாப்தங்களாக சிபிஎம்மின் மாணவர் அமைப்பான எஸ் எப் ஐ (ஸ்டூடண்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா) வலுவாக உள்ளது.
2019 இல் கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவர்களை அச்சுறுத்தல் சம்பவம் வளாகத்தையும் தாண்டி அரசியல் கவனத்தைப் பெற்றது. அதனை அடுத்து நடந்த விசாரணையில் எஸ் எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வகுப்பறையையே மற்ற மாணவர்களை மிரட்டவும் தாக்கவும் பயன்படுத்தியது தெரியவந்தது. அவ்வாறு தாக்குதல் நடத்திய எஸ் எஃப் ஐ மாணவர் தலைவர்களில் ஒருவர் அரசு பணியாளர் தேர்வில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறையினரின் சோதனையில் எஸ் எப் ஐ யின் தலைவர்களின் அறையில் இருந்து வெற்று விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் எழுதிய உண்மையான விடைத்தாள்களுக்கு பதிலாக இவற்றில் சரியான விடை எழுதி மாற்றி விடுகிறார்கள் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகப் பட்டார்கள். பிறகு நடந்த சான்றாதார விஷயங்களும் சட்டபூர்வமான செயல்பாடுகளும் பொது விவாதத்திற்கு உரிய விஷயங்களாகின. எதிர்ப்பு வலுத்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கினார்கள்.
விமர்சனங்களில் இருந்தும் களங்கத்திலிருந்தும் காத்துக் கொள்ள அப்போதிருந்த கட்சி செயலாளர் வெற்றுதாள்களை விடைதாள் களாக கருத முடியாது. காரணம் அதில் விடைகள் இல்லை , என்ற கோமாளித்தனமான வாதத்தை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் உயர் கல்வி என்பது தகுதியை விட அரசியல் செல்வாக்கினால் தான் கிடைக்கிறது என்று பல ஆண்டுகளாக இடதுசாரி ஆதரவு தளத்திற்கு வெளியே இருப்பவர்கள் நினைக்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. பணி நியமனம் , சந்தேகத்திற்குரிய முனைவர் பட்டங்கள் , தரமற்ற ஆய்வுகள் ஆகியவற்றுக்கு அரசியல் தலையீடும் , செல்வாக்கும் தான் காரணம் என்ற புகார் பலமுறை எழுந்துள்ளது அறிவு தகுதியை விட கருத்தியல் சாய்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது தான் இதற்கான காரணம்.
வினாத்தாள் கசிவு, தேர்வு தொடர்பான முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகளும் அவர்களது மாணவர் அமைப்புகளும் முக்கிய பங்கெடுப்பது போராட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதை தடுக்க முடியாது. கல்வி அமைப்புகளிலும் கல்வி துறையிலும் அவர்களின் கடந்த கால செயல்பாடுகளையும் சர்ச்சைகளையும் பார்க்கும் போது, குறைந்தபட்சம் இதில் உள்ள கடுமையான முரண்பாடுகள் தெரியாமல் போகாது. இந்திய இடதுசாரிகள் தார்மீக உயர் பீடத்தில் ஏறி கொள்வதும் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் , ஆட்சியில் இருந்த காலத்தில் மரண அமைதி காப்பது என்பது மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது.
அமைதியான மாணவர்கள் போராட்டத்தை ஒரு அந்நிய நாட்டு கம்யூனிச அரசு பல இளைஞர்களை கொன்று ஒடுக்கியதை இந்திய இடதுசாரிகள் கருத்தியல் ரீதியில் அவசியமானது என்றும் ‘ எதிர் – புரட்சியாளர்கள்’ முயற்சி வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டது என்றும் வர்ணிப்பது ஒரு புறம். தில்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் எந்த கருத்தியலும் இல்லை. அது மட்டுமன்றி அது வன்முறையை நோக்கி திரும்பியது. அப்போது அரசமைப்புக்கு உட்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் இந்திய காவல் துறை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முனைந்தால் அதை ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று சாடுவதும் போராட்டத்தை ‘வரலாற்று முக்கியத்துவம்’ வாய்ந்ததாக கொண்டாடுவதும் மறுபுறம்.
அலங்கார பேச்சுக்களையும் மீறி முரண்பாடு தெள்ளென வெளிப்படுகிறது. ஒருபுறம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுகின்ற, கல்வி அமைப்புகளில் ஊழல் செய்கின்ற, அரசியல் செல்வாக்கினால் கல்வி களத்தை ஆக்கிரமிக்கும் மாணவர் அமைப்புகள். மறுபுறம் அதே அமைப்புகள் தங்களை கல்வித்துறையின் காவலராக முன்னிறுத்திக் கொண்டு வினாத்தாள் கசிவு, அமைப்பு சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பது.
தனது கருத்தியலுக்கு ஆதரவானவர்களுக்கு ஒன்றும் மற்றவர்களுக்கு வேறொன்று என்று தார்மீக கோபத்தை தேவைக்கேற்ப வெளிப்படுத்துவது இந்திய இடதுசாரிகளின் நம்பகத் தன்மையையே சந்தேகப்பட வைக்கிறது. ஜனநாயகத்தை பற்றி அவர்கள் பேசுவது கருத்தியல் வசதிக்காகவேயன்றி ஜனநாயக மாண்பிற்காக அல்ல.
ஸ்ரீ பெரிய பெருமாள் – ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாள் ( காட்டழகர்) – ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் – திருத்தங்கல் அப்பன் பெருமாள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உத்ஸவத்தின் நான்காம் திருநாள் ஸ்ரீ ஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும், ரங்க மன்னார் கண்ணன் திருக்கோலத்தில் கோவர்த்தனகிரி வாகனத்திலும் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான திவ்ய தேசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. இங்கு அவதரித்த ஆண்டாளின் திருநட்சத்திரமான திரு ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு திருஆடிப்பூர உத்ஸவம் கடந்த 06.08.2026 அன்று கொடியேற்றப்பட்டு துவங்கியது.
06.08.2026 முதல் 14.08.2026 வரை உத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த உத்ஸவ காலங்களில் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக 4ம் திருநாள் ஸ்ரீ ஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்க மன்னார், கண்ணன் திருக்கோலத்தில் கோவர்த்தனகிரி வாகனத்திலும் எழுந்தருள சிங்கமாள்புரம் மண்டபத்தில் இருந்து திருவீதி உலா முக்கிய வீதிகளில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாளான நாளை நள்ளிரவில் ஐந்து கருட சேவையும், ஏழாம் திருநாள் இரவு சயன சேவையும் மற்றும் ஒன்பதாம் திருநாள் ஆடிப்பூரத்தன்று ( 14.08.2026 )ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.35க்கு மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.
ஜி பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று பொதுமக்களிடையே பீதி கிளப்பப்பட்டு வரும் நிலையில், யுபிஐ செயலி வாயிலான பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
யுபிஐ செயலி வாயிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. தனிநபர்களுக்கு இடையேயான அனைத்துப் பரிவர்த்தனைகளும் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும்.
வர்த்தகர்களுக்கான குறைந்தபட்ச தள்ளுபடி விகிதம் தொடர்பான கட்டண விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், அவை குறிப்பிட்ட வரம்பிற்கு மேற்பட்ட வர்த்தகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்தக் கட்டண விகிதம் மிகக் குறைவாகவும், பற்று அல்லது கடன் அட்டைகளுக்கான குறைந்தபட்ச விகிதம், கட்டணங்களை விட பல மடங்கு குறைவாகவும் இருக்கும்.
யுபிஐ செயலியில், வணிகர்களுக்கான பெரும்பாலான பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும். குறைந்தபட்ச வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது குறிப்பிட்ட வரம்பின் அடிப்படையிலேயே இருக்கும் என்றும், அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பொதுவான கட்டணமாக விதிக்கப்படாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பணப் பரிவத்தனைகள், தீர்வு அமைப்புகள் சட்டம், 2007′-ன் பிரிவு 10 ஏ -வை திருத்துவதற்கான வரிவிதிப்பு, பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026′-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிறகு, குறைந்தபட்ச கட்டணம் ஏதேனும் விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தேசிய பரிவத்தனைக் கழகம் தலைமையிலான யுபிஐ சேவைகள் வழிநடத்தல் குழு முடிவெடுக்கும்.
மேலும் இது தொடர்பான கொள்கை மாற்றங்களுக்குப் பின்னணியில் அதன் தாக்கங்கள் இருக்கலாம் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆதாரமற்றது, முற்றிலும் பொய்யானது மற்றும் தவறான வழிகாட்டுதல் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
‘வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், இளம் தலைமுறையினரின் திறமையிலும், வலிமையிலும் முழு நம்பிக்கை இருக்கிறது’’ என்று, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தலைநகர் புதுதில்லியில் ஐஐடி., – இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா ஆக.8 நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…
நண்பர்களே, நான் வாழ்க்கையின் சில நடைமுறை விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கல்விவளாக வாழ்க்கை, மற்றும் கல்விவளாகத்தின் வெளியேயான வாழ்க்கை. இவை இரண்டுக்குமிடையே, பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஐஐடியின் தேர்வுகளில் பாடத்திட்டம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையின் தேர்வினிலே அனைத்துமே, பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
நினைவுக்குக் கொண்டு வாருங்கள்!! கல்விவளாக வாழ்க்கையிலே, அனைத்துக் கூறுகளும் தெளிவாக இருந்திருக்கும். என்ன படிக்க வேண்டும், எந்த assignmentஐ முடிக்க வேண்டும், எந்தத் தேர்வை எழுத வேண்டும், அனைத்தும் முன்னமேயே தீர்மானிக்கப்பட்டவை.
ஆனால் வாழ்க்கையோ, சற்றே வித்தியாசமான வழியிலே செயல்படுகிறது. அங்கே எந்தவொரு திட்டமிட்ட பாடத்திட்டம் கிடையாது, எந்தவொரு வினாத்தாளும் கிடையாது. பல வேளைகளிலே, இதைக்கூட யாரும் தெரிவிப்பதில்லை, அதாவது உண்மையான வினா எது என்பதை. அந்த வினாவையும் கூட, நீங்களே தான் அடையாளம் காண வேண்டியிருக்கும்.
நான் ஐஐடியினுடைய, பல முன்னாள் மாணவர்களுடைய பயணத்தைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய வெற்றிக்கான காரணம், என்னவென்று நினைக்கிறீர்கள்? அவர்கள் சரியான விடையை அளித்தார்கள் என்பதா? அவர்களுடைய வெற்றிக்கான காரணம் என்னவென்றால், அவர்கள், அந்த வினாவை அடையாளம் கண்டார்கள், அதாவது எதை இந்த உலகமானது, வினா என்று ஏற்பதைக் கூடத் துறந்து விட்டது. அவர்கள், அந்த சிக்கல்களுக்கான தீர்வைத் தேடினார்கள். ஆனால் மற்றவர்களோ, அந்தச் சிக்கல்களை சகித்துக் கொள்ளப் பழகியிருந்தார்கள்.
ஆக அந்த வகையிலே, வாழ்க்கையிலே, தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைப் பராமரியுங்கள். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாகத்தை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளுங்கள். விழிப்பு உணர்வை பாதுகாப்பாய் வைத்திருங்கள். எந்த விஷயங்கள் சிந்திக்காமல் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, அவற்றை சோதனை செய்து பாருங்கள்.
அவற்றின் மீது வினாக்களை எழுப்புங்கள். கேள்வி கேட்பதோடு மட்டும் நின்று விடாதீர்கள். அவற்றுக்கான தீர்வுகளைக் காணத் தேவையான, நெஞ்சுரத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணத்தையே, உங்களுடைய, தனி அடையாளமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
நண்பர்களே, உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஒவ்வொரு தலைமுறைக்கு முன்னாடியும், அந்த காலகட்டத்துக்கே உரித்தான சவால்கள் இருந்திருக்கு. அதே போல ஒவ்வொரு தலைமுறைக்கும்னு, ஒரு தேசியக் கடமையும் இருக்கிறது. நம்முடைய தேசமானது, அடிமைத்தனக்காலத்தையும் பார்த்திருக்கு, அந்தத் தலைமுறைக்கு முன்னால, ஒரே ஒரு, இலட்சியம் தான் இருந்திச்சு. பாரதத்தோட விடுதலை.
அதற்காக அவங்க, தியாகங்கள் புரிஞ்சாங்க. நீண்டகாலம் போராடினாங்க. இன்னைக்கு நாம, சுதந்திர பாரதத்தில சுவாசிக்கறோம்னா, அதன் பின்னணியில, அந்தத் தலைமுறையோட தவம், தியாகம், மற்றும் உயிர்த்தியாகம் அடங்கியிருக்கு. மேலும் நண்பர்களே இன்றைய காலகட்டத்திலே, நம்ம முன்னால இருக்கற சவால்கள் வேறுபட்டதா இருக்கு. ஆகையினால நம்ம பொறுப்பும் கூட வித்தியாசமானது.
நம்ம வாழ்க்கையோட அடுத்த, 30-35 ஆண்டுகள்ல, நீங்க என்ன பணியை ஆற்றினாலும் கூட, அது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நம்ம பயணத்தில தாக்கமேற்படுத்தும். ஆகையினால, உங்களோட அனைத்து முடிவுகளோட ஆதாரம் என்னவா இருக்கணும்னா, இதனால தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும்ங்கறது தான். இதனால தேசத்தோட எந்தத் தேவை நிறைவடையும்?
இன்று பாரதம், பொருளாதார தற்சார்பு, தொழில்நுட்ப தற்சார்பு, தொழிலக தற்சார்பு, இப்படி அனைத்துத் துறைகள்லயும், தற்சார்பு நிலையை அடைய, பணியாற்றி வருகிறது. இது தான், வளர்ச்சியடைந்த பாரதத்துடைய பலமான, அடித்தளத்தோட, ஆதாரம். இந்த பலமான அஸ்திவாரத்தின் மீது, நீங்க எல்லாரும் ஒரு ரொம்ப அழகான வளர்ந்த பாரதத்தை, நிர்மாணம் செய்ய வேண்டும்.
பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அன்வர்தீன் சிறையில் மர்ம மரணம் விவகாரத்தில், முக்கிய குற்றவாளிகளை பாதுகாக்க சதி நடக்கிறதா எனும் சந்தேகம் எழுகிறது என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தரவேண்டி அப்பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு சமூகத்தினரும் பக்தர்கள் மற்றும் காவடி குழுவினர் தங்கி இளைப்பாறவும் பழனி முருகனை தரிசிப்பதற்கும், தங்களின் சொந்த நிலங்களை கோவிலுக்கு எழுதி வைத்து பக்தர்களுக்கு சேவை செய்து வந்துள்ளனர்.
இந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை முறைகேடாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்துள்ள வழக்கில் முருகதாஸ், அன்வர்தீன், சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய நான்கு பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நில மோசடிப் புகாரில் பலர் மூளையாக செயல்பட்டுள்ளனர்என்றும், நில மோசடிக்காக ஒரே நாளில் பல அதிகாரிகள இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்து முன்னணி சார்பாக கூறியிருந்தோம்.
அது மட்டுமல்லாமல் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் அப்பொழுதுதான் நிலமோசடி குறித்த உண்மைத்தன்மை வெளியே வரும் என்றும் சொல்லியிருந்தோம். இதற்காக இந்து முன்னணி சார்பாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதமும் நடைபெற்றது.
தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்ற நிலையில் நில புரோக்கரும் பத்திர எழுத்தாளருமான ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3ஆம் தேதி அன்று இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டனின் முன்ஜாமின் காலம் முடிவு பெற்றதால் நான்காம் தேதி மீண்டும் முன்ஜாமின் கேட்க அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடிக்கு உடனடியாக இருந்த அனுமதியின் நேற்று மத்திய சிறையில் மரணமடைந்துள்ளார் அவர் நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்ததாக கூறப்படுகிறது..
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது அன்வர்தீனுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.
இத்தகைய நோய்கள் உடையவர்கள் நீதிமன்றத்தில் இது பற்றி தகவல் தெரிவித்து முன்ஜாமின் அல்லது ஜாமின் பெற முடியும். ஆனால் அவர் இறந்த பிறகு அவருக்கு மருத்துவ ரீதியாக இவ்வளவு பிரச்சினைகள் என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது தான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இந்த நலமோசடி வழக்கில் 11 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் . இதில் இதுவரை ஆறு நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் மிக முக்கிய குற்றவாளிகள் இதன் பின்னணியில் இருப்பதால் அன்வர்தீனின் சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது . முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்காக அன்வர்தீன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கை திசை திருப்புவதாக அமையும்.
எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
“FCRA சட்டம் மூலம் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்களை மோடி அரசு கைப்பற்றப் பார்க்கிறது” : மோர் குழம்பு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.
ஐயா மோர் குழம்பு, முதலில் FCRA சட்டத்தை ஒருமுறை முழுமையாகப் படித்துவிட்டு பேசுங்கள்.
அந்தச் சட்டத்தில் எந்த இடத்திலும் “கிறிஸ்தவ தேவாலயங்கள் வெளிநாட்டு நிதி பெறக் கூடாது” என்றும், “கிறிஸ்தவ NGO-களுக்கு மட்டும் தடை” என்றும் எழுதப்படவில்லை. சட்டம் “NGO” என்றே பொதுவாகக் குறிப்பிடுகிறது, அது பல்வேறு மதங்களைச் சார்ந்த நிறைய தன்னார்வ இயக்கங்களை உள்ளடக்கியது. ஆக எந்த மதத்தைச் சேர்ந்த அமைப்பாக இருந்தாலும் ஒரே விதிமுறைகள்தான்.
வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கக் கூடாது என்றும் சட்டம் சொல்லவில்லை. முறையான வங்கிக் கணக்கின் மூலம் பணம் பெற வேண்டும், அதன் வரவு, செலவுக்கு கணக்கு காட்ட வேண்டும், வாங்கியதில் 90 சதவீதத்தை எந்த நோக்கத்திற்காக வாங்கினீர்களோ அந்த நோக்கத்திற்கு மட்டும்தான் செலவு செய்ய வேண்டும் மீதி 10 சதவீதத்தை வேண்டுமானால் நிர்வாக செலவுகளுக்காக நீங்கள் செலவு செய்து கொள்ளலாம் என்பதைத்தான் சொல்கிறது. வெளிநாட்டு நிதி வந்தால் அது எங்கிருந்து வந்தது, எதற்காக பயன்படுத்தப்பட்டது, கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டது, யாருக்காக கொண்டு வருகிறோம் என்று சொல்லப்பட்ட மக்கள் பயனடைந்தார்களா என்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம்.
உங்களிடம் உண்மையாகவே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஆப்பிரிக்காவின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவுங்கள். அங்கு இன்னும் உணவு, குடிநீர், அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் உதவி அதிகம் பயனளிக்கும்.
ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நிதியில் 90 சதவீதத்தை அந்த பணத்தை கொண்டு வரும் மிஷினரிகள் நவநாகரிக பங்களாக்கள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு வகை கார்கள் என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெயருக்கு மட்டும் 10 சதவீதத்தை செலவு செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த சில அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகள் கண்காணிப்பது இந்தியாவின் உள்நாட்டு நிர்வாக விவகாரம்.
மிக முக்கியமாக, FCRA என்பது இந்திய பாராளுமன்றம் இயற்றிய / இயற்றப்பட போகும் இந்தியச் சட்டம். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் / நடைமுறைக்கு வரும் ஒரு சட்டத்தைப் பற்றி கருத்து சொல்லுவது யாருக்கும் உரிமை இருக்கலாம். ஆனால், அந்தச் சட்டத்தை இந்தியா எப்படி அமல்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம், நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது..
ஒரு அமெரிக்கக் கிறிஸ்தவ அமைப்பு, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில், மதமாற்ற நடவடிக்கைகள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வெளிநாட்டுப் பணத்தைப் பாய்ச்சும் வகையில் நாட்டிற்குள் ஒரு அதிநவீன எல்லை கடந்த நிதியமைப்பை உருவாக்கியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதமாற்ற நபரான அஜித் வர்கீஸ் மாதாய் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தச் சதித் திட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 1,000 வெளிநாட்டு டெபிட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அமலாக்கத் துறையும் (ED) பெங்களூரு காவல்துறையும் அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி திமோதி இனிஷியேடிவ்’ (The Timothy Initiative – TTI) என்ற கிறிஸ்தவ அமைப்பைக் குறிவைத்து விசாரணை நடத்தி வருகின்றன. இதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்கள் வெறும் நிதி விதிமுறை மீறல்களை விட மிகவும் தீவிரமானவை.
ஏப்ரல் 2026-இல் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அமலாக்கத்துறை சோதனைகளில், அமெரிக்காவில் வழங்கப்பட்ட ‘ட்ரூயிஸ்ட் வங்கி’ (Truist Bank) டெபிட் கார்டுகளை மையமாகக் கொண்டு செயல்பட்ட ஒரு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கார்டுகள் நேரடியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டு, FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டம்) மற்றும் FEMA (வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம்) விதிகளை முழுமையாக மீறி, எடிஎம்கள் (ATM) மூலம் பெருமளவில் பணம் எடுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா, சத்தீஸ்கர், அசாம் மற்றும் நக்சல் செல்வாக்கு உள்ள பிற பகுதிகளில் உள்ள ஏடிஎம்கள் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இந்த முறை திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.
மாதாயின் உத்தரவின் பேரில், குறைந்தது 23 கார்டுகள் ‘சந்தோஷ் குமார்’ என்ற ஒற்றைப் பெயரில் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கார்டுகள் கணக்கு உரிமையாளர்கள் அல்லாத நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சிறிய தொகைகளாக அடிக்கடி பணம் எடுக்கப்பட்டு, பழங்குடியினப் பகுதிகளில் டிடிஐ (TTI) அமைப்பின் தேவாலயங்கள் அமைத்தல் மற்றும் பிரசாரப் பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மார்க்சிஸ்ட்/மாவோயிஸ்ட் பாதிப்புள்ள பகுதிகளுக்கும் இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளது.
24 ட்ரூயிஸ்ட் டெபிட் கார்டுகளுடன் அமெரிக்கக் குடிமகனான மீகா மார்க் (Micah Mark) பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டபோது இந்த விவகாரம் பூதாகரமானது. தொடர் சோதனைகளில் மேலும் பல கார்டுகள், ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. TTI, மீகா மார்க், மாதாய், ஜோனתן எஸ் ராஜன் மற்றும் சிலர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வாளர்கள் இதை வெறும் மதமாற்ற நிதியாக மட்டும் பார்க்கவில்லை. மக்கள் தொகை மாற்றத்திற்கு நிதி அளிக்கும் அதே வழித்தடம்தான் இடதுசாரி பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கிறது என்பதால், இதை நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விவரிக்கிறார்கள்.
இது சதித் திட்டத்திற்கான வழக்கமான பணப் பரிவர்த்தனைப் பாணியாகும். FCRA விதிகள் பலப்படுத்தப்பட்ட பிறகு எஞ்சியிருந்த இடைவெளிகளைப் பயன்படுத்தி இது நடந்துள்ளது. முறையான வழிகள் முடக்கப்பட்டவுடன், அமைப்புகள் இந்த டெபிட்-கார்டு நெட்வொர்க் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தத் தொடங்கின.
இந்த முறை ஒரு பெரிய மற்றும் பழமையான மூலோபாயத்திற்குப் பொருந்திப்போகிறது. நெப்போலியன் மற்றும் சி.ஐ.ஏ (CIA) ஆகிய இருவருமே கிறிஸ்தவ மதமாற்றத்தை காலனியாதிக்கம் மற்றும் செல்வாக்கின் பயனுள்ள கருவியாகப் பார்த்தனர். திறந்தவெளி இராணுவ ஆக்கிரமிப்பு தேவைப்படாமல் சமுதாயங்களை உள்ளிருந்தே அழிக்கும் மென்மையான முறை இது. இதுபோன்ற வெளிப்படைத்தன்மையற்ற வெளிநாட்டு நிதிகள் வெறும் தொண்டு நிறுவனங்களுடன் நின்றுவிடுவதில்லை. இந்திய அரசு ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மக்கள் தொகையை மாற்றவும், அதிருப்தியை வளர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால்தான் அமித் ஷாவின் ‘சுரக்ஷா கவச்’ எனப்படும் 2026-ஆம் ஆண்டின் FCRA திருத்தச் சட்டமுன்வடிவு மிக முக்கியமானது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் இந்த இடைவெளிகளை அடைக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையான நன்கொடையாளர்கள் மற்றும் ஒவ்வொரு ரூபாயின் துல்லியமான நோக்கத்தைக் கண்காணிக்கக் கோருகின்றன. கடுமையான பயன்பாட்டு விதிகள் மற்றும் டிஜிட்டல் வெளிப்படைத்தன்மையை விதிக்கின்றன. ஒரு பதிவு ரத்து செய்யப்படும்போதோ அல்லது இடைநிறுத்தப்படும்போதோ சொத்துக்கள் மீது அரசுக்குச் சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகின்றன. முக்கிய நிறுவனப் பதவிகளில் வெளிநாட்டுத் தேசியவாதிகளின் பங்கைக் கட்டுப்படுத்துகின்றன. அனைத்திற்கும் மேலாக, சட்டவிரோத மதமாற்றங்கள், கருத்தியல் திரட்டல் அல்லது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் வெளிநாட்டுப் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தெளிவான அரணை அமைக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் இல்லாவிட்டால், ‘தி திமோதி இனிஷியேடிவ்’ போன்ற அமைப்புகள் வேறு வடிவம் எடுக்கும். டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக கிரிப்டோகரன்சி, கல்வி உதவித்தொகை அல்லது பிற வெளிப்படைத்தன்மையற்ற வழிகள் உருவாகலாம். தற்போதைய விசாரணையின் செய்திชัดமானது: மதமாற்றமும், சதித்திட்டமும் ஒரே வெளிநாட்டுப் பணப் பாதையில்தான் பயணிக்கின்றன.
கடுமையான FCRA விதிகள் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் எதிரானவை அல்ல. எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியும் மக்களின் மனதை மாற்றி மதமாற்றம் செய்யவோ அல்லது இந்தியாவின் சமூகக் கட்டமைப்பையும் பாதுகாப்பையும் சீர்குலைக்கவோ சுதந்திரம் அளிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே அவை நடைமுறையில் உள்ளன.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடியில் அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆடி உள்ளிட்ட தமிழ் மாதங்கள் விஷேச தினமாக கருதப்படுகிறது.இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இந்த கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு மாரியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.மேலும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் அருள்மிகு மாரியப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாழிப்பார்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி கடைசி வெள்ளி திருவிழா வரும் 14-ம் தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர்கள் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
மேலும் தென் மாவட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்களில் வசதிக்காக பல்வேறு பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிணறு குறித்த செய்தி தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பர்தா கிராமத்தில், பிரஞ்சீவன் சடாரியா என்ற விவசாயியால் இந்தக் கிணறு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் தோண்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றில் உள்ள நீர் கொந்தளிக்கத் தொடங்கியது.
யாரோ ஒருவர் அடியில் இருந்து தள்ளுவது போல, நீரின் அலைகள் பக்கவாட்டில் பலமாக வீசுகின்றன. நீர் கொதிப்பது போல வெளியே பாய்கிறது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கூட இதை வேடிக்கை பார்க்கத் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கு கூடுகிறார்கள். அதேவேளையில், இது நிலநடுக்கத்தின் அறிகுறியோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால், அத்தகைய அச்சம் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஸ்வப்னில் காரே இதில் நேரடியாகத் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டார். காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆய்வு நிறுவனம், அப்பகுதியில் நிலநடுக்கத்தை உருவாக்கும் வகையிலான புவிப்பிளவு ஏதுமில்லை என்றும், எனவே இது நிலநடுக்கம் அல்ல என்றும் உறுதிப்படுத்தியது.
பலத்த மழையின் போது நிலத்தடி நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. பாறைகளுக்கு இடையிலான துளைகள் மற்றும் விரிசல்களில் சிக்கியிருந்த காற்று வெளியேற வழியில்லாமல் போனது. நீர் மிகுந்த வேகத்துடன் உள்ளே பாய்ந்தபோது, அந்தக் காற்று அதிக அழுத்தத்துடன் கிணற்றுக்குள் தள்ளப்பட்டது. அந்தத் தொடர்ச்சியான அதிர்வுகளும், செயற்கையான அலைகளும் இதனால்தான் ஏற்படுகின்றன.
இயற்கை சில சமயங்களில் ஒரு ஆய்வகத்தைப் போலச் செயல்படுகிறது. நிலத்தடியில் கண்ணுக்குத் தெரியாத காற்று, நீர் மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் செயல்பாடுகளை, ஒரு கிணறு எனும் கண்ணாடியின் வழியாக இயற்கை நமக்குக் காட்டுகிறது.
காந்திநகரிலிருந்து புவியியலாளர்கள் குழுவினர் வந்து விரிவான ஆய்வை மேற்கொண்டால் மட்டுமே, இதற்கான முழுமையான அறிவியல் காரணத்தை உறுதிப்படுத்த முடியும். இயற்கை நமக்கு அளிக்கும் மிகச்சிறிய சமிக்ஞைகளைக் கூட நாம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கிணறு நமக்கு நினைவூட்டுகிறது.
#WATCH | Morbi, Gujarat: An unusual incident has been reported in Virparda village, Morbi taluka, where a farm well has been showing wave-like movement. The District Collector has ordered a detailed report from the groundwater research team.
மார்பி தாலுகாவில் உள்ள விர்பர்தா கிராமத்தில், விவசாய நிலத்தில் உள்ள கிணறு ஒன்றில் அலை போன்ற அசைவு காணப்பட்ட விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிலத்தடி நீர் ஆராய்ச்சி குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்வப்னில் காரே கூறுகையில், “…விர்பர்தாவில் உள்ள கிணறு குறித்து சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில், மாவட்ட புவியியலாளர்கள் இன்று அந்த இடத்தைப் பார்வையிட்டனர். நீருக்கு அடியில் சிக்கியுள்ள காற்றினால் இந்த நீர் அசைவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்களின் முதற்கட்ட ஆய்வு தெரிவிக்கிறது. சிக்கியுள்ள காற்று நகரும்போது, அது நீரின் மேற்பரப்பில் அசைவை ஏற்படுத்துகிறது… விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குஜராத் நிலத்தடி நீர் ஆராய்ச்சி நிறுவனத்திடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.