Home Blog Page 6

T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
அரையிறுதி ஆட்டங்கள் 05.03.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          முதல் அரையிறுதி ஆட்டம் 04.03.2026 அன்று கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பூவாதலையா வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் மட்டையாளர்கள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறினார்கள். முதலிரண்டு விக்கட்டுகள் இரண்டாவது ஓவரில் விழுந்தன.

தொடக்க மட்டையாளர்கள் எய்டன் மர்க்ரம் (20 பந்துகளில் 18 ரன்), க்விண்டன் டி காக் (8 பந்துகளில் 10 ரன்), ரியன் ரிக்கிள்டன் (பூஜ்யம் ரன்), டேவிட் மில்லர் (6 பந்துகளில் 6 ரன்) என நிலைத்து ஆட்டமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டிவால்ட் ப்ருவிஸ் (27 பந்துகளில் 34 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (24 பந்துகளில் 29 ரன்) மற்றும் மார்கோ யான்சன் (30 பந்துகளில் 55 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணியின் டிம் செய்ஃபர்ட் (33 பந்துகளில் 58 ரன்), ஃபின் ஆலன் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ரவின் ரச்சீந்திரா (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 13 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி 12.5 ஓவர்களில் 173 ரன் எடுத்து நியூசிமாந்து அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா அபார வெற்றி

          மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் மட்டையாடவந்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (9 ரன்) இந்த ஆட்டத்திலும் குறைந்த ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் மூன்றாவது ஓவரில் ஒரு கேட்ச் கொடுத்து அவுட் ஆக இருந்தார்.

இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ப்ரூக் அந்த சுலபமான கேட்சை பிடிக்கத் தவறினார். அவர் 14ஆவது ஓவர் வரை விளையாடி 42 பந்துகளில் 89 ரன் அடித்தார். அதில் 8 ஃபோர்கள் 7 சிக்சர்கள். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினர். இஷான் கிஷன் (18 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), ஷிவம் துபே (25 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) (இவர் சற்று முன்னதாக மட்டையாட அனுப்பப்பட்டார்), ஹார்திக் பாண்ட்யா (12 பந்துகளில் 27 ரன்), திலக் வர்மா (7 பந்துகளில் 21 ரன்)என அனைவருமே அதிரடியாக ஆடினர். சரியாக விளையாடாதவர், அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (6 பந்தில் 11 ரன்) தான். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 253 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணி பில் சால்ட் (5 ரன்), ஜாஸ் பட்லர் (25 ரன்) மற்றும் ஹாரி ப்ரூக் (7 ரன்) ஆகியோரை பவர் பிளே ஓவர்களுக்குள் இழந்து 64 ரன் மட்டுமே எடுத்தது. ஜேகப் பெதல் (48 பந்துகளில் 105 ரன், 8 ஃபோர், 7 சிக்சர்) சிறப்பாக ஆடினார். 15 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி சிறப்பாகவே ஆடியது.

ஆனால் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, இரண்டு விக்கட்டுகளையும் எடுத்து, ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 146 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 64 ரன் கொடுத்தார். இது ஒரு மோசமான சாதனையாகும். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார்.

          இறுதி ஆட்டம் இந்தியம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 0700 மணிக்கு நடைபெறும்.      

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

TN Governor RN Ravi
TN Governor RN Ravi

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!

  • தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கூடுதலாக மேற்கொள்வார்.
  • இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த சிவ் பிரதாப் ஷுக்லா தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தெலங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
  • நந்த் கிஷோர் யாதவ் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சயீத் அதா ஹஸ்நைன் பீகார் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லடாக் துணைநிலையாட்சியராக இருந்த கவிந்தர் குப்தா, இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டெல்லி துணைநிலையாட்சியராக இருந்த வினய் குமார் சக்சேனா, லடாக் துணைநிலையாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, டெல்லி துணைநிலையாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததை அடுத்து ஆளுநர்கள் வரிசையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனந்த் போஸுக்கு பதிலாக தமிழக ஆளுநராக உள்ள ரவீந்திர நாராயண் ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை உள்துறை அமைச்சர் தம்மிடம் கூறியதாக மம்தா பானர்ஜி அதிர்ச்சிகரமாக சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கே அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. இந்நிலையில் அந்த மாநில ஆளுநராக உள்ள சி.வி ஆனந்த போஸ் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது தில்லியில் இருக்கும் அவர், ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மேற்கு வங்க ஆளுநராக சுமார் மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். தாம் ராஜினாமா செய்ததை உறுதி செய்துள்ள ஆனந்த போஸ், ஆளுநர் பதவியில் போதுமான காலம் இருந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

1977ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த 2022 நவ.23ல் மேற்கு வங்கத்தின் 21வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் முதல்வர் மம்தாவுக்கும் தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்து வந்தது.

இது தொடர்பாக மம்தா வெளியிட்ட அறிக்கையில்,

மேற்கு வங்க ஆளுநர் பதவியில் இருந்து ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனாலும், தற்போதைய சூழலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சில அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்ய ஆளுநருக்கு மத்திய உளதுறை அமைச்சரிடம் இருந்து சில அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் எனக்கு ஆச்சர்யம் இல்லை.

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுஉள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து என்னிடம் அவர் ஆலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை குறைத்து மதிப்பிடுவதோடு, நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன.

மத்திய அரசு கூட்டாட்சிக் கொள்கைகளை மதிக்க வேண்டும். ஜனநாயக மரபுகளையும், மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒரு தலைபட்ச முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் – என்று மம்தா கூறியுள்ளார்.

சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

sankarar thirumoolar vinayakar - 2026

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்


சனாதன தர்மத்தில் கருத்து வேறுபாடுகளும் வாதங்களும், விவாதங்களும் எண்ணற்றவை. அவற்றைத் தவறு என்று கூறுவதற்கில்லை. பன்முகத் தன்மை என்பது மனித ஐயல்பு. அது படைப்பின் இயற்கை. இன்னும் கூற வேண்டுமானால், மதங்கள், கோட்பாடுகள், துறைகள் அனைத்திலும் பன்முகத் தன்மை காணப்படுகிறது.

பல யுக வரலாறு கொண்ட நம் சரித்திரம் பற்றியும் பல கருத்துகள் நிலவுகின்றன. சில ஆயிரம் ஆண்டுகால வரலாறே கொண்ட வெளிநாட்டவர், பாரத தேசத்திற்கு இருக்கும் கல்பங்கள், யுகங்கள், பண்டைய வரலாறு போன்றவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல், அவையெல்லாம் கற்பனை என்றும் பொய் என்றும் கூறி வருகின்றனர். அதனால் நம் பாரம்பரியம் எல்லாம் கட்டுக்கதையாக மாறிப் போனது.  

நட்சத்திரங்களின் நிலை, கிரகங்களின் சஞ்சாரம் போன்றவற்றின் உண்மையான வரலாற்றை, வானியல் அறிவின் அடிப்படையில் வழங்கினார் அறிஞர் ஸ்ரீ கோட்ட வேங்கடாசலம். அவரைப் போன்ற சான்றோர் பழமையான நூல்கள், சாசனங்கள், கட்டடங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் படைத்த ‘பாரததேச சரித்திர’ த்தை படித்து, அதன் அடிப்படையில் உண்மையை அறியாமல், வெளிநாட்டு மதக் கண்ணோட்டத்தின் யூகங்களை சுதந்திர இந்தியாவிலும் ஏற்பது வருந்தத்தக்கது.   

நாத்திகர்களின் மனப்பான்மை ஒரு புறம் இருக்கட்டும். ஆத்திகர்களான அறிஞர்களும் கல்வி நிலையங்களுக்குப் பரித்துரைத்த வரம்புக்குள் இந்த நவீன முறையைப் புகுத்தி,   கிபி, கிமு, பிசி, சிஇ, எடி, என்பவற்றின் எல்லையிலேயே நம் பழமையை அமர்த்தி இலக்கியம், கல்வி போன்றவற்றின் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய பார்வையால் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு மறைக்கப்பட்டு, தவறாக சித்திரிக்கப்படுகிறது. இது பல வேறுபட்ட கருத்துகளுக்கு வழிவகுக்கிறது.  

‘பண்டைய காலத்தில் யாகங்கள் இருந்தன. ஆனால் கோவில்கள் இல்லை விக்ரக வழிபாடு வேத காலத்தில் இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்டன. வேதங்கள் வேறு புராணங்கள் வேறு. அவை ஒன்றுகொன்று தொடர்பற்றவை. அவற்றின் காலங்கள் வெவ்வேறு’. இப்படிப்பட்ட பிரித்துப் பார்க்கும் முறை தவறான வரலாற்றுக் கணக்கீட்டின் மூலம் உருவான பிழை. இது சனாதன தர்மத்தை முழுமையாக அறிய முடியாத சூழலை உருவாக்குகிறது.

கோட்பாடுகளை அனுசரித்து பாரதத்தின் சமுதாயக் கட்டமைப்பைப் பற்றி முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. உழைப்புக்கான சிறந்த பிரிவுகளோடும், பரஸ்பரம் கௌரவத்தோடும் பல்வேறு வாழ்கை முறைகளை உருவாக்கிய வர்ண அமைப்பைச் சிதைத்து, வக்கிரமாக விமர்சித்து, அதை ஜாதிப் பாகுபாடு என்று சித்திரிப்பது இன்னுமொரு துரதிருஷ்டம்.

வழிபாடு, உபாசனை போன்றவற்றின் வசதிக்காக ஒரே பரமாத்மாவை வெவ்வேறு பெயர்கள், வடிவங்கள், ஆகமங்களுடன் வழிபடும் சைவம், வைணவம், சௌரம், சாக்தம், காணபத்யம், கௌமாரம் என்ற சம்பிரதாயகளாக ஏற்படுத்தினர். அவற்றைத் தனித்தனியாக பார்த்து, அவற்றின் இடையே குறைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவது இன்னொரு கவலை தரும் அம்சம். அவை ஒவ்வொன்றிலும் மேலும்  பல்வேறு வேறுபாடுகளைப் புகுத்தினர்.  

வெவ்வேறு ஆகம வழிமுறைகளின் படி வைணவத்தில் வேறுபட்ட சித்தாந்தங்கள். அதே போல் ராதாவையும் கிருஷ்ணரையும் வணங்கும் வைணவம் ஒன்று. அதை ஏற்காத  வைணவம் இன்னொன்று. சைவ மதத்தில் ஸ்ரோதி சைவம், வீரசைவம், பாசுபத சைவம், காஷ்மீர சைவம் என்ற வேறுபாடுகள். சாக்தத்தில் வாமாசாரம், தக்ஷிணாசாரம், கௌளாசாரம் போன்றவை. வைதிகம், தாந்திரிகம் என்று வேறுபாடுகள். இது வைதிகமா? பௌத்தமா? என்று இன்னொரு தகராறு. அதேபோல் காணாபத்யத்திலும், சௌரத்திலும்  வேறுபாடுகள். அதற்குள் மற்றொரு அறிஞர் இருந்தாற்போலிருந்து சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் எல்லாம் புராண கற்பனைகள். வேதங்களின்படி இந்திரன்தான் உயர்ந்த கடவுள் என்று விவாதித்து அதற்கென்று ஒரு சம்பிரதாயத்தைப் புகுத்தினார்.

இவற்றைத் தவிர  உருவமற்ற நிர்குண பிரம்மவாதிகள் ஒரு புறம். உண்மையில் இவை எல்லாவற்றையும் விட யோக மார்க்கமே சிறந்தது என்று மற்றொரு கருத்து உள்ளது. இவை தவிர ஸ்மார்த்த வழியில் மற்றொரு வழிபாட்டு முறை உள்ளது. சுருதி, ஸ்ம்ருதி புராணங்களைக் கொண்டு சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன், கணபதி எல்லோரையும்  ஒன்றாக வழிபடுவதே ஸ்மார்த்தம். அதுவே பஞ்சாயதன வழிபாட்டு முறை. இதுவும் சைவம், வைணவம் போன்று பழமை வாய்ந்ததே. ‘ஸ்மார்த்தம் சைவம் அல்ல’ என்று இன்று நிறைய பேருக்குத் தெரியாது. அது ‘அபேத’ சித்தாந்தம்.

இந்த வழிமுறையை ஆதிசங்கரர் எடுத்து வந்தார் என்று சிலரும், இல்லை.   வித்யாரண்யர் அறிமுகம் செய்தார் என்று சிலரும் கூறுகின்றனர். ஸ்மார்த்த குடும்பத்தில் ஆதிசங்கரர் தோன்றினார் என்று வரலாறு கூறுகிறது. அவர் பெயரும், அவருடைய பெற்றோரின் பெயர்களும் அதையே குறிப்பிடுகின்றன. ஸ்மார்த்தத்திற்கு சம்பிரதாயமான பஞ்சாயதன வழிபாட்டு முறையை ஆதிசங்கரரோ, வித்யாரண்யரோ அறிமுகம் செய்தார் என்பது யூகம்தான்.

ஒருவேளை இருவரில் ஒருவர் அறிமுகம் செய்திருந்தாலும், சாஸ்திரத்திற்குப் புறம்பில்லாத ஒருங்கிணைந்த முறையாக இருப்பதால் அதனை நல்ல சம்பிரதாயமாக ஏற்றுக் கடைப்பிடிக்கலாம்.

சைவம் அல்லது வைணவம் இரண்டில் ஒன்றுதான் பெரியது என்ற கருத்து  பழமையானது என்று கூற இயலாது. மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புராணங்களிலும் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களைக் காண முடியாது.

இஷ்ட தெய்வமாக ஒருவரை வணங்கினாலும் பிற தெய்வங்களை வெறுக்காமல் வணங்குவதை அவற்றில் பார்க்கிறோம். சைவமும் வைணவமும் பரஸ்பரம் வெறுப்பின்றி வளர்வதற்காக முனிவர் பெருமக்கள் முயற்சித்துப் பல நூல்களைப் படைத்தனர்.

துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்று மூன்று கோட்பாடுகள் உள்ளன. இந்த மும்மதங்களும் சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகிய மூவாரல் தோற்றுவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முன்னரே ‘அபேதம், பேதாபேதம், பேத வாதம்’ என்ற பெயர்களோடு அவை இருந்தன. இந்த மூவருக்குமே வேதங்களும் புராணங்களும்  பிரமாணங்கள். சித்தாந்தம் மட்டுமே மாறுபட்டது. இந்த மூன்றையும் ஆன்மீக சாதனை வரிசையில் அழகான மூன்று தங்குமிடங்களாக அற்புதமாக கருத்தொற்றுமை செய்த மகநீயர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இந்த சித்தாந்தங்களில் காணப்படும் முரண்பாடுகளை பரஸ்பரம் மறுத்தும், விவாதித்தும் பல புத்தகங்களின் சுமை உருவாகியுள்ளது. அவை அறிஞர்களின் வாக்குத் திறமைக்கு  உதவுமே தவிர, சாமானியர்களின் ஆன்மிக சாதனைக்குப் பயனளிக்காது. அவை அவர்களுக்குச் சற்றும் புரியாத வகையில் இருக்கும் கட்டுரைகள்.

முடிந்த முடிவான பரமார்த்தம் அத்வைதமே என்றாலும், நடைமுறையில் துவைதத்தைத்  தவிர்க்க முடியாது. அதனால்தான் நடைமுறையில் கர்மாநுஷ்டானம், உபாசனை, வழிபாடு போன்றவை துவைத நிலையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் அத்வைதத்தை மதிக்கும் சிலர், மனத்தளவில் அத்வைதத்தைக் கடைப்பிடித்து, ‘சோஹம்’ என்ற உணர்வுடன் ஆன்மீக சாதனை செய்ய வேண்டும் என்றும், செயலில் அத்வைதத்தைக் காட்டுவது கூடாதென்றும் கூறுகின்றனர்.

சாத்விக இயல்புள்ளவர், சைவத்திலோ, வைணவத்திலோ இருந்துகொண்டு, தம்  சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தாலும், பிற சம்பிரதயங்களையும் மதித்து நடந்து கொள்வர். அவர்கள் மூலம் ஒரு சமரசச் சூழல் சமுதாயத்தில் ஏற்படும். இந்துக்களில் பலர் அது போல் உள்ளனர். தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகம். ஹரி, ஹர வேறுபாட்டையும் விவாதங்களையும் அங்கு அவ்வளவாகப் பார்க்க முடியாது. மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் மூன்று கோட்பாடுகளின் முக்கிய ஆதரவாளர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

பீடங்களை எடுத்துக் கொண்டால், அங்கும் கணக்கற்ற வேறுபாடுகளும், சர்ச்சைகளும்  உள்ளன. சங்கரரின் காலத்தைக் குறித்து வெவ்வேறு முடிவுகள் காணப்படுகின்றன. ஸ்ரீகோட்ட வேங்கடாசலம் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, காஷ்மீர், நேபாள் அரச வம்சங்களின் வரலாறு, பண்டைய கால கட்டிடங்கள், சாசனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சங்கரரின் காலத்தை நிர்ணயம் செய்தார்கள்.

வெவ்வேறு நூலாசிரியர்கள் எழுதிய சங்கர விஜயங்கள் வேறுபட்ட கால நிர்ணயங்களையும், சம்பவ வேறுபாடுகளையும் கொண்டுள்ளது உண்மைதான் என்றாலும் அவற்றில் சங்கரரின் வரலாறு பற்றியும் பீடங்களை அமைத்தது பற்றியும் வேறுபாடு இல்லாத பொதுவான கருத்தைப் பார்க்க முடிகிறது.

சங்கரர் பீடங்களை நிறுவவில்லை என்ற கூற்று ஆதாரமற்றது. பீடங்களின் அமைப்பை உருவாக்கி தேசத்தின் நாற்புறங்களிலும் ரிஷிகளின் தர்மத்தை முழுமையாக்கிய தவ சக்தி நிறைந்தவர் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர். ஒவ்வொரு பீடத்திற்கும் அதற்கான  பிரமாணங்களும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் அந்தந்த பீடங்களின் சீடர்கள் என்று கூறிக் கொள்ளும் சில பிரிவினர் வேறுபாடுகளை எழுப்பி இடைவெளிகளைத் தோற்றுவித்துச் சண்டை மூட்டும் சூழல் உள்ளது.

அனைத்து சங்கர பீடங்களும் இருமை வாதங்களுக்கு அப்பாற்பட்ட சித்த புருஷர்களைக் கொண்ட, சிறந்த ஆச்சார்ய பரம்பரையோடு கூடியவை. இந்த பீடங்களின் மூலம் சங்கரரின் அத்வைத கோட்பாடு, வேத சாஸ்திர சம்ரக்ஷணம், வேத அறிஞர்களின் பராமரிப்பு, சமுதாய நல அமைப்புகள் போன்றவை பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. சிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட இந்த பண்டைய பீடங்களையும், அவற்றின் நற்செயல்களையும் மதித்து வாதங்களோ, சர்ச்சையோ இன்றி அந்தந்த ஆச்சார்யர்களை வணங்குவது ஆன்மீக சாதனை நோக்கம் கொண்ட தார்மீர்களின் இயல்பு.

இந்து மதத்தைக் கடுமையாகத் தாக்கி அழித்த பிற மதத்தவர், எந்த வித்தியாசமும் இன்றி ஹிந்து தர்மத்தைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றாகப் பார்த்தார்கள். ஆனால் ஹிந்துக்களான நாமோ நமக்குள் வேறுபாடுகளை வளர்த்துக் கொள்கிறோம். நாம் வேறுபாடுகளைக் களைந்து ஒருமைப்பாட்டை சாதிக்கா விட்டால் நம் அழிவுக்கு பிறருக்கு வாய்ப்பளித்தது போலாகிவிடும்.

இத்தனை முரண்பாடுகளும், பன்முகத்தன்மையும் கொண்ட ஹிந்து தர்மத்தை, இத்தகைய சர்ச்சைகளின் பின்னணியில் எவ்வாறு புரிந்து கொள்வது? எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

உண்மையில் சுருதி, ஸ்ம்ருதி, புராணங்களில் இருக்கும் ஒருமைப்பாட்டை உணர வேண்டும். அவற்றில் தெளிவான சமரசமும், ஒருங்கிணைப்பும் உள்ளன.

எல்லா சம்பிரதாயங்களிலும் மகா புருஷர்கள், சித்தர்கள், யோகிகள் உள்ளனர். இவை அனைத்தையும் கவனித்து, ‘அநேகம் இணைந்த ஏகமாக’ ஹிந்து மதத்தை தரிசிப்பதே கடமை.

அவரவர் மரபுகளும், நூல்களும் அவரவருக்கு அடிப்படைச் சான்றுகளாக உள்ளன. ஒருவர் இன்னொருவரைக் குறைகூறுவதும், ஏளனம் செய்வதும், இழிவுபடுத்துவதும் தவறு.

யார் எத்தனை கடினமாக முயன்றாலும், பன்முகத்தன்மை கொண்ட வழிகள் இருப்பதை யாராலும் அகற்ற முடியாது. தம் மார்க்கத்தை மட்டுமே நிலைநிறுத்த இயலாது.

வாதங்களிலும் சச்சரவுகளிலும் வாழ்நாளை வீணடிக்காமல், கபடமின்றி, பக்தியோடு தம் தெய்வத்தையே அனைத்திலும் தரிசித்து, உத்தம சாதகர்கள் பரமார்த்தத்தைப் பெற முடியும். வாதங்களை விட ஆன்மீக சாதனைகள் உயர்ந்தவை.

(தலையங்கம், ருஷிபீடம், மார்ச் 2026)

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

pm modi speech about operation sindoor - 2026

— பேராசிரியை லாரன் தகன் ஆமோஸ்
– தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் –

1950 ல் இஸ்ரேலிய பிரதமர் பென் குரியன் அப்போதைய இந்திய ராஜ்ஜிய நடவடிக்கைகளுக்கு அப்பால் நெடுநோக்குடன் இந்தியாவை பார்த்தார். இந்தியா எதிர்காலத்தில் ஒரு மகத்தான சக்தியாக உருவெடுக்கும். இன்று தூங்கிக் கொண்டிருக்கும் அது ஒரு நாள் விழித்தெழும். அப்போது புதிய சர்வதேச சட்டங்களும் முறைமைகளும் உருவாகும். அவ்வாறு இந்தியா விழித்தெழும்போது இஸ்ரேல் ஏற்கெனவே இந்தியாவின் முன்பு அங்கீகாரம் பெற்றதாக, புரிந்து கொள்ளப்பட்டதாக தன்னை முன்னிறுத்த வேண்டும் என அவர் விரும்பினார்.

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தனது வரலாற்று பூர்வமான நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக ஒரு கதவை திறப்பதாக அது அமைந்தது. 1950ல் திறந்த அந்த கதவு 1992 வரையிலும் நீண்ட தாழ்வாரத்துக்கு வழிவிட்டது. பின்பு, 2017-ல் உறுதியான தளமிடப்பட்ட அது 2026 ல் பாதை திரும்பி, வளைந்து செல்வதாக உள்ளது.

1992ல் இந்தியா – இஸ்ரேல் இடையே முழுமையான ராஜ்ஜிய உறவுகள் நிலை பெற்றன. 2017ல் மோடி, முதன் முதலில், அதுவரை மூடிய கதவுக்குள் இருந்த உறவை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். ‘நிலைத்த உறவாக’ இருந்ததை 2026ல் உறுதியான லாபத்தை தரக்கூடிய முதலீடாக மாற்ற முயல்கிறார்.

இதுதான் அவரது சமீபத்திய இஸ்ரேல் விஜயத்தின் ஆழ்ந்த பொருள். இதுவரை தளவாடங்களை வாங்கும் உறவாக இருந்த நிலை மாறி, இனி அவ்வாறு இல்லாமல் வளர்ச்சி, உற்பத்தி, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு என்று கூட்டாளியாக மாறக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவதாக அமைந்துள்ளது. இந்த மேம்பட்ட உறவு, விரிவான தளத்தில் ஏற்பட்டுள்ள புரிதல், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறை சார்ந்த ஒப்பந்த ஆவணங்களில், அதிகார பூர்வ மொழியில், வெளிப்பட்டுள்ளது.

இந்த கோணத்தை இஸ்ரேலியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா இஸ்ரேல் மீது ‘காதலில் விழுந்து விடவில்லை’. அதுவொரு வலிமையான கருவியை வளர்த்தெடுக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை பல்முனை அச்சுறுத்தலை (பாகிஸ்தான், சீனா, பயங்கரவாதம்) சந்தித்து வருகிறது. தேசம் இதை உறுதியாக எதிர்கொள்ள தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், உள்நாட்டில் உற்பத்தி, உளவு நுண்ணறிவு, சரியான தற்காப்பு என ஒருங்கே திரட்டி வருகிறது என்பதே அண்மைய பாடமாக உள்ளது.

அதனால்தான் மோடியும் அவரை சூழ்ந்து இருப்பவர்களும் ‘தளவாடங்களை’ வாங்குவது என்ற நிலையில் இருந்து போர்க் கருவிகளின் உற்பத்தி, உற்பத்தியை நிலைநிறுத்தல், மேம்படுத்துதல் என்று பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட கூட்டாளி என்ற நிலையை நோக்கி நகர்கிறார்கள். இந்த விஜயத்தின் போது பொதுவெளியில் சொல்லப்பட்ட பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, புதிய கண்டுபிடிப்புகள், சைபர் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒத்துழைப்பு என்ற வார்த்தைகளுக்கு பின்னணியில் இருப்பது மேற்சொன்ன விஷயம்தான்.

இதன் பிறகு தான் இஸ்ரேலியர்களுக்கு ஏமாற்றம் தரும் முரண்பாடு போல தெரியும் உண்மை வருகிறது. பாதுகாப்புத் துறையில் இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா அதே வேளையில் இஸ்ரேலுக்கு எதிராக ஐநா.,வில் ஓட்டளிப்பதும், சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளில் கண்டனம் செய்யும் அறிக்கைகளை ஆதரிப்பதும் ஏன்? என்று அவர்கள் மனதில் வினா எழுகிறது. இது கபடத்தனம் அல்ல, மாறாக இந்திய பாணியிலான சொற்சீர் பிரிப்பு என்பதுதான் பதில்.

இந்தியா பல தசாப்தங்களாக அணிந்து வந்த ‘பாலஸ்தீனிய முட்டாக்கு’ இஸ்ரேலுடன் வெளிப்படையான, முழுமையான உறவை மேற்கொள்ள முடியாதபடி தடுத்து வந்தது. இப்போதும் அந்தக் கொள்கை முட்டாக்கு முழுமையாக விலகவில்லை. இந்தியா தொடர்ந்து இரு-தேசம் என்ற தீர்வை முன்னிறுத்தி வருகிறது. 2026 பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பாக பார்த்தோமானால் அவரது வருகைக்கு ஒரு வாரம் முன்பு மேற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்குவதாகக் கூறி அதை கண்டனம் செய்யும் ஐநா., அறிக்கையை இந்தியா ஆதரித்தது.

இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கொள்கை உரையாடல் என்பதை ‘சித்தரிப்பு உரையாடல்’ என்ற சொல்லால் பதிலீடு செய்ய வேண்டும். இந்தியா தனது மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் இயங்கு முறையை மாற்றிக் கொண்டுள்ளது.

இஸ்ரேலை ‘பாலஸ்தீனியர்’களுடன் வலுக்கட்டாயமாக பிணைத்துப் பார்க்கும் நிலைப்பாட்டை இரு நாடுகளிடையான உறவுகள் விஷயத்தில் பிரித்துப் பார்க்கிறது இந்தியா. சர்வதேச அரங்கில் தெற்குலகின் குரலாக, சர்வதேச மனசாட்சியின் குரலாக எதிரொலிக்கிறது. இதன் மூலம் அரபு நாடுகள், முஸ்லிம்கள் மூலம் ஏற்படும் அரசியல் பாதிப்புகளை குறைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், அதற்கு இணையாக, ‘ஐநா., வளையத்துக்கு அடியில்’ இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறது. பாதுகாப்பு, தொழில்நுட்பம், தொழில் துறை, புதிய கண்டுபிடிப்புகள் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சொல்லாடல் அது.

இது அயலுறவில் மட்டும் அல்ல. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சிக்கலானது. அங்கு முஸ்லிம் மக்கள்தொகை அதிகம். ‘குறிப்பிட்ட ஒரு முகாமைச்’ சார்ந்தவர் என்று இல்லாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைவர் என்பதற்கு அங்கு கடுமையான போட்டி உள்ளது. வேறு விதமாக சொல்வதானால், வேற்றுமைகளை உள்ளிழுத்து தன்வயமாக்கிக் கொள்ளும் தன்மையை இந்தியா உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

அது இஸ்ரேலிடம் இப்படி சொல்லக்கூடும்: பயங்கரவாதத்திற்கு எதிராக, அந்த எதிர்ப்பை கூர்மைப்படுத்துவதில் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். அதே மூச்சில், சர்வதேச சமுதாயத்திடம்: ஒருதலை பட்சமாக எல்லையை விரிவாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்லும். இது இரு தரப்பையும் மென்மைப்படுத்தும் நிலைப்பாடு அல்ல. மாறாக இன்னல்களை தவிர்க்கும் நிர்வாகவியல்.

இஸ்ரேல் தன் தரப்பிலிருந்து எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ‘எல்லா சூழ்நிலையிலும் ஆதரிப்பதை’ எதிர்பார்க்கும் இஸ்ரேலியர்கள் வருத்தமடையக் கூடும். மாறாக இந்தியா என்னும் வலிமையான சக்தி தன் செயல் அரங்குகளை பல்வேறாகப் பிரித்து, தன்னுடைய நலனை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று பார்ப்பவர்கள் இதை நல்வாய்ப்பாகக் கருதுவார்கள். நல்ல வாடிக்கையாளர் என்ற நிலையிலிருந்து உற்பத்தி – தொழில்நுட்ப துறையில் கூட்டாளி என்ற நிலைக்கு மாறுவது நல்லதொரு வாய்ப்பு. ஏனெனில் இஸ்ரேல் அந்த துறையில் வலிமையாக இருக்கிறது.

பல்லடுக்கு வான் பாதுகாப்பு, டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் போர்த் திறன், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நுண்ணறிவு, சைபர் நுண்ணறிவு , சமூக கண்டுபிடிப்புகளை பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவது போன்ற விஷயங்களில் இந்தியா ‘பசி’யோடு இருக்கிறது. சமீபத்திய விஜயம் இதைதான் சொல்லுகிறது. சம்பந்தமே இல்லாத தனித்தனியான நடவடிக்கைகளை அல்ல, ஆழமான ஒத்துழைப்புக்கான எல்லைகளை விரிவாக்குகிறது.

இங்குதான் 1950- 2026 வட்டம் முழுமை பெறுகிறது. இங்குதான் பென் குரியனின் புரிதல் வெளிப்படுகிறது. எதிர்கால சக்திகளுடன் முன்னமே தொடர்பில் இருப்பவர்களுக்கு காலம் உதவி செய்யும் என்று அவர் கூறுவார். மோடி அந்தக் கூற்றை மெய்ப்பிக்கிறார். இஸ்ரேல் மீதுள்ள காதலால் அல்ல, இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அது இந்தியாவை மேலும் பன்மடங்கு வலிமையுள்ளதாக்கும் என்ற யுக்தியினால்.

இஸ்ரேலும் தன் பங்கிற்கு எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் இந்த வரைபடத்தை படிக்க வேண்டும். இரண்டு தேசம் என்ற கருத்தை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும். ஐநா மூலமாக இந்தியா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் நமக்கு உவப்பாக இருக்காது. ஆனால் நாம் சரியான முறையில் பேசினால் , தொழில்துறையில் தொழில்நுட்பத் துறையில் வலிமை என்ற மொழியில் பேசினால் , அரசியல் ரீதியான அழுத்தங்களை மீறி ஒத்துழைப்பை ஆழப்படுத்தலாம். கூட்டாளியை காணலாம்.

2026 விஜயத்தை இஸ்ரேல் இந்த தருணத்தின் உச்சமாக மட்டுமே கருதாமல் நிரந்தரமான மாற்றத்திற்கு வித்திட நினைத்தால் அது இந்தியாவில் திட்டங்களை நிறைவேற்றுவதுடன் நின்று விடக்கூடாது. மாறாக நிலைத்த ஒத்துழைப்புக்கான செயல்முறைகளை, கட்டமைப்புகளை , கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். புதுதில்லி தன் மக்களுக்கு, நாம் ‘பக்க சாய்வு’ இல்லாமலே இவ்வளவு விஷயங்களை பெற்றிருக்கிறோம், சாதித்து இருக்கிறோம் என்று வெளிப்படையாக காட்டும்படியாக அவை அமைய வேண்டும்.

இது சமரசம் அல்ல. தனக்கேவுரிய வகையில் உலக கட்டமைப்பை மாற்றி அமைக்கும் வலிமையான சக்தியுடன் நாம் உறவாடுவதற்கான ஒரே வழி.

நன்றி: கார்டியன் நாளேடு


கட்டுரையாளர் இஸ்ரேலில் ரமத்கானில் உள்ள பார் – இலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார்.


பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

1001291839 - 2026

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று மாசி பூரம் பொங்கல் பெருவிழாவில் திருவனந்தபுரத்தில் மாநகர் முழுவதும் பல லட்சம் பெண்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்தினர்.

திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபடும் இந்த விழா பார்க்க மிக அற்புதமான இந்து கலாச்சாரம் நிகழ்ந்த விழாவாக அமைந்தது.இதற்காக திங்கட்கிழமை மாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்தனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டதாக கூறப்படுகிறது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பொங்காலை வழிபாடு நடப்பது வழக்கம். பொங்காலை வழிபாட்டின்போது பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் பெண்களின் சபரிமலை என ஆற்றுகால் கோயில் அழைக்கப்படுகிறது.

தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி இத்திருத்தலத்தில் பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார். மதுரை சென்ற கோவலன் மகாராணியின் கால் சிலம்பை திருடிவிட்டதாக தவறாக குற்றம்சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். கணவனுக்கு நேர்ந்த அநீதியை கண்டு கோபத்தால் கொந்தளித்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு தனது ஒற்றைக்கால் சிலம்புடன் அரண்மனை சென்றார். அங்கு தன் கணவன் கோவலன் கள்வன் அல்ல என உணர்த்த தனது கால் சிலம்பை வீசி எறிந்தார். அநீதி இழைத்து விட்டோமே என உணர்ந்த பாண்டிய மன்னன் மரணமடைந்தார்.அதைத்தொடர்ந்து மகாராணி மரணம் அடைந்தார். சினம் தணியாத கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிவிட்டு கோபாவேசத்துடன் தெற்கு நோக்கி சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார். அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வம் என்பதை அறிந்து அவரை ஆற்றுபடுத்தி அங்கேயே குடியமர்த்தினர்


ஆற்றங்கரையில் அமைந்த கண்ணகி தேவியை ஆற்றுகால் பகவதி அம்மனாக மக்கள் வழிபடத்தொடங்கினர். ஆற்றுகால் பகவதி அம்மன் சாந்த சொரூபியாக, பெண்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். ஆற்றுகால் தேவிக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பூரம் நாளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டுவருகின்றனர். ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருந்திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்வுடன் தொடங்கியது. கண்ணகி தேவியின் வரலாற்றை தோற்றம் பாட்டாக தினமும் பாடுவது இந்த விழாவின் முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது.

தினமும் அதிகாலை 4.30 மணி தொடங்கி மதியம் 1-மணிவரையும், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி வரையும் சிறப்பு பூஜைகள், களபாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

பொங்காலை விழாவுக்காக திருவனந்தபுரம் நகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்த மேயர் வி.வி.ராஜேஷ்
9-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்தல், 5 மணி நிர்மால்ய தரிசனம், 5.30 மணி அபிஷேகம், 6.05 மணி தீபாராதனை, 6.40 மணிக்கு உஷபூஜை, தீபாராதனை, 8.30 மணி பந்தீரடி, தீபாராதனை, 9.15 மணிக்கு சுத்த புண்யாகம், காலை 9.45 மணிக்கு அடுப்பு வெட்டி பண்டார அடுப்பில் அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி கோவில் மேல்சாந்தி தலைமையில் நடந்தது. பின்னர் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட துவங்கி அம்மனை வழிபடுகின்றனர். ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்காலையிடுவதற்காக பெண்கள் விரதமிருந்து வருவது வழக்கம். கோயில் வளாகம் மட்டும் அல்லாது திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபட்டனர். அதற்காக அதிகாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து பொங்கல் இட தயாராகினர்.இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் கண்டதாக கூறப்படுகிறது.பொங்கால் மஹோத்ஸவம் நடைபெறும்போது கண்ணகி தேவி பாண்டிய மன்னனை வதம் செய்யும் நிகழ்வு தோற்றம் பாடலாக பாடப்படுகிறது.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
மதியம் 2.15 மணிக்கு உச்ச பூஜை, பொங்காலை நைவேத்யம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பொங்கலிட்டபின் நைவேத்யம் அம்மனுக்கு சமர்ப்பிக்கும் விதமாக கோயிலில் இருந்து புனிதநீர் பொங்காலை பானைகள் மீது தெளிக்கப்படும். இதற்காக 350 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 3.10 மணி முதல் இரவு 7 மணிவரை சந்திரகிரகணம் என்பதால் கோயில் திருநடை அடைக்கப்பட்டிருக்கும். இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும். 7.30 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு குத்தியோட்டம், சூரல்குத்து நடைபெறுகிறது. இரவு 10.45 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடக்கிறது.நாளை புதன்கிழமை இரவு திருவிழா நிறைவடைகிறது.

சந்திர கிரகணம்; திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு!

thiruparankundram murugan temple - 2026

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு!

2026-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை நிகழ உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகள் செய்யப்பட உள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், கிரகண காலத்தை முன்னிட்டு இன்று காலை 8:20 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

இன்று காலை 8:20 மணி முதல். கிரகணம் முடிந்து சுத்திகரிப்பு பூஜைகள் முடிவடைந்த பின், இன்று இரவு 7:30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெறும். அதன் பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று நிகழும் இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி, மாலை 6:48 மணிக்கு நிறைவடைகிறது. கிரகண காலத்தில் கோவில்களில் பூஜைகள் தவிர்க்கப்படுவது வழக்கமான நடைமுறை என்பதால்,
இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களிலும் இன்று காலை முதல் நடை சாத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை காலை முதல் வழக்கம் போல் அனைத்து கால பூஜைகளும், தரிசனமும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஜக., அரசு அமைந்ததும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்; மம்தாவின் குண்டர்களுக்கு சிறை: அமித் ஷா

amitsha in kolkatta meeting - 2026

வங்காளத்தை ஊடுருவல்காரர்களின் புகலிடமாக மாற்றிய மம்தா பானர்ஜி அரசு, பதவியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெற்கு 24 பர்கானாஸில் “பரிவர்த்தன் யாத்திரை” தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக., ஆட்சிக்கு வந்ததும், ஊடுருவல்காரர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம் என்று அமித் ஷா சூளுரைத்தார். 

பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரைக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவு, வங்காளம் மாற்றத்திற்குத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஊடுருவல் மற்றும் ஊழலை தனது கொள்கையாகக் கொண்டு, வேலைவாய்ப்பைப் பறித்து, இளைஞர்களின் உரிமைகளை மீறுவதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று குறிப்பிட்டு, தெற்கு 24 பர்கானாக்களில் இருந்து ‘பரிவர்த்தன் யாத்திரை’யைத் தொடங்கி வைத்து உரையாற்றினார் அமித் ஷா.  

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக., கடுமையாக வேலை செய்து வருகிறது. மேற்கு வங்கத்துக்கு, தமிழகத்துடன் சேர்த்து விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும், எதிர்க்கட்சியான பாஜக., இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக.,வின் ‘பரிவர்த்தன் யாத்திரை’ நிகழ்ச்சியில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  பங்கேற்றுப் பேசினார். அவரது உரையில் இருந்து…

மேற்கு வங்கம் வங்கதேச எல்லையில் உள்ள ஒரு மாநிலம். அதன் பாதுகாப்பை ஆளும் திரிணமுல் காங்கிரசால் உறுதி செய்ய முடியவில்லை. மாநிலத்தை ஊடுருவல்காரர்களின் சொர்க்கமாக அக்கட்சி மாற்றி விட்டது. சட்ட விரோத குடியேற்றத்தை ஆதரிக்கும் அக்கட்சியால், மாநிலத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. பாஜக.,வால் மட்டுமே மேற்கு வங்கம் போன்ற எல்லையோர மாநிலத்துக்கு பாதுகாப்பை வழங்க முடியும்.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின், பட்டியலில் இருந்து மட்டுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கே முதல்வர் மம்தா பானர்ஜி பதற்றமடைகிறார். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக., ஆட்சிக்கு வந்தவுடன், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் கண்டறிந்து உடனடியாக வெளியேற்றுவோம்; ஊழலையும் ஒழிப்போம். இது, பா.ஜ.வின் வாக்குறுதி. வங்காளத்தில் பாஜக அரசு அமைந்தவுடன், மம்தா பானர்ஜியின் குண்டர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

தேர்தலில் திரிணமுல் காங்கிரசை வெற்றி பெறச் செய்யக் கூடாது. இந்தத் தேர்தலில் திரிணமுல் காங்கிரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். பாஜக.,வை அரியணையில் அமர வைக்க வேண்டும். 

பட்ஜெட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ₹80 கோடியும் மதரஸாக்களுக்கு ₹5700 கோடியும் ஒதுக்கியதன் மூலம் மம்தா அரசு அனைத்து திருப்திப்படுத்தும் வரம்புகளையும் தாண்டிவிட்டது.

ஆர்.ஜி. வரிகளாக இருந்தாலும் சரி, சந்தேஷ்காலியாக இருந்தாலும் சரி, மம்தா அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர்.

மம்தாவின் அரசாங்கம் CAA-வை எதிர்த்தது, ஆனால் மோடிஜியின் அரசாங்கம் மத்தியில் உள்ளது. ஒரு இந்து அகதியின் குடியுரிமையை கூட யாராலும் பறிக்க முடியாது. வங்காளத்தில் பாஜக.,வின் பரிவர்த்தன் யாத்திரையின் நோக்கம், மாநிலத்தை ஊடுருவல், ஊழல் மற்றும் சிண்டிகேட் ஆட்சியிலிருந்து விடுவிப்பதாகும்.

பாஜக., அரசு அமைந்தவுடன், வங்காளத்தில் காலியாக உள்ள அனைத்து அரசுப் பதவிகளும் டிசம்பர் 2026க்குள் நிரப்பப்படும்; இதனுடன், வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்படும். மம்தா அரசாங்கம் அரசு ஊழியர்களை ஆறாவது சம்பளக் குழுவில் சிக்க வைத்துள்ளது, மேலும் பாஜக அரசாங்கம் அமைந்தவுடன் 45 நாட்களுக்குள் ஏழாவது சம்பளக் குழு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
சூப்பர் 8 ஆட்டங்கள் 02.03.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          27.02.2026 அன்று கொழும்புவில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி (19.3 ஓவர்களில் 161/6) நியூசிலாந்து அணியை (20 ஓவர்களில் 159/7) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 28.02.2026 அன்று பல்லேகலேயில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (20 ஓவர்களில் 212/8) இலங்கை அணியை (20 ஓவர்களில் 207/6) 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருந்தபோதிலும் குறைந்த ரன் ரேட் காரணமாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. குரூப் 2வில் இருந்து இங்கிலாந்து (முதலிடம்), நியூசிலாந்து (இரண்டாமிடம்) ஆகிய இரண்டு அணிகளும் தேர்வாயின. இலங்கை அணி தேர்வாகாததால் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும்.

          நேற்று (01.03.2026) டெல்லியில் நடைபெற்ற ஜிம்பாபே, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தெனாப்பிரிக்க அணி (17.5 ஓவர்களில் 154/5) ஜிம்பாபே அணியை (20 ஓவர்களில் 153/7) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்று, குரூப் 1 பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துகொண்டது.

          நேற்று கொல்கொத்தா ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த மற்றொரு சூப்பர் 8 ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. பூவாதலையா வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதனால் முதலில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் (33 பந்துகளில் 32 ரன்) மாற்றும் ரோஸ்டன் சேஸ் (25 பந்துகளில் 40 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் வந்த வீரர்களான ஷிம்ரொன் ஹெட்மயர் (12 பந்துகளில் 27 ரன்), ரூதர்போர்ட் (9 பந்துகளில் 14 ரன்), ரொவ்மென் போவெல் (19 பந்துகளில் 34 ரன்) ஜேசன் ஹோல்டர் (22 பந்துகளில் 37 ரன்) எடுத்தனர். 12ஆவது ஓவரை வீசிய பும்ரா ஹெட்மயர், சேஸ் ஆகிய இருவரின் விக்கட்டுகளை எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மே.இ. தீவுகள் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக விளையாட வந்த இந்திய அணியின் வீரர்கள் நிலைத்து ஆடவில்லை, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (11 பந்துகளில் 10 ரன்), இஷான் கிஷன் (6 பந்துகளில் 10 ரன்), சூர்யகுமார் யாதவ் (16 பந்துகளில் 18 ரன்) ஆகியோர் விரைவாக ரன் சேர்க்கவேண்டும் என்ற துடிப்பில் விக்கட்டுகளை இழந்து வெளியேறினர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் (50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன், 12 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருக்கு திலக் வர்மா (15 பந்துகளில் 27 ரன்), ஹார்திக் பாண்ட்யா (14 பந்துகளில் 17 ரன்), ஷிவம் துபே (4 பந்துகளில் 8 ரன்) ஆகியோர் நல்ல கம்பனி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 199 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

          சஞ்சு சாம்சனின் இன்றைய ஆட்டம் இந்திய வீரர்கள் எப்படி ஆடவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. 18ஆவது ஓவரில் ஷிவம்துபே அடித்த இரண்டு ஃபோர்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தது. மே.இ. தீவுகள் அணி விளையாடிய போது பும்ரா எடுத்த இரண்டு விக்கட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆயினும் ஒரு அணியாக இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. அர்ஷதீப்பின் ஒரு ஓவரில் 24 ரன் கொடுத்தது இந்திய அணிக்கு கடினமான இலக்கைத் தந்தது. பிடிக்காமல் விட்ட கேட்சுகள் இந்திய அணிக்குப் பாதகமாக அமைந்தன.

          சூப்பர் 8இல் குரூப் 1இல் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தையும் இந்திய அணி இரண்டாமிடத்தையும் பெற்றன. அரையிறுதி ஆட்டங்கள் 4 மற்றும் ஐந்து தேதிகளில் நடைபெற உள்ளன.

முதல் அரையிறுதிப் போட்டி கொல்கொத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 4ஆம் தேதி இரவு 0700 மணிக்கு நடைபெறும்.

இரண்டாவது அரையிறுதி ஆட்டம் 5ஆம் தேதி இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும்.  

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

sengottai thiruvilakku poojai - 2026

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் காலை 8மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாய் கிளினிக் சித்தமருத்துவா் கலா ஏற்பாட்டில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. அதனை தொடா்ந்து ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது.

பின்னா் திருவாசகி சிவபகவதி தலைமையில் குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 6மணிக்கு உலக நன்மை வேண்டி மாபெரும் திருவிளக்கு வழிபாடு நடந்தது. முதல் திருவிளக்கினை சித்த மருத்துவா் டாக்டர் சிந்து (எம்டிஎஸ்) .ஏற்றி துவக்கி வைத்தார்.

திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியை முத்துலெட்சுமி, ஸ்ரீதேவி, புனிதா, பழனியம்மாள் பேச்சியம்மாள், போட்டோகிரியேட்டர்தேவி, உஷா ஆகியோர் நடந்தினா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் தங்கையா, இராம்நாத், ஆடிட்டர் சங்கர், கோபாலகிருஷ்ணன், ராஜகோபால், குருவூர்கண்ணன், வீரபுத்திரன், கணேசன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.

திருவிளக்கு வழிபாட்டில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

pm modi in madurai meet - 2026

மதுரை விமான நிலைய வளாகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய பேச்சு விவரம்:

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

விழாவில், பிரதமர் ரூபாய் 4 ஆயிரத்து,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை விமான நிலைய வளாகத்திற்குள் அமைக்கப் பட்டுள்ள அரசு நிகழ்ச்சி மேடைக்கு வந்தடைந்து ரூ.4,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

பின்பு, தேசிய நெடுஞ்சாலை-332A-வில் மரக்காணம்-புதுச்சேரி பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை-87-ல் பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்து, சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் 4-வது பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளே வணக்கம் என் சகோதர சகோதரிகளே வணக்கம் புனித மதுரை மாநகரான இந்த பழமையான நகரில் வருவதை நான் பெரும் கௌரவமாக உணர்கின்றேன் மீனாட்சி அம்மைக்கும் நான் தலை வணங்குகிறேன் தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தின் பெருமிதமான அத்தியாயம் இன்று நாம் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மேற்பட்ட சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணம் செய்திருக்கின்றோம் .

இந்த திட்டங்கள் மாற்றி அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தி பல லட்சம் மக்களின் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய வகையிலே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் சந்தைகளை சென்றடைய விவசாயிகளுக்கு மேம்பட்ட சாலைகள் சுற்றுலா பயணிகளும் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கும் சுலபமான பயணம் வர்த்தகத்துக்கு உகந்த வேகமான போக்குவரத்து அந்த வகையில் உயர்தர கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது மக்களுக்கு அதிகார பங்களிப்பை அமைத்து தருவது என்று பொருள்.

நண்பர்களே கடந்த 12 ஆண்டுகளாகவே இந்திய அரசாங்கம் தமிழ்நாட்டை நெடுஞ்சாலை வலை பின்னலில் மகத்தான முதலீடுகளை செய்து வந்திருக்கின்றது.

2014 ஆம் ஆண்டு முதல் 4000 கிலோமீட்டர் அதிகமான அளவில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன இரண்டு பெரும் இன்று திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதிலேயே நான் தேர்வு வகை அடைகின்றேன்.

முதலாவதாக மரக்காணம் புதுச்சேரி பிரிவிலே 2100 கோடி ரூபாய் முதலீட்டில் நான்கு வழி சாலை திட்டம் இது தமிழ்நாடு புதுச்சேரியின் கரைப்பகுதியில் சுற்றுலாத்துறை வர்த்தகம் பொருளாதாரத்தை பலப்படுத்தும் அடுத்ததாக பரமக்குடி ராமநாதபுரம் பாதையை நான்கு வழி பாதையாக மாற்றுதல் இந்த திட்டத்தில் நாங்கள் 1800 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கின்றோம்.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி ஆகிய இடங்களை சென்றடைவதை கணிசமாக இது மேம்படுத்துகின்றது. மேலும் , இதனால் புனித பயணம் மேற்கொள்வோருக்கு மற்றும் கடல் சார் பொருட்களின் போக்குவரத்தையும் இது மேம்படுத்தும்
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை சரித்திரபூர்வமான ஒரு மாற்றத்தை சந்தித்திருக்கின்றது இது நவீன வசதிகளை.திறந்து மக்கள் சார்ந்த போக்குவரத்து முறையாக உருமாறி இருக்கின்றது.

எங்கள் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்திருக்கின்றது 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரையிலான வருடாந்திர ரயில்வே நிதி ஒதுக்கீடு வெறும் 880 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது 2026 27 ஆம் ஆண்டிலேயே 1300 கிலோமீட்டர் அதிகமான புதிய ரயில் தடங்கள் போடப்பட்டிருக்கின்றன 97 சதவிகிதம் மின்மயமாக்கல் எட்டப்பட்டு இருக்கின்றது பாதுகாப்பு மற்றும் செயல் திறனை அதிகரிக்கும் வகையிலே நூற்றுக்கணக்கான மேம்பாலங்களும் சுரங்க பாதைகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன .

கடந்த ஆண்டுதான் தமிழ்நாட்டிலே புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் நற்பெயர் எனக்கு கிடைத்தது அருமை சொந்தங்களே இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலம் என்ற வகையிலே பொறியியல் சிறப்புத் தன்மைக்கு இது ஒரு அடையாளம் இந்த பாலம் மட்டுமே கூட தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளில் பயணிகளை பெரிய அளவில் இருக்கும் விஷயமாக இருக்கின்றது.

ஒன்பது வந்தே பாரத் 9 அம்ருத் பாரத ரயில்களும் தமிழ்நாடு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது அதிவேக விரைவு வண்டிக்காண ரயில் பெட்டிகளை சென்னையில் இருக்கும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் தயாரிக்கின்றது.

மேக் இன் இந்தியா இந்தியாவில் தயாரிக்கும் நம்முடைய தொலைநோக்கு திட்டம்
நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் அம்ருத் வாரத்தின் நிலை திட்டத்தின் படி 77 ரயில் நிலையங்களில் நவீன பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நிலையங்கள் சவுரியம் அனுவல் தன்மை மற்றும் உள்ளூர் அடையாளத்தை ஒன்றிணைகின்றது தமிழ்நாடு எங்கிலும் நாம் 8 பரிணமிக்கப்பட்ட ரயில் நிலையங்களை தொடங்கி வைத்திருக்கின்றோம். சென்னை கடற்கரை சென்னை எழும்பூர் நான்காவது தடம் காரணமாக சென்னையின் தின சரி பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஆதரவாக இருக்கும்.

கும்பகோணம் வேர்காடு, வேலூர் ஆகிய இடங்களில் ஆகாச வாணியின் புதிய பண்பலை அஞ்சல் நிலையங்கள் தொடங்கி வைப்பதில் நான் வெறும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வானொலி அஞ்சல் நிலையங்கள் இன்று முதல் உங்கள் சேவையில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாடு உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிட்டு பார்க்கயில் மூன்று மடங்கு அதிகமாய் இருக்கின்றது .

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமானது தமிழ்நாட்டின் மீது தனது பலமான கவனத்தை செலுத்துவதன் வாயிலாக இந்த போக்கினை தொடர்கிறது இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெங்களூரு சென்னை மற்றும் சென்னை ஹைதராபாத் காண புல்லட் ரயில் இடைவெளிகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம் இவை இந்த பகுதியில் பொருளாதாரம் முழுவதையும் புரட்சிகரமானதாக மாற்றும் அரிய வகை கனிம வளம் கொண்ட இடைவெளிகளில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டினை இந்த வரவு செலவுத் திட்டம் அறிக்கை நிலைநிறுத்துகின்றது .

அரிய வகை கனிம வளங்கள், உயர்தர தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்றத்தை மேம்படுத்துகின்றது.

வளமான வரலாறு மற்றும் மரபுக்குச் சொந்தமான மாநிலம் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகளாவிய மரபுச்சார்பிடங்களாக மேம்படுத்தப்படும்.

புலிகாட்டி ஏரி பொதிகை மலை போன்ற இடங்களை சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா முன்னெடுப்புகள் புதிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் அதே வேளையில் இயற்கையான சூழல் அமைப்புகளை பாதுகாப்போம்.

தேசம் எங்கிலும் சுமார் 200 தொழில் துறை தொகுப்புகள் இடம் காணப்பட்டு தயாரிப்பினை ஊக்கப்படுத்தும் வகையிலே ஆதரிக்கப்படும் தமிழ்நாட்டிலே பல தொழிற்சாலைகள் இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
ஆகையால், இந்த திட்டம் இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு உயர உதவியாக இருக்கும்.

2047 ஆம் ஆண்டிற்கு உள்ளாக வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வினால் ஒவ்வொரு இந்தியரும் ஒன்று பட்டு தேசத்தின் எதிர்காலத்தை வழிபடுவது தமிழ்நாடு தனது தீர்மானமான பங்கினை கண்டிப்பாக மாற்றும் நம் அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அளிப்பதிலும் மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதிலும் மத்திய அரசு முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது நன்றி – என பிரதமர் மோடி விழா மேடையில் பேசினர்.