Home Blog Page 6

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

1001382561 - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திமுக வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது காவல்துறை.போலீஸ் விசாரணையில் வேட்பாளர் மருமகள் தனது கள்ளக்காதலனுடன் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்.இவர் கடந்த 14ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம கும்பல் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாத்தூர் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ (40) என்ற நபர் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோ மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

சரணடைந்த ஆரோக்கிய ஜான் போஸ்கோவை சாத்தூர் நகர் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி காவல்துறையினரை தலைகிறங்க வைத்துள்ளது.

விசாரணையில் திமுக வேட்பாளர் கடற்கரைராஜின் மூத்த மகனான வினோத் குமாருக்கும் அவரது மனைவி அபிநயாவுக்கும் (30) கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிநயா தனது தோழி பவானியின் கணவரான சுரேஷ் குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருவதாக தெரிகிறது.

இதனிடையே அபிநயா திருமணத்தின் போது சீர்வரிசையாக கொண்டு வந்த 35 சவரன் நகையை வேட்பாளர் கடற்கரை ராஜ் திருப்பி தர மறுத்ததால் அபிநயா, சுரேஷ்குமார் அவரது மனைவி பவானி (30)
ஆகிய 3 பேரும் ஆளில்லாத நேரத்தில் கடற்கரைராஜ் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு கூலிக்காக ஆரோக்கிய ஜான் போஸ்கோ உள்ளிட்ட 3 பேரை அழைத்து கொள்ளையில் ஈடுபட வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து தற்போது திமுக வேட்பாளர் கடற்கரைராஜின் மருமகள் அபிநயா 30, சுரேஷ்குமார் 31,அவரது மனைவி பவானி 30, ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட வேட்பாளரின் மருமகள் அபிநயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது சுரேஷ்குமார் என்பவருடன் வாழ்ந்து வருவதாகவும் திருமணத்தின் போது தான் கொண்டு வந்த நகைகளை கணவர் வீட்டார் தர மறுத்ததாகவும் ஆதனால் திமுக வேட்பாளராகிய தனது மாமனாரை பழிவாங்கவே கூட்டாக சதித்திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

thirissur pooram festival - 2026

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல லட்சம் பேர் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.இவ் விழா இன்று விடிய விடிய நடைபெறும். இந்த ஆண்டு துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த திருச்சூர் பூரம் திருவிழா பட்டாசு வெடிக்க தேக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசு வெடித்து 15பேர் உயிரிழந்த சம்பவத்தால் பட்டாசு வெடிக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கடும் வெப்பம் காரணமாக முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் பல லட்சம் பேர் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

கேரள கலாச்சாரத்தின் அடையாளமாகப் போற்றப்படும் திருச்சூர் பூரம் விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

‘பூரங்களின் தாய்’ என்று அழைக்கப்படும் திருச்சூர் வடக்குநாதன் கோயில் பூரம் விழா, வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. 36 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இலஞ்சித்தார மேளம் மற்றும் பஞ்சவாத்யம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்களைப் பரவசப்படுத்தின.

கடந்த 21 ஆம் தேதி முண்டத்திக்கோடு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தால், பாதுகாப்பு கருதி பிரமாண்ட வாணவேடிக்கை ரத்து செய்யப்பட்டது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

sridhar vembu - 2026

வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி ஆகிய அம்சங்களில், அமெரிக்கா இந்திய மக்களின் கனவு இலக்காகத் திகழத் தொடங்கியதற்கு அதிக காலம் ஆகவில்லை. ஆனால், டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பானதாகவும், கொந்தளிப்பானதாகவும் மாறியுள்ளது. ஒருபுறம் வேலைவாய்ப்புச் சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது; மறுபுறம், சர்வதேசக் குடியேறிகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

H1B விசா நடைமுறைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினர் மீது தீவிர நடவடிக்கை எடுக்குமாறு குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் தொடர் அழுத்தங்கள் ஆகியவை, அங்குள்ள இந்தியர்களுக்கு எதிராக ஒரு கடுமையான சூழலை உருவாக்கியுள்ளன.

இந்த நேரத்தில், ‘Carnegie Endowment’ நிறுவனம் நடத்திய அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று, முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும், இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 1000 இந்தியர்களில் சுமார் 40 சதவீதத்தினர், அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து சிந்தித்து வருவதாக அக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளவர்களில் 58 சதவீதத்தினர், டொனால்ட் டிரம்ப் காரணமாக அந்நாட்டில் நிலவும் அரசியல் சூழலே தாங்கள் இம்முடிவை எடுத்ததற்குக் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறி வாழ்வது குறித்த இந்திய மக்களின் ‘அமெரிக்கக் கனவு’ (American Dream), மெதுவாக இருப்பினும் உறுதியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகவே தற்போதைய சூழல் உணர்த்துகிறது. அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது; அதேவேளையில், அங்கு ஏற்கனவே வசித்துவரும் இந்தியர்களும் கூடிய விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்த் இந்தியா திரும்பி, தமிழகத்தின் தென்காசிக்கு அருகில் கிராமத்தைத் தத்தெடுத்து, ஸோஹோ நிறுவனத்தின் கிளையை நிறுவி சாதனை படைத்து வரும் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இன்று தனது சமூகத் தளத்தில் பதிந்துள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கான திறந்த மடல்.

பாரதத்திலிருந்து வரும் என் அன்பு சகோதர சகோதரிகளே:

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள். நீங்கள் மகத்தான வெற்றியை அடைந்தீர்கள். அமெரிக்கா நமக்கு நல்லதையே செய்தது. அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் – நன்றியுணர்வே நமது பாரத வழி.

ஆயினும், இன்று கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் – ஒருவேளை பெரும்பான்மையினர் இல்லாவிட்டாலும், அதற்கு வெகு தொலைவில் இல்லாதவர்கள் – இந்தியர்கள் அமெரிக்க வேலைகளைப் ‘பறித்துக் கொள்கிறார்கள்’ என்றும், அமெரிக்காவில் நமது வெற்றி நியாயமற்ற முறையில் சம்பாதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள்.

அடுத்த தேர்தல் இதைச் சரிசெய்துவிடும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் தேர்வு, நமது பாரத நாகரிகத்தை வெறுப்பவர்களுக்கும், நாகரிகத்தையே வெறுப்பவர்களுக்கும் இடையே இருக்கும். அதுதான் ‘தீவிர வலதுசாரி’ மற்றும் ‘விழிப்புணர்வு இடதுசாரி’ இடையேயான போர். அந்த மோதலுக்கு நீங்கள் வெறும் பார்வையாளர்களே.

இதற்கிடையில், இப்போதும் எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கப்போகும் ஒரு விஷயம் உண்டு: 

உலகெங்கிலும் இந்தியர்கள் பெறும் மரியாதை, பெருமளவில் இந்தியாவின் அதிர்ஷ்டத்தையே சார்ந்திருக்கும். இந்தியா ஏழையாகவே நீடித்தால், முற்போக்கு இடதுசாரிகள் பரிதாபத்துடன் நமக்கு அறநெறிப் போதனைகளை வழங்குவார்கள்; தீவிர வலதுசாரிகளோ, இகழ்ச்சியுடன் (“நரகக் குழி”) வேறுபட்ட அறநெறிப் போதனைகளை வழங்குவார்கள். இவ்விரண்டையும் நாம் மரியாதையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.

இன்றைய உலகில், செழிப்பு மற்றும் பாதுகாப்புடன் மரியாதையும் ஒரே மூலத்திலிருந்துதான் வருகிறது: அது ஒரு தேசத்தின் தொழில்நுட்பத் திறமை. அந்தத் திறமையை அடைவதற்குத் தேவையான அறிவாற்றலை இந்தியா உருவாக்குகிறது, ஆனால் வருந்தத்தக்க வகையில், அந்தத் திறமையில் பெரும்பகுதியை, குறிப்பாக அமெரிக்காவிற்கு, நாம் ஏற்றுமதி செய்துவிட்டோம். 

இந்தியாவில் அந்தத் திறமையை நாம் வளர்க்கும்போது, நமது நாகரிக வலிமை தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும்.

உங்களில் பலருக்கு இதைப் பற்றி சிந்திப்பது கடினமாக இருந்தாலும், தயவுசெய்து தாயகம் திரும்புங்கள். பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவை. நமது பரந்த இளைஞர் சமுதாயத்தை செழிப்பின் பாதையில் வழிநடத்த, பல ஆண்டுகளாக நீங்கள் பெற்ற தொழில்நுட்பத் தலைமைத்துவம் அவர்களுக்குத் தேவை. ஒரு சமுதாயப் பணி (சமயப் பிரச்சார) ஆர்வத்துடன் இதைச் செய்வோம்.

மரியாதையுடன், 

ஸ்ரீதர் வேம்பு

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

parliament women reservation bill failed - 2026

— அத்வைத கலா
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அலுப்பூட்ட கூடிய, அரை வாழ்க்கையை கண்டு வருகிறது. மீண்டும் மீண்டும் சட்டம் இயற்றப்படும். சில நேரங்களில் நிறைவேற்றப்படும். ஒருபோதும் நடைமுறைக்கு வராது. ஏப்ரல் 17 தேதி அரசமைப்பு சட்டத் திருத்தம் (131) முன் வைக்கப்பட்டது. அது 33 சதவீத இட ஒதுக்கீட்டை 2029 ல் நடைமுறைப்படுத்துவதாக கூறியது . மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 54 வாக்குகள் குறைவாக இருந்ததால் அது தோல்வி அடைந்தது. வாய்ப்பை நழுவ விட்டதில் ஏழாவது முறை இது.

தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும்போது, எதிர்பார்த்தபடியே எதிர்கட்சிகள் தொகுதி மறு வரையறையை இத்துடன் இணைத்தது தவறு. இதனால் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்னக மாநிலங்கள் பாதிக்கப்படும். இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றி வரைவதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது, என்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை பிரித்து விட்டால், 2023 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் படி மகளிர் இட ஒதுக்கீடு 2034 க்கு முன்பு நடைமுறைப்படுத்த முடியாது, என்றது அரசு.

இரண்டு தரப்பினர் சொல்லுவதிலும் சில நியாயங்கள் இருக்கலாம். ஆனால் இரு தரப்பினர் சொல்லும் சட்ட நுட்பத்திற்கு அடியில் பழைய , யாரும் வெளிப்படையாக சொல்ல விரும்பாத கோரமான உண்மை புதைந்துள்ளது. பெரும்பாலான ஆண் உறுப்பினர்கள் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதை விரும்பவில்லை என்பதே அந்த உண்மை.

இந்த உண்மை ஆவணங்களில் பதிவாகி உள்ளது. 1996 இல் முதல் முறையாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அது எதிர்க்கப்பட்டது, தடுக்கப்பட்டது, காலாவதியாகும்படி விடப்பட்டது . மீண்டும் 1998 இல் அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவே விடவில்லை. அவை கலவர பூமியாகியது. இந்த சட்டம் இயற்றப்பட்டால் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து விசிலடிக்கத் தூண்டும் என்று அன்று முலாயம் சிங் சொன்னது இன்றும் இழிப்புகழாக நீடிக்கிறது. இது ஆண் உறுப்பினர்களின் மனநிலையை படம்பிடித்து காட்டுகிறது.

பிற்பட்ட வகுப்பினருக்கு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டில் பங்குண்டா என்ற பொது விவாதங்களுக்கு அப்பால் இப்போதுள்ள ஆண் உறுப்பினர்களிடையே ஒரு எழுதப்படாத, கமுக்கமான கருத்தொற்றுமை உள்ளது. 33 சதவீத இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் வரும்போது தங்களுடைய இடம் பறிபோய்விடும் என்ற தனிப்பட்ட அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

2023 வரையிலும் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒரே பக்கம் நின்றதாக வரலாறு இல்லை. பாஜக எந்த நிலையிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க தவறியது இல்லை. அது எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் ஆளும் கட்சியாக ஆனபோதிலும், எப்போதும் இதை ஆதரித்தே வந்துள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். 2023 அபூர்வமான கணத்தை உருவாக்கியது. காரணம் தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் இந்த இட ஒதுக்கீடு மசோதா அடுத்த தேர்தலுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும் என்று பாதுகாப்பாக எழுதப்பட்டது தான்.

இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பெண்களால் முடிவு செய்ய முடியாததற்கு இந்த கணக்கே காரணம். லோக்சபாவில் 15 சதவீதம் உள்ள பெண்களால் ஆண்களின் ஒத்துழைப்பு இன்றி, இந்த சட்டத்தை இயற்ற முடியாது. எண்ணிக்கை குரூரமாகவும் வட்டமடிப்பதாகவும் இருக்கிறது. பெண்கள் எண்ணிக்கை பலம் பெற இட ஒதுக்கீடு தேவை. இட ஒதுக்கீடு பெற எண்ணிக்கை பலம் தேவை. இந்த வட்டத்திலிருந்து வெளியேற ஆண் அரசியல்வாதிகளின் ஆதரவு தேவை. சீர்திருத்தத்திற்காக தங்கள் அரசியல் முதலீட்டை பணயம் வைக்க, குறைந்த காலத்திற்காவது தங்கள் இடத்தை இழக்கும் அபாயத்தை மீறி செயல்பட , ஆண் அரசியல்வாதிகள் முன் வர வேண்டும்.

இந்த விஷயம் தான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கவனிக்க வைக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (21 ஏப்ரல்) லக்னோவில் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டதற்கு எதிராக பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த பேரணி (ஜன் ஆக்ரோஷ் மகிளா பாதயாத்ரா) நடத்தினார்கள். வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் 1.75 கிலோமீட்டர் தூரம் அந்த பேரணியில் தனது இரண்டு துணை முதல்வர்கள், மாநில பாஜக தலைவர், பெண் அமைச்சர்கள் மற்றும் ஆயிர கணக்கான பெண்கள் அணிவகுக்க தலைமை ஏற்று நடந்து சென்றார். மசோதா தோல்வியடைந்தது எதிர்க்கட்சிகளின் பெண்கள் விரோத மனப்பான்மையையே காட்டுகிறது என்று அவர் சாடினார். விமர்சகர்கள் இதைப் பக்க சார்புள்ள நிலைப்பாடு என்றனர். ஆனால் இதில் உள்ள புதிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.

செல்வாக்கு மிக்க முதல்வர்; 131 சட்ட திருத்தத்தால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாதவர்; பெண் அல்ல, ஆண்; அரசியல் நாடகத்திற்காக அல்ல; பெண்கள் உரிமைக்காக பேரணியில் நடந்து செல்வது இந்திய அரசியலில் அன்றாட நிகழ்வு அல்ல. 1996 முதல் நாம் பார்த்து வருவது என்ன? அரசியல் ஆகாயத்திற்காக, வெளிப்படையாக அனுதாபத்தை தெரிவித்து விட்டு, அமைதியாக கடந்து செல்லும் ஆண் அரசியல்வாதிகளைத்தான். லக்னோவில் நடந்தது, அரசியல் கணக்கு என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த வழமையை உடைத்தெறிந்துள்ளது.

இதுபோன்ற வெளிப்படையான, எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பது, கணக்கு பார்க்கும் இதர ஆண் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். முதல்வரே நடக்கும்போது கடைசி வரிசையில் அமர்ந்திருப்போர் அமைதியாக இருக்க முடியாது. அவர் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்று சுலபமாக முணங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கவும் முடியாது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பயன்படுத்தி பாஜக தொகுதி மறு வரையறை செய்யும் திட்டத்தை திணிக்கிறது. அது தன்னளவில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர் . ஆனால் கடினமான எதிர் கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். தொகுதி மறு வரையறை தான் பிரச்சனை என்றால் அது இல்லாமல் 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சியினர் எப்போதாவது கொண்டு வந்திருக்கிறார்களா? கடந்த 30 ஆண்டுகளில் எந்த கட்சியும் இதை செய்யவில்லை. எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் நமக்கு கிடைத்த சங்கடமான பாடம் என்ன ? இந்திய அரசியலில் பெண்கள் கருத்தியல் ரீதியான கூட்டாளிகளை தேர்வு செய்ய வாய்ப்பில்லை. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, திருணாமுல் காங்கிரஸ் என்று எல்லா கட்சியிலும் நல்ல நோக்கம் உள்ள ஆண் அரசியல்வாதிகள் தங்கள் தங்கள் பகுதியில் யோகி ஆதித்யநாத் செய்தது போல் பேரணி நடத்தி, உரை நிகழ்த்தி, வாக்களித்து, மீண்டும் பேரணி நடத்த வேண்டும் என்பதே பெண்களுக்கு இப்போது தேவைப்படுகிறது.

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் விருது பெற்ற எழுத்தாளர்

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

manadhinkural - 2026
#image_title

‘மனதின் குரல் (133ஆவது பகுதி)’
ஒலிபரப்பு நாள் : 26.04.2026
தமிழில் / குரல்: ஆர். சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்கள் அனைவரோடும் இணைவது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.  ஒருபுறம் தேர்தல் பரபரப்பு மேலோங்கி இருந்தாலும், உங்கள் கடிதங்கள்-செய்திகள் வாயிலாக தேசத்தின், தேசத்தின் மக்களின் சாதனைகள் குறித்து பரஸ்பரம் சந்தோஷங்களையும் பரிமாறிக் கொள்ள முடிந்தது. இந்த முறை மனதின் குரலின் தொடக்கமே இப்படிப்பட்ட ஒரு பெரிய சாதனை குறித்துத் தான் இருக்கப் போகிறது.

இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…

சுதேசி ஈனுலை

நண்பர்களே, பாரதம் எப்போதுமே விஞ்ஞானத்தை தேசத்தின் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்திருக்கிறது.  இந்த எண்ணப்பாடு கூடவே, நம்முடைய விஞ்ஞானிகள், சிவில் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள்.  அவர்களுடைய முயற்சிகள் காரணமாகவே, இந்த செயல்திட்டம் தேசத்தின் நிர்மாணத்தில் பெரும் பங்களிப்பு அளித்து வருகின்றது.  இதன் காரணமாக நமது தொழில்துறை வளர்ச்சி, எரிசக்தித் துறை, உடல்நலத் துறை ஆகியவற்றுக்கு பெரும் ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது.  விவசாயம் தொடங்கி நவீன புதுமைகள் கண்டுபிடிப்பாளர்கள் வரை, பாரதத்தின் சிவில் அணுசக்தித் திட்டம் அனைவருக்கும் மிகவும் உதவி புரிந்திருக்கிறது.  நண்பர்களே, சில நாட்கள் முன்புதான், நமது அணுசக்தி விஞ்ஞானிகள் மேலும் ஒரு பெரிய சாதனையைப் படைத்து பாரதத்தின் கௌரவத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.   தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் Fast Breeder Reactor – வேக ஈனுலையானது criticality அதாவது முதலாவது செயல்பாட்டை அடைந்து விட்டது.  அதாவது இந்த செயல்பாட்டுநிலை என்பது என்னவென்றால், ஈனுலையானது முதன்முறையாக self sustaining nuclear chain reaction – தன்னிலையான அணுக்கருப்பிளவு சங்கிலித் தொடர் வினையை வெற்றிகரமாக எட்டிவிட்டது என்று பொருள்.  இந்தக் கட்டத்தின் பொருள் என்னவென்றால், ஈனுலை செயல்பாட்டுக் கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதாகும்.  பாரதத்தின் அணுசக்திப் பயணத்திலே இது ஒரு வரலாற்றுப்பூர்வமான மைல்கல் நிகழ்ச்சியாகும்.  மேலும் இதில் பெரிய விஷயம் என்னவென்றால், அணுசக்தி ஈனுலை முழுமையான வகையிலே சுதேசித் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தான். 

நண்பர்களே, இதை ஈனுலை என்று ஏன் கூறுகிறோம் தெரியுமா?  இதன் பின்புலத்தில் ஒரு காரணம் உண்டு.  இது எப்படிப்பட்ட முறை என்றால், எரிசக்தி உற்பத்தியோடு கூடவே எதிர்காலத்திற்கான எரிபொருளையும் இது தானே தயாரித்துக் கொள்கிறது.    நண்பர்களே, மார்ச் மாதம் 2024 காலகட்டம் எனக்கு நன்கு நினைவிருக்கிறது, அப்போது நான் கல்பாக்கத்தில் இருக்கும் உலையின் core loading – உள்ளகத்தை ஏற்றுவதைக் காண முடிந்தது.  பாரதத்தின் அணுசக்தித் திட்டத்திலே தங்களுடைய விலைமதிப்பில்லா பங்களிப்பை அளித்த அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.  நாட்டுமக்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாகவும் எளிமையாகவும் ஆக்குவதிலே அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.  இதன் வாயிலாக வளர்ச்சியடைந்த பாரதம் காணும் நமது உறுதிப்பாட்டிற்கும் கூட ஒரு புதிய சக்தி கிடைக்கும். 

கைகொடுக்கும் காற்றின் சக்தி

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் இன்று நாம் மேலும் ஒரு சக்தி பற்றி பேச இருக்கிறோம், இது புலப்படாதது என்றாலும் இது இல்லாது போனால் நமது வாழ்க்கை ஒரு கணப்போது கூட இயங்காது.  இந்தச் சக்தி தான் பாரதத்தை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.  இது தான் நமது காற்றுசக்தி.  நமது பண்டைய நூல்களிலே,

वायुर्वा इति व्यष्टि:, वायुरवै समष्टि:|
வாயுர்வா இதி வ்யஷ்டி:, வாயுரவை சமஷ்டி:

அதாவது, காற்று என்பது ஒரு தத்துவம் மட்டுமல்ல, அது வாழ்க்கையின் சக்தியாகும், இது முழுமைக்குமான சக்தி.           

நண்பர்களே, இன்று இந்தக் காற்றுசக்தி தான் பாரதத்தின் முன்னேற்றத்தின் புதிய கதையை எழுதிக் கொண்டிருக்கிறது. காற்றின் சக்தியில் பெரியதொரு சாதனையை நாடு தற்போதுதான் படைத்திருக்கிறது.  இப்போது பாரதத்தின் காற்றுசக்தி உற்பத்தித்திறன் 56 கிகாவாட்டுக்கும் அதிகமானதாக ஆகிவிட்டது.  கடந்த ஓராண்டிலே, சுமார் 6 கிகாவாட் அளவுக்கு புதிய திறன் அதிகரிக்கப்பட்டது.  காற்றுசக்தித் துறையிலே பாரதம் விரைவாக முன்னேறி வருகிறது, உலகெலாம் நம்மை ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நண்பர்களே, இன்று பாரதம், காற்றுசக்தித் திறனில் உலகின் நான்காவது இடத்திலே இருக்கிறது.  இது நம்முடைய பொறியாளர்களின் உழைப்பின் பலன், இது நமது இளைஞர்களின் உழைப்பின் பலன், இது நாட்டுமக்களின் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டின் விளைவு.

நண்பர்களே, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ராஜஸ்தானம் என தேசத்தின் பல மாநிலங்கள் இந்தத்துறையில் தங்களுடைய அடையாளத்தைப் பதித்திருக்கிறார்கள்.  குஜராத்தின் கட்ச், பாடன், பனாஸ்காண்டா என முன்பெல்லாம் வெற்றுப் பாலைவனமாகக் காட்சிதரும் பகுதிகளில் எல்லாம் இன்று பெரிய புதுப்பிக்கவல்ல எரிசக்திப் பூங்காக்கள் உருவாகி வருகின்றன.  இதனால் இளைஞர்களுக்கு ஆதாயங்கள் ஏற்படுகின்றன, புதிய சந்தர்ப்பங்கள் உருவாகின்றன, புதிய திறன்கள் மலர்கின்றன, வேலைக்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. 

நண்பர்களே, பாரதத்தின் வளர்ச்சிக்காக சூரிய மற்றும் காற்றுசக்தி மிகவும் அவசியமானவை.  இவை சுற்றுச்சூழல் தொடர்பான விஷயம் மட்டுமல்ல, இவை நமது எதிர்காலத்தின் பாதுகாப்போடு தொடர்புடையவையும் கூட.  இவற்றிலே நம்மனைவரின் பங்களிப்பும் அடங்கியிருக்கிறது.  நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும், நாம் தூய்மையான ஆற்றலை கைக்கொள்ள வேண்டும்.  தேசத்தின் அனைத்து நிலைகளிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் அவசியமானவை.  ஏனென்றால் இவற்றால் மட்டுமே பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

நம் நாட்டின் பௌத்த பாரம்பரியம்

நண்பர்களே, மே மாதத் தொடக்கம் ஒரு புனிதமான வாய்ப்போடு நம்மை அணுகுகிறது.  சில நாட்களிலே நாம் புத்த பூர்ணிமையைக் கொண்டாடுவோம்.  நான் உங்களனைவருக்கும் என்னுடைய முதன்மையான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  பகவான் கௌதம புத்தரின் வாழ்க்கைச் செய்தியானது இன்றும்கூட அதே அளவு முக்கியமானதாக இருக்கிறது.  அமைதி என்பது நமக்கு உள்ளிருந்து தான் தொடங்குகிறது என்று அவர் நமக்குக் கற்பித்திருக்கிறார்.  மேலும், தன்னைத்தான் எப்படி வெல்வது என்பதையும் அவர் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.  இன்று உலகிலே நிலவும் அழுத்தங்கள்-போராட்டங்களுக்கு இடையே புத்தரின் கருத்துக்கள் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக ஆகியிருக்கின்றன. 

நண்பர்களே, தென்னமெரிக்காவின் சிலியில் இருக்கும் ஓர் அமைப்பு பகவான் புத்தரின் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று வருகிறது.  லத்தாக்கிலே பிறந்த ட்ரப்போன் ஓட்ஜர் ரின்போசே – Drubpon Otzer Rinpoche அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்தப் பணி நடந்து வருகிறது.  இந்த அமைப்பு தியானம் மற்றும் கருணையை, மக்களின் வாழ்க்கையோடு இணைத்து வருகிறது.  கோசிகுஆஜ் பள்ளத்தாக்கிலே உருவாக்கப்பட்டிருக்கும் தூபியானது, மக்களுக்கு அமைதியின் அனுபவத்தை அளிக்கிறது.  உண்மையிலேயே இது பெருமிதமாக இருக்கிறது.  பாரதத்தின் பண்டைய வழிமுறை, உலகெங்கிலும் பரவியிருக்கிறது, தொலைவான இடங்களில் இருக்கும் மக்களையும் இது இணைக்கிறது.

நண்பர்களே, பௌத்தப் பாரம்பரியம் இயற்கையோடு இணைவதையும் நமக்குக் கற்பிக்கிறது.  பகவான் புத்தருக்கு ஞானம் ஒரு மரத்தடியிலே பிறந்தது.  இயற்கை நமது வாழ்க்கையின் இணைபிரியா அங்கமாகும்.  தேசத்திலும் கூட இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன.  கர்நாடகத்தின் கர்மா மடாலயம் இதற்கான ஒரு அருமையான எடுத்துக்காட்டாகும்.  இந்த மடாலயம் ஒரு உயிர்ப்புடைய வனப்பகுதி, இது 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  இந்த வனப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட நாட்டுமரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  நண்பர்களே, புத்தரின் செய்தியானது கடந்தகாலத்தோடு மட்டுமே தொடர்புடையது கிடையாது.  அது இன்றும்கூட நடைமுறைக்கு உவப்பானது, எதிர்காலத்திற்கு அவசியமானது.  புத்த பூர்ணிமை என்ற சந்தர்ப்பம் நமக்கு உள்ளெழுச்சியை அளிக்கிறது.  நாம் நமது வாழ்க்கையிலே அமைதியை அதிகப்படுத்த வேண்டும், கருணையை நம்வசப்படுத்த வேண்டும், நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். 

படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு

என் மனம்நிறை நாட்டுமக்களே, நம்முடைய தேசத்திலே ஜனவரி மாதம் 23ஆம் தேதி அதாவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் தொடங்கி, ஜனவரி 30ஆம் தேதி அதாவது காந்தியடிகள் காலமான நாள் வரை குடியரசு விழா கொண்டாடப்பட்டு வருவதை நீங்களனைவரும் நன்கறிவீர்கள்.  இந்த விழாவின் முக்கியமான பகுதி தான் Beating Retreat.  இன்று நான் உங்களிடத்திலே இந்த Beating Retreat – படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு குறித்துத் தான் விவாதிக்க இருக்கிறேன் ஏனென்றால் இதன் பின்னணியில் ஒரு சிறப்பான காரணம் உண்டு. 

நண்பர்களே, இந்த விழாவிலே பல்வேறு வாத்தியக்குழுக்கள், பல்வேறு இசைப் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  கடந்த சில ஆண்டுகளாகவே இவற்றிலே இந்திய இசையின் கலப்பு அதிகரித்திருக்கிறது, மேலும் இவை நாட்டுமக்களுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது.  படைகள் பாசறைக்குத் திரும்பும் இந்த ஆண்டின் Beating Retreat நிகழ்ச்சி மிகவும் நினைவில் கொள்ளத்தக்கதாக இருந்தது.  விமானப்படை, தரைப்படை, கடற்படை மற்றும் மத்திய ஆயுதப்படையினரின் வாத்தியக்குழுக்கள் மிகவும் சிறப்பாக இசைத்தார்கள். 

நண்பர்களே, அருமையான இசையோடு கூடவே, விறுவிறுப்பான அணிவகுப்புகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.  விமானப்படையின் வாத்தியக்குழு, சிந்தூர் அணிவகுப்பை அமைத்திருந்தது.  கடற்படை மீன் யந்திரம் போன்ற அணிவகுப்பை வகுத்திருந்தது.  அதேநேரத்தில், தரைப்படையின் வாத்தியக்குழுவின் இசை வெளிப்பாட்டிலே வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் மற்றும் கிரிக்கெட்டில் பாரதத்தின் வெற்றி காட்சிப்படுத்தப்பட்டது.

நண்பர்களே, Beating Retreat நிறைவடைந்த பிறகு, இந்த உழைப்பு முழுவதும், இந்தச் சாதனைகள் எல்லாம் மெல்லமெல்ல கரைந்து காணாமல் போய் விடுகிறது.  ஆனால் இப்போது இது தொடர்பாக மிக அருமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  Beating Retreatன் இசை முதன்முறையாக வேவ்ஸ் ஓடிடியில் இருக்கிறது.  வரவிருக்கும் காலங்களிலே இது மற்ற தளங்களிலும் கூட தரவேற்றப்படும், நீங்கள் கண்டிப்பாக இதைக் கேட்டு மகிழுங்கள்.  நீங்கள் உங்கள் இராணுவத்தையும் அவர்களின் பாரம்பரியங்களையும் தெரிந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்வீர்கள்.

குஜராத்தில் ஃப்ளேமிங்கோ நகரம்

நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளிலே தேசத்தின் பல்வேறு பாகங்களிலே இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான உத்வேகமளிக்கும் கதைகள் வெளிப்பட்டிருக்கின்றன.  இந்தச் சம்பவங்கள் எல்லாம் நமக்கு நம்பிக்கை ஊட்டும் அதே வேளையில் பெருமிதமூட்டவும் செய்கின்றன.  சில உதாரணங்களை நான் மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இவற்றைக் கேட்டு உங்கள் மனம் குதூகலிக்கும்.  முதல் விஷயம் கட்ச் பகுதியின் ரண் பற்றியது.  மழை நின்று போன பிறகு இங்கே இருக்கும் நிலம் உயிர் பெற்று விடுகிறது.  ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான ஃப்ளேமிங்கோ பறவைகள் இங்கே வருகை புரிகின்றன.  இந்தப் பகுதி முழுவதுமே ரோஜா நிறம் பெற்று விடுகிறது ஆகையால் இதை ஃப்ளேமிங்கோ நகரம் என்றே அழைக்கிறார்கள்.  இந்தப் பறவைகள் இங்கேயே கூடு கட்டுகின்றன, தங்களுடைய குஞ்சுகளை வளர்க்கின்றன.  கட்ச் பகுதி மக்கள் இவற்றை லாகாஜி கே பாராதீ, அதாவது லாகாஜியுடைய கலியாண ஊர்வலத்தார் என்று அழைப்பார்கள்.  இப்போது லாகாஜியுடைய இந்தக் கல்யாண ஊர்வலத்தார், கட்ச் பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அழகான அடையாளமாக ஆகிவிட்டனர்.

யானைத் தோழர்கள்

நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சி மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான ஒத்தாசை பற்றியது.  இது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தது.  இங்கே தாராயி, அதாவது அடிவாரப் பகுதிகளில் அறுவடைக்காலத்தில் யானைகளின் கூட்டம் கிராமத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கும்.  இதனால் மோதல் ஏற்படக்கூடிய அச்சம் அதிகரிக்கிறது.  ஆனால் இப்போதோ, உத்தர பிரதேசத்திலும் கூட கஜ் மித்ர அதாவது யானைத் தோழன் போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன.  கிராமத்தவர்கள் குழுவமைத்து யானைகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறார்கள்.  அவர்கள் குறித்த காலத்தில் மக்களை எச்சரிக்கை செய்கிறார்கள்.  இதனால் மோதல் குறைந்து வருவதோடு, மக்களிடம் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. 

மீண்டும் தென்படும் கலைமான்

நண்பர்களே, மத்திய பிரதேசத்திலிருந்தும் கூட ஒரு அருமையான விஷயம் வந்திருக்கிறது.  சத்திஸ்கட்டில் blackbuck அதாவது கலைமான் மீண்டும் தென்படத் தொடங்கியிருக்கிறது.  ஒரு காலத்தில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது, ஆனால் தொடர் முயற்சிகளின் விளைவாக எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  இன்று இவை மீண்டும் திறந்தவெளிகளில் ஓடித்திரிவதைக் காண முடிகிறது.  நமது இழந்த மரபின் மீட்சி இது.  இதே போன்ற நம்பிக்கை Great Indian bustard கானமயில் பாதுகாப்பிலும் தென்படுகிறது. 

இந்தப் பறவை நமது பாலைவனப் பகுதிகளின் அடையாளமாகக் கருதப்பட்டது.  ஆனால் ஒரு காலத்தில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது.  எந்த அளவுக்கு என்றால் இந்தப் பறவை வழக்கொழிந்து போகும் அபாயம் ஏற்பட்டு விட்டது.  ஆனால் இப்போது இவை பாதுகாக்கப்பட பெரிய இயக்கங்கள் நடந்து வருகின்றன.  விஞ்ஞான முறைகள் கையாளப்பட்டு, இனப்பெருக்க மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, இப்போது புதிய உயிர்களின் தொடக்கம் கண்ணுக்குத் தெரிகிறது.

நண்பர்களே, இயற்கையும் மனிதனும் வேறுவேறு அல்ல.  நாம் பரஸ்பர நண்பர்கள்.  நாம் இயற்கையைப் புரிந்து கொண்டால், அதற்கு மதிப்பளித்தால், அதோடு இணைந்து பயணித்தால், மாற்றம் கண்ணுக்குத் தெரியும்.  இன்று இந்த மாற்றம் தான் அனைத்து இடங்களிலும் புதிய நம்பிக்கையாகத் துளிர்த்துக் காட்சியளிக்கிறது. 

மூங்கில் துறையின் வெற்றி

எனதருமை நாட்டுமக்களே, வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.  மனதின் குரலில் கூட, நாம் அடிக்கடி வடகிழக்குப்பகுதி மக்களின் சாதனைகள் பற்றி விவாதித்திருக்கிறோம்.  இன்று இப்படிப்பட்ட மேலும் ஒரு சாதனை பற்றித்தான் நான் உங்களோடு விவாதிக்க இருக்கிறேன், அது தான் மூங்கில் துறையில் வடகிழக்கின் வெற்றி. 

நண்பர்களே, எந்தப் பொருள் ஒருகாலத்தில் சுமையாகப் பார்க்கப்பட்டதோ, அது இன்று வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் புதுமைகளுக்கு புதிய வேகத்தை அளித்து வருகிறது.  நமது தாய்மார்கள், சகோதரிகள் இதனால் அதிகம் பலனடைந்தவர்கள்.  மூங்கில் தொடர்பான நமது அணுகுமுறை மாறியதிலிருந்து எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது உங்களுக்கு ஆச்சரியமேற்படுத்தலாம். 

.நண்பர்களே, ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டப்படி, மூங்கில் மரமாக கருதப்பட்டதால், இதோடு தொடர்புடைய விதிமுறைகள் மிகவும் கடுமையானவையாக இருந்தன.  எந்த இடத்துக்கும் மூங்கிலைக் கொண்டு செல்வது கடினமாக இருந்தது.  இந்த நிலையில் தான் இங்கே இருப்போர் மூங்கிலோடு தொடர்புடைய வேலைகளிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார்கள்.  நண்பர்களே, 2017ஆம் ஆண்டிலே சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு நாங்கள் மூங்கிலை மரம் என்ற வகைப்படுத்தலிலிருந்து வெளியேற்றினோம்.  இதன் விளைவினை அனைவரும் கண்கூடாகக் காணலாம்.  இன்று ஒட்டுமொத்த வடகிழக்கிலும் மூங்கில்உற்பத்தித்துறை தழைத்து வருகிறது.  மக்கள் தொடர்ந்து புதுமைகள் படைத்தலில் ஈடுபட்டு, இவற்றில் மதிப்புக்கூட்டலையும் செய்து வருகிறார்கள்.

நண்பர்களே, திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் பிஜாய் சூத்ரதார், தெற்கு திரிபுராவின் பிரதீப் சக்ரவர்த்தி ஆகியோர் புதிய சட்டங்களை தங்களுக்கான ஒரு பெரிய சந்தர்ப்பமாகப் பார்த்தார்கள்.  பிறகு இவர்கள் தங்களுடைய வேலையை தொழில்நுட்பத்தோடு இணைத்தார்கள்.  இன்று இவர்கள் முன்பை விடச் சிறப்பாகவும் அதிக அளவிலும் மூங்கில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

நாகாலந்தின் தீமாபூர் மற்றும் அருகிலே இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த சுயவுதவிக் குழுக்கள், மூங்கில் தொடர்பான உணவுப் பொருட்களில் மதிப்புக்கூட்டலைச் செய்திருக்கிறார்கள்.  அங்கே கோரோலோ கிரியேட்டிவ் கிராஃப்ட் போன்ற குழுக்களும் இருக்கின்றன, இவை மூங்கிலால் செய்யப்பட்ட சாமான்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

நண்பர்களே, மிசோராமின் மாமித் மாவட்டத்தில் இருக்கும் குழுக்கள், மூங்கிலின் திசு வளர்ப்பு மற்றும் பசுமைக்குடில் மேலாண்மை தொடர்பான பணிகளை ஆற்றி வருகின்றன.  சிக்கிமின் கேங்க்டாக்கிற்கு அருகே இருக்கும் Lagastal Bamboo Enterprise குழுவைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன்.  இவர்கள் மூங்கிலிலிருந்து கைவினைப் பொருட்கள், அகர்பத்திக் குச்சிகள், மேஜை-நாற்காலிகள் மற்றும் வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கிறார்கள்.

நண்பர்களே, நான் இங்கே ஒரு சில எடுத்துக்காட்டுக்களை மட்டுமே கூறியிருக்கிறேன்.  தேசத்திலே மூங்கில் துறையின் வெற்றியின் பட்டியல் மிகவும் நீண்டது.  வடகிழக்கைச் சேர்ந்த மூங்கில் பொருட்கள் ஏதாவது ஒன்றை நீங்கள் அனைவரும் வாங்குங்கள் என்று உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்.  நீங்கள் இதைப் பரிசுப் பொருளாக அளிக்கலாம்.  உங்களுடைய இந்த முயற்சி காரணமாக மூங்கில் பொருட்களை உருவாக்குவதில் வியர்வை சிந்துவோரின் நம்பிக்கை அதிகரிக்கும்.

டிஜிட்டல் வரலாற்று ஆவணக் காப்பகம்

என் உளம்நிறை நாட்டுமக்களே, வேகமாக மாறிவரும் இந்தக் காலத்தில் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கமாக ஆகி விட்டது.  இன்று நாம் நமது கடந்தகாலத்தை, தற்காலத்தோடு இணைப்பதிலும் தொழில்நுட்பத்தின் அற்புதத்தைக் கண்டுவருகிறோம்.  இந்தத் திசையில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஒரு முன்னேற்றம், கல்வியோடு தொடர்புடையோருக்கும், வரலாற்றில் பிடிப்பு இருப்போருக்கும் களிப்பளித்திருக்கிறது. 

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக இந்திய தேசிய ஆவணக்காப்பகம் ஒரு சிறப்பான இணைய வாயிலை ஏற்படுத்தி அதிலே அலாதியான தரவுகளைப் பகிர்ந்திருக்கிறது.  இந்த அமைப்பானது 20 கோடிக்கும் அதிகமான விலைமதிப்பற்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறது.  இவற்றிலே சில மிகவும் சுவாரசியமானவை.  7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கில்கித் கையெழுத்துப்படிகள், பூர்ஜமர இலைகளில் எழுதப்பட்டிருக்கின்றன.  இங்கே 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சுவாரசியமான புத்தகமான ஸ்ரீ பூவலயத்தையும் கூட நீங்கள் காணலாம்.  எண்களை ஆதாரமாகக் கொண்ட இந்தப் புத்தகம் கட்டங்கள் வடிவில் இருக்கிறது.  இராணி லக்ஷ்மிபாயோடு தொடர்புடைய சில முக்கியமான கடிதங்களையும் நீங்கள் பார்க்க முடியும். 

இவற்றிலே 1857ஆம் ஆண்டு அவர் செய்த சில முடிவுகள் பற்றியும் தெரிந்து கொள்ள இயலும், இவை அவருடைய பராக்கிரமத்தை எடுத்துக் காட்டுவன.  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைக் கொண்டாடுவோருக்கு அவருடைய வாழ்க்கை, ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ், அவருடைய உரைகளோடு தொடர்புடைய பல ஆவணங்கள் இருக்கின்றன.  அதே போல பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களோடு தொடர்புடைய பல ஆவணங்களையும் நீங்கள் பார்க்கலாம்.  இவற்றிலே பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நிறுவுதல், ஹிந்தி இலக்கிய மாநாட்டோடு தொடர்புடைய முக்கியமான தகவல்கள் இருக்கின்றன.  மேலும் நம்முடைய அரசியல் நிர்ணய சபையோடு தொடர்புடைய பல விசேஷமான ஆவணங்களும் இருக்கின்றன.   நீங்கள் அனைவரும் www.abhilekh-patal.in என்ற இணைய வாயிலைக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள்.  இது உங்களுக்கு நம்முடைய வரலாறு தொடர்பான அற்புதமான அனுபவத்தை அளிக்கும்.

சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் சாதித்த இந்தியப் பெண்கள்

நண்பர்களே, சற்றே கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் உலகத்திலேயே மிகவும் திறமைமிக்கவர்களுக்கு மத்தியில் இருக்கிறீர்கள், உங்களிடத்திலே மிகவும் கடினமான கணிதக் கேள்வி ஒன்று இருக்கிறது.  இதற்குத் தீர்வு காண உங்களுக்கான நேரம் வெறும் 4 ½ மணி நேரம் தான்.  அதாவது நேரம் குறைவு, போட்டி சர்வதேச அளவிலானது, மிகவும் கடினமானது.  இப்படிப்பட்ட நிலையிலே படபடப்பு ஏற்படுவது இயல்பானது தான்.  ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் நமது பெண்கள் அருமையாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.  இந்த மாதத் தொடக்கத்திலே ஃப்ரான்ஸ் நாட்டின் போர்தோ நகரிலே ஐரோப்பிய பெண்களுக்கான கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  கணிதத்திலே மிகுதியான ஆர்வம் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கான பெரிய போட்டி இது.  இது உலகின் மிகவும் மதிப்பான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  இந்த ஒலிம்பியாட் போட்டியிலே நமது பெண்கள் இதுவரையிலான மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.  இந்த திறமைகள்மிகு அணி எனக்குப் பெருமிதம் அளிக்கிறது.  இதிலே மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயா முந்தடா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஞ்ஜனா சாக்கோ, சென்னையின் ஷிவானி பரத் குமார், கோல்கத்தாவின் ஷ்ரிமோயி பேரா ஆகியோர் அடங்குவர்.  நம்முடைய அணி உலகிலே ஆறாவது இடத்தைப் பிடித்தது.  ஷ்ரேயா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார், சஞ்ஜனா வெள்ளிப்பதக்கமும், ஷிவானி வெண்கலப்பதக்கமும் வென்றார்கள்.

நண்பர்களே, இந்த ஒலிம்பியாட் போட்டிக்காக பாரதத்தில் தேர்வு வழிமுறை இருக்கிறதே, அதுவே மிகவும் கடினமானது.  இது ஒரு பல்லடுக்குத் தேர்வு முறை.  இதிலே பிராந்திய, மாநில மற்றும் தேசிய அளவிலான கடினமான சவால்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது.  இதற்குப் பிறகு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் மாணவர்கள் ஒரு மாத காலம் வரை கணிதப் பயிற்சி முகாமிலே பயிற்சி பெறுகிறார்கள்.  இந்த முகாம் Tata Institute of Fundamental Research மற்றும் Homi Bhabha Center for Science Education அமைப்புகளிலே ஏற்பாடு செய்யப்படுகிறது.  இந்த முகாமின் நிறைவில் அணிக்கான தேர்வுச் சோதனை நடத்தப்படுகிறது.  இதிலே செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே பாரத அணி தேர்வு செய்யப்படுகிறது.

நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் நாடெங்கிலும் இருந்தும் சுமார் 6 இலட்சம் மாணவர்கள் இந்த கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கெடுக்கிறார்கள்.  காலப்போக்கில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதாவது தேசத்தின் பெண்களுக்கு இடையே ஒலிம்பியாட் போட்டிகளின் கலாச்சாரம் விரைவாக பிரபலமாகி வருகிறது.  இந்த புத்திசாலிக் குழந்தைகளுக்குத் துணையாக இருக்கும் அவர்களுடைய பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.

டிஜிட்டல் முறையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

எனதருமை நாட்டுமக்களே, நம்முடைய தேசத்திலே இப்போது ஒரு மிக முக்கியமான இயக்கம் நடந்து வருகிறது, இதைப் பற்றி ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.  அதுதான் மக்கட்தொகை கணக்கெடுப்பு என்ற இயக்கம், இது உலகின் மிகவும் பெரிய கணக்கெடுப்பு.  நண்பர்களே, உங்களில் பலரும் முன்னர் இது போன்ற செயல்முறையைக் கடந்து வந்திருப்பீர்கள், இந்த முறை கணக்கெடுப்பு தொடர்பான அனுபவம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கப் போகிறது.  2027க்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாகி விட்டது.  அனைத்துத் தகவல்களும் நேரடியாக டிஜிட்டல் வழியாகப் பதிவு செய்யப்படும்.  வீடுதோறும் செல்லும் பணியாளர்களிடம் மொபைல் செயலி இருக்கும்.  அவர்கள் உங்களிடம் உரையாடி அதிலே தகவல்களைப் பதிவு செய்து கொள்வார்கள். 

நண்பர்களே, இந்த முறை கணக்கெடுப்பில் உங்களுடைய பங்கெடுப்பு எளிதாக்கப்பட்டிருக்கிறது. நீங்களே கூட உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய முடியும்.  பணியாளர்கள் வருவதற்கு 15 நாட்கள் முன்பாக இதற்கான வசதிகள் தொடங்கப்படும்.  நீங்கள் உங்களுக்கு சௌகரியமான நேரத்தில், தகவல்களை நிரப்பலாம்.  நீங்கள் செயல்பாட்டை நிறைவு செய்யும் போது, உங்களுக்கு ஒரு சிறப்பான அடையாள எண் கிடைக்கும்.  இந்த அடையாள எண் உங்களுடைய செல்பேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெறும்.  பிறகு பணியாளர்கள் உங்கள் இல்லம் வரும் போது, நீங்கள் இந்த அடையாள எண்ணைக் காட்டி தகவல்களை நிறைவு செய்து கொள்ளலாம்.  ஆகையால் மீண்டும் தகவல்களை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.  நேரமும் மிச்சம், செயல்பாடும் சுலபம். 

நண்பர்களே, எந்த மாநிலங்களில் முதல்கட்ட சுயக் கணக்கெடுப்பு நிறைவெய்திவிட்டதோ, அங்கே கணக்கெடுப்புப் பணியாளர்கள் வாயிலாக வீடுகளின் பட்டியலிடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது.  இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடியே 20 இலட்சம் குடும்பங்களின் வீடுகளைப் பட்டியலிடும் பணி நிறைவடைந்துவிட்டது.  நண்பர்களே, தேசத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறும் அரசுப்பணி மட்டுமல்ல.  இது நம்மனைவரின் பொறுப்பும் ஆகும்.  உங்களின் பங்களிப்பு இதிலே மிகவும் அவசியமாகும்.  நீங்கள் அளிக்கும் தகவல்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, இரகசியமாக வைத்திருக்கப்பட்டு, டிஜிட்டல் பாதுகாப்போடு பராமரிக்கப்படும்.  வாருங்கள், நாமனைவரும் இணைந்து இந்தச் செயல்பாட்டிலே பங்கெடுப்போம்.  மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ஐ வெற்றி பெறச் செய்வோம்.

பாரதத்தின் பாலாடைக்கட்டிக்கு சர்வதேச விருதுகள்!

நண்பர்களே, நமது தேசத்திலே உணவுப் பாரம்பரியம் என்பது சுவையோடு மட்டும் நின்று போகும் ஒன்றல்ல.  இதே பாரம்பரியத்தில் ஒரு சுவாரசியமான பகுதிதான் பாரதத்தின் Cheese, அதாவது பாலாடைக்கட்டி.  சில நாட்கள் முன்பாக ஒரு ட்வீட் வாயிலாக நான் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தேன்.  ப்ரேசில் நாட்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சர்வதேச பாலாடைக்கட்டி போட்டியிலே பாரத நாட்டின் பாலாடைக்கட்டியின் இரண்டு ப்ராண்டுகளுக்கு புகழ்மிக்க விருதுகள் கிடைத்தன.  இந்தச் சாதனை பற்றிய விவாதம் சமூக ஊடகத்திலே பரவிக் காணப்பட்டது.  பாலாடைக்கட்டியின் பல வகைகள் பற்றியும் பேச வேண்டும் என்று பலர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

யாக் மாட்டின் பாலில் புகழ்பெற்ற பாலாடைக்கட்டி!

நண்பர்களே, பாரதத்தின் பால்வளத்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.  இந்தத் துறையிலே மதிப்புக்கூட்டல் காரணமாக நமது பாரம்பரியமான சுவைக்கு புதியதொரு அடையாளம் கிடைத்திருக்கிறது.  இன்று பாரத நாட்டு பாலாடைக்கட்டி உலகெங்கிலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  காலை உணவாகட்டும், மதிய உணவாகட்டும், இரவு உணவாகட்டும், உலகின் உணவுத் தட்டுக்களில் பாரத நாட்டின் சுவை சென்றடைந்திருக்கிறது.  ஜம்மு கஷ்மீரின் கலாரி பாலாடைக்கட்டியையே எடுத்துக் கொள்வோமே.   இது கஷ்மீரின் மோஜரேலா என்று அழைக்கப்படுகிறது.  குஜ்ஜர்-பகர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தலைமுறை தலைமுறையாக இதைத் தயாரித்து உண்டு வந்திருக்கிறார்கள்.  அதே போல சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் லத்தாக்கிலே ச்சுர்ப்பீ மிகவும் பிரசித்தி பெற்றது.  மலைகளின் தூய்மையையும், அழகையும் இதன் சுவையிலே உணர முடியும்.  இந்தப் பாலாடைக்கட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது யாக் மாட்டின் பாலைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

உலகச் சந்தையில் பாரத பாலாடைக்கட்டி

நண்பர்களே, மகாராஷ்டிரம் மற்றும் குஜாராத்திலே, டோப்லி நு பனீர், இதை சுர்தீ பாலாடைக்கட்டி என்று அழைப்பார்கள்.  இவற்றுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது.  நான் இங்கே சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் நமது தேசத்திலே சுவை மிகவும் பரந்து விரிந்துபட்டது.  இன்று இந்தப் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைத்து வருகிறது.  பல பாரத நாட்டு நிறுவனங்கள் இந்தத் துறையில் முதலீடு செய்து வருகிறார்கள்.  நவீன தொழில்நுட்பம் வருகிறது, சிறப்பான பேக்கேஜிங் செய்யப்படுகிறது, நமது உற்பத்தி உலகத்தரத்தோடு முன்னேறி வருகிறது.   இதன் விளைவாக, பாரத நாட்டுப் பாலாடைக்கட்டி இப்போது தேசத்தின் எல்லைகளைத் தாண்டி உலகச் சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் சென்று எட்டி வருகிறது.  இன்று நாம் உள்ளூரிலிருந்து உலகளாவிய நிலை வரை பேசுகிறோம், அதிலே பாரதநாட்டுப் பாலாடைக்கட்டி என்ற எடுத்துக்காட்டு, நமக்கு முன்செல்லும் பாதையை எடுத்துக்காட்டுகிறது.  பாரத நாட்டின் சுவை, பாரத நாட்டின் பாரம்பரியம், பாரத நாட்டின் தரம், உலகத்தோருக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும், பாரத நாட்டோடு புதியதொரு இணைப்பை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

ரவீந்திர சங்கீத்தின் தாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, இந்த மாதம் தேசத்தின் பல பாகங்களில் புதுவருடத்தோடு கூடவே பல பண்டிகைகள்-விழாக்கள் கொண்டாடப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு மே மாதம் 9ஆம் தேதியன்று போச்சீஷே போய்ஷாக் சந்தர்ப்பத்திலே குருதேவர் டகோரின் பிறந்த நாளை நாம் கொண்டாட இருக்கிறோம்.  குருதேவர் பன்முகத் திறமைகள் கொண்ட ஒரு ஆளுமை ஆவார்.  அவர் ஒரு பெரும் கவிஞர், சிந்தனாவாதியும் கூட.  அவர்பல புகழ்மிக்க அமைப்புக்களுக்கு வடிவம் கொடுத்தவர்.  நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் அதே வேளையில், கிராமங்களுக்கு வளம் சேர்க்கும் தொழில்களின் ஆதரவாளராக இருந்தவர் குருதேவ் டகோர்.  அவருடைய ரவீந்திர சங்கீத்தின் தாக்கம் இன்றும் கூட உலகெங்கிலும் நம்மால் காண முடியும்.  சாந்தி நிகேதனத்திற்கு நான் மேற்கொண்ட பயணங்கள் என்னால் மறக்க முடியாதவை.  இந்த அமைப்பை அவர் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு உருவாக்கி மெருகூட்டினார்.  அவருக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய பணிவான நினைவாஞ்சலிகள்.

கோடைக்காலத்தில் கவனம் தேவை

நண்பர்களே, மே மாதம் 1857 என்பது முதல் சுதந்திரப் போரின் நினைவலைகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது.  மக்களிடம் தேசபக்தி உணர்வைத் தட்டி எழுப்பிய, பாரத அன்னையின் அனைத்து வீரப் புதல்வர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.  இந்தவேளை பள்ளி மாணவர்களின் விடுமுறைக்காலமும் கூட.  அவர்கள் தங்கள் விடுமுறையை நன்றாகக் களிக்கட்டும், புதியதாக ஒன்றைக் கற்கும் முயற்சியை மேற்கொள்ளட்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.  இந்தக் கோடைக்காலத்தில் நீங்கள் அனைவரும் உங்களுடைய உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

சில புதிய விஷயங்களோடும், நாட்டுமக்களின் சில புதிய சாதனைகளோடும்  அடுத்த மாதம் உங்களை நான் மீண்டும் சந்திக்கிறேன்.  பலப்பல நன்றிகள். 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

1001379238 - 2026

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அஹ்சானுத்தீன் அமனுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய அமர்வில் சபரிமலை உட்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகள் மற்றும் அரசியலமைப்பின் கீழ் மத சுதந்திரத்தின் வரம்புகள் குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவாதத்தின்போது நீதிபதி பி.வி. நாகரத்னா,“தென்னிந்தியாவில் ஒரு கோவில் சைவம், வைணவம் அல்லது ஸ்ரீ வைணவ வழிபாட்டு முறையைப் பின்பற்றினால், அந்த நடைமுறைகளின் அடிப்படையில் அது ஒரு ‘மத உட்பிரிவு’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு சைவ வழிபாட்டு முறையில், வைணவ முறைப்படிதான் வழிபாடு நடக்க வேண்டும் என்று வைணவர்கள் கோர முடியாது. அந்தந்த வழிபாட்டு முறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதற்காக ஒரு தனி அமைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு இந்து எந்தக் கோவிலுக்கும் செல்லலாம்.” என்று விளக்கினார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத்துராஜ், “எனது வழிபாட்டு முறையை ஒட்டுமொத்த இந்து மத நடைமுறையாகக் கருதிச் சோதிக்க வேண்டாம்” என்று வாதிட்டபோது, நீதிபதி அஹ்சானுத்தீன் அமனுல்லா குறுக்கிட்டு, “நீங்கள் உங்களை ஒரு இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், இந்துக்களுக்கான தனிநபர் சட்டங்கள் மற்றும் திருமணச் சட்டங்களால் நீங்கள் நிர்வகிக்கப்பட்டால், தானாகவே நீங்கள் இந்து மதப் பிரிவின் கீழ் வருகிறீர்கள். அப்போது வழிபாடு என்பது மதத்தின் ஒரு அங்கமாகிறது,” என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “இந்து மதம் என்பது கடவுள் நம்பிக்கை மற்றும் நாத்திகம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு ஊசல் போன்றது,” என்று வாதிட்டார். அதற்கு நீதிபதி நாகரத்னா, “நீங்கள் இதை இந்து மதப் பார்வையில் மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால், நாங்கள் இந்து அல்லாத பிற மத உட்பிரிவுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் ஆய்கிறோம். அடிப்படை உரிமைகள் என்பது ஒரு இயல்பான மனிதனுக்கானது, சட்டப்பூர்வமான நபருக்கானது அல்ல. இப்போது சிலைக்கு மனசாட்சி இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலைக்கு மனசாட்சி இருக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள 7 கேள்விகள்:

சட்டப்பிரிவு 25-ன் கீழ் மத சுதந்திரத்தின் வரம்பு என்ன?

தனிநபர் மத உரிமை (பிரிவு 25) மற்றும் மத உட்பிரிவுகளின் உரிமை (பிரிவு 26) ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு என்ன?மத உட்பிரிவுகளின் உரிமைகள், மற்ற அடிப்படை உரிமைகளுக்குக் கட்டுப்பட்டவையா?அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ‘ஒழுக்கம்’ (Morality) என்பது எதைக் குறிக்கிறது?

மத நடைமுறைகளில் நீதிமன்றம் எந்த அளவுக்குத் தலையிட முடியும் (Judicial Review)?சட்டப்பிரிவு 25(2)(b)-ல் உள்ள “இந்துக்களின் பிரிவுகள்” என்பதன் பொருள் என்ன?

ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சாராத ஒருவர், அந்த மதத்தின் நடைமுறைகளை எதிர்த்து பொதுநல வழக்கு (PIL) தொடர முடியுமா?இந்தக் கேள்விகளுக்கான வாதபிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

election polling machine tskrishnamurthy - 2026

தேர்தல்: சிறப்புப் பேட்டி

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சந்திப்பு: எஸ். சந்திரமெளலி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

19 வயதில் பாங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தவர். அதன்பின் 1963ல், இந்திய வருவாய்த்துறையில் சேர்ந்தார். டெல்லியில் மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் திறம்படப் பணியாற்றியவர். 2000 முதல் 2004வரை தேர்தல் ஆணையராகவும், 2004 பிப்ரவரி முதல் 2005 மே வரை தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பணியாற்றியவர்.

தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம் இவர்தான். இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் குறித்து இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மனைவி கீதா ஒரு வீணைக் கலைஞர்.


*உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கே 18 வயது நிரம்பிய குடிமக்கள் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, மே. வங்காளம், அஸ்ஸாம், மற்றும் புதுச்சேரி சட்ட மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூடு பறக்கிறது.

இந்தியாவின் தேர்தல் ஆணையராகவும், அதனையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. தற்போது சென்னையில் வசித்து வரும் அவர் அமுதசுரபிக்கு அளித்த தேர்தல் சிறப்புப்பேட்டி!


“தேர்தல் கமிஷன் ஒரு சுதந்திரமான அமைப்பு என்று உறுதிப்படுத்தியதில் டி.என்.சேஷனின் பங்கு முக்கியமானது. அப்படி ஒரு நிலை ஏற்பட இந்தியா சுதந்திரம் பெற்று அத்தனை காலம் ஆனதற்கு என்ன காரணம்?”

“திரு. டி.என்.சேஷனுக்கு முன்பும் கூட தேர்தல் கமிஷன் பாரபட்சமில்லாமல்தான் நடந்துகொண்டது. அந்தக் காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் எண்ணிக்கை அதிகமில்லை. தேர்தல் காலத்தில் அந்தக் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று புழுதிவாரித் தூற்றிக் கொண்டதில்லை.

எனவே, முந்தைய தேர்தல் கமிஷனர்களுக்கு, தேர்தல் நடத்துவது அத்தனை கஷ்டமாக இல்லை.

அதே சமயம், தேர்தல் கமிஷன் வரலாற்றில், அது ஒரு சுதந்திரமான அமைப்பு என உறுதிப்படுத்தியதில் திரு. சேஷனுக்கு முக்கியமான பங்கு உண்டு.

அவரது காலகட்டத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைதான் அவர் தேர்தல் கமிஷன் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதை உறுதிப் படுத்தவேண்டிய கட்டாயமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் அதைச் செய்தார். அதன் மூலமாக சில நல்ல மாற்றங்களும் ஏற்பட்டன.

இன்று ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்ட அவலம் நிலவுகிறதே?”

“கம்பெனிகள், அரசியல் கட்சிகளுக்கு சில விதிமுறைகளின்படி லாபத்தில் ஒரு பகுதியை நன்கொடை தரலாம் என இருந்தது. ஆனால், அதை மாற்றி, தேர்தல் பத்திரத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அன்னிய நிறுவனங்கள் கூட பொய்யான பெயரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரலாம்; கறுப்புப் பணத்தையும் தரலாம். இது தவறு என சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது.

தேர்தல் பத்திரம் சரியான வழி இல்லை என்பதுதான் என் கருத்தும். கம்பெனிகள் பணம் கொடுப்பது களங்கமான அரசியலுக்கு வழி வகுக்கும்.

தேசிய அளவில் தேர்தல் நிதி அமைப்பு என்று ஓர் அமைப்பினை உருவாக்கி, அந்த அமைப்பு நன்கொடைகள் பெற்று, விதிமுறைகள் வகுத்து, அதன்படி அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலுக்கு செலவு செய்ய நிதி கொடுக்கலாம் என நான் ஓர் ஆலோசனை சொல்லி இருக்கிறேன்.

ஜெர்மனியில் கூட இதுபோன்ற ஓர் ஏற்பாடு அமலில் உள்ளது. மேலும், இன்று ஏராளமாக பணம் வைத்திருப்பவர்கள்தான் தேர்தலில் நிற்கமுடியும் என்ற நிலைமை இருக்கிறது. இது வருத்தத்துக்குரியது.

“ஊழல் செய்து குறிப்பிட்ட காலம் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க தடை செய்யும் சட்டம் நம் நாட்டில் இருக்கிறது. ஆனாலும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் அதிக அளவில் அதன் கீழ் தண்டனை பெறவில்லையே?”

“அதற்கு நம் நீதித்துறை நடைமுறைகளில் குறிப்பாக தேர்தல் தொடர்பான வழக்குகள் விஷயத்தில் நிறைய மாற்றங்கள் தேவை.

தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஒரு வருடத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் தேர்தல் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.

அத்தகைய வழக்குகளை ஐந்தாறு ஆண்டுகளுக்கு இழுத்துக்கொண்டே போனால், அதன் அடிப்படை நோக்கமே தகர்ந்து போய்விடுகிறது.

தேர்தல் முடிவு வந்து 45 நாட்களுக்குள் அது குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என விதி உள்ளது. ஆனால் அந்த வழக்கை இவ்வளவு காலத்தில் முடிக்க வேண்டும் என விதி ஏதுமில்லை.

பாராளுமன்றம் அல்லது சட்டசபையின் காலம் முடிந்த பிறகும், அவை தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வருவதில்லை.

பிரேசில் நாட்டில் தேர்தல் கமிஷனும், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியும் சேர்ந்து, தேர்தல் டிரிபியூனல் ஒன்றை அமைத்து இத்தகைய வழக்குகளில் உடனடியாக முடிவுகள் எடுக்கிறார்கள்.

“ஓட்டுக்குப் பணம் என்பது ஜனநாயகத்துக்கு கேவலம் இல்லையா?”

“ஆமாம்! ஆமாம்! அதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.

“மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து சில கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?”

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் எந்தவிதமான தவறும் இல்லை. அதை தவறாகப் பயன்படுத்த முடியாதபடி அதில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

அந்த இயந்திரங்கள் பாதுகாப்புத் துறை தொடர்பு உடைய பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களால் இல்லை.

அமெரிக்காவில், ஒருமுறை தனியார் நிறுவனம் மூலமாக வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரித்தார்கள். ஓர் அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுத்த கம்பெனி என்பதால், இயந்திரங்களின் நேர்மையும், பாதுகாப்பும் கேள்விக்குள்ளாயின.

வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்பட்டபோது வாக்குச் சாவடிகளில் ஏராளமான தில்லுமுல்லுகளும், வாக்குச் சாவடிகளையே கைப்பற்றும் வன்முறைகளும் நடந்தன. பீகார், மே. வங்காளம் போன்ற சில மாநிலங்களில் இது வெகு சகஜம்.

எனவே, நாம் ஒரு போதும் வாக்குச் சீட்டுப் பயன்பாட்டுக்குப் போகக் கூடாது. இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் நிறைய அனுகூலங்கள் உள்ளன. அதில் இப்போது “வி பாட்” போன்ற இன்னும் சில கூடுதல் வசதிகளும் வந்துள்ளன.

வாக்களிப்பு துவங்குவதற்கு முன்பு, மாதிரி வாக்குப் பதிவு நடத்தி எல்லாம் சரியாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தும் செலவு கணிசமாகக் குறைகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை.

“தேர்தல் காலத்தில் பண நடமாட்டத்தைக் கண்காணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் உண்மையிலேயே பலனளிக்கிறதா?”

“கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை வரவேற்கலாம். ஆனால், இதன் மூலமாக பண நடமாட்டத்தை முற்றிலுமாக நிறுத்திவிட முடியாது.

இப்போதுதான், டோக்கன் கொடுத்துவிட்டு, தேர்தலுக்குப் பின் பணம் கொடுப்பதாகவும், கண்காணிப்பாளர்களை திசைதிருப்பிவிட்டு, பணத்தைக் கொண்டு போவதாகவும் தெரிய வருகிறதே!

“தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்கள் என்று பலர் மீது வழக்குகள் பதியப்படுகின்றன. தேர்தலுக்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆகின்றன?”

“ஆட்சிக்கு வரும் கட்சி தங்கள் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை கண்டுகொள்ளவே மாட்டார்கள். எதிர்க் கட்சியினர் மீது என்றால், பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கலாம்.

தேர்தல் நேரத்தில், ஒரு சில விஷயங்களில் மட்டுமாவது உடனடி நடவடிக்கை எடுத்து, தண்டனையும் வழங்க வேண்டும். அப்போதுதான் அந்த வழக்குகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும். நடவடிக்கை இல்லாது போனால், ஒருவரும் அந்த நெறிமுறைகளுக்கு மதிப்பளிக்கமாட்டார்கள்.

“தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே நடந்துகொள்வதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்களே!”

“தேர்தல் கமிஷனைப் பொறுத்தவரை இது போன்ற குற்றச்சாட்டுக்கள் வாடிக்கையானவைதான். என்னைக் கூட பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சில கட்சியினர் சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரை தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களில் 90% உண்மையானவை இல்லை. தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டுக்களில் பல ஆதாரமில்லாதவை. புகார் சொல்பவர்களால் நிரூபிக்க முடியாதவை.

தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையம் என்றாலும், அது தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்வது மாநில அரசு அதிகாரிகளும், ஊழியர்களும்தான்.

ஆங்காங்கே சில குளறுபடிகளும், தவறுகளும் நிகழலாம். ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்தின் நேரடிப் பார்வையில்தான் அவை நடக்கின்றன என்று சொல்வது தவறு.

“வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் குறித்த சர்ச்சைகள் பற்றி?”

“நான் இருந்த காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டுக்கு வீடு சரிபார்ப்புப் பணி நடக்கும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடக்கவில்லை.

அரசியல் சாசனப்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இந்தியக் குடிமக்கள்தான் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். ஆகவே, தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி அவசியமாகிவிட்டது.

அது தேர்தல் கமிஷன் செய்யவேண்டிய முக்கியமான கடமை. அது துவங்கிய நேரம் குறித்த சர்ச்சைக்குள் நான் போகவிரும்பவில்லை.

“தமிழக வாக்காளர்களுக்கு உங்கள் அறிவுரை?”

“வாக்களிப்பது உங்கள் தேசியக் கடமை. எனவே, தவறாமல் வாக்களியுங்கள். ஊடகங்கள், அரசியல் கட்சிகள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு, வேட்பாளர்களின் யோக்யதாம்சங்களைத் தெரிந்துகொண்டு, நீங்களே சிந்தித்து, நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!

தேர்தல் நாளன்று வாக்களிப்பதைவிட முக்கியமானதாக வேறு எதையும் கருதாதீர்கள்!

(அமுதசுரபி ஏப்ரல் 2026 இதழிலிருந்து.)

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

sriramanuja - 2026

ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

ஹிந்து மதம், பௌத்த மதம், கிறிஸ்தவ மதம். முகம்மதிய மதம் என்று மதங்களினுடைய ஸ்தூலப் பெயர்கள் பற்பலவயிருந்தாலும், அவை எல்லாவற்றினுள்ளும் ஊடுருவிச் சென்று வியாபித்து நிற்கும் கொள்கைகள் மூன்று தன்மையனவாம்; அவையாவன:- துவைதம், விஸிஷ்டாத்வைதம், அத்வைதம்.

இவற்றினுள்ளே, விஸிஷ்டாத்வைதமானது ஞானமும், பக்தியும் நலமுறச் ஸமமாகக் கலந்துள்ள மதம் என்பதில் எள்ளளவும் ஸந்தேகமில்லை.

துவைத மத சித்தாந்தமானது வெறும் பக்தியையே ஆதாரமாகக் கொண்டது: அத்வைதமானது கேவலம் ஞானத்தையே ஆதாரமாகக் கொண்டது; ஆனால், விசிஷ்டாத்வைத மதமோ பக்தி, ஞானம் இவ்விரண்டையும் ஸமப்படுத்தி, ஹிருதய உணர்ச்சியுடனே ஆத்ம ஞானத்தையும் ஊட்டுகின்றது.

கேவலம் பக்திமாத்திரம் இருந்தால் அது வெறும் மூட பக்தியாகி, குருட்டு விஸ்வாசமாக முடிந்து, ஒரு மனிதன் ஆசையுடனே வளர்த்த கரடிக்குட்டியானது அவன் முகத்திலே ஒரு ஈ உட்கார, அவன் மீது தனக்குள்ள அன்பு மிகுதியினால் அதனை அது சகிக்காது, அந்த ஈயைக் கொல்லக் கருதி, அவன் முகத்திலே ஓங்கி ஒரு அறை அறைய, ஈயும் அவனும் ஆகிய இருவரும் இறந்துவிட்ட கதை போலாய் விடுகின்றது.

வெறும் ஞானமோ ஹிருதயத்திலே ஈரம் வளர்க்காது. அன்பு என்பதை அறியாது, கேவலம் வறட்சி பெற்ற அறிவாகி விடுகின்றது. ஆனால், பக்தியும், ஞானமும் சேர்ந்த விஸிஷ்டாத்வைதமோ இவ்விரண்டையும் ஏகோபித்து ஒரே காலத்தில் வளர்ந்து, “ஹிருதயம், மூளை ஆகிய இரண்டிலே ஒன்றைவிடஒன்று உயர்ந்ததில்லை”, என்றும் “மநுஷ்ய வர்க்கத்தின் துக்க நிவிர்த்திக்கு இவ்விரண்டும் அவசியமேயாம்”, என்றும் நிரூபிக்கின்றது. ஆகையால், விஸிஷ்டாத்வைதமே சிரேஷ்டமான மதமாகும்:

ஆகவே, அதனைப் பிரகாசப்படுத்திய ஸ்ரீ ராமானுஜர் ஓர் மஹா புருஷர் என்பதில் என்ன ஸந்தேகம்? இம் மஹானுடைய அன்புக்கும் அறிவுக்கும் இணையாக எதையும் சொல்ல முடியாது.


ஸ்ரீ ராமானுஜர் நூலின் முன்னுரையில் விடுதலைப் போராட்டத் தியாகி ஸ்ரீ சுப்ரமணிய சிவா

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜபாளையம் – கொல்லம் சாலையில் புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. 8 சமுதாயத்தினர் சார்பில் சித்திரை மாதம் 11 திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெசவாளர்களால் திரிக்கப் பட்ட கொடிக் கயிறு, நேற்று இரவு பெட்டி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

1001372263 - 2026

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கொடி மரம், பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டிய பிறகு, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்தில் நெற்கதிர்கள் வைத்து கட்டி, நிலை மாலை சார்த்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்னும் 9 நாட்களுக்கு தினம் ஒரு சமுதாயத்தினர் சார்பில் திருவிழா நடைபெற்ற பின்னர் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது.

1001372264 - 2026

அடுத்து வரும் 9 நாட்களும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் திருவிழா கொண்டாடப்பட்டது. வேப்பிலை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல் சப்பரம், பூச்சப்பரம், தண்டியல். தட்டுசப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும் .

இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏப்ரல் 30 காலை முதலே கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்துவர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு
கோயிலினுள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டு பின்னர் அம்மன் சப்பரம் பக்தர்கள் படை சூழ பூக்குழி திடலுக்கு எடுத்து வரப்பட்டு பூக்குழி விழா விமரிசையாக நடைபெறும்..

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம் தேர்ந்தெடுப்போம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

வருகின்ற ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயகத்தின் திருவிழாவான இந்த தேர்தலில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நமது மாநில ஆளுமையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு நாம் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நமக்கு கிடைத்தப் படிப்பினையை கவனத்தில் கொண்டு, வருங்கால ஆட்சியை நாம் தேர்ந்தெடுக்க ஜனநாயகம் தந்திருக்கும் வாக்குரிமை எனும் ஆயுதத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்தின் தாயகம் நமது தமிழ்நாடு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டது. அதற்குச் சான்றாக செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் திருக்கோவில் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது. மேலும் குடவோலை முறை பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதில் வேட்பாளருக்கான தகுதி மிகத் துல்லியமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவற்றை காணும்போது நவீன உலகில் வாழும் நாம் ஏன் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.

மகாகவி பாரதி பாடியதைப் போல நாம் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதற்கிணங்க, உலகிலேயே இந்திய ஜனநாயகத்தில் தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாக்குரிமை எந்த வேறுபாடும் இல்லாமல் முதன்முதலில் வழங்கப்பட்டது. நமது நாடு நமக்கு அளித்த பெருமைமிகு வாக்குரிமையை நாம் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு விவசாயி நல்ல விதைகளை விதைக்க வில்லை என்றால் எப்படி அறுவடையில் முழு பலனைப் பெறாமல் போவானோ, அதுபோல இந்த தேர்தலில் நல்ல ஆளுமை இல்லாத பதர்களை தேர்வு செய்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் அனுபவிப்பது வேதனை ஆகும்.

இறைவன் நமக்கு துணை இருப்பார். போராடி நமக்கான வெற்றியை பெற வேண்டியது நமது முயற்சி ஆகும். மகாபாரதத்தில் கிருஷ்ணர் துணை இருந்தார், அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினார். போரில் வெல்ல நீதிபோதனைகளை அளித்தார். ஆனால் போராட வேண்டியது அர்ஜுனன் தான் என உணர்த்தினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக எனும் தீய சக்தி தேசத்தை அவமதிக்க துடித்தது. ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சிதைக்க செயல்பட்டது. இந்துக்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணித்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றே போராடி அனுமதி வாங்க வேண்டியிருந்தது.

இந்துக்களையும் இந்து நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் அவமதித்தது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும். அதற்கெல்லாம் மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அதனை அவமதித்து.

கிறித்துவ முஸ்லிம் மதத்தலைவர்கள் திமுகவை நேரடியாக தங்களுக்கு சாதகமான கட்சி என்று தெரிவித்துள்ளனர். பகிரங்கமாக தங்களது ஆதரவை திமுகவிற்கு தெரிவித்ததை செய்திகளில் பார்க்கிறோம். இந்துக்களாகிய நாம் நமக்கு ஆதரவான கட்சியை ஆதரித்து, தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினால் அதனை மதவாதம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை. நேரடி அரசியலில் ஈடுபடாது. ஆனால் அரசியலில் இந்துக்களின் நலனை எடுத்துக் கூறுவது நமது கடமை.

எனவே வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். இந்து விரோத திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.