Home Blog Page 6

பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

annamalai bjp tn leader - 2026

தமிழக பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தாம் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தாம் பார்த்து வந்த ஐபிஎஸ் பணியைத் துறந்து, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார் அண்ணாமலை. அதன் பின் தாம் அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். தாம் பாரதப் பிரதமர் மோடி மீது கொண்ட மதிப்பு மற்றும் பற்றின் காரணமாக தாம் பாஜக.வில் இணையப் போவதாகக் கூறினார். 

2020 ஆகஸ்ட் 25 அன்று, தில்லியில் தேசியத் தலைவர்கள் முன்னிலையில், அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் பாஜக.,வில் சேர்ந்த ஒரு வாரத்துக்குள், அவர் பாஜக., தமிழக துணைத் தலைவராக நியமிக்கப் பட்டார். 

ஜூலை 2021ல் அவர் பாஜக.,வின் தமிழக மாநிலத் தலைவராக நியமிக்கப் பட்டார். அதன் பின் பாஜக.,வில் அவரது அரசியல் பயணம் உச்சத்தை அடைந்தது. 

ஜூலை 2023 முதல் பிப்ரவரி 2024 வரை அவர் தமிழகம் முழுதும் மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாத யாத்திரை அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. அவரது யாத்திரைகளில் பாரதப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பங்கேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தனர். 

 2024ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

ஏப்ரல் 2025ல் அடுத்து வரப் போகும் தேர்தல்களை முன்னிட்டு, அவர் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் தேசியப் பொதுக்குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டார். 

அதன் பின் அடுத்த ஒரு வருடத்தில் பாஜக.,வில் இருந்து வெளியேறி, தாம் ஏற்கெனவே தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்த ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்புக்கு மீண்டும் புத்துயிரூட்டி, அதன் வழியே தனது தனிப்பட்ட அரசியல் பயணம் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்.

மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன. 

இந்நிலையில் அவரது விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசியலில் முக்கிய நிகழ்வாக ஆனது. சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலை வீடியோவில் தோன்றிய அவர், தனது ராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கியதோடு, ‘வளர்ந்த பாரதம்’ கனவோடு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாகவும் பிரகடனம் செய்தார்.

மதியம் 12 மணிக்கு சமூகத் தளப் பக்கத்தின் வாயிலாக தமது முடிவினை தெரிவிக்கப் போவதாகக் கூறி அவர் சமூகத் தளத்தில் பேசியவை…

“நான் டிசம்பர் 4, 2025 அன்றே பாஜக தேசியத் தலைமைக்குச் சென்று கட்சியிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்துவிட்டேன். இந்த முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் 2025லேயே இதை மூத்த தலைவர்களிடம் தெரிவித்து விட்டேன். அவர்களை மன ரீதியாகத் தயார் படுத்தினேன். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைமை தேர்தல் முடியும் வரை பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு கோரியது, அதை மதித்து எனது கடமையை நிறைவேற்றிய பின்னரே இப்போது விலகியுள்ளேன்… என்றார் அண்ணாமலை.

“என்னுடைய கருத்துகளுக்கு கட்சி தலைமை செவிசாய்க்கவில்லை. எனவே எதிர்காலத்தை நோக்கி புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்ட அண்ணாமலை, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படப் போவதாகக் கூறினார்.

தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப கால நினைவுகளைப் பகிர்ந்த அண்ணாமலை, 2020-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை அவரது அரசியல் கட்சியில் இணைய அழைத்ததை நினைவுகூர்ந்தார். “ரஜினி சார் மீது மிகுந்த மரியாதை இருந்தபோதிலும், அப்போது சில காரணங்களால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, தமிழக மக்களுக்கான பிராந்திய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இதற்கென wearetheleaders.org என்ற இணையதளத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். “வளர்ந்த பாரதத்தை நோக்கி இளைஞர்களும் பொதுமக்களும் இணையலாம்” என்று அழைப்பு விடுத்தார்.

இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்: இயக்கத்தில் இணையும் அனைவருக்கும் அரசியல், சமூகப் பயிற்சி அளிக்கப்படும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்படும்.

வாரிசு அரசியல் ஒழிப்பு: தகுதி அடிப்படையிலான அரசியலை ஊக்குவிக்கும். பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

நிரந்தரப் பதவிகள் இல்லை: “நிரந்தர தலைவர், நிரந்தர எம்எல்ஏ, எம்பி என்ற கலாச்சாரம் இருக்காது. தகுதியானவர்கள் முன்னிறுத்தப்படுவார்கள்” என்று அண்ணாமலை உறுதியளித்தார்.

அடுத்த தேர்தலில் முழு பலம்: வரும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

அண்ணாமலை தமிழக அரசியலில் தனிநபர் வழிபாட்டு அரசியலை மாற்றி, கூட்டுத் தலைமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை கொண்டு வருவதாக வலியுறுத்தினார். அவரது இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

usilampatti murugan temle kumbabishekam - 2026

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிக்கள் மேற்கொள்ளப்பட்டு சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள், மூலஸ்தானம் கோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு பூஜைகள் செய்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இதில், கருவறையில் உள்ள முருகனுக்கு பால், தயிர்,இளநீர்,சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் திருமுருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இதில் , உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். தொடர்ந்து , தனியார் திருமண மண்டபத்தில் ஏராளமான பொது மக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

va ve su iyer mandapam seranmahadevi - 2026

— ராமலிங்கம் கிருஷ்ணா —

இந்திய விடுதலைக்காக முதன்மையாக பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். வேங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881-ல் பிறந்தார். இவர் தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

வ.வே. சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அந்த வயதிலே அத்தை மகள் பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார், பின்னர் எம்.ஏ. தேர்ச்சி, சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907-ல் வ.வே.சு. ரங்கூன் வழி லண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரர் ஆக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

லண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களும் அப்பயிற்சியில் இனைந்தனர்.

1909-ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு. வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர். *பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9-ல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். சங்கேத பாஷையில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது.

கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தனர்.

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப் பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920-ல் பொது மன்னிப்புப் பெற்று திருச்சியில் உள்ள தனது வரகனேரி இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920-ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவு கொள்ள நினைத்தது, தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜத்துவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.

மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.

பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்து உட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். “பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்.”

தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம், பாபநாசம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார்.

தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு “ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா” என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4-ல் அணைந்தது.

வாழ்க நீர் எம்மான்….

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

perunkulam temple thiruvlalluvar - 2026

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது…

வள்ளுவரை தெய்வப் புலவர் என்றே அழைத்தது நம் தமிழுலகு. உலகின் மற்ற ஒற்றை நபரால் தோன்றிய மதங்கள் பரவுதற்கு முன்பு வியாபித்திருந்த சனாதன தர்மத்தின் கோட்பாட்டை தம் குறட்பாக்களின் தொகுப்பில் அளித்த யோக ரிஷி திருவள்ளுவர். எவ்வித தனித்த அடையாளங்களும் தேவைப்படாத அந்நாளில் பொத்தாம் பொதுவாக வழக்கில் இருந்த தர்மத்தை அவர் சொல்லியிருக்கிறார் என்பதற்காக, அவரது சனாதன தர்ம நெறியை அவரிடம் இருந்து பறித்தல் – தமிழ்ச் சமுதாயத்துக்கே செய்யும் அப்பட்டமான துரோகம், தீங்கு.

நண்பர் குழாத்துடன் அண்மையில் பெருங்குளம் சென்றிருந்த போது எடுத்த படங்கள், கணினி சேமிப்பில் இருந்து திடீரெனத் தலைகாட்டின. அவற்றில் இந்தத் திருவள்ளுவர் படமும் ஒன்று. பெருங்குளம் சிவாலயத்தில் இது போல் ஔவையார், கம்பர், நக்கீரர் உள்ளிட்ட சங்கப் புலவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவை கால ஓட்டத்தில் சிதிலமுற்று எதிரே உள்ள குளத்தில் போடப்பட்டதாகவும் செவிவழியாக தகவல் நிலவி வருகிறது.

இப்போது திருவள்ளுவர் என்று அடையாளப்படுத்தப்படும் விக்ரகம் மட்டும் அம்மன் சந்நிதியில் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அறிவுச் சுடராம் வள்ளுவம் தந்த தெய்வப் புலவருக்கு அகல் சுடரை ஏற்றி வெளிச்சமிட்டு வழிபடுகிறார்கள் அன்பர்கள். வள்ளுவர் எதிரே விளக்கு ஏற்ற வசதியாக வைக்கப்பட்டுள்ள விளக்குத் தட்டு இதைச் சொல்லும்.

இவ்வாலயத்தில் அல்லது இத்தலத்தில் திருவள்ளுவர் தம் திருக்குறளை அரங்கேற்றினார் (அல்லது ஊரார் முன் தம் வாய்மொழியாகச் சொன்னார் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்) என்கிற குறிப்பையும் செவிவழியாக வழிவழியாகச் சொல்லி வருகிறார்கள்.

இனி… இந்தக் கோயிலைப் பற்றியும், இங்கே தெய்வப் புலவர்களான நம் தமிழ்ப் புலவர்களுக்கு சிலைகள் இருந்தமை குறித்தும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள் தம் ‘என் சரித்திரம்’ தொகுப்பில் குறிப்பிட்டுள்ளதை நண்பர்களின் பார்வைக்குத் தருகிறேன். பெருங்குளம் எனும் தலைப்பில் அவர் எழுதியவை இங்கே….
***

பெருங்குளம்‌

அவரிடம்‌ விடை பெற்றுக்கொண்டு பெருங்குளத்தை அடைந்து அங்குள்ள செங்கோல்‌ மடத்துக்குப்‌ போய்‌ மடாதிபதியைக்‌ கண்டேன்‌. நான்‌ போனபொழுது அவர்‌ வீணை வாசித்துக்‌ கொண்டிருந்தார்‌. மிக்க அன்போடு பேசி என்னை உபசரித்தார்‌.

** தங்களுக்கு யமகந்திரிபுகளில்‌ நல்ல தேர்ச்சியுண்டு என்று கேட்டிருக்கிறோம்‌. சிலவற்றைச்‌ சொல்ல வேண்டும்‌ ?” என்றார்‌. எல்லாரையும்‌ வசப்படுத்தும்‌ கலையாகிய சங்கீதத்திலே இன்பம்‌ காணும்‌ அவர்‌ மிகவும்‌ சிரமப்பட்டுப்‌ பொருள்‌ தெரிதற்குரிய யமகந்திரிபுகளிலும்‌ இன்பங்‌ காணும்‌இயல்பினராக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அவர்‌
விரும்பிய பொருள்‌ என்னிடம்‌ நிரம்ப இருந்தது.

மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளையவர்கள்‌ இயற்றிய திரிபுயமக அந்தாதிகளிலிருந்து பல பாடல்களைச்‌ சொன்னேன்‌. 3 எழுத்து முதல்‌ 13 எழுத்துக்கள்‌ வரையில்‌ யமகமாக அமைந்த செய்யுட்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ சொன்னேன்‌. கேட்டுக்‌ கேட்டு அவர்‌ மகிழ்ச்சி அடைந்‌தார்‌. நான்‌ வந்த காரியத்தை அறிந்து தம்மிடமுள்ள ஏடுகளெல்லாவற்றையும்‌ நான்‌ பார்க்கும்படி செய்தார்‌. பல பிரபந்தங்களும்‌ புராணங்களும்‌ அச்சிட்ட நூல்களும்‌ இருந்தன. குறுந்தொகை மூலம்‌ ஒரு பிரதி இருந்தது. அன்று முழுவதும்‌ அங்கே தங்கி அவருடன்‌ சல்லாபம்‌ செய்து கொண்டிருந்தேன்‌.

அவ்வூரிலுள்ள ஆலயத்திற்கு என்னை அழைத்துச்‌ சென்று அதன்‌ சிறப்பை அவர்‌ எடுத்துரைத்தார்‌. அங்கே உக்கிரபாண்டியர்‌ அரசாட்சி செய்தாரென்றும்‌, அவராற்‌ பூசிக்கப்‌ பெற்றமையின்‌ அவ்‌வூர்ச்‌ சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர்‌ என்னும்‌ திருநாமம்‌ வழங்குகிறதென்றும்‌ அறிந்தேன்‌. அந்தப்‌ பாண்டியர்‌ முன்னிலையில்‌ நக்கீரனார்‌ முதலிய சங்கப்‌
புலவர்கள்‌ கூடிய இடத்தில்‌ திருக்குறள்‌ அரங்கேற்றம்‌ நடைபெற்றதென்றும்‌ அங்ஙனம்‌ நடந்த இடம்‌ அதுவேயென்றும்‌ கூறி, அதற்கு அடையாளமாகச்‌ சிவாலயத்தில்‌ 49 புலவர்களின்‌ வடிவமும்‌ உக்கிர பாண்டியர்‌ வடிவமும்‌ அமைந்துள்ள இடத்தை அவர்‌ காட்டினார்‌.

“இங்கே அவர்கள்‌ இருந்தார்களோ இல்லையோ, தமிழ்ப்‌ புலவர்களைத்‌ தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப்‌ போற்றும்‌ வழக்கம்‌ இந்த நாட்டில்‌ இருப்பதை நாம்‌ பாராட்டவேண்டும்‌? என்று நான்‌ எண்ணினேன்‌. 

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

janagai mariamman temple ther - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்

சுமார் 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம் எல் ஏ வடம் பிடித்து துவக்கி வைத்தார் சின்ன கடைவீதி பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேல ரத வீதி வடக்கு ரத வீதி கறிக்கடை சந்து மூலக்கடை பகுதி முத்துக்குமரன் நகை மாளிகை ஆகிய பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்றது

தேரோட்டத்தில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர் தேரோட்டம் நடைபெற்ற இடங்களில் பொது மக்களுக்கு நீர்மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது தேரோட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் சேத்தாலி வேஷம் போட்டும் ஊர்வலமாக வந்தனர்

சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மூலக்கடை பகுதியில் வாடிப்பட்டி தாலுகா தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் வழங்கினார்கள்

தேரோட்ட நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மருது பாண்டியன் வள்ளி மயில் கொத்தாலம் செந்தில்வேல் ரேகா ராமச்சந்திரன் ஜெனகை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி, வசந்த், கவிதா , பெருமாள் உள்ளிட்டோர் சமயநல்லூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் கண்காணிப்பாளர், சோழவந்தான், காடுபட்டி உதவிக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேரை வடம் பிடித்துச் சென்றனர்.

தேரோட்ட நிகழ்ச்சியை மண்டக படிதாரர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு மற்றும் அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

annamalai bjp tn leader - 2026

சி எம். மகாதேவன்

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. அவர் தலைவர் பதவியில் இருந்து விலகியதில் இருந்தே இந்த வதந்தி ரெக்கை கட்டி பறந்து கொண்டு தான் இருக்கிறது. சென்ற டிசம்பரில் கூட கட்சிக்கு பெயர் வைத்து, கொடியெல்லாம் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அண்ணாமலை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் 2 நாளில் பேசுவதாக சொன்னது மேலும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. அதுவும் பாஜக கொடி இல்லாத காரில் வந்தார் என்றெல்லாம் செய்திகளை பார்க்கும் பொழுது சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிறது.

அண்ணாமலை எதற்காக தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்? என்ற கேள்வியில் இருந்து தான் பதில் தேட வேண்டும்.

அண்ணாமலை மீண்டும் மாநிலத்தலைவராக வேண்டும் என்பது தான் ஒவ்வொரு பாஜக தொண்டனின் விருப்பம். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூட அண்ணாமலை மீண்டும் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த நடுநிலை மீடியா ஆட்கள் கூட அண்ணாமலை வந்தால் தான் பாஜகவுக்கு எதிர்காலம் என்று வெளிப்படையாக பேசுகிறார்கள்.

அண்ணாமலைக்கும் மீண்டும் தலைமை பதவியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவர் கட்சி தலைமையிடம் சில உத்திரவாதங்களை கேட்கிறார். அதில் மிக முக்கியமானது எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அண்ணாமலை எதிர்பார்க்கிறார்.

தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறிவிட்டது. விஜயின் வெற்றி முற்றிலுமாக எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது. இன்று திமுக தனிமைப்பட்டு கிடக்கிறது. பதவி இல்லாமல் அதிகாரம் இல்லாமல் திமுகவால் 5 ஆண்டுகளை கடக்க முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் திமுக கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று இப்பொழுதே பேசப்படுகிறது.

பாஜகவின் கொள்கை எதிரி + அரசியல் எதிரி இரண்டுமே திமுக தான். அப்படிப்பட்ட எதிரியுடன் கூட்டணி வைப்பதை அண்ணாமலை ஒருபோதும் விரும்பமாட்டார். அவரது தலைமையில் அப்படி ஒரு இணைவு நடந்தால் அண்ணாமலையின் நம்பகத்தன்மை முற்றிலுமாக சிதைந்துவிடும். ஏற்கனவே அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று கட்சி தலைமை முயற்சித்த பொழுதே அதற்கு தடையாக இருந்தவர் அண்ணாமலை. கடைசியில் அவரது தலைமை பதவியை விட்டுக்கொடுத்து தனது நம்பகத்தன்மையை காப்பாற்றிக்கொண்டார். ஆனாலும் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் அண்ணாமலைக்கு ஏற்பட்டது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று சொல்லலாம். ஆனால் அண்ணாமலை முன்வைக்கும் மாற்று அரசியலுக்கு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது ஒத்துவராது.

அண்ணாமலையின் நோக்கம் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும், பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எப்போதும் பாஜக ஆட்சி வர வாய்ப்பே இல்லை. எனவே தோல்வியே கிடைத்தாலும் களத்தில் போராட நான் தயாராக இருக்கிறேன். நாம் காத்திருப்போம் என்ற அண்ணாமலையின் வழி கட்சி மேலிடத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் அவர் ஒதுங்கி விட்டார்.

இப்போது மீண்டும் தலைவராகி விட்ட இடத்தில இருந்து அவர் பணிகளை துவக்கி கட்சியை ஆக்டிவாக கொண்டு செல்லும் போது நாளை திமுகவுடன் கூட்டணி என்று டெல்லி முடிவு செய்தால் அதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மீண்டும் தலைவராகிறேன், ஆனால் என் வழியில் தான் கட்சி நடக்கும். எந்த தலையீடும் இருக்கக்கூடாது, அதற்கு ஒப்புக்கொண்டால் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் அண்ணாமலையின் ஒரே கண்டிஷனாக இருக்கும்.

ஆனால் டெல்லி தலைமை மாற்றி யோசிக்கிறது. திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பாஜக தயங்கினாலும், திமுகவிடம் இருக்கும் 22 எம்பிக்கள் எண்ணிக்கை அனைத்தையும் மறக்கடிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வருடம் இருக்கும் காலகட்டத்தில் 22 எம்பிக்கள் ஆதரவு கிடைக்கிறது என்பது பாஜகவுக்கு ஜாக்பாட் தான். அதுவும் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையும் குறைகிறது என்பதையும் இங்கே சேர்த்து கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே பாராளுமன்ற தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு வரும் ஆதரவை வாங்கிக்கொள்வோம் என்று நிலைப்பாட்டையும் பாஜக எடுக்கலாம். அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது தான் என்னுடைய பார்வை.

ஆனால் என்னை பொறுத்தவரை காங்கிரசும் பாஜகவும் எப்படி சேர முடியாதோ, கம்யுனிஸ்டும் பாஜகவும் எப்படி சேர முடியாதோ, அகிலேஷ்யாதவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாதோ அதே போல் தான் திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்க முடியாது.

திமுக முன்னெடுத்த பாஜக எதிர்ப்பு என்பது மிக கடுமையானது. நுணுக்கமாக திட்டமிடப்பட்டது. காங்கிரசை காப்பாற்ற, திமுக மீண்டும் அதிகாரத்திற்கு வர மிக தெளிவாக பாஜகவை வில்லனாக கட்டமைத்து வெற்றி பெற்றது திமுக. இன்று வரை அந்த எதிர்ப்பு மனநிலையை முழுமையாக உடைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது பாஜக. அப்படிப்பட்ட எதிரியுடன் கூட்டணி வைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். மாற்று அரசியலுக்காக பாஜக பக்கம் வந்த தொண்டர்களே விரும்ப மாட்டார்கள்.

ஏற்கனவே இருந்த கூட்டணி தானே என்று சால்ஜாப்பு சொல்லலாம். ஆனால் கருணாநிதி காலத்து திமுக வேறு, இன்றைக்கு ஸ்டாலின் காலத்து திமுக வேறு. இன்றைய திமுக தேசவிரோத பிரிவினை பாதையில் நீண்ட தூரம் சென்று விட்டது. இந்து மத எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, பிரிவினைவாதம் இவைதான் இன்றைய திமுக. இதிலிருந்து திமுக தன்னை மாற்றிக்கொள்ளுமா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை.

ஒருவேளை இந்த கூட்டணி அமைத்தால் திமுக சர்வைவ் ஆகிவிடும். ஆனால் பாஜகவால் சர்வைவ் ஆகமுடியாது என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

ஏனென்றால் திமுக முன்னெடுத்த அதே பாஜக எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு அரசியலை விஜய் செய்வார். இன்றைய சமூக வலைதள யுகத்தில் எந்த கேள்விக்கும் பாஜகவால் பதில் சொல்லவே முடியாது. இது ஒரு சுழல். மீளவே முடியாத ஒரு சுழல்.

எனவே திமுக கூட்டணி என்பது ஒரு தற்கொலை முயற்சி. அதைத்தான் அண்ணாமலை அவர்களும் சொல்கிறார்.

இன்று அண்ணாமலை முன் இருப்பதே இரண்டே ஆப்ஷன்கள்.

ஒன்று கட்சி தலைமை சொல்வதை கேட்டு நடப்பது. ஒருவேளை நாளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அவருக்கான பதவி கிடைக்கும். டெல்லி அரசியலை செய்யலாம்.

இல்லையென்றால் தனியாக போராடலாம். சமரசங்கள் செய்து கொள்ளாத தலைவனாக அவர் முன்வைத்த மாற்று அரசியலை நோக்கி பயணத்தை தொடங்கலாம்.

ஆனால் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து 1 மாதம் கூட ஆகாத நிலையில் ஒரு கட்சியை ஆரம்பிப்பது அண்ணாமலைக்கு எந்த வகையிலும் பலன் தராது என்பது என்னுடைய பார்வை.

அடுத்த தேர்தலுக்கு 3 வருடங்கள் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் 5 வருடம். அதுவரை சர்வைவ் ஆக வேண்டும். இங்கிருக்கும் எல்லா கட்சியையும் எதிர்க்க வேண்டும். டெல்லி ஆசியும் இல்லாமல், அதிகாரமும் இல்லாமல் அரசியல் செய்வது சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் அண்ணாமலைக்கும் தெரியும்.

எனவே தான் அண்ணாமலை தனிக்கட்சி என்ற முடிவுக்கு போகமாட்டார் , அவர் இப்போதும் கட்சி தலைமையை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று தான் நான் நம்புகிறேன். 2031 வரை எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று டெல்லி தலைமை முடிவெடுத்தால் அண்ணாமலை 2.0 வெற்றிகரமாக தொடங்கும்.

மோடி மற்றும் அமித்ஷா இருவரும் அண்ணாமலையின் முடிவை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

பொறுத்திருந்து பாப்போம்.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

write thoughts - 2026
#image_title

— ராம் மாதவ் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பழங்குடியினர் புதுடில்லியில் குவிந்தனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150 ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் கூடினர் . சுமார் 500 மாவட்டங்களில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பேரணி, மாநாட்டில் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்ட பழங்குடியினரை ‘பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ , மதம் மாறியவர்களுக்கு பழங்குடியினர் ‘சலுகைகள் கொடுக்கக் கூடாது’ என்று அவர்கள் கோரினர். இதற்காக அரசமைப்பு சட்டம் 342 பிரிவை திருத்தம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

கிறிஸ்துவ மதத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாறிய பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய மரபுகளை பின்பற்றுவதில்லை. எனவே அவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் வாதித்தார். அரசமைப்பு சட்டப்பிரிவு 342 துணை பிரிவு 3 இல் திருத்தம் செய்ய வேண்டும் என்று 235 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் இந்திரா காந்தியிடமும் நாடாளுமன்ற கூட்டு குழுவிடமும் சமர்ப்பித்தார். தங்கள் பழங்குடி மரபுகளை கைவிட்டு கிறிஸ்துவ, இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை பழங்குடியினராக கருதக்கூடாது என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

துரதிஷ்டவசமாக, இந்திரா அம்மையார் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. எனவே பிரச்சனை தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டது. பழங்குடியினரின் மரபுகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான உருவான ஜனஜாதி சுரக்ஷா மன்ச் என்ற அமைப்பு கடந்த இரண்டு தசாப்தங்களாக கார்த்திக் ஓரானின் கோரிக்கையை முன்னெடுத்து வருகிறது. டில்லியில் நடந்த பேரணியும் அந்த அமைப்பினால்தான் திரட்டப்பட்டது.

ஓரான் வெளிநாட்டில் படித்த வெகு சில பழங்குடியினரில் ஒருவர். இந்திரா அம்மையாரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். அவர் இந்த சிக்கலான விஷயத்தை ஆழ்ந்து அலசி உள்ளார். மதம் மாறிய 10 சதவீதத்தினர் பழங்குடியினருக்கான சலுகைகளில் எழுபது சதவீதம் அனுபவிக்கின்றனர். 90 சதவீதத்தினருக்கு வெறும் முப்பது சதவீதம் தான் கிடைக்கிறது. அதனால் 90 சதவீதத்தினர் ஏழ்மையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் பழங்குடி பண்பாட்டு பின்பற்றுகிறார்கள்.

கடந்த பல தசாப்தங்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளது. இன்று சுமார் 20 சதவீதத்தினர் மதம் மாறி உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மதம் மாறியவர்கள் பழங்குடியினருக்கான சலுகைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான சலுகைகள் இரண்டையும் அனுபவிப்பதால் மதம் மாறாதவர்களிடையே இது அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சனையின் வேர்கள் அரசமைப்பு சட்டத்தில் உள்ளன. பிரிட்டிஷ்காரர்கள் 1936 இல் இந்திய அரசு (பட்டியலின மக்கள்) ஆணையை அறிவித்தனர். மக்கள் தொகை கணக்கிட்டு ஆணையராக இருந்த டாக்டர் ஜே எச் ஹட்டன் என்பவர் ஜாதிகளின் பட்டியலை தயாரித்து அளித்திருந்தார். பிரிட்டிஷ் அரசின் ஆணை கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களை பட்டியல் இனத்தவர்களாக கருத முடியாது என்று தெளிவாக வரையறுத்து விட்டது.

1950 இன் இந்திய அரசமைப்பு உருவானபோது பட்டியலினத்தார்க்கும் பழங்குடியினருக்கும் தனித்தனியாக இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. பட்டியலினத்தவருக்கான சட்டத்தில் , 1936 அரசாணையை பின்பற்றி, ஹிந்துயிசத்தை தவிர வேறு சமயத்தை பின்பற்றுவர்களை பட்டியலினத்தவராக கருத முடியாது என்று திட்டவட்டமாக கூறியது. துரதிஷ்டவசமாக, அதே நேரத்தில் இயற்றப்பட்ட பழங்குடியினர் சட்டத்தில் இந்த விஷயம் தெளிவாக இல்லை. இதனால் பழங்குடியினர் இடையே அதிருப்தி ஏற்பட்டது.

2010 ல் இந்திய ஜனாதிபதியாக இருந்த திருமதி பிரதீபா பாட்டீலிடம் மூத்த பழங்குடி தலைவர்கள் மனு சமர்ப்பித்தனர். அதில் 26,253 பழங்குடி கிராமங்களில் இருந்து 27.67 லட்சம் பழங்குடியினர் கையெழுத்திட்டிருந்தனர். மதம் மாறியவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சலுகைகள் கொடுக்கக் கூடாது என்று அந்த மனுவில் கேட்டிருந்தனர்.

மதம் மாறிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரச்சனை குறித்து பலமுறை உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் சட்டம் தெளிவாக இருந்ததால் நீதிமன்றங்கள் பட்டியல் இனத்தவர் சலுகைகளை ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினரை தவிர மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று உறுதிப்பட தெரிவித்து விட்டன. பழங்குடியினருக்கான சட்ட வரைவு தெளிவாக இல்லாததால் நீதிமன்றங்கள் உறுதியான தீர்ப்பை வழங்காமல் ஆலோசனையாக சொல்லி வந்தன. 2004 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், மதம் மாறியதாலேயே ஒருவர் பழங்குடியினர் அந்தஸ்தை இழந்து விடுவார் என்று உறுதியாக கூற முடியாது. ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரித்து அததற்கு ஏற்பவே தீர்ப்பு சொல்ல வேண்டும். ஒருவர் மதம் மாறியதால் தன்னுடைய பழங்குடி மரபுகளை கைவிட்டு விட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும் , என்று சொல்லி உள்ளது.

ஹிந்து, புத்த, சீக்கிய சமயத்திற்கு வேறான மதங்களை சார்ந்தவர்களை பட்டியலினத்தவர்களாக கருத முடியாது என்று தெளிவாக வரையறுத்தது போல் பழங்குடியினருக்கும் திட்டவட்டமான வரையறை தேவை என்பதே பிரச்சனையின் மையக் கரு. 1950 ல் இந்திய அரசியல் பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஜாதிகளின் பட்டியலை மறுபரிசீலனை செய்ய ஒரு ஆலோசனை குழுவை நியமித்தது. அந்த குழு ஹிந்து அல்லாதவர்களை பட்டியலினத்தவராக கருத முடியாது என்று கூறியது. அதேவேளையில் பழங்குடியினரை பொறுத்தவரையில் அவர்கள் வாழ்க்கை முறையை பார்த்து தான் பழங்குடியினரா இல்லையா என்று கூற முடியும் என்ற தெளிவற்ற பதிலை கூறியது.

ஆனாலும் 1965 – 66 ல் நீதிபதி பி பி லோகூர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலை தயாரிக்க பரந்த அளவிலான வரையறையை சொல்லியுள்ளது. பழங்குடியினருக்கான பழக்க வழக்கங்கள், அவர்களுக்கே உரிய கலாச்சாரம், புவியியல் ரீதியாக தனித்து இருப்பது, மற்ற சமூகத்தினருடன் பழக கூச்சப்படுவது, பின் தங்கிய சமூகநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்குடியினரை வகைப்படுத்தலாம் என்று லோகூர் குழு கூறியது.

லோகூர் குழு பரிந்துரைகள், கார்த்திக் ஓரானின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கவனத்தில் கொண்டு பழங்குடியினரின் பாரம்பரிய நம்பிக்கைகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சடங்குகள், மரபுகளை கருத்தில் கொண்டு பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலை தயாரிக்க வேண்டும். இவற்றை கைவிட்டு விட்டு வேறு மதத்திற்கு சென்றவர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும். இது எந்த மதத்திற்கோ மதமாற்றத்திற்கோ எதிரானது அல்ல. மதம் மாறிய பட்டியலின , பழங்குடியினருக்கு சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும், என்பதே இப்போதைய பழங்குடியினர் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்திய அரசமைப்பு பாரம்பரியமான பழங்குடியினருக்கு சட்டபூர்வமாக வழங்கியுள்ள உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. அவர்களது தனித்துவமான கலாச்சாரம், சமய அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த கோரிக்கைகளின் சாரமான விஷயம்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் – தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவர்

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

suvendhu adhikari take oath as west bengal cm - 2026

— மகேஷ் ஜெத்மலானி —
கட்டுரையாளர்: மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

மேற்கு வங்காளத்தின் தேர்தல் முடிவு என்பது வெறும் ஒரு தேர்தல் முடிவு அல்ல. அது ஒரு சித்தாந்த நிலநடுக்கம். அதன் பின்விளைவுகளான அதிர்வுகள் அடுத்த ஒரு தசாப்த காலத்திற்கு இந்திய அரசியலெங்கும் உணரப்படும்.

மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றி பெறுவது என்பது மம்தாவை தோற்கடிப்பது அல்லது திரிணமூல் காங்கிரஸின் நீண்டகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்ல. அது அதைவிட மிகப் பெரிய ஒன்றைப் பற்றியது. இந்திய அரசியலின் மைய இலக்கணமாக இந்து உணர்வு முழுமையாக பிரதான நீரோட்டத்தில் இடம்பிடித்துவிட்டது என்பதையே அது குறிக்கிறது.

பல தசாப்தங்களாக, இந்து அடையாள வெளிப்பாடு ஆபத்தானது என்றும், சனாதன தர்மத்தின் மீதான பெருமை மதவாதம் என்றும், கோவில் அரசியல் பிற்போக்குத்தனமானது என்றும், சமரச அரசியல், சிறுபான்மையினரின் மறுப்பு அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டனங்கள் மற்றும் இந்து குற்ற உணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘மதச்சார்பின்மை அரசியல்’ மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் என்றும் இந்தியாவிடம் கூறப்பட்டு வந்தது. மேற்கு வங்காளம் அந்த முழு அரசியல் சூழலையும் துளைத்துவிட்டது.

இந்துத்துவ அரசியலுக்கு எதிரான அறிவுசார் கோட்டையாக ஒருகாலத்தில் சித்தரிக்கப்பட்ட ஒரு மாநிலம், இன்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பு என்னவென்றால், இந்திய வாக்காளர் இனி தனது நாகரிக அடையாளத்திற்காக மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை என்பதே.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து சுயமரியாதை அடக்கப்பட வேண்டும் என்பதையும் வாக்காளர் இனி ஏற்கத் தயாராக இல்லை. அதற்குப் பிறகு உடனடியாக தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.

சனாதனத்திற்கு எதிரான அரசியல் பேச்சுகளின் மிகச் சத்தமுள்ள அரசியல் வாகனங்களில் ஒன்றாக இருந்த திமுக சரிந்துவிட்டது. ‘இண்டி’ கூட்டணி முடிந்துவிட்டது என்று திமுக தலைவர்களே வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். 

இது வெறும் ஒரு கூட்டணியின் உடைப்பு அல்ல. இது பாஜகவுக்கு எதிரான முழு அரசியல் முன்னணியின் சித்தாந்த சிதைவின் தொடக்கம்.  ‘இண்டி’ கூட்டணி என்பது ஒருபோதும் கருத்துகளின் கூட்டணி அல்ல.

அது பயத்தின் கூட்டணி. 

மோடியைப் பற்றிய பயம். 

பாஜகவைப் பற்றிய பயம். 

ஆர்எஸ்எஸைப் பற்றிய பயம். 

இனி மௌனமாக இருக்க மறுத்த இந்து வாக்காளரைப் பற்றிய பயம். 

வம்சாவளி அரசியல்வாதிகள், திராவிட உயரடுக்கினர், இடதுசாரி அறிவுஜீவிகள் மற்றும் வரவேற்பறை மதச்சார்பின்மைவாதிகளால் இனி பாடம் கற்பிக்கப்படத் தயாராக இல்லாத ஒரு பாரதத்தைப் பற்றிய பயம்.

அந்த பயம்தான் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றாக வைத்திருந்தது. ஆனால் பயம் ஒரு தேசியக் கண்ணோட்டமாக மாற முடியாது.

மம்தாவுக்கும் இடதுசாரிகளுக்கும் பாஜக மீதான வெறுப்பைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. 

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அரசியல் வசதியைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.

காங்கிரஸுக்கும் பிராந்தியக் கட்சிகளுக்கும் பொருத்தமுள்ளதாகத் தோன்ற வேண்டிய அவசரத் தேவையைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.

முழு கட்டமைப்பும் யாரையாவது தடுக்க வேண்டும் என்ற எதிர்மறை ஆற்றலின் மீது கட்டப்பட்டது. ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நேர்மறை ஆற்றலின் மீது அல்ல. இப்போது அந்த கட்டமைப்பு விரிசல் அடையத் தொடங்கியுள்ளது.

அதனுடன் இந்தியாவின் பழைய “மதச்சார்பின்மை அரசியலின்” அடுக்குகளும் சரிந்து விழும். ஏனெனில் நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால்:

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி, இந்து சடங்குகளை கேலி செய்து, கோவில்களை அவமதித்து, பின்னர் தேர்தலுக்கு முன் திடீரென பூணூல் அணிந்து வாக்கு கேட்கும் அரசியலால் வெற்றி பெறக்கூடிய இயல்பான மக்கள் ஆதரவு அரசியல் இன்று இந்தியாவில் எதுவும் இல்லை. அந்த காலம் முடிவுக்கு வருகிறது.

அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்திய அரசியல் என்பது யார் அதிகமாக வேர்களோடு இணைந்தவராகத் தோன்ற முடியும், யார் அதிகமாக நாகரிக அடையாளத்தை பிரதிபலிக்க முடியும், யார் அதிகமாக கலாச்சார தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும், யார் அதிகமாக வெளிப்படையான இந்து உணர்வைக் கொண்டவராக இருக்க முடியும் என்பதைக் குறித்ததாக இருக்கும்.

இனி ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஏதோ ஒரு வடிவில் இந்து-முதன்மை கட்சியாக மாற முயற்சிக்கும். சிலர் அதை திறமையின்றி செய்வார்கள். 

சிலர் அதை வெறும் வெளிப்புற தோற்றத்திற்காக செய்வார்கள். 

சிலர் கோவில்களுக்குச் செல்வார்கள்.

சிலர் வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுவார்கள்.

சிலர் திடீரென திருவிழாக்களை கண்டுபிடிப்பார்கள்.

சிலர் தங்கள் பாட்டி மிகவும் ஆன்மிக நம்பிக்கை கொண்டவர் என்பதை திடீரென நினைவுகூர்வார்கள்.

சிலர் தாங்கள் ஒருபோதும் சனாதனத்தை அவமதிக்கவில்லை என்று நடிப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கான சிக்கல் என்னவென்றால்:

அந்த அரசியல் இடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இந்து அரசியலுக்குள் தேர்தல் கால வேடமாற்றமாக நுழையவில்லை.

அவை இதே அடிப்படைக் கொள்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள்.

பல தசாப்தங்களாக, அமைப்பு, ஒழுக்கம், தியாகம், சித்தாந்தத் தெளிவு, கோவில் இயக்கங்கள், கலாச்சாரப் பணிகள், சமூக அணுகுமுறைகள் மற்றும் ஆளும் அமைப்புகளால் கேலி செய்யப்பட்டபோதும் தங்கள் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்ட துணிச்சல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் இந்த அரசியல் இடத்தை உருவாக்கினர்.

50 ஆண்டுகள் இந்து அரசியலை விமர்சித்துவிட்டு, ஒரு தேர்தல் சுற்றுக்குள் அதன் உரிமையாளராக மாற முடியும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

அதனால்தான் அந்த அரசியல் வெளியில் பாஜகவுக்கு எதிராக நம்பகத்தன்மையுடன் வாக்கு கேட்க எந்த அரசியல் கட்சிக்கும் நூறு ஆண்டுகள் வரை தேவைப்படலாம்.

ஏனெனில் நாகரிக அடையாள அரசியலில் நம்பகத்தன்மையை ஒரே இரவில் உருவாக்க முடியாது.

சிவசேனாவைப் பாருங்கள்.

பாலாசாகேப் தாக்கரே மகாராஷ்டிராவில் ஒரு இயல்பான இந்து அரசியல் உணர்வை உருவாக்கியிருந்தார்.

அது கச்சிதமானது.

அது நேரடியானது.

அது உணர்ச்சிப்பூர்வமானது.

அது மறுக்க முடியாத அளவிற்கு வேர்களோடு இணைந்திருந்தது.

உத்தவ் தாக்கரே, தனது தந்தை உருவாக்கிய அந்த பாரம்பரியத்தை பாஜக எதிர்ப்பு அரசியல் மரியாதைக்காக பரிமாறிக்கொண்டார்.

அதன் மூலம் அவரது தந்தை உருவாக்கிய அரசியல் இடத்தையே அவர் அழித்துவிட்டார்.

இது இப்போது ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு எச்சரிக்கை.

உங்களுடைய சித்தாந்த முதுகெலும்பை வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாது.

தேர்தல் காலத்தில் மட்டும் இந்து அடையாளத்தை கடன் வாங்கிக் கொண்டு, முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் மதச்சார்பின்மை போலித்தனத்திற்குத் திரும்ப முடியாது.

மேற்கு வங்காளம் எதிர்காலத்தை காட்டியுள்ளது.

தமிழ்நாடு விரிசலைக் காட்டியுள்ளது.

பதற்றம் தவிர்க்க முடியாதது.

தற்போது நிலவி வந்ததாகக் கூறப்படும் மதச்சார்பின்மை ஒற்றுமை இறந்து கொண்டிருக்கிறது. புதிய இந்திய அரசியல் இந்து உணர்வுடன் கூடியதாகவும், தேசிய தன்னம்பிக்கையுடன் கூடியதாகவும், நாகரிக வேர்களை மையமாகக் கொண்டதாகவும், எந்த மன்னிப்பும் கேட்காததாகவும் இருக்கும்.

இதை ஆரம்பத்திலேயே புரிந்தவர்கள் ஏற்கனவே முன்னணியில் இருக்கிறார்கள். இதைக் கேலி செய்தவர்கள் இப்போது பல தசாப்தங்களை இதைப் பின்பற்ற முயல்வதிலேயே செலவிடுவார்கள்.

சனாதனத்தை அவமதிப்பதையே தங்களது முழு அரசியலாகக் கொண்டிருந்தவர்கள், இந்தியா பல விஷயங்களை மன்னித்தாலும், தனது நாகரிக அடையாளத்தின் மீதான அவமதிப்பை ஒருபோதும் மறக்காது என்பதை உணர்வார்கள். 

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

hrnce commissioner office chennai - 2026

தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்னைகள் என்று மூன்றைச் சொல்லலாம்.

  1. ஆலய ஊழல்
  2. திரையுலக ஊழல்
  3. டாஸ்மாக் ஊழல்.

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

வாக்களிக்கும் மக்கள் பக்திமான்கள். தேர்ந்தெடுக்கப்படும் அரசு பக்தி விரோத அரசு.

அதிலும் தென்னிந்தியாவில் மட்டுமே அரசின் முழு கட்டுப்பாட்டில் ஆலயங்கள் இருக்கின்றன. வடக்கில் ஆலயங்களின் உரிமை அறக்கட்டளைகளிடம் இருக்கிறது என்பது ஒரு மேலோட்டமான விஷயம்தான் என்றாலும் ஒப்பீட்டளவில் அரசின் கெடுபிடிகள் அங்கு குறைவு.

இதில் தமிழகத்தின் நிலைமைதான் மிக மிக மோசம். பிரிட்டிஷ் காலத்தில் தெளிவான திட்டமிடலுடன் ஆரம்பிக்கப்பட்டு காலப்போக்கில் முழுவதுமாக அழுகி நிற்கும் துறை.

பக்தர்களுக்கு இதில் பெரிய குறை எதுவும் இல்லை. லெளகிக சுய நலத் தேவைகளே பிரதானமாகிவிட்டால் மத உணர்வுகள் மழுங்கித்தானே போகும்.

இந்து அற நிலையத்துறையின் கணக்கு வழக்குகளை பொதுவான ஆடிட்டர்கள் தணிக்கை செய்யமுடியாதென்பது மிஷனரீஸுக்கு வரிவிலக்கு… வக்ஃப் போர்டுக்கு நீதித்துறைக்கும் மேலான அதிகாரம் என்பதையெல்லாம் விட மோசமான சட்டம். அதிலும் நாத்திக, மதச்சார்பற்ற அதாவது இந்து விரோத அரசிடம் இந்து மத நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டு அது பற்றி எந்தத் தணிக்கையும் செய்யவும் மாட்டேன் என்பது திருட்டு நடக்கும் இடத்துக்கு காவலர்கள் நுழையக்கூடாது என்று சொல்வதற்கு சமம்.

சமூக நீதி காக்கும் அரசு இந்து மத நிறுவனங்களில் சமூக நீதியை நிலைநாட்டவே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நிறுவனங்களிலும் அந்த சமுக நீதியை நிலைநாட்டும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு அல்லவா?

கருவறைக்குள் அர்ச்சக குலத்தினரைத் தவிர வேறு நபர்கள் நுழையக்கூடாதென்பது சமத்துவ மறுப்பு என்று சொன்னால் அதை நீக்க நிச்சயம் போராடலாம். பெண்கள் மசூதிகளுக்குள் வரக்கூடாது; சர்ச்களில் பாவமன்னிப்பு வழங்கக்கூடாது என்பதையும் எதிர்த்துப் போராடவேண்டும்.

சமூக நீதியை நிலைநாட்டுவதென்றால் கணக்கு வழக்குகள், சொத்து நிர்வாகம் ஆகியவை எதற்கு? கணக்கு வழக்குகளில் முறைகேடு நடக்காமல் இருக்க முறையான தணிக்கைக்கு உட்படுத்தினாலே போதும்.

உண்மையில் ஏதேனும் கோவிலில் கணக்கு வழக்கு தொடர்பான பிரச்னைகள் இருந்தால் ஓரிரு ஆண்டுகளில் தீர்த்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் சட்டமே. அதைச் செய்யாமல் இருப்பது, ஒருவர் வீட்டில் நடக்கும் சண்டையைத் தீர்க்க வரும் காவலர் அந்த வீட்டிலேயே ஒரு அறையில் தங்குவது போன்ற அராஜகம்.

இதில் மிகப் பெரிய வேதனை என்னவென்றால் இந்துக்களின் நலனைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாஜக இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்துவருகிறது.

முதலாவதாக, நாளைக்கே இந்த அறநிலையத்துறை சட்டத்தை மத்திய அரசு சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்து ரத்துசெய்யமுடியும். அல்லது இதில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஆயிரம் வழக்குகள் தொடுக்கமுடியும். அத்தனையிலும் நரேந்திரமோதியே ஆஜராகி வாதிட முடியும். வாதிட வேண்டும்.

வேதாரண்யம் கோவிலின் உப்பளங்களில் இருந்து ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வரவேண்டும். ஆனால் மத்திய அரசு நிறுவனம் வெறும் ஐந்தயிரம் ரூபாய் மட்டுமே தருகிறது. மத்திய அரசு செய்துவரும் முறைகேட்டை நாளை வரை கூடக் காத்திருக்கவேண்டாம். இன்றைக்கே சரி செய்யமுடியும்.

கோவில் நிலங்களுக்கு முறையாக வாடகை வசூலித்தால் ஆண்டுக்கு 6,000 கோடி வருமானம் வரும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் போர்க்கால அடிப்படையில் பாஜக அரசு சரிசெய்யவேண்டிய முதல் பிரச்னை இதுவே.

500 சொச்ச சமஸ்தான மன்னர்களை பாரதத்துடன் சேரும்படிச் சொன்னபோது கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டது மாபெரும் துரோகமென்றால், இந்து ஆலயங்களை இதுபோன்ற இந்து விரோத நவீன மன்னர்கள் வசம் ஒப்படைத்தது மன்னிக்கவே முடியாத அநீதி.

இந்து ஆலயங்களை மீட்டெடுப்பது என்ற ஒற்றை இலக்குடன் களம் இறங்கினால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியும். அப்போது மட்டுமே அது பாஜகவின் வெற்றியாக இருக்கும்.

தமிழக மக்கள் திரைப்பட கவர்ச்சியில் சிக்கியிருப்பவர்கள். எதிரிகள் வெகு தெளிவாக திரையுலகப் பிரபலங்களைக் கொண்டே தமது அத்தனை அஜெண்டாக்களையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

நாம் வெகு தெளிவாக மக்களுக்கு நெருக்கமான அந்த துறையைக் கையில் எடுக்கவே மாட்டோம் என்று சத்தியம் செய்துகொடுத்திருக்கிறோம். நம்மால் அது முடியாது என்பது உண்மையே. ஆனால் திரை உலகம் போல் கறுப்புப் பணப்புழக்கமும் வரி ஏய்ப்பும் பாலியல் சுரண்டலும் நிறைந்த துறை எதுவுமே இல்லை.

வரி ஏய்ப்பை ஒழித்தல் என்ற வகையில் கூட முதலில் சீர்செய்யப்படவேண்டிய துறை திரையுலகமே. நம் எதிரிகளின் கோட்டையாக அது இருக்கும் நிலையில் நம் முதல் தாக்குதல் இலக்குகளில் ஒன்றாக அதுவே இருக்கவேண்டும்.

சாராயக்கடைகளைப் பொறுத்தவரையில் மூன்று முக்கிய கோணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக, குடித்து அழிவதில் பெரும்பாலானவர்கள் இந்துக்களே. கடைநிலை ஜாதியினரே.

இரண்டாவதாக உற்பத்திச் செலவு ரூ 30 என்றால் விற்கும் விலையோ 180. கொள்முதல் விலையோ தங்க மலை ரகசியம். 21-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பமும் இன்ன பிற வரி, நிதி மற்றும் நிறுவன விதிமுறைகள் எல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலையிலும் கண் முன்னே தினமும் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது.

100 பாட்டில் கணக்கு காட்டினால் ஆயிரம் பாட்டில்கள் அநாமத்தாக விற்பனையாகின்றன. கள்ள நோட்டை அச்சிட்டு அரசே விற்பது போன்ற ஒரு அயோக்கியத்தனம். மை நஹிம் பியூங்கா… நஹிம் பினேதூங்கா என்பது அவரின் கொள்கையில்லை. எனவே இதைக் கண்டுகொள்வதே இல்லை போலிருக்கிறது.

மூன்றாவதாக, இந்துவாக, தமிழராக வள்ளுவரின் பூமியில் வள்ளுவரின் பெயரை முன்வைக்கும் அரசில் இப்படியாக அரசே சாராயம் விற்பதென்பது மிக மிகக் கேவலம். சங்க காலத்தில் கள் புழக்கத்தில் இருந்தது. ஆனால் மன்னர்கள், கள் இறக்கி விற்கவில்லை. குடிப்பது வேறு… ஊற்றிக் கொடுப்பது வேறு. பார் டான்சர் ஊற்றிக் கொடுக்கலாம். கன்யாஸ்த்ரீ ஊற்றிக் கொடுக்கக்கூடாது. அன்னை ஊற்றிக் கொடுக்கக்கூடாது.

வருத்தத்துடன் சொல்வதென்றால் தமிழகத்தில் அதிக செல்வம் கொழிக்கும் இடங்கள் இரண்டு. ஒன்று ஆலயங்கள். இன்னொன்று சாராயக்கடைகள்.

சங்க காலத்தை எடுத்துக்கொண்டால், கள் அருந்துவது தொடர்பாக எந்தவித ஒழுக்கத் தடைகளோ நெருக்கடிகளோ இருந்திருக்கவில்லை. அளவோடு குடித்தால் நஞ்சும் அமிர்தமே.

பக்தியும் ஒரு போதை; கள்ளும் ஒரு போதை. ஒடுக்கப்படுபவர்களின் வேதனைகளை மறக்கடிக்கும் அபின் தானே மதம். நம்மவர்களுக்கு இரண்டு போதையுமே தேவையாக இருக்கிறது.

பிரச்னை எங்குவருகிறதென்றால் இந்த இரண்டிலும் நடக்கும் கல்வாரி மலையினும் பெரிய ஊழல். அது இந்து தேசத்தை மதம் மாற்றி வீழ்த்தத் துடிக்கும் சக்திகளின் கைகளில் கொத்தாகச் சென்று குவிகிறது.

மிகவும் எளிய அரசியல் பாடம் தான்.

எது மக்களுடைய மனதுக்கு நெருக்கமாக இருக்குமோ எது நேச சக்திகள் அனைவரையும் ஓரணியில் திரள வழிவகுக்குமோ எது எதிரிகளைத் தெளிவாக அடையாளம் காட்டுமோ அந்த விஷயங்களைத்தான் முதலில் கையில் எடுக்கவேண்டும்.

ஆலயச் சுரண்டல் மற்றும் சனாதன அழித்தொழிப்பு என்பது உச்சத்தில் இருக்கும் மாநிலத்தில் இந்து கட்சிகள் முன்னெடுக்கவேண்டிய முதல் போராட்டம் ஆலய மீட்புதான்.

கலை சுதந்தரம் என்ற பெயரில் கருத்துத் திணிப்பும் இந்து தர்ம இந்திய தேசிய அவதூறும் கொடிகட்டிப் பறக்கும் துறையை ஒடுக்க உணவில் உப்பு போட்டுச் சாப்பிட்டாலே போதும்.

சாரய ஊழலை ஒழிப்பதும் அரசு அதிலிருந்து வெளியேறுவதும் சனாதனம் போன்ற உன்னத கலாசாரத்தின் வாரிசுகள் உடனே செய்ய வேண்டிய வேலை.

இந்த மூன்றிலும் நடக்கும் ஊழல் நினைத்தே பார்க்க முடியாதது. மூன்றுமே எதிரிகளின் பிரதான ஆயுதக் கிடங்கு மற்றும் பொக்கிஷக் கருவூலம்.

ஆக எதிரியின் கோட்டைகளைத் தகர்க்கவே மாட்டேன். அதன் பக்கம் கூடப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு போரில் இறங்கியிருக்கும் பாஜக உண்மையில் யாருக்காக இங்கு அரசியல் செய்துவருகிறது?

ஆலயச் சுரண்டல், மதுபான ஊழல், கலை, கருத்துச் சுதந்தரப் போர்வையிலான காட்சி ஊடக அவதூறுகள் இவற்றையெல்லாம் இந்து எழுச்சி என்ற கோணத்தில் அணுக மதச்சார்பற்ற பாஜகவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவரையும்சமமாக நடத்துதல், காங்கிரஸ் முக்த் அதாவது கரெப்ஷன் முக்த் பாரத், நேர்த்தியான நிர்வாகம் என்ற அடிப்படையிலாவது இந்த மூன்றிலும் இருக்கும் முறைகேடுகளை ஒடுக்க முன்வரலாம்.

  • பி. ஆர். மகாதேவன்

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

railway news - 2026
#image_title

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் மற்றும் போத்தனூர் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண் 06079, திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் சந்திப்பு விரைவு சிறப்பு ரயில்
03 & 10 ஜூன் 2026, புதன்கிழமைகளில் இயங்கும்.

திருவனந்தபுரம் வடக்கில் மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு
போத்தனூர் மறுநாள் காலை 06.45 மணிக்கு சேரும்.

வண்டி எண் 06080, போத்தனூர் சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில்
04 & 11 ஜூன் 2026, வியாழக்கிழமைகளில் இயங்கும்.

போத்தனூரில் மாலை 05.00 மணி புறப்பட்டு
திருவனந்தபுரம் சென்ட்ரல் மறுநாள் காலை 07.15 மணிக்கு சேரும்

இந்த ரயில் கொல்லம் • புனலூர் • செங்கோட்டை • தென்காசி • கடையநல்லூர் • சங்கரன்கோவில் • ராஜபாளையம் • ஸ்ரீவில்லிபுத்தூர் • சிவகாசி • விருதுநகர் • மதுரை • கொடை ரோடு • திண்டுக்கல் • ஒட்டன்சத்திரம் • பழனி • உடுமலைப்பேட்டை • பொள்ளாச்சி.வழியாக‌ செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பல ஆண்டு கோரிக்கையான பழனி ரயில் சேவை இறுதியாக தற்போது இரு சேவை சிறப்பு ரயிலாக வருகிறது

செங்கோட்டை – புனலூர் – கொல்லம் ரயில் பாதை வழியாக பழனி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் எண்: 06079/06080 திருவனந்தபுரம் – போத்தன்னூர் (கோவை) – திருவனந்தபுரம் சிறப்பு விரைவு

ரயில் எண்: 06079 திருவனந்தபுரம் – போத்தன்னூர் (கோவை) எக்ஸ்பிரஸ்

திருவனந்தபுரம் வடக்கு : 01:00 PM
கொல்லம் : 02:35 PM
புனலூர் : 03:35 PM
செங்கோட்டை : 07:20 PM
தென்காசி : இரவு 07:45
கடையநல்லூர் : 08:13 PM
சங்கரன்கோவில் : 08:58 PM
ராஜபாளையம் : 09:38 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : 09:53 பி.எம்
சிவகாசி : 10:28 PM
விருதநகர் : 11:28 PM
மதுரா : 01:05 AM
கொடைக்கானல் சாலை : 01:50 AM
திண்டக்கல் : 02:25 AM
ஒட்டன்சத்திரம் : 03:28 AM
பழனி : காலை 03:58 மணி
உடுமலைப்பேட்டை : காலை 04:28 மணி
பொள்ளாச்சி : காலை 05:15 மணி
பொத்தனூர் சந்திப்பு (கோவை) : காலை 06:45

ரயில் எண்: 06080 போத்தன்னூர் (கோவை) – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

போத்தனூர் சந்திப்பு (கோவை) : மாலை 05:00 மணி
பொள்ளாச்சி : மாலை 05:50 மணி
உடுமலைப்பேட்டை : மாலை 06:18 மணி
பழனி: 07:40 PM
ஒட்டன்சத்திரம் : இரவு 08:18
திண்டக்கல் : 09:05 PM
கொடைக்கானல் சாலை : 09:28 PM
மதுரா : இரவு 10:00 மணி
விருதநகர் : 10:53 PM
சிவகாசி : இரவு 11:18 மணி
ஸ்ரீவல்லிபுத்தூர் : 11:45 PM
ராஜபாளையம் : 12:02 AM
சங்கரன்கோவில் : 12:30 AM
கடையநல்லூர் : 12:56 AM
தென்காசி : காலை 01:13 மணி
செங்கோட்டை : காலை 01:40 மணி
புனலூர் : காலை 03:40 மணி
கொல்லம் : காலை 05:00 மணி
திருவனந்தபுரம் சென்ட்ரல் : 07:15 AM

ரயில்வே அமைச்சர் தெற்கு ரயில்வே தென்னக ரயில்வே மதுரை கோட்டம் என்.கே.பிரேமச்சந்திரன் கொடிக்குன்னில் சுரேஷ் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது