Home Blog Page 6

ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

modiji speech at gangaikonda chozhapuram - 2026
  • தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
  • ஒவ்வொருவரும் கைத்தறி தயாரிப்புகளை வாங்கி, நாட்டின் நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
  • ஒவ்வொரு இந்தியரும் குறைந்தபட்சம் ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்.
  • இதன் மூலம் இந்திய கைவினை கலைஞர்களின் திறமையும், கைவினை திறனும் உலக அளவில் அங்கீகாரம் பெறும்
  • – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

நண்பர்களே, ஆகஸ்ட் 7 1905ஆம் ஆண்டு, இந்த நாளை நாம் மறக்கக்கூடாது.  ஆகஸ்ட் மாதம் 1905ஆம் ஆண்டு நாடு விடுதலை அடைய சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.  தற்சார்பு பாரதத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.  ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டுமக்கள் ஒரு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

மக்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.   கடந்த வாரம் நீங்கள் அனைவரும், நண்பர்கள் தினத்தைக் கொண்டாடினீர்கள்.   இன்று வேண்டுகோள் விடுக்கிறேன், ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி, கைத்தறி நாள் ஆகும்.  நாம், அதே அளவு உற்சாகம் ஊக்கத்துடன், கைத்தறி நாளைக் கொண்டாட வேண்டும். 

கைத்தறி நாளைக் கொண்டாடுவது என்றால், ஒவ்வொரு ஏழைக் குடும்பமும், நெசவாளர் குடும்பமும், தங்கள் கைகளாலே தங்கள் சின்னச்சின்ன வீடுகளில் இருக்கும் தறிகளிலே, நெசவு செய்கிறார்கள்.  புதியபுதிய வகைகளில் நெய்கிறார்கள் பாருங்கள் இங்கே என்ன இல்லை!! 

மேலும், நீங்களும் கூட, இந்த முறையிலே, ஒரு கைத்தறி வகையைப் பயன்படுத்தி, ஜி ஆர் டபுள்யூ எம் வீடியோவை உருவாக்கி, கண்டிப்பாக, உலகின் முன்பாக உங்கள் கருத்தை முன்வைக்கலாமே.  கைத்தறி விஷயத்தில் கருத்தூக்கம் அளிக்கலாமே!! 

நம்முடைய பணி பாரதத்தைத் தற்சார்பு உடையதாக ஆக்குதல்.  அது வாயிலாக நமது இந்தச் சின்னச்சின்ன ஏழைக் குடும்பங்களையும் கூட,  பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையச் செய்தல்.   வாருங்கள், நாமே கூட, கைத்தறி ஆடைகள், சிலவற்றையாவது வாங்குவோமே!! 

அதை ஒரு வீடியோவாக ஏற்படுத்துவோம்.  இதனை அனைத்து இடங்களிலும் பரப்புரை செய்வோம்.   இதன் வாயிலாக, நமது நெசவாளர் சகோதர சகோதரிகளின் திறமைகள் பற்றி, உலகம் தெரிந்து கொள்ளட்டும். 

வாருங்கள், ஆகஸ்ட் 7, கைத்தறி நாள்.  பலப்பல நல்வாழ்த்துக்கள். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

srivilliputhur andal temple kodiyetram 2026 - 2026

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஆடிப்பூர உற்சவம் இன்று 06.08.2026 ஆடி மாதம் 21-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.35 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் கொடியேற்றம் (துவஜாரோஹணம் விமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் தேரோட்டத் திருவிழா ஆடிப் பூரத்தன்று 14.8.2026 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 06.08.2026 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப் பூரத் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று காலை 9.50 மணிக்கு கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஆகம முறைப்படி முனைவர் கௌதம் பட்டர் கொடியினை ஏற்றினார். விழாவில் தலைமை பட்டாச்சார்யார் ஸ்ரீவாரி முத்துப்பட்டர், ரகு பட்டர், மணியம் கோபி, சுதர்சன், ஏழுர் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் வெங்கடேஷ் பெருமாள் உட்பட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று 06.08.2026 முதல் 14.08.2026 வரை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த திருவிழா காலங்களில் பதினாறு வண்டி சப்பரம், தங்கபல்லக்கு, சிம்மவாகனம், சேஷவாகனம், ஐந்து கருடசேவை, பெரிய அன்னவாகனம், யானைவாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லக்கு, குதிரை போன்ற வாகனங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி இரவில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் தேரோட்டத் திருவிழா ஆடிப் பூரத்தன்று 14.8.2026 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த திருவிழாவிற்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு அலங்கார மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சொற்பொழிவு, வீணை இன்னிசை, நடனம், ஆய்வரங்கம், பஜனை, வில்லிசை, நாமசங்கீர்த்தனம், வயலினிசை ஆகியவை நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை என்ன கோவில் இணை ஆணையர் செ.மாரியப்பன், உதவி ஆணையர் மு.நாகராஜன், செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்துமணிகண்டன் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலிஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

எதிரிகள் சிரிக்கிறார்கள்

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சனாதன தர்மத்திற்குள் பிளவும் பரஸ்பர விரோதமும் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு வெகு தொலைவில் இல்லை. பல்வேறு வாழ்க்கை முறைகளின் பன்முகத்தன்மையை, அடிப்படை முரண்பாடுகளாகச் சித்திரிக்கும் போக்கை நீண்ட காலமாகவே பார்த்து வருகிறோம்.

இந்த விரோத உணர்வு  இந்து தர்மத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. சமீபத்தில்  ஒரு இந்து மரபைச் சேர்ந்த துறவி ஒரு கூட்டத்தில்   பிற மதம் ஒன்றைப் பற்றிப் பேசுகையில், “எங்கள் ஆச்சாரியர் போதித்ததையே அந்த மதமும் போதிக்கிறது. எனவே இவ்விரண்டிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை” என்று அறிவித்தார். தங்கள் மரபை அந்த மதத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அவர் தம் சொந்தத் தகுதியைக் குறைத்துக்கொண்டாரா அல்லது அந்தப் பிற மதத்தின் நிலையை உயர்த்தினாரா என்பது அவர் வணங்கும் அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

உலக மதங்களைப் பற்றி விவாதிக்கும்போது  ​​மற்றொரு துறவி, இஸ்லாம், கிறிஸ்தவம் தங்கள் சொந்த சம்பிரதாயம், அதைச் சாராதவர் என்று நான்கு பிரிவுகளே உலகில் நிலவுவதாகக் கூறினார். மேலும், அவருடைய சம்பிரதாயத்தைச் சேராத பிரிவுகள் இந்து மதத்தைச் சேர்ந்தவை என்பதை அவர் மனதிற்குள்ளும் சம்மதிப்பதில்லை. அவர்கள் பிற மதங்கள் மீது காட்டும் அதே அன்பை, மற்ற இந்து சம்பிரதாயங்கள் மேல் காட்டாதது மட்டுமல்லாமல் பெரும்பாலும் அம்மரபுகள் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர்.   அவற்றை ஒழிக்கவும் முயற்சிக்கின்றனர்.

கடந்த காலத்தில்  சத்ரபதி சிவாஜி ஔரங்கசீப்பின் கையில் சிக்கித் தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு இந்து மன்னர் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல  சுயநலத்தால் உந்தப்பட்ட பிற இந்து அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்  மாற்று மத ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து  நாட்டையும் சனாதன தர்மத்தையும் அழிக்கத் துணிந்தனர்.

இத்தகைய மனநிலை இன்றும் தொடர்வதாகவே தோன்றுகிறது. அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அவர்களின் வாழ்க்கைத் துணைகள் போன்றோர் மேல் தங்கள் சித்தாந்தங்களைச் திணித்து அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாகச் செயல்பட்டு  அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி சனாதன தர்மத்தைப் பிளவுபடுத்தும் நோக்கத்தை வலுப்படுத்தி வரும் அரசியல் நோக்கம் கொண்ட சுவாமிஜிகளுக்குப்  ப்ஞ்சமில்லை. இப்போக்கு குறிப்பாகத் தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.

அவர்களில் சிலர் இந்து மதத்தின் சில தெய்வங்களையும் கோவில் வழிபாட்டையும் இகழ்ந்து பேசி வருகிறார்கள். அதே சமயம்  மாற்று மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று அனுதாப வார்த்தைகளும்  ஒற்றுமைச் செய்திகளும் பண்டிகை வாழ்த்துகளும் தெரிவிதத்து வரத் தயங்குவதில்லை.

மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் சூழலைக் கண்டு மகிழ்கிறார்கள்.  தங்கள் ஏளனச் சிரிப்பை அவர்கள் மறைப்பதில்லை. “உங்கள் மதமும் எங்கள் மரபும் ஒன்றே” என்று இந்தச் சுவாமிஜிகள் வெட்கமின்றிச் சிரித்துக்கொண்டு கூறும்போது  ​​மற்றவர்கள் வெளியிலும் மனதிற்குள்ளும் சிரிக்கிறார்கள். ஆயினும்  தங்கள் சொந்த மதத்தை மற்றொன்றுடன் ஒப்பிடும் அந்தச் செயலை அவர்கள் தம் உயிரே போனாலும் செய்ய மாட்டார்கள். மாறாக, அந்த முட்டாள்களின் வார்த்தைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களைத் தங்கள் மதத்திற்கு மாற்றிக் கொள்கிறார்கள்.

இத்தகைய சூழலில்  பிற மதங்களின் ஆக்கிரமிப்பிலிருந்தும், மதமாற்றம் செய்பவர்களின் தாக்குதல்களில் இருந்தும் இந்து தர்மத்தைக் காக்க, அடிமட்ட அளவில் உழைக்கும் உண்மையான பக்தர்கள் குழப்பத்திற்கும் விரக்திக்கும் ஆளாகிறார்கள்.

தங்கள் குறிப்பிட்ட சம்பிரதாயங்களின் மேல் தீவிரப் பற்றும் வெறியும் கொண்ட இந்த சுவாமிஜிகள், பிற இந்துப் பிரிவுகள் மீது அவமதிப்பு உணர்வைக் கொண்டுள்ளதோடு,  ‘எல்லா இந்து மரபுகளும் ஒன்றே’ என்றும் ‘ஏகம் சத்’ என்றும் கூறி ஒற்றுமையை நிலைநாட்ட முயற்சிப்பவர்கள் மேல் கடும் வெறுப்பையும் கொண்டுள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தும் இவர்களுக்கு எதிராகத் தங்கள் ஆதரவாளர்களைத் தூண்டிவிடுவதோடு,  தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துதல் போன்ற தாக்குதல்களையும் ஊக்குவிக்கிறார்கள்.

இந்து மதத்திற்குள் உண்மையான விழிப்புணர்வு இல்லாததற்கு முக்கியக் காரணம்  அதைப் பின்பற்றுவோரில் கணிசமானோருக்கு தம்முடைய மதத்தின் மீதான அர்ப்பணிப்போ, மரியாதையோ, புரிதலோ இல்லாமல் இருப்பதே. சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்கள் பாடுபட்டு முன்னெடுத்து ஒருங்கிணைந்த இந்து விழிப்புணர்வு என்னும் தொலைநோக்குப் பார்வையை இவர்கள் உணர்வதில்லை. ஆச்சாரியர் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்ட சிலர்,  தங்கள் சொந்த மதக் கோட்பாட்டு குருக்களைப் போற்றும் அதே வேளையில்  பிற ஆச்சாரியர்களுக்கு எதிராகக் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவதையும் காண்கிறோம்.

ஆழமான அறிவோடு சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு கருத்தை மறுப்பதையோ,   தங்கள் சொந்தக் கோட்பாடுகளின் செல்லுபடியாகும் தன்மையை நிலைநாட்டுவதையோ அவர்கள் முற்றிலுமாக விட்டுவிட்டார்கள். அதற்குப் பதிலாக  ஆச்சாரியர் வேடமணிந்து   தனிப்பட்ட தாக்குதல்கள்,  அவதூறுகள்,  கேலி, கிண்டல், நாகரிகமற்ற,  அர்த்தமற்ற கூச்சல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நடத்தையைப் பரப்பும் கும்பல்களையும் ஆதரிக்கிறார்கள்.

விரிவடைந்து வரும் சமூக ஊடக உலகில்  உண்மையை மறைக்கும் வகையில் திரித்துக் கூறி, கூச்சலிடும் குரல்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. தங்கள் மதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்நாட்டை ஆள வேண்டும் என்றும்,  இந்து மதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு உறுதியுடன் செயல்படும் பிற மத அமைப்புகள் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றன. இத்தகைய மோசமான உள்நாட்டுப் பிளவுகளால் தத்தளிக்கும் இந்துக்களையும்  அவர்களின் வழிபாட்டுத் தலங்களளையும் அழித்தொழிக்க அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதைச் சாதிக்கத் தங்களுக்குப் பெரிய அளவில் சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இத்தகைய குழுக்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பதை உறுதிசெய்ய,  இந்து மதத்தின் அனைத்து வேதகாலத் தெய்வங்களையும் பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

(Source: தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், ஆகஸ்ட், 2026)

சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

sathuragiri adi amavasai - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாணிப்பாறை அடிவாரத்தில் குறித்து மதுரை சரக டிஐஜி, இரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாணிப்பாறை அடிவாரத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், மதுரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் மதுரை,விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வனத்துறை, அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இரு மாவட்ட கலெக்டர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு பணிகளை ஒதுக்கி இரு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தாணிப்பாறை அடிவாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார்,விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல்,மதுரை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தாணிப்பாறை அடிவாரம், வனத்துறை நுழைவு வாயில், தற்காலிக பேருந்து நிறுத்தம், காவல் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வருவதற்கான மாற்றுப்பாதை, கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டிய இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

இதேபோல் மதுரை மாவட்ட திட்ட இயக்குனர் சதீஸ் பாபு, உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து மலைக்குச் செல்லக்கூடிய மலைப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் குடிநீர்,பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

calender release in sivakasi - 2026

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் சிறப்பு பூஜையுடன் புதிய காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு காலண்டர் உற்பத்தி துவங்கப்பட்டது. மாத முதல் நாளிலேயே அந்த மாதத்திற்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளும் வைகையில் நாட்காட்டி தயாரித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சு தொழில் பிரதானமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் ஆடி மாத 18ம் பெருக்கு நாளை முன்னிட்டு இன்று சிவகாசியில் உள்ள அனைத்து காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களிலும் 2027ம் ஆண்டிற்கான காலண்டர்களின் புதிய ஆல்பம் வெளியிடப்பட்டு காலண்டர் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.

வரும் 2027 ஆம் ஆண்டில் தயாரிக்கப்படும் அனைத்து விதமான காலண்டர்களையும் ஆல்பமாக உருவாக்கி அதனை வைத்து பூஜை செய்து வியாபாரிகளிடம் வழங்கி புதிய ரக காலண்டர்களின் வடிவங்கள் காட்சிப்படுத்தி வெளியிடப்பட்டது. 30 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கேற்ப எண்ணற்ற வகையான காலண்டர் தயாரிக்கப்பட உள்ளது.

ஒவ்வோர் ஆண்டுகளும் காலண்டர்களில் புதிய புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது அந்த வகையில் மாதத்தின் முதல் நாளில் அந்த மாதத்தில் எந்த தேதிகளில் வார விடுமுறை என்பதையும், எந்த தேதிகளில் அரசு விடுமுறை வருகிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக நாட்காட்டி தயாரிக்கப்படுகிறது. மேலும் புது பொலிவுடன் மென்பட்டினால் ஆன கண்களுக்கு விருந்தளிக்கும் காலண்டர்களும் புதிய வரவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக காகிதக் கூழ் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் 2027ம் ஆண்டிற்கான காலண்டர் விலை 12 முத்த 15 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் வழக்கத்தை விட ஐந்து முதல் எட்டு சதவீதம் விற்பனை அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

sabarimala niraiputharisi pooja - 2026

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.

மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நிறை புத்தரிசி பூஜை என்பது கேரளத்தின் ஆவணி மாதம் துவங்கும் புதிய அறுவடைக்காலத்தின் தொடக்கத்தையும் விவசாய செழிப்பையும் குறிக்கும் மிக முக்கியமான சிறப்பு வழிபாடாகும். இந்த ஆண்டுக்கான (2026) நிறை புத்தரிசி பூஜை ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று காலை சபரிமலை சன்னிதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இச்சடங்கின் போது கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிதாக விளைந்த நெற்கதிர்கள் ஐயப்பனுக்குப் படைக்கப்பட்டு தந்திரி கண்டரரூ மகேஷ் மோகனரூ தலைமையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடாக அதற்கு முந்தைய நாள் ஆக. 2 மாலையே தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது.

பதினெட்டாம் படி வழியாகவும் பாரம்பரிய வாத்தியங்கள் முழங்கவும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டு தந்திரிக்கு மரியாதையுடன் சமர்ப்பிக்கப்பட்டன. புதிய நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்ட பாயசம் மற்றும் அவல் ஆகியவை ஐயப்பனுக்குப் படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பூஜைக்குப் பிறகு கருங்கற்கள் மற்றும் அதற்குரிய சன்னிதானப் பகுதிகளில் நெற்கதிர்கள் கட்டப்பட்டு, மீதமுள்ள கதிர்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்துப் பூஜித்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

தொடர்ந்து சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான நெய்யபிஷேகம் உச்சி பூஜை உட்பட பல்வேறு பூஜை சடங்குகள் நடைபெற்றது. இரவு கோவில் நடை அடைக்கப்பட்டது. இனி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

தற்போது கேரளாவில் திடீரென பெய்த கடும் மழையால் பம்பை நதியில் ஆகஸ்ட் முதல் நாள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சபரிமலை பம்பை உட்பட பத்தனம்திட்டா கொல்லம் மாவட்டங்கள் உட்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

பம்பை நதியில் மிக அதிகமான தண்ணீர் வரத்து இருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் ஆற்றுக்கு மேலும் சென்று அக்கரையில் உள்ள கணபதி கோவில் மற்றும் கட்டிடங்கள் உள்ள பகுதிகளிலும் தேங்கியது .பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல நடைபாதைகளில் போதிய வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது.

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

hindumunnani
hindumunnani

நெல்லை மாவட்டம் திசையன்விளை சமேரியா தூய யோவான் அரசு உதவி பெறும் பள்ளியில் அரசு உத்தரவை மீறி ஜெபக்கூட்டம் நடத்துவதை கண்டித்து போராட்டம் நடத்திய 20 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் இட்டமொழிப்புதூர் இந்துமுன்னணி கிளை தலைவர் முருகன் என்பவர் இன்று காலை மயங்கி விழுந்த நிலையில் திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டம் தொடரும் நிலையில், தமிழக அரசின் உத்தரவை மதிக்காத கிறித்துவ மிஷனரியைக் கண்டித்தும், திசையன்விளை கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில் அத்துமீறி ஜெபக்கூட்டம் நடத்துவதையும், சட்டப்படி போராடியவர்களைக் கைது செய்ததையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக, அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஜெபக் கூட்டம் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

பள்ளிக்கூடங்களில் எந்தவிதமான மத சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதையும் மீறி பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த கிறிஸ்துவ நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறை பள்ளி தாளாளர் மற்றும் வட்டாட்சியரிடம் பொதுமக்களோடு இணைந்து இந்து முன்னணி புகார் அளித்தது.

வெள்ளிக்கிழமை பள்ளியை சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி கட்டப்பட்டு ஜெபக்கூட்டம் துவங்கியது. முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்து முன்னணியினர் காவல்துறையிடம் கேட்டபோது அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நிகழ்ச்சி திட்டமிட்டு விட்டார்கள். எனவே வெள்ளிக்கிழமை மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் மற்ற இரண்டு நாட்களும் ரத்து செய்யப்படும் என பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் சனிக்கிழமையான நேற்றும் அந்த ஜெபக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தப் பள்ளியின் கிறிஸ்தவ நிர்வாகிகள் இந்த பள்ளி எங்களது சொந்த கட்டிடம் நாங்கள் கண்டிப்பாக நிகழ்ச்சி நடத்துவோம் எந்த அரசாணைக்கும் கட்டுப்பட மாட்டோம் என்று திமிராக பேசியுள்ளனர்.

நேற்று இந்து முன்னணி கோட்டத் தலைவர் தங்கமனோகர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்த போது காவல்துறையினர் இந்து முன்னணியினரை கைது செய்துள்ளனர். அரசாணைக்கு மதிப்பளிக்காமல் சட்டத்தை மீறி ஜெபக்கூட்டம் நடத்தும் கிறிஸ்தவர்களை கைது செய்யாமல் சட்டப்படி போராடிய இந்து முன்னணியினரை கைது செய்தது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். காவல்துறை கிறிஸ்தவர்களின் முகவர்களாக செயல்படுகிறதா? என்று சந்தேகம் எழுகிறது.

தொடர்ந்து தமிழகத்தின் கிறிஸ்துவ பள்ளிகளில் அனுமதி இல்லாத ஜெபக்கூட்டங்கள், பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவ மாணவியர்கள் பொட்டு வைக்க கூட அனுமதிக்கப்படாமல் பல பள்ளிகள் செயல்படுகின்றன.இது போன்ற சம்பவங்களை பொதுமக்கள் தட்டி கேட்கும் பொழுது அவர்கள் மிரட்டப்பட்ட சம்பவமும் பல பள்ளிக்கூடங்களில் நடைபெற்றன.

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

தமிழக அரசாணையை மதிக்காத ஆனால் அரசின் உதவியோடு நடக்கும் திசையன்விளை தூய யோவான் சவேரியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டரீதியாக போராடிய இந்து முன்னணியினரை
கைது செய்த காவல்துறையினர் மீதும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

railway news - 2026
#image_title

கேரளாவில் பாரம்பரிய பண்டிகை ஓணம் வந்துவிட்டது; இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கோவை-செங்கோட்டை-திருவனந்தபுரம் , மைசூர் -செங்கோட்டை-திருவனந்தபுரம் இடையே ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 6 வரை சென்னை சென்ட்ரல் மற்றும் கொல்லத்தை இணைக்கின்றன. ஓணம் பண்டிகையின் போது ஏற்படும் பெரும் கூட்ட நெரிசலை முன்னிட்டு இந்த புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 13 முதல், ரயில் எண் 06117 (சென்னை சென்ட்ரல் – கொல்லம்) ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மாலை 04.20 மணிக்கு கொல்லத்தை வந்தடையும். ஆகஸ்ட் 14 முதல், திரும்பும் ரயில் எண் 06118 (கொல்லம் – சென்னை சென்ட்ரல்) ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 06.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

இதற்கிடையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவிலிருந்து சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹுப்பள்ளி மற்றும் கோட்டயம் இடையே இந்த சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஆகஸ்ட் 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஹுப்பள்ளியிலிருந்து கோட்டயத்திற்கும், ஆகஸ்ட் 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோட்டயத்திலிருந்து ஹுப்பள்ளிக்கும் இயக்கப்படும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு 100-க்கும் மேற்பட்ட கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னதாகக் கூறியிருந்தார். பண்டிகைக் காலத்தில் பயணிகளின் தேவை அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கமாக, பண்டிகைக் காலங்களில் பயணச்சீட்டுகள் மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிடுவதால், பயணச் சிக்கல்கள் மோசமடைகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் ரயில்வே தலையிட்டுள்ளது.

பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, தெற்கு ரயில்வேயால் ஓணம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புச் சேவைகள், ஓணம் பண்டிகைக் காலத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதையும், முக்கிய நகரங்களைக் கேரளாவுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஓணம் பண்டிகை க்கு இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கோவை-செங்கோட்டை-திருவனந்தபுரம் , மைசூர் -செங்கோட்டை-திருவனந்தபுரம் இடையே ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

thiruvilakku vazhipadu at sengottai - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னா் உத்ரா பொதிகை திருவாசக பாராயண அடியார்கள் கூட்டமைப்பு சார்பில் திருவாசகி சிவபகவதி தலைமையில் குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் மற்றும் சிறப்பு அன்னதானம் நடந்தது.

மாலை 6 மணிக்கு முத்ரா நடனாலயா குழுவின் பயிற்சி ஆசிரியா் விசாலம் ஏற்பாட்டில் பயிற்சி மாணவியா்களின் பரதநாட்டியம் நடந்தது. பின்னா் உலக நன்மை வேண்டி மாபெரும் திருவிளக்கு வழிபாட்டில் முதல் திருவிளக்கினை முத்துலெட்சுமி, ஏற்றி துவக்கிவைத்தார்.

திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியை ஸ்ரீதேவி, புனிதா, பழனியம்மாள் பேச்சியம்மாள், போட்டோகிரியேட்டர்தேவி, உஷா அருணாராமகிருஷ்ணன், ராஜேஸ்வரி ஆகியோர் நடந்தினா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் இராம்நாத், ஆடிட்டர்சங்கர், கோபாலகிருஷ்ணன், சண்முகம், குருவூர்கண்ணன், வீரபுத்திரன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா். திருவிளக்கு வழிபாட்டில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

railway news - 2026
#image_title

தாம்பரம்-தென்காசி பகல் நேர அதிவிரைவு சிறப்பு ரயிலை தினசரி இரயிலாக அறிவிக்க பயணிகள் கோரிக்கை!

தாம்பரம் தென்காசி இடையே இயங்கிடும் வகையில் பகல் நேர அதிவிரைவு சிறப்பு இரயில் வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை தினசரி இரயிலாக இயக்க வேண்டுமென இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்-சிவகாசி-இராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை மீட்டர் கேஜ் இரயில்வே பாதையாக இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 1998 ஆம் ஆண்டு அகல இரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கப்பட்டது. இதையத்து முதற் கட்டப் பணிகள் விருதுநகர்-இராஜபாளையம் வரை நிறைவடைந்து இரயில்சேவை அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமாரால் கடந்த 2003 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. பின்பு இரண்டாம் கட்ட பணிகளானது இராஜபாளையம்-செங்கோட்டை வரை 2005 இல் நிறைவடைந்து அப்போதைய இரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத்யாதவால் துவக்கி வைக்கப்பட்டது.

பின்னர் செங்கோட்டை-புனலூர் வரை 3 ஆம் கட்டப் பணிகள் முடிவடைந்து 2008 இல் அப்போதைய அமைச்சர் அரங்கவேலுவால் துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் நெல்லை-செங்கோட்டை வரை உள்ள அகல இரயில்பாதைப் பணிகள் 2016 இல் முடிந்தது. மேலும் இந்த வழித்தடம் முற்றிலும் மின்சாரப் பாதையாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பாதையானது, தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக விளங்கி வருகிறது. மேலும், தென்மலை, குற்றாலம் ஆகிய சுற்றுலா தளங்களுக்கும், சபரிமலை, தென்காசி, சங்கரன்கோவில், திருவில்லிபுத்தூர் ஆகிய புன்னிய ஸ்தலங்களுக்கும், சிவகாசி, இராஜபாளையம், விருதுநகர் ஆகிய தொழில் நகரங்களுக்கும் பயணிகள் மற்றும் வியாபாரிகள் எளிதாகச் சென்று வரப் பயன்படுகிறது.

இந்த வழித் தடத்தில் மயிலாடுதுறை-செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, மதுரை-குருவாயூர், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம்-சென்னை ஆகிய தினசரி ரயில்களும்,
செங்கோட்டை-சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தென்காசி, அம்பாசமுத்திரம், நெல்லை வழியாக தாம்பரம் வரை செல்லும் வண்டியானது வாரத்தில் 3 நாட்களும், மேட்டுப்பாளையம்,விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தென்காசி வழியாக நெல்லை வரை செல்லும் சிறப்பு இரயில் வாரத்தில் ஒரு நாளும் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2018 இல் செங்கோட்டை-தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா வண்டி இயக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த இரயில் தற்போது வரை இயக்கப்படவில்லை.
இருந்தபோதிலும், இவ்வழித்தடத்தில் பகல்நேரத்தில் சென்று வர போதிய இரயில் வசதி செய்து தரப்படவில்லை. எனவே, கேரளா மாநிலம் மற்றும் தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், (வ.எண் :06135) ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 15 வரை வியாழன் மற்றும் சனி ஆகிய 2 நாட்கள் தாம்பரம்- தென்காசி சிறப்பு ரயில் காலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருநது புறப்பட்டு அதேநாள் மாலை 3:30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் செல்லும் எனவும்,
(வ.எண் 06136) ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் தென்காசி-தாம்பரம் சிறப்பு ரயில் காலை 5 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்பட்டு அதேநாள் மாலை 3:15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடையும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில் என குறைவான நிறுத்தங்களுடன் அதிவேக சிறப்பு ரயில் சேவையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டியானது, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும், சங்கரன் கோவில், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு மருத்துவம், கல்வி ஆகிய சேவைகளுக்காகச் சென்று வர பெரிதும் பயன்படும். எனவே, இந்த அறிவிப்பை இப்பகுதி பொது மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். மேலும் மதுரையைக் கடந்து தென்காசி வரும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று சென்றால், உள்ளூர் மக்கள் அதிக அளவில் இந்த ரயிலைப் பயன்படுத்தும் நிலை வரும் என்றும், ரயில் பெரும் வரவேற்பு பெறும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.