Home Blog Page 7

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

adhi sankaracharya - 2026

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 – 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார். அதன் சாரம் இங்கே…

ஸ்பர்சம் என்ற கல்பம், கல்லைத் தொட்டால் தங்கமாகும். குரு சிஷ்யனைத் தொடாமலே தன்னைப்போல் செய்துவிடுகிறார். சந்தன மரத்தின் சேர்க்கையால் மற்ற மரங்களும் வாசனையைத் தருவதுபோல், குரு உபதேசம் பெற்ற சிஷ்யனும் உலகை மகிழ்விக்கிறான்.

உலகெல்லாம், உடலை நான் என்று எண்ணி அதற்கு வேண்டிய போஷணை, அலங்காரங்களைச் செய்கிறதே தவிர, எந்த வஸ்துவால் இந்த உடல் பிணம் ஆகாமல் நாற்றம் எடுக்காமல் இருக்கிறதோ, அதைப் பற்றி கவனிப்பதே இல்லை.
ஒரு நல்ல சாமர்த்தியம் வாய்ந்த புழு, காட்டிலுள்ள முட்களால் தனக்கு ஒரு வீடு அமைத்துக்கொண்டு, ஆயுள் வரை அதில் வசிக்கிறது. அதுபோல் ஜீவன் தனது புண்ய பாப கர்மங்களால் சரீரத்தை எடுத்து, பலனை அனுபவிக்கிறான்.

புலி வேஷம் பூண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான். பெண் வேஷம் பூண்டு ஒருவன் நடிக்கிறான். புலிவேஷக்காரன் மனிதர்களையும் பசுக்களையும் அடித்துத் தின்பானா? பெண் வேஷதாரி புருஷனது காம இச்சையைப் பூர்த்தி செய்வானா? அதேபோல் ஜீவ வேஷம் பூண்ட ஆத்மா, சுக துக்கங்களை அனுபவியான்.

அழும் குழந்தையை சமாதானம் செய்ய, தாய் தின்பண்டங்களையும் விளையாட்டுப் பொருள்களையும் அளிப்பதுபோல அனேக பிறவி வாசனையால் மோகமடைந்த மனதை நல்வழிப்படுத்த உபநிஷத் என்ற தாய் ருசியான பல உபாயங்களைக் கூறுகிறாள்.

உலகில் பிரியமான வஸ்து ஆத்மா. அதற்காக மனைவி, தனம், பிள்ளை, வீடு முதலியன பிரியமாய் இருக்கின்றன. ஒருவன் தனக்காக இவற்றை இழக்க சம்மதிப்பான். ஆனால் அந்தப் பிரிய வஸ்துவை விசாரித்து பூரண ஆனந்தம் பெற முயற்சிப்பதில்லை.

பிரும்மார்ப்பணம் என்று அளித்த தானம், மனதிலும் கோபம் இல்லாமை என்ற பொறுமை, சிரத்தை என்ற ஆஸ்திக்யம், சத்யம் இந்நான்கைக் கொண்டு, பந்தகமான சுவர்க்காதிகளைப் பெறுவதைவிட, நிஷ்காம்யமாக இவற்றையே அனுஷ்டித்து மோட்சம் அடைவோர் துர்லபம்.

தேவதைகளுக்கும் அதிதிகளுக்கும் அளித்த அன்ன சேஷம் அமிர்தம். தனக்காகச் செய்த உணவு வ்யர்த்தமானதுடன் மிருத்யுவை அளிக்கவல்லது. தான் மட்டும் உண்பவன் கேவல பாபத்தை அனுபவிப்பவன். ப்ராணாக்னிஹோத்ரம் செய்யாமல் புஜிப்பவன் நரகத்தையே அனுபவிப்பான்.

நனைந்த கட்டையில் அக்னி பற்றுவதில்லை. சூர்ய தாபத்தால் ஈரம் உலர்ந்த பிறகு சீக்கிரமாக தீ பிடிக்கும். விஷயங்களால் மனம் நனைந்தபோது ஞானம் வருவதில்லை. வைராக்யத்தினால் மனம் உலர்ந்த பிறகு ஞானம் உதயமாகும்.
பலவாத்யங்கள் ஏக காலத்தில் வாசிக்கப்பட்டால் தனித்தனியாக அதன் த்வனி நம் காதில் விழுவதில்லை. எல்லாம் கலந்து ஒன்றாகவே கேட்கிறது. அதேபோல் மாயையினால் சைதன்யத்தையும் ஜடவஸ்துவையும் பிரிக்க முடியாமல் உலக வியவஹாரம் நடக்கிறது.

பிரளய காலம், சுஷுப்தி, ஜீவன்முக்தி இம்மூன்றிலும் ஒரே சுகந்தான். முன்னிரண்டிலும் வாஸனை கர்மா இரண்டும் ஒழியாததால் மறுபடி துக்க அனுபவமுண்டு. பின்னதில் பிறப்பு இறப்பில்லை, பேரானந்தம் உண்டு. சுக துக்கங்களுக்குக் காரணம் என்ன என்று ஜனகர் சபையில் வாதம் நடந்தது. மித்ரர் சத்ருக்கள் காரணமில்லை; கர்மாதான் ஹேது என யாக்ஞவல்க்யர் சொன்னார். அக்கர்மா இல்லாமல் க்ஷணம்கூட மனிதன் இருப்பதில்லை என கீதாசார்யன் கூறினார்.

மரத்தை வெட்டுவது கோடரி. ஆயினும் அதை எடுத்துத்தூக்கிப் போடுபவன் ஒருவன் இருந்தால்தான் கோடரி வெட்டும். பூர்வ கர்மாவே பலனை அளிப்பது. ஆயினும் அதை அனுபவிக்க புருஷ பிரயத்னம் வேண்டும். நம் முன்னே நின்று அந்தராத்மா நம்மைத் தூண்டுகிறான். வேரில் நீர் விட்டால் கிளை, இலை, புஷ்பம், காய், கனி மகிழ்ச்சி அடைவதுபோல், வர்ணாச்ரம ஆசாரப்படி கர்மாவைச் செய்து பகவத் அர்ப்பணம் செய்துவிட்டால் எல்லா தேவர்களும் மகிழ்ந்து, கர்மபலத்தைப் பெறும்படி செய்வர். *

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

adhisankarar - 2026

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை. இந்த ஸ்தோத்திரம் உருவமற்ற பரம்பொருளை வெளிக்காட்டும் ஆறு பாடல்களால் ஆனது. ஞானத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட ஒவ்வோர் உள்ளத்திலும் அதிர்வையும் சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் அமைதியையும் இது அளிக்கும்.

நிர்வாண ஷட்கம்

மனோபு³த்³த்⁴யஹங்காரசித்தானி நாஹம்ʼ
ந ச ஶ்ரோத்ரஜிஹ்வே ந ச க்⁴ராணனேத்ரே |
ந ச வ்யோமபூ⁴மி꞉ ந தேஜோ ந வாயு꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 1||

நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல, நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல, நான் விண்வெளியும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.

ந ச ப்ராணஸஞ்ஜ்ஞோ ந வை பஞ்சவாயு꞉
ந வா ஸப்ததா⁴துர்ன வா பஞ்சகோஶ ꞉ |
ந வாக் பாணிபாதௌ³ ந சோபஸ்த²பாயூ
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 2||

நான் பிராணனும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல, நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல, நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்.

ந மே த்³வேஷராகௌ³ ந மே லோப⁴மோஹௌ
மதோ³ நைவ மே நைவ மாத்ஸர்யபா⁴வ꞉ |
ந த⁴ர்மோ ந சார்தோ² ந காமோ ந மோக்ஷ꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 3||

என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை, எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை, எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது விடுதலைக்கான ஆசையும் இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்

ந புண்யம்ʼ ந பாபம்ʼ ந ஸௌக்²யம்ʼ ந து³꞉க²ம்ʼ
ந மந்த்ரோ ந தீர்த²ம்ʼ ந வேதா³ ந யஜ்ஞா꞉ |
அஹம்ʼ போ⁴ஜனம்ʼ நைவ போ⁴ஜ்யம்ʼ ந போ⁴க்தா
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 4||

எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் இல்லை துன்பம் இல்லை, எனக்கு தேவை மந்திரங்கள் இல்லை, யாத்திரைகள் இல்லை, வேதங்களும் சடங்குகளும் இல்லை, நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல, நான் விழிப்புணர்வு, பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!

ந மே ம்ருʼத்யுஶங்கா ந மே ஜாதிபே⁴த³꞉
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்ம |
ந ப³ந்து⁴ர்ன மித்ரம்ʼ கு³ருர்னைவ ஶிஷ்ய꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 5||

எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை, சாதி பேதம் இல்லை, எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை, நான் உறவினனோ, நண்பனோ, ஆசிரியனோ அல்லது சீடனோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!

அஹம்ʼ நிர்விகல்போ நிராகாரரூபோ
விபு⁴ர்வ்யாப்ய ஸர்வத்ர ஸர்வேந்த்³ரியாணாம் |
ந சாஸங்க³தம்ʼ நைவ முக்திர்ன ப³ந்த⁴꞉
சிதா³னந்த³ரூப꞉ ஶிவோ(அ)ஹம்ʼ ஶிவோ(அ)ஹம் || 6||

நான் இருமை இல்லாதவன், என் வடிவம் உருவமற்றது, நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா புலன்களிலும் பரவியிருக்கிறேன், நான் பற்றுள்ளவனில்லை, சுதந்திரமாகவோ சிறை பிடிக்கப் பட்டவனாகவோ இல்லை, நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், சிவன் நான் சிவமே நான்!

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

kumbakonam garutasevai - 2026

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

இந்த விழாவின் சிறப்பம்சங்கள்:- கும்பகோணம் நகரில் உள்ள 12 முக்கியமான வைணவத் தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் (பெருமாள்) தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளுவார்கள். இந்த 12 பெருமாள்களும் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் (Big Bazaar Street) வரிசையாக அணிவகுத்து பக்தர்களுக்கு ஒரே இடத்தில் காட்சியளிப்பார்கள். இதில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, வராகப் பெருமாள் உள்ளிட்ட 12 கோயில்கள் பங்கேற்றன. அட்சய திருதியை ஆன நேற்று (20/4/2026 ) பெரிய கடைத்தெருவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

குடந்தை பன்னிரு கருட சேவை வரும் அட்சயதிருதியை நாளன்று திருக்குடந்தை என்று ஆழ்வார்களால் போற்றப்பட்ட கும்பகோணத்தில், பெரிய கடைத் தெருவில் ஸ்ரீமத் அகோபில மடத்திற்கு முன் உள்ள பந்தலில் காலை 9 மணியளவில் ஆராவமுதாழ்வான் எனப்படும் சார்ங்கபாணிப்பெருமாள் அவருக்கே உரிய பெரிய கருடவாகனத்திலே முன்னே எழுந்தருளி இருப்பார். இதுவே முதல் கருட வாகனம்.

அவருக்கு வலப்புறத்தில் ஸ்ரீசக்ரபாணிப் பெருமாள் இரண்டாவது கருட வாகனத்தில் எழுந்தருளிப்பார். இடப்புறத்தில் ராமபிரானும் கருடவாகனத்திலே வீற்றிருப்பார். இது மூன்றாவது கருட வாகனம். இவர்களுக்குப் பின்வரிசையில் ஆதி வராகப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். (இது நான்காவது கருட வாகனம்) அவருக்குப் பின் பெரிய கடைவீதி ராஜகோபாலன் ஐந்தாவது கருடவாகனத்திலே காட்சி தருவார்.

இந்த ஐவருக்கும் பின் கொட்டையூர் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் ஆறாவது கருடவாகனத்திலும், மேலக்காவிரி வரதராஜப் பெருமாள் ஏழாவது கருட வாகனத்திலும், தோப்புத் தெரு ஸ்ரீராஜகோபாலன் எட்டாவது கருட வாகனத்திலும், பாட்ராச்சாரியார் தெரு நவநீத கிருஷ்ணன் ஒன்பதாவது கருட வாகனத்தில் ஸ்ரீமத்வர்கள் வழிபடும் பட்டாபிராமன் எழுந்தருள்வார். பத்தாவது கருட வாகனத்தில் ஐந்து பெருமாள்கள் எழுந்தருள்வர்.

இது தவிர, இவர்களை வழிபடும் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் முன்னே எழுந்தருளி இருப்பார். சார்ங்கபாணி-சக்ரபாணி பெருமாள்களுக்கு முன்னே போடப்பட்டிருக்கும் சிறிய பந்தலில் சௌராஷ்ட்ரப் பெருமக்களுடைய சிறப்பான வழிபாட்டிலே உள்ள ஸ்ரீவேதநாராயணன் பதினொன்றாவது கருட வாகனத்திலும், ஸ்ரீவரதராஜன் பன்னிரெண்டாவது கருட வாகனத்திலும் எழுந்தருள்வார்.

இந்த வரிசையில் தான் குடந்தை கடைவீதியில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெற்று வருகிறது. பெரிய பந்தலில் பின் வரிசைகளில் ஸ்ரீமத் அகோபில மடத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் போன்ற சில, பல பெருமாள்களும் கருடவாகனத்திலே காட்சி தருவதும் உண்டு. அதனால் சில வருடங்களில் கருட சேவையின் எண்ணிக்கை பதினான்கு, பதினைந்து என்று வளர்வதும் உண்டு.

கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வழிவகை செய்த கருடனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வருடா வருடம் கங்கை பூமிக்கு வந்த நாளான அட்சயதிருதியை அன்று, குடந்தையில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.

அந்த உற்சவத்தில், திருமாலைத் தன் தோளில் ஏற்றியபடி, அவரது திருவடிகளைத் தன் கையில் தாங்கிய படி வரும் கருடன், நம்மைப் பார்த்து, பக்தர்களே இதோ இந்தத் திருவடிகளைக் கழுவிய கங்கை உங்கள் சாபங்களையும் பாபங்களையும் போக்க பூமிக்கு வந்த நன்னாள் இது என்று அறிவிக்கிறார். அட்சய திருதியை தினத்திலே கங்கையில் நீராடுவது பெரும் புண்ணியம். ஆனால் கங்கைக்குச் சென்று நீராட இயலாதவர்கள், குடந்தை பன்னிரண்டு கருடசேவையைத் தரிசித்தால், கங்கையில் நீராடிய பலன் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஏன் பன்னிரு கருட சேவை கருடனுக்கும் அட்சயதிருதியைக்கும் உள்ள தொடர்பு புரிந்து விட்டது. ஆனால் குடந்தையில் அட்சயதிருதியையில் பன்னிரண்டு கருடசேவை ஏற்படக்காரணம் யாது? திருமாலைத் தியானிக்கும் முறையைக் கூறும் ஆகம சாஸ்திரங்கள், நம் உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு திருப்பெயர்களுடன் திருமால் வீற்றிருப்பதாகத் தியானிக்கச் சொல்கின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவையே அந்தப் பன்னிரண்டு திருப்பெயர்கள்.

அந்தப் பன்னிரு வடிவங்களையும் தியானிக்க இயலாதவரான நம் போல்வார் மேல் கருணை கொண்ட சார்ங்கபாணிப் பெருமாள், தானே பன்னிரு வடிவங்கள் எடுத்துக் கொண்டு அட்சயதிருதியை அன்று குடந்தை கடைவீதியில் காட்சி தருகிறார். இந்தப் பன்னிரண்டு பெருமாள்களையும் தரிசிப்பவர்கள், ஆகமங்கள் கூறும் பன்னிரண்டு மூர்த்திகளைத் தியானித்த பலனைப் பெறுவார்கள்.

‘‘அந்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதி
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி’’

என்பது பிரசித்தியான ஸ்லோகம். சாதாரண ஊர்களில் செய்த பாபங்களைப் புண்ணியத் தலங்கள் போக்கிவிடும். புண்ணியத் தலங்களில் செய்யப்பட்ட பாபங்களைக் காசி நகரம் போக்கிவிடும். காசியில் பாபம் செய்தால், அதைக் கும்பகோணத்திருத்தலம் போக்கும். கும்பகோணத்திலேயே ஒருவன் பாபம் செய்தால், அவன் வேறு தலத்தைத் தேடிப் போகத்தேவையில்லை, கும்பகோணமே அந்தப் பாபத்தைப் போக்கி விடும் என்பது இதன் பொருள்.

எனவே அட்சயதிருதியையில் குடந்தையில் கருடசேவையைத் தரிசிப்பவர்களுக்குக் காவிரிக் கரையிலே கங்கையில் நீராடிய பலன் கிடைப்பதோடு அவர்களின் பாபங்கள் அனைத்தும் கழிகின்றன. அமுதனுடன் ஆழ்வார்கள் ஆராவமுதாழ்வான் எனப்படும் சார்ங்கபாணிப் பெருமாளைப் பாடிய ஆழ்வார்கள் பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசைப் பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் மற்றும் திருமங்கை ஆழ்வார். இவர்களுள் ஆண்டாள் நீங்கலாக மற்றைய ஆறு ஆழ்வார்களும், ராமாநுஜரும், வேதாந்த தேசிகனும் சார்ங்கபாணிப் பெருமாளின் முன் பந்தலில் எழுந்தருள்வது வழக்கம். அவர்கள் ஆராவமுதாழ்வானைப் பற்றிப் பாடிய பாசுரங்களை அத்யாபகர்கள் பந்தலில் ஓத, ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் மரியாதை செய்யப்படும்.

தற்பொழுது திருமழிசைப் பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வர் மட்டுமே பந்தலுக்கு எழுந்தருளுகின்றனர். அவர்களோடு அகோபில மடத்துத் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருள்கிறார். அட்சயதிருதியைப் பந்தலில் பன்னிரண்டு மணி வரை காட்சி தந்தருளும் பெருமாள்கள், அதன்பின் ஒருவர் பின் ஒருவராகத் தங்களது திருக்கோயில்களைச் சென்றடைகிறார்கள்.

சார்ங்கபாணிப் பெருமாள் பந்தலில் இருந்து கோயிலுக்குச் செல்லாமல், பெரிய கடை வீதியிலுள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கோயிலுக்கு எழுந்தருள்வார். மதியம் முழுவதும் அங்கேயே பெருமாள் ஓய்வெடுப்பார். பிறகு மாலை 5 மணி அளவில், ராஜகோபாலன் கோயில் திருப்பள்ளியறையில் உள்ள மஞ்சத்துக்கு எழுந்தருளும் சார்ங்கபாணிப் பெருமாள், அமுதமணம் கமழும் சந்தனம் பூசி, அழகிய புஷ்ப மாலைகளுடன் காட்சி தருவார். அருகே மற்றொரு மஞ்சத்தில் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் சர்வாலங்கார பூஷிதனாக எழுந்தருள்வான். அதற்கருகில் ஓர் சிறிய மஞ்சத்தில் ஸ்ரீநடாதூர் அம்மாள் எழுந்தருள்வார். இரவு எட்டு மணியளவில் ராஜகோபாலன் கோயிலில் இருந்து புறப்படும் சார்ங்கபாணிப் பெருமாள், பெரிய கடைவீதி வழியாகத் தன் சந்நதியை அடைகிறார்.

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

ipl 2026 season - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தைந்தாவது ஆட்டம் கொல்கொத்தா vs குஜராத் – அகமதாபாத் – ஏப்ரல் 17

          முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன் எடுத்தது. இந்த மொத்த ரன் கூட காமரூன் கிரீன் எடுத்த 79 ரன்னால் (55 பந்துகள், 7 ஃபோர், 4 சிக்சர்) சாத்தியமானது. அவருக்குத்து துணையாக ரோமன் போவெல் (27 ரன்) மற்றும் ரமன்தீப் சிங் (17 ரன்) சிறிது நேரம் கம்பனி கொடுத்தார்கள். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. குஜராத் அணியில் ரபாடா 3 விக்கட்டுகளும், ஷமி, அஷோக் ஷர்மா தலா இரண்டு விக்கட்டுகளும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன் எடுத்தார். இதில் 8 ஃபோர், 4 சிக்சர்கள் அடக்கம். சாய் சுதர்ஷன் 22 ரன், ஜாஸ் பட்லர் 25 ரன், வாஷிங்க்டன் சுந்தர் 13 ரன், கிளன் பிலிப்ஸ் 19 ரன் எடுத்தனர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இருபத்தியாறாவது ஆட்டம் பெங்களூரு vs டெல்லி – பெங்களூரு – ஏப்ரல் 18 முதல் ஆட்டம்

          முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அந்த அணியின் பில் சால்ட் (38 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார். மற்றாவர்கள் சரியாக ஆடவில்லை. குறிப்பாக விராட் கோலி 19 ரன், தேவதத் படிக்கல் 18 ரன், ரஜத் படிதார் 8 ரன், டிம் டேவிட் 26 ரன், ஜித்தேஷ் ஷர்மா 14 ரன், க்ருணால் பாண்ட்யா 12 ரன் ஆகியொர் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கத் தவறினர். டெல்லி அணியில் நிகிடி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய டெல்லி அணியில் கே,எல், ராகுல் (34 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அக்சர் படேல் (19 பந்துகளில் 26 ரன்), டேவிட் மில்லர் (10 பந்துகளில் 22 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் 19.5 ஓவர்களில் டெல்லி அணி 179 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இருபத்தியேழாவது ஆட்டம் ஹைதராபாத் vs சென்னை – ஹைதராபாத் – ஏப்ரல் 18 இரண்டாவது ஆட்டம்

          முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்தது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 59 ரன்னும் (22 பந்துகள், 6 ஃபோர், 4 சிக்சர்), ஹென்றி கிளாசன் 59 ரன் (39 பந்துகள் 6 ஃபோர், 2 சிக்சர்), ட்ராவிஸ் ஹெட் 23 ரன்னும் (20 பந்துகள், 3 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். சென்னை அணியின் அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஜமி ஓவர்டன் இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே 30 ரன்னும் (13 பந்துகள் 5 ஃபோர், 1 சிக்சர்), மேத்யூ ஷாட் 34 ரன்னும் (30 பந்துகள், 3 ஃபோர்), சர்ஃப்ராஸ் கான் 25 ரன்னும் (19 பந்துகள், 3 ஃபோர்), ஷிவம் துபே 21 ரன்னும் (16 பந்துகள் 1 ஃபோர், 1 சிக்சர்) அடித்தனர். ஆயுஷ் மாத்ரே காலில் காயம் பட்டுக்கொண்டார். இதனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகம். சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் 7 ரன் மட்டுமே எடுத்தார். ஹைதராபாத் அணியின் ஈஷன் மலிங்கா 3 விக்கட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.   

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – ஏப்ரல் 19

          முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி அதிரடி ஆட்டக்காரர்களை அணியில் வைத்திருந்தும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 155 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் யசஸ்வீ ஜெய்ஸ்வால் 39 ரன்னும் (29 பந்துகள் 4 ஃபோர், 2 சிக்சர்), வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்னும் (28 பந்துகள், 6 ஃபோர், 2 சிக்சர்) எடுத்தனர். பிறர் இன்று சரியாக ஆடவில்லை. கொல்கொத்தா அணியின் கார்த்திக் தியாகி மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் தலா 3 விக்கட் எடுத்தனர். கொல்கொத்தா அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் ரன் எடுக்காமல் முத்ல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு அதிரடி வீரர் ரகுவன்ஷியால் 19 பந்துகளில் 10 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் காமரூன் கிரீன் (27 ரன்), ரொவ்மென் போவெல் (23 ரன்), ரிங்கு சிங் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), அங்குல் ராய் (29 ரன்) சிறப்பாக ஆடியதால் கொல்கொத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

1001368925 - 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலையில் மீண்டும்
வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
20 பேர் உயிரிழப்பு 6 பேர் காயம் என முதற்கட்ட தகவல்.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் இன்று மாலை நடைபெற்ற வெடிவிபத்தில் 4அறைகள் சேதமாகின.20 பேர் உயிரிழந்துள்ளனர் 6 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி.
இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இது டி.ஆர்.ஓ.லைசன்ஸ் உடன் இயங்கி வருகிறது.
இதில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகள் இயங்காது.
தேர்தல் நாளான 23 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று
வேலை வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென பட்டாசு வெடித்தது.தீயானது மற்ற அறைகளுக்கும் பரவியது.வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன.
23 பேர் உயிரிழந்துள்ளனர்
பலர் காயமடைந்தனர் .

தகவலறிந்த சிவகாசி சாத்தூர் விருதுநகரை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயணைப்புத் துறையினர்
தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் கருகிய நிலையில் உள்ளதால் ஆண் பெண் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் மீண்டும்
இரவு வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் பலர் பலத்த காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி. இங்குள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஞாயிறன்று மாலை திடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் அமைச்சர்கள் சென்றனர். இந்நிலையில் தீயணைப்புத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்களின் உடல்கள் ஏதும் சிக்கியுள்ளதா? என பார்த்து அதை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்த வேதிக் கலவையானது யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில், தீயணைப்பு வீரர்கள், போலீசார் சிலர் காயமடைந்தனர்.

விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 6போலீசார் காயமடைந்த தாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

1001369133 - 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பலர் படுகாயம் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே வி முத்துலிங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சென்னை உரிமம் பெற்ற வனஜா பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வெடிமருந்து இருக்கும் அறையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

1001369134 - 2026

இதில் 4 அறைகள் தரைமட்டமாகின.இந்த
வெடி விபத்தில் முதலில் 15 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

மேலும் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனரா என ஜே.சி.பி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.சம்பவம்
அறிந்து விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசார் மற்றும் சிவகாசி விருதுநகர் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1001368978 - 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
23 பேர் உயிரிழப்புக்கு இந்திய ஜனாதிபதி பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகள் இயங்காது.
தேர்தல் நாளான 23 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று
வேலை வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென பட்டாசு வெடித்தது.தீயானது மற்ற அறைகளுக்கும் பரவியது.வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன.
23பேர் உயிரிழந்துள்ளனர்
6 பேர் காயமடைந்தனர் .

தகவலறிந்த சிவகாசி சாத்தூர் விருதுநகரை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயணைப்புத் துறையினர்
தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் கருகிய நிலையில் உள்ளதால் ஆண் பெண் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

parliament women reservation bill failed - 2026

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிலும் தொகுதி மறுவரையறுப்பு மசோதாவிலும் தோற்றது அமித் ஷாவா, இண்டி கூட்டணியா?

ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி புலம்புகிறார், “என்ன காரியம் செய்து வைத்திருக்கிறீர்கள் இண்டி கூட்டணி மக்களே? இந்த மசோதாவைத் தோற்கடித்ததால் தென் மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறையப் போகிறது. பெண்களையும் கடுப்பேற்றியிருக்கிறீர்கள். இனி தொகுதி வரையறை 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நடக்கும் என்பதால் தெற்கே நாடாளுமன்ற இருக்கைகள் குறையும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

“இது புரியாமல் தென் மாநிலங்களுக்கு அதிக இடம் ஒதுக்கிய அமித் ஷாவின் மசோதாவை தோற்கடித்திருக்கிறீர்களே…! உங்களுக்கு மூளை இருக்கிறதா?” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜெகன் ரெட்டி.

லோக்சத்தா கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தன் பதிவில், “நாடாளுமன்றத்தில் அமித் ஷா கொண்டு வந்த 131ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா தோற்கடிக்கப் பட்டதால், இனி தொகுதி மறுவரையறுப்பு 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடக்கும் (Delimitation Commission அதைச் செய்யும்). இதன் காரணமாக இந்த மாநிலங்கள் இழக்கப் போகும் இருக்கைகள்: தமிழகம் 10, ஆந்திரா 5, கர்னாடகா 2, கேரளா 7… அதே நேரத்தில் அதிக இருக்கைகளைப் பெறப் போகும் மாநிலங்கள்: உபி 12, பிஹார் 10, ராஜஸ்தான் 7, மத்திய பிரதேசம் 5!” என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு, “2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இருக்கைகள் திருத்தி அமைக்கப் பட்டால் அது பாஜகவுக்கே பலன் தரும்” என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

“அமித் ஷா ஸ்கெட்ச் நமக்குத் தான் போட்டிருக்கிறார். நாம் அதில் விழுந்து விட்டோம்” என்று தெரியாமல் இண்டி கூட்டணி குதித்துக் கொண்டிருக்கிறது.
தொகுதி மறுவரையோடு பெண்கள் மசோதாவை ஏன் சேர்த்தார் அமித் ஷா? மசோதா ஜெயித்தால், “நாங்கள் தான் பெண் உரிமையை நிலைநாட்டினோம்” என்று கூறலாம். தோற்கடிக்கப் பட்டால், “தாய்க் குலமே… உங்கள் உரிமையைத் தட்டிப் பறித்து விட்டார் ஸ்டாலின், ராகுல் கூட்டணி” என்று பழியை இண்டி கூட்டணி மீது போடலாம். தலை விழுந்தாலும் பாஜகவுக்கு வெற்றி, வால் விழுந்தாலும் பாஜகவுக்கு வெற்றி.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நீண்ட பதிவு இது…

தற்போது 131வது திருத்த மசோதா தோல்வியடைந்ததால், மக்களவை இட ஒதுக்கீடு 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் செய்யப்படும்.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, ஏழு மாநிலங்கள் 35 இடங்களை இழக்கக்கூடும்: ஆந்திரப் பிரதேசம் (-5), தெலங்கானா (-3), தமிழ்நாடு (-10), கர்நாடகா (-2), கேரளா (-7), ஒடிசா (-4) மற்றும் மேற்கு வங்காளம் (-4).

நான்கு மாநிலங்கள் 34 இடங்களைப் பெறக்கூடும்: உத்தரப் பிரதேசம் (+12), பீகார் (+10), மத்தியப் பிரதேசம் (+5) மற்றும் ராஜஸ்தான் (+7).

2026 மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடங்கள் மறுபங்கீடு செய்யப்படுவதால், பாஜக.,வே அதிகப் பயனடையும் என்று பரவலாக நம்பப்படுகிறது.
தனது நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான வகையில், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் மாநிலங்களின் தற்போதைய இடப் பங்கீட்டை முடக்குவதற்கு என்டிஏ அரசு முன்வந்துள்ளது. பாஜக இத்தகைய முடக்கத்திற்கு உறுதியளிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் – கட்சியை விட தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பது, தெற்கில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு வழிவகுப்பது, அல்லது உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் தேசம் வளர்ச்சி மற்றும் செழிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, பிளவுபடுத்தும் ஒரு பிரச்சினையைத் தவிர்ப்பது போன்றவை. பாஜகவின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் தொகையில் தங்கள் பங்கை இழந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரு எதிர்பாராத பரிசு கிடைத்துள்ளது. கிடைத்த பரிசை குறை சொல்லக்கூடாது!

ஆச்சரியப்படும் விதமாக, தெற்கு மற்றும் கிழக்கில் பெரும் செல்வாக்குள்ள கட்சிகள் ஒரு அற்புதமான ‘செல்ஃப் கோல்’ அடித்துள்ளன. இது, தன் மூக்கையே வெட்டி முகத்தை சிவக்க வைப்பதற்குச் சமம்.

2001-ல், இடங்களுக்கான முடக்கம் முடிவடையும் தருவாயில், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு முடக்கி வைக்குமாறு அப்போதைய வாஜ்பாய் அரசை வற்புறுத்துவதில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். ஒரு சிக்கலான கூட்டணியும், பொக்ரான் குண்டுவெடிப்புக்குப் பிறகு விதிக்கப்பட்ட வெளித் தடைகளால் ஏற்பட்ட பொருளாதாரச் சவாலும் தேசிய ஒற்றுமையைக் கோரின, அதற்கு கட்சிகள் 84-வது திருத்தத்தின் மூலம் பதிலளித்தன. இப்போது மீண்டும் ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பு உருவானது, ஆனால் எதிர்க்கட்சியோ எந்தவிதமான வியூக சிந்தனையும் இன்றி அதை வீணடித்துவிட்டது.

அரசியல் விரோதப் போக்கு, உங்கள் சொந்த நலன்களையோ அல்லது ஒற்றுமையை வளர்ப்பது, வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தில் கவனம் செலுத்துவது போன்ற பரந்த நலன்களையோ மறக்கச் செய்தால், அது செயலிழந்த அரசியலின் அறிகுறியாகும்.

மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், இட ஒதுக்கீடு என்ற சிக்கலான பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வைக் காண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தேசிய ஒற்றுமையும், அனைவருக்கும் வாய்ப்பு மற்றும் செழிப்புக்கான நமது தேடலும் ஒரு நியாயமான மற்றும் விரைவான தீர்வைக் கோருகின்றன.

நீண்ட காலப் போக்கில், இடம்பெயர்வு ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யும். ஏற்கெனவே, தெற்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பல மாநிலங்களின் பொருளாதாரங்களை லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டமைத்து நிலைநிறுத்தி வருகின்றனர். அதனால்தான், குறைந்த பிறப்பு விகிதம் இருந்தபோதிலும், மகாராஷ்டிராவின் மக்கள்தொகைப் பங்கு அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில், வியத்தகு உள்நாட்டு இடம்பெயர்வு, பல ஆண்டுகளாக மக்கள்தொகையியலையும் பிரதிநிதித்துவத்தையும் மாற்றியுள்ளது. வளர்ச்சி இருக்கும் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் மாநிலங்களுக்கு மக்கள் சுதந்திரமாக இடம்பெயர்கின்றனர். ஒரு நூற்றாண்டில், அமெரிக்க காங்கிரஸில் புளோரிடா தனது பிரதிநிதித்துவத்தை 4-லிருந்து 28 ஆகவும், கலிபோர்னியா 11-லிருந்து 52 ஆகவும், டெக்சாஸ் 18-லிருந்து 38 ஆகவும், வாஷிங்டன் 5-லிருந்து 10 ஆகவும் அதிகரித்துள்ளன. வெளிக்குடியேற்றத்தின் காரணமாக, நியூயார்க் 43-லிருந்து 26 ஆகவும், பென்சில்வேனியா 36-லிருந்து 17 ஆகவும், இல்லினாய்ஸ் 27-லிருந்து 17 ஆகவும், ஓஹியோ 22-லிருந்து 15 ஆகவும், மிசோரி 16-லிருந்து 8 ஆகவும் இடங்களை இழந்துள்ளன.

மக்கள் மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வதை நாம் எளிதாக்க வேண்டும், மேலும் எல்லா இடங்களிலும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை அங்கீகரித்து மதிக்க வேண்டும், அவர்களின் வாழ்க்கையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற வேண்டும். அது நமது மக்கள்தொகையியல் சவால்களைத் தீர்க்கும். பெரும்பாலான மாநிலங்கள் குறைந்த கருவுறுதல் விகிதத்தை எட்டியுள்ளன, மேலும் பீகார், உ.பி., ம.பி., ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலையை அடையப் போகின்றன.

நாம் ஒன்றிணைந்து வளர்ந்து வலிமை பெற, பகுத்தறிவுள்ள மற்றும் நடைமுறைக்கு உகந்த அணுகுமுறை தேவை. கட்சிகள் தூண்டிவிடும் மற்றும் பிளவுபடுத்தும் சொல்லாடல்களைக் கைவிட்டு, அனைவருக்கும் தரமான கல்வி, திறன்கள் மற்றும் வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் அவர்களை வலியுறுத்துவோம்.

எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே தீவிரமாகக் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்; தாங்கள் என்ன சாதித்திருக்கிறோம்? என்று!

ஆனால், யதார்த்தம் என்னவென்றால், தெற்கில் இந்த எண்ணிக்கை குறையும், மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளது! தெற்கிற்கும் சரி, பெண்களுக்கும் சரி நீதி வழங்கப்படவில்லை!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

parliament women reservation bill failed - 2026

மகளிர் இட ஒதுக்கீட்டுடன் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஏப்.17 வெள்ளிக்கிழமை நேற்று அறிமுக நிலையிலேயே தோல்வியை சந்தித்து, பின்வாங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. பதிவான 489 ஓட்டுகளில், ஆதரவாக 278 ஓட்டுகளும், எதிராக 211 ஓட்டுகளும் பதிவாகின. பதிவான ஓட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறாததால் இந்த மசோதா, மக்களவையின் அறிமுக நிலையிலேயே தோல்வி அடைந்தது. பெரும்பான்மை பெற 326 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 48 வாக்குகள் குறைவாகப் பெற்று இந்த மசோதா ஆதரவிழந்தது. 

இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைய வேண்டும் என்று தொடக்கம் முதலே வேலை செய்தது திமுக.,வும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான். திமுக., அளித்த அழுத்தத்தால் காங்கிரஸும் இண்டி கூட்டணிக் கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்ப்பதில் ஓரணியில் நின்றன. ஆனால், இந்த மசோதாவை தோல்வி அடையச் செய்ததால், பெண்களுக்கு மட்டும் பாதிப்பு என்றில்லை, தமிழகம் உள்ளிட்ட ஒட்டு மொத்த தென்னிந்திய மாநிலங்களுக்குமே இழப்பு என்பது தான் உண்மை. உண்மை எப்போதும் கசக்கவே செய்யும். அது என்ன என்பதை பின்னாளில் தமிழகம் பார்க்கப் போகிறது. அன்றும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து தெருக்களில் இறங்கி திமுக., நாடகம் போடப் போகிறது. அன்று திமுக., எதிர்க்கட்சியாக இருக்கக் கூடும். அப்போது நாடகத்தனங்களை வெளிப்படுத்தி மக்களிடம் எதிர்ப்பலைகளை உருவாக்குவதில் அது மிகச் சிறப்பாகவே செயல்படக் கூடும்!

இந்த மசோதா தோல்வி அடைந்தவுடன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்தபோது, “நண்பர்கள் யார், துரோகிகள் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது தொகுதி மறுவரையறை; புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது; நமது வெற்றி தொடரட்டும். தீ பரவட்டும் என்று நான் சொன்னது நாடாளுமன்றம் வரை பற்றிக் கொண்டது; மகிழ்ச்சி, புது எனர்ஜியுடன் உங்கள்முன் நிற்கிறேன்; தொகுதி மறுவரையறை என்ற கருப்பு சட்டத்தை எதிர்த்து வெற்றி கிடைத்திருக்கிறது.” என்று கூறினார்.

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

முன்னர் 1998ல் பாஜக., பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இதே போல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்த போது, எதிர்க்கட்சிகள் மசோதாவைக் கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து, நாடாளுமன்றத்தையே முடக்கியது வரலாறு. இப்போது 2026ல் பாஜக., பிரதமர் நரேந்திர மோடி, தொகுதி மறுவரையரையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்த போது, அதே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முடக்கியுள்ளன. 

ஆனால், பாஜக., பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் 2023 நிறைவேறியது என்பது குறிப்பிடத் தக்கது. 1970களில் இதே போல் இடஒதுக்கீடு என்று பேசி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூட, அடுத்த 25 வருடங்களுக்கு இந்த மசோதா வேண்டாம் என்று ஒத்தி வைத்தார். அந்த வகையில், காங்கிரஸால் அது ஆண்ட காலங்களில் இந்த இடஒதுக்கீட்டைத் தரமுடியவில்லை என்பதும் வரலாறு!

இப்போது திமுக வேறு ஒரு வகையில் அரசியலை முன்னெடுக்கிறது.  தாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகவும் ஆனால் தொகுதி மறு சீரமைப்பு மசோதா உடன் அதை தாக்கல் செய்ய மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஒரு கதையை விடுகிறது.  ஆனால் தொகுதி மறு வரையறை மசோதாவின் மத்திய அரசு முன் வைத்திருக்கும் தீர்வு மிகத் தெளிவானது.  அது தற்போதைய நிலையில் தற்போதைய விகிதாச்சாரத்தை அப்படியே 50 சதவிகிதம் உயர்வு செய்து அந்த மொத்த இடத்தில் 33 சதவிகிதம் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது. 

ஆனால் திமுக இதனை வேறு விதமாக மக்களிடம் பிரச்சாரம் செய்தது. தொகுதி மறு வரையறை மூலம் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் தற்போதைய இடங்களே கூட குறைந்து விடும் என்று மக்களை பயமுறுத்தி வருகிறது.  மேலும்,  33% மகளிர் ஒதுக்கீடு திருத்த மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?  என்றும் கேள்வி எழுப்புகிறது. 

இந்நிலையில்,  2023லேயே சட்டமாகிவிட்டது 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா.  இப்போதைய 543 என்கிற நாடாளுமன்ற எண்ணிக்கையில் இருந்தே இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாமே என்ற கேள்வி எழக்கூடும். ஆனால், ஏற்கெனவே இருக்கும் தங்களது உறுப்பினர் இடங்களையும் இழந்துவிட வேண்டி இருக்கும் என்று அச்சப்படுவதால் அந்தக் கட்சிகள் எதிர்ப்பது புரிந்து கொள்ளக் கூடியது.

ஆனால், மசோதா தோற்கடிக்கப்பட்டதன் மூலம், மூன்றில் ஒருபங்கு “ஆண்களுக்கான இடம்” பறிபோய், மொத்த இடமும் குறைந்து இடங்களுக்கு அடித்துக் கொண்டு பரிதவிக்கும் போதுதான், எதிர்க் கட்சிகளின் ஆணாதிக்கத் தலைவர்களுக்கு இப்போது மத்திய அரசு முன்வைத்த 50% உயர்வு மற்றும் அதில் மகளிருக்கான இடஒதுக்கீடு என்பதன் அருமை புரியும்! 

“இடங்களை எல்லா மாநிலத்திற்கும் 50℅ உயர்த்துகிறோம் என்பதை எழுத்துபூர்வமாகத் தருவீர்களா?” என வேணுகோபால் (காங்.) கேட்டபோது, “எதிர்க்கட்சிகள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் அந்தத் திருத்தத்தைத் தயாரித்து அவையின் முன் வைக்கிறோம்” என்றார் அமித்ஷா. ஆனால் எதிர்க்கட்சிகள் பின்வாங்கின. அவற்றின் நோக்கம் மசோதாவைத் தோற்கடிப்பது மட்டுமே என்பது தெரியாததா என்ன? 

அண்மையில், ஜார்கண்ட், உத்தராகண்ட், சட்டீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டபோது அவற்றுக்குள் மட்டும் தொகுதி மறுவரையறை நடந்தது. ஆனால், ஒட்டுமொத்த நாட்டுகுமான தொகுதி மறுவரையறை என்பது வருடக் கணக்கில் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. 

இந்த நாடு உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. அதிக மக்கள்தொகை கொண்டதில் முதலிடம் பிடித்த நாடு. இப்போது நாட்டின் மக்கள்தொகை 140 கோடிக்கும் மேல். ஆனால், கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக, அந்நாளைய தொகுதிகளின் எண்ணிக்கை இன்றளவும் மாறவில்லை. அண்மையில் தான், பிரதமர் நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்த பின்னர், இந்த நிலையை உணர்ந்து, உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நாடாளுமன்றக் கட்டடமும் புதிதாகக் கட்டி அதில் சபையை மாற்றினார். புதிய கட்டடத்தின் படி, மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் என மொத்தம் 1272 உறுப்பினர்களைக் கையாளும் வகையில் விரிவாகப்பட்டதை நினைத்துப் பார்க்கலாம். 

அதனால் தான் தற்போதைய 543 என்ற எண்ணிக்கையில் இருந்து சுமார் 800க்கும் அதிகமான உறுப்பினர்களை அதிகரித்து, மக்கள் பிரதிநிதித்துவத்தை மேலும் விரிவாக்க பிரதமர் மோடி அமைச்சரவை முடிவு செய்தது. மக்கள்தொகை அதிகரித்துள்ள சூழ்நிலையில் மக்கள்தொகை அடிப்படையில் இடங்களை அதிகரிக்கலாம் என்றால்,  மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்த தென் மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும், அது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சரியாக செயல்பட்ட தங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்றும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கருத்துக்கள் எழுந்தது. 

எனவே, மக்கள்தொகை அடிப்படையில் அல்லாமல், இப்போதிருக்கும் பிரதிநிதித்துவ சதவிகித அடிப்படையில், அதாவது இப்போது ஒவ்வொரு மாநிலமும் எந்தெந்த சதவிகித பிரதிநித்துவத்தில் உள்ளதோ அதே சதவிகிதத்தில் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம், அதன் மூலம், 850க்கும் அதிக இடங்களாக வரும் வகையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என மத்திய மோடி அரசு, இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை வடிவமைத்தது. இந்த மசோதா அவ்வகையில் மிக எளிமையானது, எவருக்கும் வஞ்சகமற்றது, அதே நேரம் மக்கள்தொகை அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய தென் மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்குவது!

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 543 என்கிற தொகுதிகளின் எண்ணிக்கையில் இருந்து 33% எண்ணிக்கையை பிரித்து எடுத்து பெண்களுக்கு ஒதுக்குவதை விட, அதிகரிக்கப்பட்ட 850க்கும் கூடுதலான இடன்க்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து 33% அளவில் தொகுதிகளைப் பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவது என்பது, ஏற்கெனவே இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதும், அமல்படுத்துவதற்கு எளிமையானது என்பதும் மோடி அரசின் கருத்து. 

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்ளன. திமுகவின் கோரிக்கையின்படி, தற்போதுள்ள 543 தொகுதிகளுக்குள்ளேயே நாம் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால், பெண்களுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 26 தொகுதிகள் மட்டுமே பொதுப்பிரிவிற்கு (open) எஞ்சியிருக்கும். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், தமிழ்நாடு உண்மையில் 6 தொகுதிகளை இழக்க நேரிடும். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை; மாறாக, ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 தொகுதிகள் கிடைக்கும் — இதன் விளைவாக 39 பொதுத் தொகுதிகளும், 20 ஒதுக்கப்பட்ட தொகுதிகளும் அமையும். — மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை விளக்கினார்.

அதனால்தான் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைந்து மகளிருக்கான  33% இட ஒதுக்கீட்டு மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால் இந்த மசோதாவை ஸ்டாலினின் வழிகாட்டலில், இண்டி கூட்டணி வேண்டுமென்றே தோற்கடித்தது!

நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி உள்ள பெண்களும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்காவது அவர்களது பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இருக்க வேண்டும் என்று, மோடி கொடுக்க முயன்றார். அதைக் கெடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

railway news - 2026
#image_title

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் – செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

  1. ரயில் எண் 06023 / 06024 சென்னை செண்ட்ரல் – போத்தனூர் – சென்னை செண்ட்ரல் அதிவிரைவு வண்டி
    22 ஏப்ரல் புதன் அன்று சென்னை செண்ட்ரலில் இருந்து மதியம் 3.10க்கு கிளம்பி அன்று இரவு 11.30க்கு போத்தனூர் சென்றடையும்.
    மறு மார்க்கத்தில், போத்தனூரில் இருந்து ஏப்ரல் 23ம் தேதி வியாழன் இரவு 11.30க்கு கிளம்பி, மறு நாள் காலை 8.20 க்கு சென்னை செண்ட்ரலுக்கு வந்து சேரும்.
  2. ரயில் எண் 06018 / 06017 தூத்துக்குடி – தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி
    ஏப்ரல் 20, 27 ஆகிய தேதிகளில் துத்துக்குடியில் இரவு 11.30க்கு கிளம்பி தாம்பரத்துக்கு மறு நாள் மதியம் 12.30க்குச் சென்றடையும்.
    மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஏப்.21, 28 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் மதியம் 3.30க்குப் புறப்பட்டு, மறு நாள் காலை 4.30க்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும்.
  3. ரயில் எண் 06045 / 06046 சென்னை எழும்பூர் – கன்யாகுமரி – சென்னை எழும்பூர்அதிவிரைவு வண்டி
    ஏப். 22 புதன் இரவு 11.50க்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு, மறு நாள் மதியம் 1 மணிக்கு கன்யாகுமரி சென்றடையும்.
    மறு மார்க்கத்தில் ஏப்.26 ஞாயிறு அன்று இரவு 11.25க்கு கன்யாகுமரியில் புறப்பட்டு, மறு நாள் முற்பகல் 11.15க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
  4. ரயில் எண் 06028 / 06027 போத்தனூர் – சென்னை செண்ட்ரல் – போத்தனூர் சிறப்பு விரைவு வண்டி
    போத்தனூரில் ஏப். 21, 22, 25, 26 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, சென்னை செண்ட்ரலுக்கு மாலை 5 மணிக்கு சென்றடையும்
    மறு மார்க்கத்தில் ஏப். 21,22, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னை செண்ட்ரலில் இருந்து மாலை 6.35க்குப் புறப்பட்டு, மறு நாள் காலை 4 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

  1. (1) தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் எண் 06089 , 22/04/26 புதன்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மேலமருவத்தூர் விழுப்புரம் பண்ருட்டி திருப்பாதிரிபுலியூர் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக 23/04/26 வியாழக்கிழமை காலை 05.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

(2)மறுநாள் 23.04.26 வியாழக்கிழமை செங்கோட்டை – சென்னை பீச் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் எண் 06090 செங்கோட்டையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி விருதுநகர் மதுரை கொடைக்கானல் ரோடு திண்டுக்கல் திருச்சி ஶ்ரீரங்கம் அரியலூர் விருத்தாசலம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் 24/04/26 வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு தாம்பரத்தையும் காலை 10.50மணிக்கு சென்னை எழும்பூரையும்
11.30 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலயத்தையும் சென்றடையும்.

இந்த ரயில்களில் 3 அடுக்கு ஏசி பெட்டிகள் -4, இரண்டாம் வகுப்பு ஏசி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் -10, முன்பதிவில்லா பெட்டிகள்-4, திவ்யாங்ஜன் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் -2 இணைக்கப்படும்.

முன்பதிவு நாளை 18.04.26 சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.
பொது மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்தக் கொள்ளலாம்.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

parabhava tamil new year - 2026

பராபவ வருடம் பலன்மிக நல்கட்டும்

— பா.கோபாலன்

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம். ஒரு உபன்யாசகர் மேற்கோள் காட்டிய சுலோகத்தில் இதற்கான விடை வருகிறது:

பராப4வதி ராஜான: ப்ராப்னுவந்தி பராப4வம் |
2லந்தி சுப்ரத4ன்யானி ப்ரபூ4தானி சுபி4க்‌ஷ ||

அதாவது அக்கிரம ஆட்சி செய்யும் அரசனுக்கு அவமானம், தோல்வி ஆகியவைகள் ஏற்படும் என்பது முதல் வரி. சுலோகத்தின் இரண்டாம் வரி இவ்வருடத்தில் தானியங்கள் அமோகமாக விளையும், எங்கும் சுபிக்ஷம் நிலவும்  என்றும் சொல்கிறது.

இப்படி ஒரு எதிர்மறையான சொல்லுக்கு  நேர்மறையான பொருள் விளக்கம் அளிப்பது அறிஞர்களுக்கும், கவிகளுக்கும் கைவந்த கலை. பல வசவுச் சொற்களால் இறைவனை வைவது போல்  ‘நிந்தா ஸ்துதி’ பாடி போற்றியுள்ளனர் ஆன்றோர்.

ஒருமுறை ஔவையார் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவருக்குச் சரியாக உணவிடவில்லை. அப்போது கோபத்தில் அவ்வையார் “இட்டாரும் வாழ்க! இடாதாரும் வாழ்க!” என்று வாழ்த்தினாராம்.அதாவது உணவு தராதவர்கள், சீக்கிரம் இறந்து அடுத்த பிறவியிலாவது உயர வேண்டும் என்ற உயரிய நேர்மறை நோக்கம் அதில் இருந்தது.

மகாகவி காளிதாஸரின் வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாக வழங்கிவரும் ஒரு கதை. ஒரு ஏழை பிச்சைகாரரை அரசவைக்கு அழைத்துச்சென்று அரசனிடம் சன்மானம் பெறச்செய்ய வேண்டும் என்ற சக புலவர்கள் தொடுத்த சவாலை ஏற்றார் காளிதாசர்.

அந்த ஏழையை நீராட்டி முனிவர் போல் வேடம் அணியச் செய்தார். அரண்மனையில் எதைக் கண்டாலும் லட்சியப் படுத்தக்கூடாது, வாயை திறக்கவோ பேசவோ கூடாது, எதையும் தொடாமல், யார் வணங்கினாலும் கைகளை உயர்த்தி ஆசிகள் தெரிவிக்க வேண்டும், அரசர் உபதேசம் வேண்டும்போது, தான் கையசைத்தால் மட்டும் வாயைத் திறந்து “திரிபீடா பரிஹாரோ அஸ்து’ (மூன்று பீடைகளினின்றும் விடுதலை கிடைக்கட்டும்) என்ற மூன்று வார்தைகளைச் சொல்லி ஆசீர்வதிக்க வேண்டும் என்று கண்டிப்பான கட்டளை அளித்திருந்தார். பெரியோர்கள், மனம், வாக்கு, மெய் ஆகியவைகளால் செய்த மூன்றுவகைக் குற்றங்களுக்கு பரிகாரம் கிடைக்க அப்படி வாழ்த்துவது வழக்கம்.

அரசரிடம் முதல் நாளே தான் வழிபட்டுவரும் குரு ஒருவரை, ஆயுள் முழுதும் மௌனவிரதம் அநுஷ்டிப்பவரை, தான் மன்றாடி வேண்டிக் கொண்டதன் பேரில் அவர் அரண்மனைக்கு எழுந்தருள ஒப்புக்கொண்டதாகச் சொல்லி தக்க வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பனிவுடன் அழைத்துச் செல்லப்பட்ட முனிவரை அரசன் முறையாக பூஜித்து வணங்கிய தருணத்தில் காளிதாசர் கையசத்து குறிகாட்ட முனிவர் வாயைத் திறந்து ஞாபக மறதியால் “திரிபீடா அஸ்து” (மூன்று பீடைகளும் கிடைக்கட்டும்) என்று ஆசீர்வதம் அருளிவிட்டர். அரசனும் சபையோர்களும் சாப வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து நின்றனர்.

அப்போது காளிதாசர் உரத்த குரலில் “ஆஹா! வருடக்கணக்கில் பேசாதிருந்த எங்கள் குரு இன்று முதல் தடவையாக வாய் திறந்து இரண்டு பொருள் பொதிந்த சொற்களை உதிர்த்துள்ளது நாம் செய்த பாக்கியம். அவர் அரசனுக்கு நல்கிய வாக்குப்படி அவருக்கு எப்போதும் அரசவையில் கற்றறிந்த  அரிஞர்களாலும், அவர் உண்னும் போது புத்திரச் செல்வங்களாலும், இரவில் அருமை மனைவியராலும் சூழப்படும் முவ்வகை தொந்தரவுகள் வாய்க்கட்டும்”

ஆசனே விப்ர பீடா3ஸ்து புத்ரபீடா3ஸ்து போஜநே |
சயனே தார பீடா3ஸ்து த்ரிபீடா3ஸ்து நரேந்த்ர தே ||

பீடை என்ற எதிர்மறை சொல்லை நேர்மறைப் பொருளுடையதாக ஆக்கிவிட்டது காளிதாசரின் சொல்வண்மை! அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கும் அந்த ஏழை பெற்ற செல்வங்களுக்கும்  எல்லையில்லை.

ஆகவே பராபவ வருடமும் நன்மை பயக்கும் என எதிர்பார்ப்போம்.