Home Blog Page 7

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

chozhavanthan kuruvithurai vaigai river alagar - 2026

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

மதுரையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சுமார் ஆறு மணி அளவில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சோழவந்தான் மற்றும் குருவித்துறை ஆகிய பகுதிகளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

சோழவந்தானில் காலை 9.30க்கும் அதற்கு முன்னதாக குருவித்துறையில் காலை 8:30 மணிக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசனம் செய்து சென்றனர்.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் திட்டமிடாத செயலால் வைகை ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்ட பகுதியில் கள்ளழகர் இறங்கியது பக்தர்களிடம் மன வேதனை ஏற்படுத்தியது குறிப்பாக மதுரையில் கள்ளழகர் இறங்கும் நாளுக்கு முன்னதாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்

அதே போல் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது ஆனால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் எனக் காரணம் கூறி குறைந்த அளவு தண்ணீரை வைகை அணையில் இருந்து திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்

அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஆனது மதுரை சென்று சேர்வதற்கு முன் வெப்பம் அதிகம் உள்ள சூழ்நிலையில் நிலத்தில் உறிஞ்சப்பட்டு மதுரையில் அழகர் இறங்கும் போது தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என கருதி மாற்று ஏற்பாடாக அணைப்பட்டியில் இருந்து பாசன கால்வாய் மூலம் அலங்காநல்லூர் வழியாக செல்லூர் கண்மாய் பகுதிக்கு வைகை அணை தண்ணீரை கொண்டு சென்ற அதிகாரிகள் அங்கிருந்து மதுரையில் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு நேரடியாக தண்ணீரை கொண்டு சென்று நிரப்பினர்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் தகவல் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் குருவித்துறை உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து குருவித்துறை சோழவந்தான் வழியாக தண்ணீரை மதுரைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது

இதனால் குருவித்துறையில் தண்ணீர் இன்றி வெறிச்சோடிய வைகை ஆற்றிலும் சோழவந்தானிலும் தண்ணீர் இன்றி வைகை ஆற்றிலும் கள்ளழகர் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து கள்ளழகரை தரிசிக்க வருகை தந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மனதில் வேதனையை ஏற்படுத்தியது கள்ளழகர் இறங்கும் போது வைகை ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும் என நினைத்த பக்தர்கள் தன்னீரின்றி காய்ந்து கிடந்ததால் அழகர் மீது தண்ணீரை பீச்சு அடிக்கவோ வெப்பத்தை தணிக்க வைகை ஆற்றில் குளித்து மகிழவோ முடியாத நிலையில் பக்தர்கள் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்

நேற்று காலை ஆறு முப்பது மணி அளவில் மதுரையில் கள்ளழகர் இறங்கியவுடன் அதிகாரிகள் சுதாரித்து அணைப்பட்டியில் இருந்து குருவித்துறை வழியாக தண்ணீரை திருப்பி விட்டிருந்தால் கூட ஒரு மணி நேரத்தில் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள குருவித்துறைக்கும் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள சோழவந்தானிற்க்கும்
குறைந்த அளவு தண்ணீராவது வந்து சேர்ந்திருக்கும் இதனையும் செய்ய எந்த ஒரு முயற்சியும் அதிகாரிகள் தரப்பில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது

இதன் காரணமாக பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த திட்டத்தை மாற்றி அதிகாரிகள் தன்னிச்சையாக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை மதுரைக்கு நேரடியாக கொண்டு சென்றதன் விளைவாக பக்தர்கள் பொதுமக்கள் கள்ளழகரை தரிசிப்பதில் கடும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டனர்

இனிவரும் காலங்களிலாவது முன்கூட்டியே திட்டமிட்டு குருவித்துறை மற்றும் சோழவந்தான் பகுதிகளுக்கும் வைகை ஆற்றில் போதிய அளவுதண்ணீர் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

paddy bags in rain and sun rays near vadipatti - 2026

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்து தற்போது அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது.

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்கள் கோட்டைமேடு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 20 முதல் 30 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டு தற்போது வரை கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது .

சுமார் 10,000 மேற்பட்ட நெல் மூட்டைகளாகவும் குவியல்களாகவும் கொள்முதல் நிலையங்களில் வெட்ட வெளியில் கொட்டி கிடப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நெல் மூட்டைகள் மற்றும் நெற்குவியல்கள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமடைந்து வருகிறது .

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாகி பின்பு பகலில் வெயில் அடிக்கும் போது நெல் மூட்டைகளின் சாக்குகள் தேய்ந்து மூடைகளில் உள்ள நெல்கள் வெளியில் கொட்டியும் சிதறியும் அழுகியம் காணப்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, இந்த பகுதி விவசாயிகள் கூறுகையில் ,

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து கொட்டி உள்ளோம் பல விவசாயிகளின் நெல்கள் மூடைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. சிலருக்கு சாக்கு வரவில்லை எனக்கூறி நெல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தை நடத்துபவர்கள் யார் என்று விவசாயிகள் ஆகிய எங்களுக்கு தெரியவில்லை நெல்களை கொள்முதல் செய்ய எந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரமும் தெரியாததால் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக நெல்களை காவல் காத்து வருகிறோம்.

கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் மழையில் நனைந்து அழுகியும் வருகிறது மேலும் இரவு மழை பெய்து பகலில் வெயில் அடிக்கும் போது நெல் மூட்டைகள் காய்ந்து உள்ளே இருக்கும் நெல்கள் வெளியே கொட்டி கிடப்பதை பார்க்கையில் விவசாயிகளின் கண்களில் கண்ணீர் வருகிறது என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் 20 நாட்களாக தினசரி நெல்களை உலர்த்தி காய வைத்தும் மூடைகளை புரட்டி மாற்று இடத்தில் வைத்தும் வேலையை செய்து வருகிறோம்.

தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதை காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது தேர்தலும் முடிந்து விட்டது. நெல்லை கொள்முதல் செய்வதற்கு வழியில்லை.

ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்று முதல் நான்கு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகையால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மற்றும் நெல் குவியல்களை குடோன்களுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறோம் – இவ்வாறு கூறினர்.

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

usilampatti mathantham subramania swami temple function - 2026

மதுரை, உசிலம்பட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோவில் பிரச்சனை காரணமாக மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் பூசாரியை மாற்றுவது குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டு கொள்வது குறித்து அறிவுறுத்திய நிலையில் எழுமலை மக்கள் மாதாந்தம் சுப்பிரமணியசுவாமி கோவில் சிலை கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாதாந்தம் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இக்கோவில் பூசாரியாக உள்ள கணேசன் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் பொழுது ஜாதி அடிப்படையில் பாராபட்சம் பார்ப்பதாகவும் ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டி அவரை மாற்றக்கோரியும், மாதாந்தம் சுப்ரமணியர் கோவில் பெயர் பலகையில் எழுமலை என்ற ஊருக்கு பதிலாக ஆத்தங்கரைபட்டி என்ற பெயரை மாற்றக் கோரியும் ஆத்தங்கரை பட்டி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி, உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், எழுமலை மக்கள் பாரம்பரியமாக நடைபெற்று வரும் கோவில் திருவிழாவை வழக்கம்போல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி எழுமலை காவல் நிலையம் முன்பு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் அறிந்து, விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவில் பூசாரியை மாற்றுவது குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டு கொள்வது குறித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாதாந்தம் சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் மயில் வாகனத்தில் இருந்த சுப்பிரமணியசுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து எழுமலை மக்கள் அரோகரா கோசங்கள் முடங்க சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

sivasailam temple swami in fishing festival - 2026

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் – கலைமகள்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள சிவ சைலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது அருள்மிகு சிவசைல நாதர் திருக்கோயில். ஸ்ரீ பரம்பகல்யாணி ஸமேத ஸ்ரீ சிவசைலநாதர் இத்திருக்கோயிலில் எழுந்தருளி அன்பர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். மேற்கே பார்த்த கோயில் இது என்பதில் தனி சிறப்பு உடையது!!

பொதுவாக சிவ ஸ்தலங்களில் சுவாமி மேற்கே பார்த்து இருந்தால் அம்மாள் அனேகமாக வடக்கு முகமாக அன்பர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலிப்பார். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் அத்திரி கூடத்தில் ஆசிரமம் அமைத்து சிவபூஜை செய்து வரும் அத்திரி மகரிஷிக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் தனித்தனி சந்நிதிகளில் மேற்கே பார்த்து அமர்த்தபடி காட்சி கொடுக்கிறார்கள் என்பது ஐதீகம்!

பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா, ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது. பங்குனி கடைசி நாள் அன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் இருவரும் தனித்தனி தேர்களில் வீதி வலம் வருவார்கள்.

ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், கீழாம்பூர் மற்றும் சுற்று வட்டார மக்கள் கூடி சுவாமி தேரை நிலைக்குக் கொண்டு வருவார்கள். அம்பாள் தேரை சுற்று வட்டாரப் பெண்கள் மட்டுமே இழுத்து நிலைக்குக் கொண்டு வருவார்கள் என்பது இக்கோயில் திருவிழாவின் சிறப்பு அம்சம்.

சித்ரா பௌர்ணமி அன்று சிவசைலம் கோயிலில் சிறப்பு வழிபாடு ஒன்று நடைபெறுகிறது. சிவசைலநாதரும் பரமகல்யாணி அம்பாளும் ஒரு சப்பரத்தில் கொலு வீற்றிருந்து கோயிலுக்கு வெகு அருகில் உள்ள கடனா நதி தீர்த்த வாரி மண்டபத்திற்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அங்கே தீபாரதனைகள் நடைபெறும்.

பின்னர் சிவசைலநாதரும் பரமகல்யாணி அம்பாளும் பக்தர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்கக் கிளம்புகிறார்கள். மீன்பிடிப்பு திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று கடனாநதியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மீன் விளையாட்டு என்பது ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது!

மீன்பிடிப்பு திருவிழா முடிந்த பின்னர் இருவரும் அத்திரி மகரிஷிக்குக் காட்சி கொடுக்கிறார்கள். இந்த ஆண்டும் இந்த விழா மிகச் சிறப்பாக சிவசைலம் கடனாநதிக் கரையில் நடைபெற்றது. பல நூறு வருடங்களாக நடைபெற்று வரும் இந்தத் திருவிழாவை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் நடத்தி வருகிறார்கள்.

மீன்பிடிப்பு திருவிழா என்பது, பாண்டிய நாட்டில் பல ஊர்களில் நடைபெற்று வரும் திருவிழாதான். விவசாயம் செழிக்க வருண பகவான் கோடைக்கு விடை கொடுத்து மழை அருள வேண்டும் என்பதற்காக இந்தத் திருவிழா பன்னெடுங்காலமாக விவசாயத்தைச் சார்ந்த பகுதிகளில் பாண்டிய நாட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முழுமையான ஈடுபாட்டுடன் இறைவனை வணங்கினால் புழுவாகவோ பூச்சியாகவோ மீனாகவோ இருந்தாலும்கூட இறைவன் கீழ் இறங்கி வந்து அருள் பாலிப்பான் என்பது இந்த வைபவத்தின் சூட்சுமம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந் நாட்டவற்கும் இறைவா போற்றி!!
ஸ்ரீ சிவசைலபதி ஸ்ரீ பரமகல்யாணி அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ஓம் நமச்சிவாய!

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

madurai kallalagar in chithirai festival - 2026

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் ஸ்வாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை கடந்த இரு தினங்களில் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

இந்த வைபவத்துக்காக ஏப்.29 அன்று, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்பட்டார். மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு ‘எதிர்சேவை’ நடைபெற்றது.  அழகர், மதுரை – தல்லாகுளத்தில், வியாழக்கிழமை இரவு எதிர் சேவையில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

இந்நிலையில் சித்திரா பௌர்ணமியான இன்று அதிகாலை கருப்பணசுவாமி கோயில் முன், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்.  அவர் செல்லும் வழியில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும், பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

முன்னதாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

இன்று காலை 5.50 மணி அளவில், பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார். வெள்ளிக்குதிரை வாகனத்தில், அவரை வீரராகவ பெருமாள் வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது ‛கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். 

அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், காவல் ஆணையாளர் , மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாநகராட்சி ஆணையர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை நகர் காவல் நிலையத்தின் செய்து இருந்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே குடி தண்ணீர் தொட்டிகளை, மதுரை மாநகராட்சி அமைத்திருந்தது.

நாளை 2ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியும், பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். மே 4ல் கள்ளழகர் புஷ்ப பல்லக்கில் அழகர்கோவில் புறப்பட்டு, மறுநாள் மே 5ம் தேதி அங்கு சென்றடைகிறார்.

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

madurai azhagar - 2026
#image_title

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் கடைசி முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை மே 1ல் அதிகாலை 5:30 முதல் 5:55 மணிக்குள் நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து மாலை மதுரையை நோக்கி புறப்பாடாகினார்.

பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கன்னனேந்தல் வழியாக நேற்று மதுரை வந்த கள்ளழகர், மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.

மதுரை மாநகர் பகுதிக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றுவருகிறது. அதனை தொடர்ந்து தல்லாகுளம் கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி நாளை (மே 1) அதிகாலை வெள்ளி குதிரை வாகனத்தில் வீரராகவ பெருமாள் வரவேற்க, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளவுள்ளார்.

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

railway news - 2026
#image_title

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

தாம்பரம் — தென்காசி/செங்கோட்டை,சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி ,
ஈரோடு — சென்னை போத்தனூர், போத்தனூர் சென்னை இன்டர்சிட்டி ஆகிய 4 வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 30 அன்று புறப்பட இருக்கிறது . மேலும் தொடர் விடுமுறை முடிந்து ஞாயிறு சென்னை நோக்கி வர இந்த நான்கு ரயில் இருக்கிறது.

இந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம் .

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 30 காலை 08:00 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

ஈரோடு சென்னை போத்தனூர் சிறப்பு ரயில் முன்பதிவு மட்டும் இன்று 6 மணிக்கே துவங்கி நடைபெற்று வருகிறது.

தாம்பரம் – செங்கோட்டை – தாம்பரம்:

வண்டி எண் 06089 – தாம்பரம் – தென்காசி தாம்பரத்தில் இருந்து ஏப்.30 வியாழன் இரவு 10.30க்கு கிளம்பி, தென்காசிக்கு மறு நாள் காலை 10 மணிக்கு வந்து சேரும்.

வண்டி எண் 06090 – செங்கோட்டை- தாம்பரம் ரயில், செங்கோட்டையில் இருந்து மே 3ம் தேதி இரவு 9.30க்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு மறு நாள் காலை 10.30க்கு சென்றடையும்.

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

srivilliputhur andal maalai for kallalagar - 2026

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் மதுரை அழகர் சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று புறப்பட்டது. திரளான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை உள்ள மண்டபங்களில் ஆண்டாள் மாலைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு நாளை வியாழக்கிழமை இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடைகிறது. 01/05/2026 சித்திரை பௌர்ணமி அதிகாலை கள்ளழகர், ஆண்டாள் மாலை அணிந்து ஆற்றில் இறங்குகிறார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1 அன்று நடைபெற உள்ளது. அதிகாலை 5.35 முதல் 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் பிரவேசிப்பார்.

ஏப்ரல் 19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரைத் திருவிழாவில், ஏப்ரல் 28 அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 29 இன்று திருத்தேரோட்டமும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, மே 1 – கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருள்கிறார். அதற்காக, ஏப்ரல் 29 இன்று மாலை 6.15க்கு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கிப் புறப்பட்டார்.

ஏப்ரல் 30 அதிகாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் மதுரை மூன்றுமாவடி அருகே கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 11.00 மணி முதல் 12 மணிக்குள், தல்லாகுளத்திலிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள கள்ளழகர் புறப்படுவார்.

மே 1 அதிகாலை 5.35 – 5.55 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் பிரவேசிப்பார். அன்று பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மே 2 காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை, வண்டியூர் வைகை ஆற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறுகிறது.

மே 4 அன்று அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து, தல்லாகுளத்தில் உள்ள மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி கள்ளழகர் புறப்படுவார்.

மே 5 காலை 10.40 – 11.10 மணிக்குள் கள்ளழகர் அழகர் மலைக்கு சென்றடைந்து திருவிழா நிறைவு பெறும்.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

school exams - 2026

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முடிவுகள் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகவுள்ளன

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்… இந்தாண்டு எழுதிய தேர்வின் முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும்.

தேர்வு முடிவுகளை, tnresults.nic.in dge.tn.gov.in-ஆகிய இணையதளங்கள் வாயிலாக காணலாம்.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது. எப்போது பார்த்தாலும் ராங்க் எடுப்பதற்கான ஓட்டமும், பணம் சம்பாதிப்பதிற்கு முன்னுரிமை அளிப்பதுமே தம் பிள்ளைகளுக்கு முக்கியம் என்று பெற்றோர் கருதுகின்றனர். அதனால்தான் தாமும் கடைப்பிடிக்காமல் பிள்ளைகளுக்கும் கற்றுத் தராமல், பழக்கப்படுத்தாமல் தர்மத்திலிருந்து தொலைவாக விலகிச் செல்கிறார்கள். தர்மத்தின் மீது அர்பணிப்பு மனப்பான்மை, அனுஷ்டான பயிற்சிகள் இல்லாது போவதால் இந்தச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த வெற்றிடத்தை பிற மதங்கள் பயன்படுத்திக் கொண்டு, தீய உத்திகளைக் கையாண்டு    மதமாற்றங்களை அரங்கேற்றுகிறார்கள். ஐயம் ஏதும் கொள்ளாத ஹிந்து இளைய தலைமுறையின் மூளையில் தம் மதக் கோட்பாடுகளைத் திணிக்கிறார்கள். அவையே மிகச் சிறந்தவை என்ற பிரமையை உருவாக்குகிறார்கள். தம் பாரம்பரியம் பற்றி அறிவின்மையாலும், அறிந்துள்ள வேண்டும் என்ற நாட்டம் இன்மையாலும் இளைஞர்களும், யுவதிகளும் பிறரால் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். உடல் ரீதியான ஈர்ப்பும், உலகியல் போகங்களின் மேல் ஏற்படும் பேராசையும் அவர்களுடைய விவேகத்தை வேலை செய்ய விடாமல், பகுத்தறியும் திறனை மழுங்கடித்து விடுகின்றன.

கல்லூரிப் பருவத்திலேயே இத்தகைய ஆசைகளுக்கும், பிரமைகளுக்கும் உள்ளாகி கட்டுப்பாடற்ற நடத்தையாலும், கூடா நட்பாலும், முறையற்ற உடல் ரீதியான தொடர்புகளாலும் மதம் மாறுகிறார்கள். உண்மையில் காதலே முக்கியமென்றால் அவர்களைத் தம் ஹிந்து மதத்திற்கு மாறச் சொல்லி கேட்கலாம் அல்லவா? அவர்களுக்கு இருக்கும் மத ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தம் தாய் மதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அறிவியல் பூர்வமான பாரம்பரியமும், நல்லொழுக்கமும், உலகம் வியந்து மதிக்கும் தத்துவ சிந்தனையும், அற்புதமான கலைச் செல்வங்களும், யோகக்கலையும், மந்திர சாதனைகளும் கொண்ட அற்புதமான ஹிந்துமதத்தை விட உயர்ந்தது வேறொன்று உண்டு என்று எப்படி இவர்களால் எண்ண முடிகிறது?  அப்படியென்றால் இந்த அற்புத அம்சங்களைத் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதது பெற்றோரும், பெரியவர்களும் செய்யும் பெருங்குற்றம்.

சிறுவயது முதல் நம் ஹிந்து மதம் பற்றி அறிஞர்களின் உரைகள், சந்தேகங்களுக்கு அளித்த பதில்கள், ஆலயங்களின் சிறப்பான தனித்தன்மை, அவற்றின் சரித்திரம், நம் தேசத்தின் மீதும் சனாதன தர்மத்தின் மீதும் நடந்த பயங்கரமான் தாக்குதல்கள், அவற்றை எதிர்கொண்டு உயிர் துறந்த தியாகிகள், யோக சித்தி பெற்ற மகநீயர்களின் வாழ்க்கை வரலாறு, போதனைகள், சாஸ்திரங்கள் போன்ற நல்ல விஷயங்களை பிள்ளைகளுக்குக் கற்றுத் தராததும் தாமும் கற்றுக் கொள்ளாததும் இத்தகைய விபரீதமான சூழ்நிலைக்கு முக்கிய காரணம். தம் பராம்பரியத்தின் மீது குறைந்தபட்ச கௌரவம் கூட ஏற்படுத்த இயமால் போவது கவலைக்குரியது. வருந்தத் தக்கது

கல்வி நிலையங்கள் முதல், பணி புரியும் உயர் நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் மதத் தீவிரவாதிகள் ஊடுருவி, மத மாற்றங்களே நோக்கமாக, ஹிந்து மதத்தை அழிப்பதே லட்சியமாக, பாரத தேசத்தில் அமைதியின்மையையும் குழப்பத்தையும் பிளவையும் தோற்றுவிப்பதற்குச் சற்றும் தயங்குவதில்லை.

அண்மையில் நாசிக்கிலும், வேறு சில இடங்களிலும்  நூற்றுக்கணக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தொடர்ந்து, சில ஆண்டுகளாகவே நடக்கும் இவ்விதமான மத வெறித் தாக்குதல்களின் செய்திகள் பெருமளவில் வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றின் மூலம் அவர்களுக்கு நமது மதத்தின் மேல் இருக்கும் பகையும், வெறுப்பும் தெளிவாகத் தெரியவருகின்றன.

இத்தருணத்தில் மதத்திற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பு, நியமத்தோடு கூடிய வாழ்க்கையில் இருக்கும் தெய்வீகம், புனிதம் போன்றவற்றை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். பிற மதத்தவர் தம் மதத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அதன் மேல் முழு மதிப்பும், தன்மானமும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும்  கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய உணர்வுகள் ஹிந்து குடும்பங்களில் ஏன் இல்லை?

‘காதல்’ என்ற பெயரில் காமக் கேளிக்கையின் மேல் ஆசை கொண்டு, பிறருடைய வஞ்சனையில் சிக்கி வருந்துவது மானசிக பலவீனம் இல்லையா? இந்த பலவீனமே பிறகு அவமானகரமாக, மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கிறது. அதன் பிறகு அநியாயம் நடந்து விட்டது என்று அழுதும், பிரச்சனை செய்தும் என்ன பயன்?

அவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் குற்றம் அந்தப் பக்கம் இருப்பவர்களுடையது   மட்டுமே அல்ல. அதற்கு இடம் கொடுத்த மன விகாரம், விவேகமின்மை, எதற்கும் துணிந்த பொறுப்பற்ற தனம் உள்ள இந்தப் பக்கம் இருப்பவர்களுடையதும் குற்றமே.

பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாகக் கொண்ட கல்வி முறைக்கும், மனப்பான்மைக்கும்     கிடைக்கும் கொடுமையான, கசப்பான வெகுமதி இது. நம்முடைய உயர்ந்த தர்மக்  கோட்பாடுகள் வக்கிரமாக சித்திரிக்கப்படும் போது உதாசீனமாகவும், அலட்சியமாகவும்  இருப்பதோடு, சனாதன தர்மம் பற்றிய சரியான புரிதல் இன்றி, பிற மதத்தவரின் வியூகங்களில் சிக்கி சொந்த மதத்தில் இருந்து விலகி பிரஷ்டர்கள் ஆகிறார்கள்.

பிள்ளைகளை அடிக்கடி நம் கோவில்களுக்கு அழைத்துச் செல்வது, நம்முடையதான ஸ்தோத்திரங்களையும் மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்து தினமும் படிக்கச் செய்வது, நாம சங்கீர்த்தனம், வார இறுதியில் சிறப்பு பாராயணம் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினால், அந்த தெய்வ சக்தியின் தாக்கத்தால் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்பட்டு தீய குணங்கள் மனத்தில் எழாமல், வாழ்க்கையை காப்பாற்றும் என்பதில் ஐயமில்லை. நம்முடையதான பாரம்பரிய உடை அணிதல், நெற்றியில் சமயச் சின்னங்களைத் தரித்தல், அவற்றை மதித்தல், பொருளாதார உயர்வு ஏற்படும் போது உலகியல் போகங்களுக்கும் தீய பழங்கங்களுக்கும் அடிமையாகாமல், அடக்கத்தோடு தார்மீக சேவை நிகழ்சிகளில் ஈடுபடுவது போன்றவற்றைக் கற்றுத் தந்தால் இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருந்திருக்குமோ என்னவோ.

சனாதன தர்மத்தின் மேல் சுயமரியாதையையும், தேசத்தின் மேல் கடமை உணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழிலைத் தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டும். அது வாழ்வாதாரத்திற்கான வழியாக உணர வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. முன்னோர்களிடம் இருந்து கிடைத்த பாரம்பரியச் செல்வமான ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதும், சம்பிரதாய விழுமியங்களையும் காப்பாற்றிக் கொள்வதும் வாழ்வின் நோக்கம் என்று சிறு வயது முதல் கற்றுத்தர வேண்டும்.

(Source: தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், மே, 2026)