Home Blog Page 7

சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

manadhinkural - 2026
#image_title

‘மனதின் குரல் (134ஆவது பகுதி)’
ஒலிபரப்பு நாள் : 31.05.2026
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.  தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும் போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது.  

இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப்போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன்.  சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன.  இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டார்கள், நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன.  குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ் மீணா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள்.  நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

நண்பர்களே, ஒரு நிகழ்ச்சியானது நாடெங்கிலும் பெரும் விவாதப் பொருளாகிறது என்றால் அது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்.  வெறும் இரண்டே நாட்களுக்கு உள்ளாக ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியிலே தேசிய சாதனை மூன்று முறை தகர்க்கப்பட்டது.  இதைச் சாதித்துக் காட்டிய இரண்டு வீரர்கள் என்றால் அவர்கள் தாம் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர் ஆகியோர். இந்த முறை மனதின் குரலில் இந்த இரு விளையாட்டு வீரர்களோடும் உரையாடிப் பார்ப்போமே என்று நான் நினைத்தேன்.  

தொலைபேசி அழைப்பு – 

பிரதமர் – அனிமேஷ் ஜி வணக்கம்.  குரிந்தர்வீர் அவர்களே, உங்களுக்கும் என் வணக்கங்கள், சத்ஸ்ரீஅகால்.

அனிமேஷ், குரிந்தர்வீர் – வணக்கம் சார், வணக்கம்.

பிரதமர் – நல்லதுங்க, நீங்க மிகப்பெரிய சாதனை ஒண்ணை படைச்சிருக்கீங்க.  உங்களோட இணை மிக அற்புதமா செயல்பட்டிருக்கு.  இசைத்துறையில நாம ஜுகல்பந்தியை கேள்விப்பட்டிருப்போம், ஆனா சவால்ல இப்ப ஜுகல்பந்தியை முதமுறையா பார்க்கறோம்.  ஒருமுறை ஒருத்தர் ஒரு சவாலை விடுத்து, பிறகு மத்தவர் அந்த சவாலை எதிர்கொள்றாரு.  பிறகு மூன்றாவது முறையா இதே மாதிரி.  உங்க விஷயம் ரொம்ப சுவாரசியமா இருக்குங்க.  மனதின் குரல் நேயர்களுக்கு நீங்க இந்த விஷயம் பத்தி விரிவா விளக்கணும்னு நான் ஆசைப்படறேன்.  நீங்க செஞ்சிருக்கற சாகஸம் பத்தி எல்லாருக்கும் தெரியணும்.  

அனிமேஷ் – வணக்கம் சார்.  என் பேர் அனிமேஷ் குஜூர்.  நான் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில தேசிய சாதனையாளர், நான் சத்திஸ்கட்டைச் சேர்ந்தவன் சார்.  ஆனா இப்ப நான் ஒடிஷாவுக்காக விளையாடிட்டு இருக்கேன்.  கடந்த ஆண்டு ஆசிய போட்டிகள்ல பதக்கமும், உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்ல பதக்கமும் ஜெயிச்சிருக்கேன்.  2021ஆம் ஆண்டு பள்ளியிலேர்ந்து தேர்ச்சி பெற்று வெளியேறினதிலேர்ந்து நான் தடகளப் போட்டிகள்ல பங்கெடுக்க ஆரம்பிச்சேன்.  நான் அம்பிகாபூர் சைனிக் பள்ளியில படிச்சு முடிச்சேன்.  முன்ன எல்லாம் கால்பந்தாட்டம் விளையாடுவேன், எங்கப்பா அம்மாவும்கூட கோவிட் காலத்தில, நீ வெளிய போய் ஓடு இல்லை விளையாடுன்னு எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தாங்க.  கோவிட் காலம் முடிஞ்ச பிறகு என் கால்பந்தாட்ட நண்பர்கள் சொன்னாங்க, மாநிலப் போட்டி நடக்க இருக்கு, நீ போய் பங்கெடேன்னாங்க, நானும் பங்கெடுத்தேன்.  ஆனா எனக்கு தெரியாது அதிலேர்ந்து தான் தேசிய அளவுக்கு தேர்வு செய்யறாங்க அப்படீங்கற விஷயம்.  நானும் தேசிய அளவுக்கு தேர்வு செய்யப்பட்டேன், இன்னைக்கு நான் சர்வதேச அளவுல இந்தியாவோட பிரதிநிதியா இருக்கேன்.  

பிரதமர் – ஓ…. சரி குரிந்தர்வீர் அவர்களே, நீங்க எப்படி?

குரிந்தர்வீர் – வணக்கம் சார்.  என் பேர் குரிந்தர்வீர், நான் இந்தியக் கப்பற்படையில பெட்டி ஆஃபீசரா இருக்கேன்.  நான் இந்தியாவோட மிக வேகமா ஓடக்கூடிய ஸ்பிரிண்டர், இப்ப நான் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில 10.09 விநாடிகள்ல கடந்து தேசிய சாதனையை படைச்சிருக்கேன்.  10.1 நொடிகளுக்கு உள்ளார ஓடிக்கடந்த முத இந்தியரும் நான் தான்.  தடகளமாகட்டும், என் களப்பணி கடற்படையாகட்டும், தேசத்துக்கு சேவை செய்யணுங்கறது தான் என் முயற்சியா இருக்கு.  எங்கப்பாவும் சரி, தாத்தாவும் சரி, ரெண்டு பேருமே விளையாட்டுக்கள்ல ஈடுபட்டவங்க, நம்ம இந்தியாவோட கலாச்சாரம் என்னென்னா, எந்த ஒரு பண்டிகையாகட்டும், இப்ப தீபாவளியோ, புத்தாண்டோ எதுவா இருந்தாலும், நாம நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம்.  அப்படித்தான் நான் எங்கப்பாவோட பதக்கங்கள், கேடயங்கள், கோப்பைகளையெல்லாம் சுத்தம் செய்வேன், அப்ப எனக்கு ரொம்ப நல்லா இருக்கும், ரொம்ப சந்தோஷமா இருக்கும்.  அப்படி சுத்தம் செய்திட்டு இருக்கும் போது கேட்பேன், இந்தக் கோப்பையை எங்க ஜெயிச்சீங்க, இந்தப் பதக்கத்தை எப்படி ஜெயிச்சீங்க, இந்தப் புகைப்படம் எப்ப எடுக்கப்பட்டிச்சு அப்படீன்னு எல்லாம் கேட்கும் போது அவங்க இது பத்தின விஷயத்தை சொல்லுவாங்க.  அதாவது நான் இங்க விளையாடப் போனப்ப தேசிய பதக்கத்தை ஜெயிச்சேன், எங்க அணியை ஜெயிக்க வச்சேன்பாங்க.  நானும் உடனே நானும் ஏதாவது விளையாட்டை விளையாடப் போறேன்னு சொல்லுவேன்.  அவங்க காலையில ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளப் போகும் போது, என்னையும் கூட்டிக்கிட்டு போங்கன்னு சொன்னேன்.  அப்படித்தான் என்னை அவங்க கூட்டிக்கிட்டு போக ஆரம்பிச்சாங்க, விளையாட்டுக்களை கத்துக் குடுத்தாங்க.  எனக்கு ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சுது.   உசேன் போல்டோட உலக சாதனை முறியடிக்கப்பட்டதைப் பார்த்தேன்.  ஒரு வேடிக்கையான சம்பவம் நினைவுக்கு வருது.  நான் டிவி பார்த்திட்டு இருந்தேன், எங்கம்மா டிவியை அணைச்சுட்டு, தம்பி, படிக்கற நேரமாயிருச்சு, போய் படின்னாங்க.  அதுக்கு நான், என்னை இன்னைக்கு நீங்க டிவி பார்க்க விடலை இல்லை, ஒருநாள் இல்லை ஒருநாள் அதோ பாருங்க, குரிந்தர்  பந்தயத்தில ஓடிக்கிட்டு இருக்கான் பாருங்கன்னு காமிக்கத்தான் போறீங்க, அப்படியும் ஒரு நாள் வரும்ன்னு சொன்னேன்.  இன்னைக்கு நான் களத்தில ஓடுறதை எங்கம்மா டிவியில பார்க்கையில எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.  

பிரதமர் – பிரமாதம், அருமை.  ரொம்ப அருமையா சொன்னீங்க.  

குரிந்தர்வீர் – ஐயா, நாங்க நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பங்க.  எங்கப்பா கைப்பந்து விளையாடுவாரு.  வீட்டுல பிரச்சினைகள் காரணமா அவர் விளையாட்டுக்களை விட வேண்டியிருந்திச்சு.  அவரோட கனவு கனவாவே நிலைச்சுப் போச்சு.  ஆனா தன்னோட கனவை தன்னோட மகன் நிறைவேத்துவான்னு அவரு நம்பினாரு.  நான் அவரு கூட பேசும் போது எப்படி மில்கா சிங் எத்தனை கடினமா உழைப்பாருன்னு எல்லாம் சொல்லுவாரு, உங்க கனவை நான் நிறைவேத்துவேன்பான்னு அப்ப நான் சொன்னேன்.  வாயில சொன்னா மட்டும் கனவை நிறைவேத்திர முடியுமா, அதுக்கு கடினமா உழைக்கணும்.  மில்கா சிங் அவர்கள் ரத்த வாந்தியெல்லாம் எடுத்தாரு, தீவிரமான வெயில்ல ஓடினாரு.  நாள்முழுக்க பயிற்சி எடுப்பாருங்கற விஷயமெல்லாம் எனக்கு கருத்தூக்கமா அமைஞ்சுது.  எங்கப்பா எனக்கு உத்வேகம் அளிச்சாரு, அதாவது நான் நாட்டுக்காக ஓடுவேன், நாட்டுக்காக பதக்கங்கள் வாங்குவேன், ஜெயிப்பேன்னு.  நான் 100 மீட்டர் பந்தயத்தை தேர்ந்தெடுத்தவுடனே எல்லாரும் சொன்னாங்க, 100 மீட்டரை தேர்ந்தெடுக்காதே, அது இந்தியர்களான நமக்கான போட்டி இல்லைன்னாங்க.  இந்தியர்களோட உடம்பு 100 மீட்டருக்கானது கிடையாதுன்னாங்க.  குரிந்தர், நாம இதை தேர்ந்தெடுத்திருக்கோம், முன்வச்ச காலை பின்வாங்க கூடாதுன்னு எங்கப்பா எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாரு.  நம்மால முடியாதுன்னு யாரு சொல்றாங்களோ, அவங்களுக்கு நாம சாதிச்சுக் காட்டி பதில் சொல்லுவோம்.  நீ கண்டிப்பா செஞ்சு காட்டுவே, உன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கும்பாரு.  எங்கப்பா எனக்கு அந்த நம்பிக்கையை அளிச்ச போது, எனக்கு அது ரொம்ப பெரிய தெம்பா இருந்திச்சு, இன்னைக்கு இந்திய ஸ்ப்ரிண்ட் பத்தி எல்லாரும் பேசறாங்க இல்லையா?

பிரதமர் – நீங்க ரெண்டு பேருமே ரொம்ப அருமையா செயல்பட்டிருக்கீங்க, வெறும் ரெண்டே நாட்கள்ல நீங்க ரெண்டு பேரும் மூணு முறை இதற்கு முந்தைய தேசியப் பதிவுகளை தகர்த்திருக்கீங்க.  100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில ஓடுறது பத்தி சொல்லும் போது, குரிந்தர்வீர் சொன்னா மாதிரி, இந்தியர்களுக்கு இதை ஓட வாகான உடம்பு கிடையாதுன்னு சொல்லுங்க.  இத்தனை கடினமானதா இருந்தும் கூட நீங்க சிறப்பா செயல்பட்டீங்க.  நானும் சரி, மனதின் குரல் நேயர்களும் சரி உங்ககிட்ட ஒண்ணு கேட்க விரும்பறோம்.  அதாவது உங்களுக்குள்ள அப்படி என்ன பெரிய தாகம் இருந்திச்சு, என்ன பிடிவாதம் இருந்திச்சு, எதை நினைச்சு உறுதியோட இருந்தீங்கன்னு சொல்லுங்களேன்.  உங்க சாதனை எத்தனை கடினமா இருந்திச்சு?

குரிந்தர்வீர் – சார்,  நான் குரிந்தவீர் பேசறேன்.  தொடக்கத்தில எல்லாம் ரொம்ப போராட்டமா இருந்திச்சு, பலமுறை சந்தேகம் வரும், நான் சரியாத் தான் செய்யறேனா, சரியாத் தான் தேர்ந்தெடுத்திருக்கேன்னான்னு எல்லாம்.  ஏன்னா நீங்க ஒவ்வொரு முறையும் ஜெயிக்கறதில்லை, சில வேளைகள்ல தான் கத்துக்க முடியும்.  நான் தோல்வியடையும் போது, என்னோட செயல்பாடு சரியா இல்லாத போது, ஏதோ காயம் பட்டிருக்கும் போது, எங்க வீட்டில இருந்தவங்க எனக்கு ஆதரவா இருப்பாங்க, இப்படித் தான் சில நாள் மோசமா இருக்கும், ஏன், ஒரு வருஷம் கூட மோசமா இருக்கலாம், இதனால எல்லாம் ஒண்ணும் பெரிய பாதிப்பு கிடையாது, தைரியமா இரும்பாங்க.  ஆனா பாருங்க, கனவு காணுறது மட்டும் தடைப்படாது.  உன்னால செய்ய முடியலைன்னா, வேற யாராலயும் செய்ய முடியாதுன்னு என்னோட பயிற்சியாளரும் என்னை ஊக்கப்படுத்துவாரு.  நம்மளை சுத்தி இருக்கறவங்க, நம்மைச் சேர்ந்தவங்கன்னு எல்லாரும் நம்மளை ஊக்கப்படுத்தும் போது, நமக்குள்ள இருக்கற தெம்பு என்னைக்கும் தொய்வடையாது.  

பிரதமர் – அனிமேஷ் அவர்களே.

அனிமேஷ் – சார், 2021ஆம் ஆண்டுல நான் தடகளத் துறையில நுழைஞ்ச போது. இது புதிய துறை, உன்னால செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கன்னு சொன்னாங்க.  இப்ப நான் இதில நுழைஞ்சாச்சு, சாதிச்சே தீருவேன்னு நான் சொன்னேன்.  எங்கப்பா கூட அடிக்கடி சொல்லுவாரு, நீ இந்தக் களத்தில குதிச்சேன்னு சொன்னா, பின்னால திரும்பிப் பார்க்கவே பார்க்காதே, ஏன்னா இதைச் செய்யணும், அதைச் செய்யணும்னு நினைக்கறவங்க பல பேர் இருக்காங்க, ஆனா செய்து காட்டறவங்க ரொம்ப குறைவானவங்க தாம்பாரு.  நீ இதில நுழைஞ்சதால இதிலேர்ந்து பின்வாங்கவே வாங்காதே, இதில முன்னேறுன்னு சொன்னாரு.  உனக்குத் தேவையான எல்லா வசதிகளும், எல்லாத்திலயும் நாங்க ஆதரவு தர்றோம், குடும்ப ஒத்துழைப்பு, பண ஆதரவுன்னு எல்லா விஷயங்களையும் நாங்க கவனிச்சுக்கறோம், ஆனா நீ மட்டும் தொடர்ந்து உழைச்சுக்கிட்டே இரு, இந்தியர்களால ஓட முடியும்னு இந்தியர்களுக்குக் காமி, ஏன்னா 10 நொடிகளுக்கு இல்லை 10.1 நொடிகளுக்குள்ளாக இந்தியர்களால ஓட முடியாதுன்னு என்கிட்டயும் சொன்னாங்க.  ஆனா இப்ப இந்தியர்களாலயும் முடியும்னு நாங்க நிரூபிச்சிருக்கோம்.  நமக்கு எந்த ஒண்ணும் கடினமானது இல்லை, நம்மாலயும் செய்ய முடியும்.  இதெல்லாம் தான் சார் என்னை ஊக்கப்படுத்திச்சு; மேலும்மேலும் நாங்க பயிற்சி மேற்கொண்ட போது, நாங்க பதிவுகளை தகர்த்துக்கிட்டே வந்தோம், நம்மால செய்ய முடியும்னு இந்தியர்களுக்கு நாங்க செஞ்சு காட்டினோம்.  இப்ப நாங்க காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வு ஆகியிருக்கோம், வரவிருக்கற அந்தப் போட்டிகள்லயும் நாங்க இன்னும் சிறப்பா செயல்பட இருக்கோம்.

பிரதமர் – மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.  நீங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களும் கூட.  ஆமா, நீ என் பதிவை முறியடிச்சியா, நான் உன்னோட பதிவை முறியடிக்கறேன் பாருன்னு நீங்க ரெண்டு பேரும் ஏதும் போட்டி போடறீங்களா?  முதல்ல அனிமேஷ் நீங்க சொல்லுங்க.

அனிமேஷ் – சர்ஜி, முத பதிவு 10.18 நொடிகளா இருந்திச்சு, அது நான் ஏற்படுத்தின பதிவு தான், அதை குரிந்தர்வீர் அண்ணன், அரையிறுதியில முறியடிச்சு 10.17க்கு கொண்டு வந்தாரு.  நானும் விடாம அரையிறுதி இரண்டுல 10.15 விநாடிகள்ல கடந்து முறியடிச்சேன், ரெண்டு பேருக்குமே சந்தோஷமா இருந்திச்சு.  எங்களுக்கு இடையில போட்டித்தன்மை இருக்கும், அது வேற விஷயம்.  இப்படித்தான் போட்டியில கலந்துக்க ஒருமுறை சவுதி அரேபியா போனப்ப கூட, நாங்க ஒரே அறையில தான் தங்கினோம், அப்பக்கூட நாம எப்படி இந்தியாவோட ஸ்பிரிண்டிங்கை முன்னேத்தறது, மத்தவங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய விஷயமா அதை ஆக்கறதுங்கற வகையில பேசிக்கிட்டோம்.  

பிரதமர் – குரிந்தர்வீர் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?

குரிந்தர்வீர் – சார், அனிமேஷ் ரொம்ப சரியா சொன்னாரு.  நாம சிறப்பா செயல்படணும்னு நாங்க தீர்மானம் செய்திருக்கோம்.  ஒருத்தரோட உதவி இன்னொருத்தருக்கு எப்பவேணா தேவைப்படலாம்.  ஆகையால ஒருத்தருக்கு ஆதரவா இன்னொருத்தர் இருக்கோம், இப்பகூட முதல்ல நான் பதிவை ஏற்படுத்தினேன், அதுக்கு பிறகு உடனே அனிமேஷ் செய்தாரு.   தயாரிப்புல ஈடுபடும் போது நான் அனிமேஷ் கிட்ட சொன்னேன், அனிமேஷ் அந்த ப்ளாக் சரியா இருக்கு, அங்க போய் உட்கார்ந்து அங்க ஸ்ட்ரைட் பண்ணலாம், அங்க தயாரிப்புல ஈடுபடலாம், இது சரியா இருக்கும்னு பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குவோம்.  இதனால நாமளும் மேம்படுவோம், மத்தவங்களும் மேம்பாடு அடைவாங்க.  நட்பும் தேவை தான், ஆனா அதெல்லாம் மைதானத்துக்கு வெளிய.  வெளிய நாங்க நல்ல நண்பர்கள்.  அதே நேரத்தில, களத்தில இறங்கியாச்சுன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியாளர்கள்.  நான் அவரை விட வேகமா ஓடணும்னு ஒருத்தருக்கு ஒருத்தர் நினைச்சு ஓடுவோம்.

பிரதமர் – உங்களோட போட்டி இருக்கே, அது தேசத்தோட கௌரவத்தை அதிகப்படுத்தவும், தேசத்தோட எதிர்காலத்தை இந்த இடத்துக்குக் கொண்டு வரவும் ஒரு ஆக்கப்பூர்வமான உணர்வுல செய்யப்பட்டது.  உங்களோட இந்த விளையாட்டு உணர்வு இருக்கே, அதில விளையாட்டில ஈடுபடணும், ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போடணும், அடுத்தபடியா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிகரமா இருக்கணும், இது அருமையான விஷயம்.  உங்களுக்கு என்னோட தரப்பிலேர்ந்து பலப்பல பாராட்டுக்கள், என்ன்னோட பலப்பல நல்வாழ்த்துகள், நீங்க தொடர்ந்து நாட்டுக்கு பெருமை சேர்த்துக்கிட்டே இருங்க.  இப்படியா தொடர்ந்து கடினமா உழைச்சு நீங்க நிரம்ப முன்னேற்றம் அடைவீங்கன்னு நான் முழுமையா நம்பறேன்.  பலப்பல நல்வாழ்த்துக்கள்.

குரிந்தர்வீர்/அனிமேஷ் – நன்றி சார்.

பிரதமர் – பலப்பல நன்றிகள்.

எனதருமை நாட்டுமக்களே, இப்போது நாட்டின் பல பாகங்களில் தீவிரமான வெப்பம் காணப்படுகிறது.  கடுமையான வெப்பம், சூடான காற்று, இதுபோன்ற பருவநிலைகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  தொடர்ந்து நீர் பருகி வாருங்கள்.  வெயிலில் செல்ல வேண்டியிருந்தால், கவனித்துச் செல்லுங்கள்.  அந்த வகையில் அரசாங்கத்தின் பலவேறு துறைகள் அளித்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்கத் தவறாதீர்கள்.

நண்பர்களே, நம் நாட்டிலே கோடையின் வெப்பத்தை சமாளிக்கப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பலவேளைகளில் சமையலறையில் கிடைக்கிறது.  எப்போதெல்லாம் வெப்பம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் வீட்டின் சமையலின் சுவையும் மாறிப் போகிறது, சமைக்கும் விதமும் மாறி விடுகிறது.  பானையில் தண்ணீர் இடம் பெறத் தொடங்குகிறது, தயிரின் பயன்பாடு அதிகரிக்கிறது, மாங்காய் நீரில் கொதிக்க ஆரம்பிக்கிறது.  அப்புறம் என்ன, உள்நாட்டு பானம் தயாராகிறது.  நம் நாட்டின் பானங்கள் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள், வட பாரதம் சென்றால், பல இடங்களில் ஆம் பன்னா கிடைக்கும், இதன் மாங்காய் சுவையோடு கூடவே, வெப்பத்திலிருந்தும் விடுப்பு கிடைக்கிறது.  பஞ்சாப் ஹரியாணா பகுதிகளிலோ லஸ்ஸி பானம் கிடைக்கும், பெரிய கோப்பையில் கிடைக்கும் லஸ்ஸி.  ராஜஸ்தான் குஜராத்திலோ மோர், இது ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் இணைபிரியாத ஒன்றாக ஆகி விடுகிறது.  மேலும் பிஹார், ஜார்க்கண்ட், வடகிழக்கு பகுதிகளில் சத்தூ ஷர்பத், அருமையாக சுவை கூட்டவல்லது.  வயிறும் நிறையும், பலமும் அதிகரிக்கும்.  கோங்கண், கோவா பகுதிகளில் கோகம் ஷர்பத், ஸோல் கடீ கிடைக்கும்.  தென்பாரதத்தில், பானகம், நீர்மோர், சம்பாரம் போன்றவையும், ஒடிஷாவிலே பேல் பனா கிடைக்கும்.  இது வெறும் பானம் அல்ல, பாரதத்தின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரியத்தின் அங்கம்.  மேலும் இதிலே ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் பிரதிபலிப்பு காணப்படும்.  இன்னும் ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாக நினைவில் கொள்ளுங்கள், இவற்றிலே அதிகபட்சம் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே கிடைக்கின்றன, நமது வயல்வெளிகளில் விளைகின்றன.  எந்த ஒரு பெரிய ப்ராண்டிங் எல்லாம் கிடையாது.  ஆனால் தலைமுறைதலைமுறைகளாக கிடைத்த அனுபவம் அவற்றிலே கலந்திருக்கிறது.  நீங்களும் கோடையின் வெப்பத்தின் போது உள்நாட்டு பானங்களைப் பருகி ஆனந்தம் அடையுங்கள்.

நண்பர்களே, கோடை வரும் போதே, மேலும் ஒரு விவாதம் ஒவ்வொரு வீட்டிலும் தொடங்கி விடுகிறது, அது தான் மாங்காய்.  மாங்காய்-மாம்பழம் தான் விவாதப் பொருள், கோடையில் மாங்காய் பற்றிப் பேசாத வீடு பாரதத்திலே இருக்க முடியாது.  ஒவ்வொரு பகுதிக்கும் உரித்தான மா ரகம், அதன் பிரத்யேக சுவை, மணம் ஆகியன.  மகாராஷ்டிரம் மற்றும் கோங்கணில் ஹாபுஸ், அல்ஃபோன்ஸோ, குஜராத்தின் கேஸர், இது தான் மாம்பழ ரசத்தின் உயிர்நாடி.  உத்தர பிரதேசத்தின் தஸ்ஹரியும், என்னுடைய காசியின் லங்க்டாவும்.  பொதுவாக இந்த லங்க்டாவின் சிறப்பம்சம் என்னவென்றால், பழுத்த பிறகும் இது பலவேளைகளில் பச்சையாகவே இருக்கும்.  பிஹாரின் ஜர்தாலு, தொலைவிலேயே இதன் மணம் இதன் அடையாளமாக ஆகி விடுகிறது.  சௌஸா, மால்தா என்ற பெயர்களோடு மக்களின் நினைவுகள் கலந்திருக்கின்றன.  தென் பாரதத்தின் பங்கனபல்லி, தோதாபுரி, நீலம், மல்கோவா, வங்காளத்தின் ஹிம்சாகர், ஒடிஷா மற்றும் ஆந்திரத்தின் சுவர்ணரேகா.  அதாவது, இடம் மட்டும் மாறவில்லை, அதோடு கூடவே மாம்பழத்தின் வடிவமும் வண்ணமும் சுவையும் கூட மாறி விடுகிறது.

மேலும் நண்பர்களே மாம்பழத்தின் இந்தப் பயணம், இப்போது கிராமம் தொடங்கி, உலகளாவிய சந்தைகள் வரை தொடர்கிறது.  இன்று மனதின் குரல் வாயிலாக நான் மாம்பழ சாகுபடியோடு தொடர்புடைய விவசாய சகோதர சகோதரிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறேன்.  நீங்கள் தேசத்தின் விவசாயப் பொருளாதாரத்திற்கு உதவும் மாம்பழ சாகுபடியாளர்கள் மட்டுமல்ல, சிறப்பான விவசாயிகளும் கூட.  இதே போல தொடர்ந்து கோலோச்சுங்கள்.  

நண்பர்களே, கோடைநாட்களிலே, பள்ளிக்கூட விடுமுறை தான் என்றாலும், நான் பேசவிருக்கும் ஒரு வகுப்பிலே நீங்களும் சேர வேண்டும் என்று உங்கள் மனமும் ஆசை கொள்ளும்.  நண்பர்களே, இப்படி ஒரு பள்ளியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அதிலே குழந்தைகளும் வருகிறார்கள், இளைஞர்களும் வருகிறார்கள், முதியவர்களும் வருகிறார்கள்.  அங்கே கட்டணம் ஏதும் கிடையாது, பெரிய கட்டடம் ஏதும் இல்லை, வகுப்பறைகள் ஒன்றும் கிடையாது, ஆனால் சுவாரசியமான விஷயமே அங்கே வகுப்பு நதியிலே தான் நடக்கும்.  

நண்பர்களே, இது ஏதோ கட்டுக்கதையல்ல.  இது ஒரு மெய்யான முயற்சி.  கேரளத்தின் அலுவாவிலே, சாஜீ வலாஷேரில் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு நீச்சல் கிளப்பை நடத்தி வருகிறார்.  இதுவரை கிட்டத்தட்ட 15,000த்துக்கும் அதிகமானோர் இங்கே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். சாஜீ அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்.  இந்த முயற்சியின் பின்னணியிலே ஒரு வலியும் மறைந்திருக்கிறது.  சில ஆண்டுகள் முன்பாகத் தான், ஒரு படகு விபத்தில் பல மாணவர்களின் இறப்பு சம்பவித்தது.  இந்தச் சம்பவம் சாஜீயை உலுக்கிப் போட்டது.  அந்தக் குழந்தைகளுக்கு மட்டும் நீச்சல் தெரிந்திருந்தால், அவர்கள் ஒருவேளை தப்பியிருப்பார்கள் இல்லையா என்று அவர் நினைத்தார்.  இது தான் அவருடைய இந்த இயக்கத்தின் தொடக்கமானது.

நண்பர்களே சாஜி வலாஷெரில் அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பெரிய கற்றலை அளிக்கிறது.  சேவை செய்ய பெரியபெரிய சாதனங்களோ கருவிகளோ தேவையில்லை; தேவை ஒரு நல்ல நோக்கம், தொடர்ந்து சேவையாற்றும் முயற்சி.  இவற்றின் துணையோடு, ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்த முடியும்.

என் அன்புநிறை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் நான் ஐரோப்பாவின் நெதர்லாண்டு நாட்டுக்குச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது.  அங்கே பல கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன்.  அப்போது ஒரு கணம் அனைத்து பாரதநாட்டவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது.  நெதர்லாண்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விழாவிலே சோழர்கள் காலத் தொன்மையான தாமிரப் பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.  அந்த நிகழ்ச்சியிலே நெதர்லாண்டின் பிரதம மந்திரியும் உடன் இருந்தார்.  இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக பல நாடுகளிலிருந்து எனக்குத் தொடர்ந்து செய்திகள் கிடைத்து வருகின்றன.  மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள், பெருமிதத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.  உலகெங்கிலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் இதனால் சிறப்பான உற்சாகம் பெருக்கெடுத்திருக்கிறது.

நண்பர்களே, இந்தத் தாமிரப் பட்டயங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் நிறைய ஆவல் இருக்கிறது.  ஆகையால் இதோடு தொடர்புடைய சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  இவற்றிலே 21 பெரிய மற்றும் 3 சிறிய பட்டயங்கள் இருக்கின்றன.  இவை முக்கியமாக பேரரசன் முதலாம் ராஜேந்திர சோழன் வாயிலாக அவருடைய தந்தையார் பேரரசர் ராஜராஜ சோழன் அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி வைத்தல் தொடர்பானது.  ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை ஒரு புத்த விஹாரம் அமைக்க தானமாக அளிப்பது பற்றி இதிலே குறிப்பு இருக்கிறது.  இந்தத் தாமிரப் பட்டயங்களிலே சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கிறது.  சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல்வல்லமை எத்தனை மகத்தானதாக விளங்கியது என்பதை இதிலிருந்து நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.  தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு அவர்களுக்கு இருந்த தொடர்புகளைப் பற்றிய தகவல்களும் இவற்றிலே காணக் கிடைக்கின்றன.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் வளமான வரலாறும், கலாச்சாரமும் தொடர்பாக நம்மனைவருக்கும் பெருமிதம் ஏற்படுகிறது.  

நண்பர்களே, நமது அரசாங்கம் பாரதத்தின் விலைமதிப்பில்லாத மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.  இந்தத் தொடரிலே, ஞான பாரதம் இயக்கத்திற்குட்பட்டு, சத்திஸ்கட்டின் மல்ஹாரிலும் கூட ஒரு மகத்துவம் வாய்ந்த தேடல் நடந்திருக்கிறது.  இங்கே மூன்று அபூர்வமான தாமிரப் பட்டயங்கள் கிடைத்திருக்கின்றன.  இவை பாண்டுவம்ச அரசகுடும்பத்தின் மஹர்ஷி பாலார்ஜுனரின் ஆட்சிக்காலத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது.  இந்த எழுத்துப்பொறிப்புகள், 6-7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, அதாவது 1400-1500 ஆண்டுகள் பழமையான இந்த தாமிரப் பட்டயங்கள், பண்டைய பிராம்மி எழுத்துக்கள் மற்றும் பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன.  இவற்றிலே அந்தக் காலகட்டத்தின் ஆட்சிமுறை, அறம் மற்றும் கலாச்சாரம் பற்றிய மகத்துவமான தகவல்கள் கிடைக்கின்றன.

நண்பர்களே, பாரத நாட்டவர்களான நமக்கு வானியல் தொடர்பாக எப்போதுமே ஈர்ப்பும் ஆர்வமும் இருந்து வந்திருக்கிறது.  நமது தேசத்திலே இன்றும்கூட பல நூற்றாண்டுக்காலப் பழமையான வானாய்வகங்கள் இருக்கின்றன.  இங்கே அற்புதமான கணிதக் கண்டுபிடிப்புகள் நடந்திருக்கின்றன.  கடலோடல்-வானோடலாகட்டும், பஞ்சாங்கமாகட்டும், அல்லது நமது திருநாட்கள்-பண்டிகைகளாகட்டும், இவை அனைத்தும் வானத்தோடும், விண்மீன்களோடும் தொடர்புடையவையாக இருந்திருக்கின்றன.   நம் நாட்டிலே வானியலானது ஒவ்வொரு தலைமுறையின் ஆர்வத்தையும் தொடர்ந்து தூண்டி வந்திருக்கிறது.  ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்தியிருக்கிறது, இன்றைய இளைஞர்களும் கூட இது தொடர்பாக கணிசமான பேரார்வத்தோடு இருக்கிறார்கள்.  இன்றைய காலகட்டத்தில் நாடெங்கிலும் வானியல் குழுக்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன என்பதை நீங்களே கூட கவனித்திருக்கலாம்.  பெரியபெரிய நகரங்கள் தொடங்கி, சிறிய வசிப்பிடங்கள் வரை, பள்ளிகள் முதல் பூங்காக்கள் வரை இந்தச் செயல்பாடுகளைக் காண முடிகிறது.  பெங்களூர் வானியல் சங்கம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது.  இங்கே கண்காணிப்பு சார்ந்த அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.  இந்த அமைப்பிலே ஊரகப் பகுதிகளிலே வானியலை மக்களுக்கு விருப்பப்பொருளாக ஆக்கும் இயக்கமும் தொடங்கப்பட்டிருக்கிறது.  ககோல் மண்டல், அதாவது வானியல் சங்கம் என்ற பெயர் கொண்ட ஒரு குழுவானது 30 மணிநேர அளவிலான மிகவும் புதுமையான படிப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறது.  

நண்பர்களே, இரவின் விண்மீன்களை ரசிப்பது என்பது உள்ளபடியே மிகவும் அற்புதமான அனுபவம்.  ஆஸ்ட்ரோ கேரளா என்ற பெயருடைய அமைப்பு ஒன்று, இரவுக் கண்காணிப்பு முகாம்களுக்கும் கருத்துப் பட்டறைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது.  இங்கே இளைஞர்கள் தொலைநோக்கிக் கருவியைத் தயாரிப்பது, நட்சத்திரங்களின் வரைபடங்களைப் பயன்படுத்துவது ஆகியவை பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.  ராஜ்கோட்டின் பிக்பேங்க் வானியல் சங்கமானது, கிர் காடுகள் முதல் கட்சின் ரண் வரை பல வானியல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.  ஜோதிர்வித்யா பரிசம்ஸ்தாவும் கூட வானியலின் மிகவும் பழமையான அமைப்புகளில் ஒன்று.  இங்கே கண்காணிப்பு வசதிகளுடன் கூடவே, புத்தகங்கள், நூலகம் மற்றும் தொலைநோக்கு நூலக வசதிகளும் இருக்கின்றன.  நான் ISAAC ஐசாக் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.  இது மாணவர்களால் வழிநடத்தப்படும் தேச அளவிலான வலையமைப்பு.  இது வானியல் மற்றும் வானியற்பியல் சங்கங்களை பரஸ்பரம் இணைக்கிறது.

நண்பர்களே, நம்முடைய பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குவதும், தொடர்ந்து ஏதேனும் புதியதாகக் கற்றுக் கொண்டே இருப்பதும் மிகவும் அவசியமானவை.  ஏதோ ஒரு வானியல் சங்கத்தோடு கண்டிப்பாகத் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும், இந்த விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு கோளரங்கத்திற்குக் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும் என்று இளைஞர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.  

நண்பர்களே, மனதின் குரல் நிகழ்ச்சியை யாரெல்லாம் தொலைக்காட்சியில் பார்க்கிறார்களோ, அவர்களிடம் நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.  நீங்கள் ஒரு காணொளியைக் கண்டிப்பாகப் பாருங்கள்.  இந்தக் காணொளி கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாகியிருக்கிறது.  இதிலே சிலர் மிகவும் பொறுமையாக, மிகவும் நிதானத்தோடு ஒரு கங்கைப்பகுதி டால்ஃபினைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  இந்த மொத்த முயற்சியிலும் சுமார் 13 மணி நேரம் செலவாகி, நிறைவாக அந்த டால்ஃபின் தப்பியது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.

நண்பர்களே, பாரதத்தின் முதலாவது கங்கைப்பகுதி டால்ஃபின் மீட்பு அவசரகால வாகனத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இதில் அடங்கியிருக்கிறது.  இந்தச் சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்தது.  அங்கே ஒரு கங்கைப்பகுதி டால்ஃபின் ஒரு கால்வாயிலே சிக்கிக் கொண்டது.  இந்த வேளையில் நமாமி கங்கே இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் அதற்கு நம்பிக்கைக் கீற்றாக விளங்கியது.  மிகவும் கவனமாக அதை வெளியே எடுத்தது.  பிறகு அது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அது பாதுகாப்பாக ராப்தி நதியில் விடப்பட்டது.  ஒரு வகையில் சொல்லப்போனால், ஒரு உயிர் மீண்டும் தனது இருப்பிடம் திரும்பியது என்று கூறலாம்.

நண்பர்களே, இந்த டால்ஃபின் மீட்பு ஆம்புலன்ஸ் மிகவும் சிறப்பானது.  இதை ஒரு நடமாடும் மருத்துவமனையைப் போல வடிவமைத்திருக்கிறார்கள்.  இதிலே டால்ஃபினுக்குத் தேவையான பாதுகாப்பு அமைப்புகள் இருக்கின்றன.  பிராணவாயு வசதி, சிறப்பான ஸ்ட்ரெச்சர், மீட்பு உபகரணங்கள், அதாவது ஏதாவது டால்ஃபின், காயமடைந்து கால்வாயில் சிக்கிக் கொண்டாலோ, நதியிலிருந்து விலகிப் போயிருந்தாலோ, உடனடியாக அதற்கு உதவி செய்யப்படும்.  

நண்பர்களே, நாம் கங்கைப்பகுதி டால்ஃபின்களைக் காப்பாற்றும் போது, நாம் ஏதோ ஒரு உயிரினத்தை மட்டும் காப்பாற்றவில்லை, நாம் கங்கையின் உயிரி பன்முகத்தன்மையையே காப்பாற்றுகிறோம்.  நதியின் ஒட்டுமொத்த உயிர்ப்பு இயந்திரத்தைக் காப்பாற்றுகிறோம், நமக்குப் பின்னால் வரும் தலைமுறையினருக்கு இயற்கையின் விலைமதிப்பில்லா ஒரு மரபினைக் காப்பாற்றித் தருகிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, உங்களில் பலருக்கு நதி, குளம் அல்லது ஏரிகளோடு தொடர்புடைய நினைவுகள் கண்டிப்பாக இருக்கும்.  யாருக்காவது குளத்தில் நீந்தியது, யாருக்காவது ஏரிக்கரையில் நண்பர்களோடு விளையாடியது, யாருக்காவது அந்த மண்ணின் மணம் நினைவில் இருக்கலாம்.  சிறுவயதின் இப்படிப்பட்ட நினைவலைகள் வாழ்க்கை முழுவதும் நம் மனங்களிலேயே நீக்கமறத் தங்கி விடுகின்றன.

நண்பர்களே, இப்படிப்பட்ட நினைவலைகளைப் பராமரிக்க உள்ளெழுச்சியளிக்கவல்ல காதைகள் உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலிருந்து காணக் கிடைக்கிறது.  பஸ்தியின் ஆகாஷ் குப்தா அவர்கள் தன்னுடைய கிராமத்தின் மனோரமா நதியைக் கண்டு மிகவும் துயரமடைந்தார்.  ஏனென்றால் எந்த நதியை அவர் சிறுவயதிலே தூய்மையானதாகவும், உயிர்ப்புள்ளதாகவும் கண்டாரோ, காலப்போக்கிலே அந்த நதியிலே நெகிழிகள் திரண்டு, மாசு அதிகரிக்கத் தொடங்கியது.  யாரையும் குற்றம்குறை கூறுவதாயில்லை, தானே ஒரு புதிய தொடக்கத்தைப் புரிவதாய் ஆகாஷ் அவர்கள் தீர்மானம் மேற்கொண்டார்.  குற்றம் சொல்லோம், தொடக்கம் செய்வோம் என்பது மந்திரச் சொற்களாயின.  தனது நண்பர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டார்.  கைகளிலே வெறும் வலை  இருந்தது, மண்வெட்டி இருந்தது, பாண்டு இருந்தது, அனைத்தையும் விட மேலான சக்தியாக, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்தது.  இந்த இளைஞர்கள் நதியில் இறங்கினார்கள், ஆகாயத்தாமரைகளை வெளியேற்றினார்கள், நெகிழிகளையும், குப்பைகளையும் அகற்றினார்கள்.  பல வேளைகளில் ஒரே நாளில் 50-60 கிலோ வரையிலான குப்பைகளை நதியிலிருந்து அப்புறப்படுத்தினார்கள்.  மெல்லமெல்ல மனோரமா நதியின் அந்தப் பகுதி மீண்டும் தூய்மையாகக் காட்சியளிக்கத் தொடங்கியது.  அக்கம்பக்கத்தில் இருப்போரின் கவனமும் இந்தப் பணியின்பால் திரும்பியது.  மக்கள் மனங்களிலும் தூய்மை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது.  

நண்பர்களே, இதே போன்றதொரு உத்வேகமளிக்கும் சம்பவம் கோவாவிலே தெரிய வந்திருக்கிறது.  கோவாவின் பாலகிருஷ்ண ஐயா அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்.  ஆனால் சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற அவருடைய உற்சாகம் இன்றும் பசுமையாக இருக்கிறது.  மட்டீ-தோலாப் பகுதியிலே நீர்த்தட்டுப்பாடு பலரையும் வதைத்துக் கொண்டிருந்தது.  தீர்வு நோக்கி இவரும் பணியாற்றி வந்தார்.  பாலகிருஷ்ணா அவர்கள், குழாய்களைப் பொருத்தும் பணியில் மகத்துவமான பங்காற்றினார்.  இதனால் பல இல்லங்களுக்குக் குடிநீர் கிடைக்க முடிந்தது.  எந்தக் குடும்பங்கள், குடிநீருக்காக தினமும் போராட வேண்டியிருந்ததோ, அவர்களுக்குப் பெரும் ஆசுவாசம் பிறந்தது.

நண்பர்களே, கடந்த மாதங்களில் ஒரு மிகப்பெரிய அனுபவம் எனக்குக் கிடைத்தது.  இது மனதின் குரலோடும் கூட தொடர்புடையது.  ஆகையால் இன்று நான் இதுபற்றி உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.  தமிழ்நாட்டின் நாகர்கோயிலில் நான் ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது.  சுமார் 30 ஆண்டுகள் முன்பாக நான் அவரைச் சந்தித்திருந்தேன்.  நான் கிரிஜா அம்மா அவர்களைப் பற்றித் தான் பேசுகிறேன்.  அந்தச் சந்திப்பின் போது, இளைய மாணவர்களும் அவருடன் இருந்தார்கள்.  

நண்பர்களே, கிரிஜா அம்மா அவர்கள் சுமார் 15 பள்ளிகளை நடத்தி வருகிறார்கள்.  இவற்றிலே சென்னையின் ஜய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மிகவும் முக்கியமானது.  இவருடைய தேசபக்தி உணர்வு, அனைத்து பாரதவாசிகளுக்கும் கருத்தூக்கமளிக்கவல்லது.  இவர் மனதின் குரலால் உள்ளெழுச்சி பெற்று, தேசத்தின் பல இராணுவ வீரர்களுக்கு பங்களிப்பு அளிக்கும் உறுதி பூண்டார்.  இதன் பொருட்டு இவர் தனது அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உத்வேகம் அளித்தார்.  வீரம் நிறைந்த படைவீரர்களுக்கு நாம் ஒவ்வோர் தினமும் ஒரு ரூபாய் பணத்தைப் பங்களிப்பாக அளித்துவர வேண்டும் என்று மாணவர்களிடம் இவர் கூறினார்.  அதாவது ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாணவன் தரப்பிலிருந்தும் 365 ரூபாய் திரட்டப்படும்.  இந்தச் சின்னச்சின்னப் பங்களிப்பால் சுமார் 40 இலட்சம் ரூபாய் சேர்ந்தது.  கிரிஜா அம்மா அவர்கள் இந்த மொத்தப் பணத்துக்கான காசோலையை என்னிடத்தில் அளித்தார்.  அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது, பாரத அன்னையிடம் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு உணர்வு எத்தனை ஆழமானது என்பதை என்னால் உணர முடிந்தது.  கடந்த ஆண்டு தான் சென்னையின் முதல் ஹிந்து வித்யாலயமானது தனது 50 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்தது.  தேசத்தின் கல்வி மற்றும் கலாச்சார கௌரவத்தை முன்னெடுத்துச் செல்லும் பள்ளி வலையமைப்பு தொடர்பான இவருடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.  இதோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நம்முடைய படைவீரர்களூக்குத் தங்களுடைய பங்களிப்பை அளித்த அந்த மாணவச் செல்வங்களுக்கும் நான் குறிப்பாக என் பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.

நண்பர்களே, பாரதத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரிலும், ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, அது நமக்கு உள்ளெழுச்சியை அளிக்கிறது.  பல வேளைகளில், இந்த முயற்சிகள் அதிக பேசுபொருளாவதில்லை என்றாலும், அதைப் பற்றி நாம் அறியும் போது, தேசம் தனது குடிமக்களின் சக்தியின் துணையோடு முன்னேறி வருகிறது என்பதன் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.  உங்கள் அருகிலே இப்படிப்பட்ட முயற்சிகளைக் கண்டிப்பாக கவனியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.  யார் சமூகத்திற்காக நல்ல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அவர்களை அடையாளம் காணுங்கள், அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், முடிந்தால் நீங்களுமே கூட ஏதோ ஒரு நல்ல பணியிலே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  அடுத்த மாத மனதின் குரலில் மேலும் சில உள்ளெழுச்சியளிக்கும் விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.  

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

supreme court of india - 2026

லட்சக்கணக்கான ஆசிரியர்களைப் பாதிக்கும் டெட் (TET) மறுஆய்வு மனு மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் கோரி தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு சார்பில் அதன் பொதுச் செயலாளர் மு.கந்தசாமி வெளியிட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ளதாவது…

Tet - 2026

நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிரியர் அமைப்பான அகில பாரதிய ராஷ்ட்ரிய சைக்ஷிக் மகாசங் (ABRSM) உடன் தேசிய ஆசிரியர் சங்கம் இணைந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மறுஆய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் வெளிப்படுத்த தேசிய ஆசிரியர் சங்கம் விரும்புகிறது. இந்தத் தீர்ப்பு, பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பள்ளிகளில் பணியாற்றி வரும் நாடு முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்களிடையே பரவலான அதிருப்தியையும் கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், நடைமுறையில் உள்ள அரசாங்க விதிகள் மற்றும் அறிவிப்புகளின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் நடத்தப்பட்ட உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலர், கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்குச் சேவை செய்து, கல்வி முறையை வலுப்படுத்துவதற்காகத் தங்கள் வாழ்வின் பொன்னான ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளனர்.

ABRSM பின்வரும் அம்சங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறது:
பல ஆண்டுகள் பணியாற்றியிருந்த போதிலும், தற்போதைய சட்ட நிலை காரணமாக லட்சக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுசெய்ய முடியாத பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.

அவர்களின் பணி நிலைமைகள் குறித்த திடீர் நிச்சயமற்ற தன்மையானது, பள்ளிகளின் செயல்பாட்டையும் ஒட்டுமொத்த கல்விச் சூழலையும் மோசமாகப் பாதிக்கும்.

இந்தப் பிரச்சினை மனிதாபிமான மற்றும் நிர்வாகத் தன்மை வாய்ந்தது, எனவே அரசாங்கத்தின் அவசரத் தலையீடு தேவைப்படுகிறது.

கடந்த காலங்களில், ஊழியர்களைப் பாதுகாக்கவும் நிறுவன நிலைத்தன்மையைப் பேணவும் பரந்த பொது நலனுக்காக சட்ட நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகள் கையாளப்பட்டுள்ளன.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது பொருத்தமான அவசரச் சட்டம் அல்லது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க இந்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய நடவடிக்கை, கல்வித் துறையில் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதோடு, ஆசிரியர்களின் நலன்களையும் பாதுகாக்கும்.

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆசிரியர் சமூகம் எப்போதும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் இருந்து வருகிறது, மேலும் அவர்கள் நீதியையும் பாதுகாப்பையும் பெறத் தகுதியானவர்கள்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்படாவிட்டால், அவர்கள் தங்கள் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காக ஜனநாயக மற்றும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட நிர்பந்திக்கப்படலாம் என்பதை தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறது. அரசின் முன்முயற்சியான தலையீட்டின் மூலம் அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

pm modi in madurai meet - 2026

ஆங்கிலத்தில் : குமார் கோகலே

என்ன தவம் செய்தோம் உன்னைத் தலைவனாகப் பெற!!

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

எந்த ஒரு நாட்டின் பிரதமரும் அந்த நாட்டின் பெருமை. ஆனால் இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி இதற்கு விதிவிலக்கு.

நம் நாட்டு மக்களே மோடிக்கு இழைத்த அவமதிப்பும், அவதூறும் எந்த ஒரு தகுதியற்ற நபருக்கும் நேர்ந்திருக்காது. இதில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், நம்மில் பலர் அதை எதிர்த்துக் கூட கேட்கவில்லை. இதுதான் நமது பரிதாபம்.

நாட்டில் பல தலைவர்கள் அதீத வறுமையில் இருந்து உயர் பதவிகளுக்கு வந்தார்கள். ஆனால் தேநீர் விற்றதற்கு ஆதாரம் கேட்கப்பட்டது மோடியிடம் மட்டும்தான். “அயே மேரே வதன் கே லோகோ” பாடலின்போது நேரு அழுதபோது, அது அவருடைய மென்மையான இதயத்தின் அடையாளம் என்று புகழப்பட்டது. ஆனால் மோடியின் கண்கள் எங்காவது கலங்கினால், அவை “முதலைக் கண்ணீர்” என்று முத்திரை குத்தப்படுகின்றன.

ஒருநாள், யாரோ பரிசளித்த பத்து லட்ச ரூபாய் சூட்டை அவர் அணிந்தபோது, அவரது அரசாங்கம் “சூட்-பூட் அரசாங்கம்” என்று கேலி செய்யப்பட்டது. ஆனால் அதே சூட் பின்னர் ஏலம் விடப்பட்டு, கிடைத்த 3.5 கோடி ரூபாய் “நமாமி கங்கை” திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறித்து எந்தப் பேச்சும் இல்லை.

நம் சிறுவயதில், நேருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் பார்த்தோம். அதில் தொட்டில் முதல் பிரதமர் ஆனது வரை அவருடைய பயணம் காட்டப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயமாக இருந்தது. ஆனால் மோடி தன் தாயின் கால்களைத் தொட்டு ஆசி வாங்கும் புகைப்படம் வெளியானபோது, குற்றச்சாட்டு தயாராக இருந்தது: மோடி தனது தனிப்பட்ட வாழ்க்கையை விளம்பரப்படுத்துகிறார்.

இந்தியாவின் சந்திரயான் திட்டம் பின்னடைவைச் சந்தித்தபோது, மோடிதான் அதற்குப் பொறுப்பு என்று கூறப்பட்டது. மோடி விஞ்ஞானிகளுடன் இரவு முழுவதும் தன்னைப் புகழ்ந்து பேசி அமர்ந்திருந்ததால், அவர்கள் கவனம் சிதறி விண்கலம் பாதை மாறியது என்று கூறப்பட்டது.

ஒருமுறை, மோடி ராட்டையில் நூல் நூற்கும் புகைப்படத்தை யாரோ வெளியிட்டபோது, பெரும் அமளி ஏற்பட்டது. “மோடி மகாத்மா காந்திக்கு இணையாக முயற்சிக்கிறார். ராஜா போஜனையும் கங்கு தெலியையும் எப்படி ஒப்பிட முடியும்?” என்று விமர்சனங்கள் வந்தன. அந்த ராட்டையில் மோடி இருப்பதை விமர்சகர்கள் விரும்பவில்லை. ஆனால் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்பவர்கள், அதே ராட்டையில் நூல் நூற்கும் பிரதிபா பாட்டீல் மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்தப் புகைப்படங்கள் கூகுள் அல்லது யூடியூப்பில் கிடைக்கின்றன. ஒருவேளை பிரதிபா தாயும் அமிதாப்பும் மகாத்மா காந்திக்கு சமமானவர்களோ?

மாண்புமிகு மோடியும் ஜசோதாபென்னும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்திருந்தபோது, பல விஷமிகள் மோடி தன் மனைவியை கைவிட்டுவிட்டார் என்று கூச்சலிட்டு, ஜசோதாபென்னை அவருக்கு எதிராகத் தூண்ட முயன்றனர். ஆனால் ஜசோதாபென் தானே நிலைமையைத் தெளிவுபடுத்தி அவர்களைக் கண்டித்த பிறகுதான் அந்த விவகாரம் அடங்கியது.

2020-இல், ஜெய் பகவான் கோயல் என்ற மோடி ஆதரவாளர் “ஆஜ் கே சிவாஜி நரேந்திர மோடி” என்ற புத்தகத்தை எழுதினார். மோடி மீது வெறுப்பில் மூழ்கியவர்கள் பொறாமையில் எரிந்தனர். மோடிக்கு இதில் சம்பந்தமே இல்லாவிட்டாலும், “நீ சிவாஜி மகாராஜா என்று நினைத்தாயா? உனக்கு அந்த தகுதி இருக்கிறதா?” என்று அவதூறுகளை வீசினர். இதற்கு முன், மறைந்த யஷ்வந்த்ராவ் சவான் பிரதி-சிவாஜி என்றும், மாண்புமிகு சரத்ராவ் பவார் ஜாண்டா ராஜா என்றும் சிவாஜி மகாராஜருடன் ஒப்பிடப்பட்டனர். ஆனால் நரேந்திர மோடி? “அய்யோ, விடுங்கள்!” அதன் விளைவாக, அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.

சமீபத்தில்தான், ஒரு புத்தகம் சந்தைக்கு வந்துள்ளது. புத்தகத்தின் பெயர் “லாச்சித் போர்புகான்: அசாம் சே சிவாஜி”, சுஜ்குமார் புயான் எழுதி விஜய் லோங்கர் மொழிபெயர்த்தது. இந்தப் புத்தகம் மோடி-வெறுப்பாளர்களின் கவனத்தில் இருந்து தப்பிவிட்டது, அல்லது இது மோடியைப் பற்றியது அல்ல என்பதால் புறக்கணிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் பற்றிய தகவலும் கூகுளில் கிடைக்கிறது.

மோடியின் எதிரிகள் எட்டிய உச்சங்கள்: அவரை “NRI PM” என்று கேலி செய்வது, சர்ஜிகல் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பது, மணிசங்கர் ஐயர் அவரை நீச் என்று அழைப்பது, சோனியா காந்தி அவரை மௌத் கா சௌதாகர் என்று அழைப்பது, ராகுல் காந்தி சௌகிதார் சோர் ஹை என்று அவமதிப்பது, மற்றும் “மனைவியைக் கவனிக்க முடியாதவன் நாட்டை எப்படி நிர்வகிப்பான்?” என்று சொல்லி மன உறுதியைக் குலைக்க முயற்சிப்பது, பாம்பு, தேள் என்று ஒப்பிடுவது வரை.

இத்தகைய தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு, சிறிதும் கவனம் சிதறாமல், இந்த மனிதர் நாட்டுக்காக தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார். அவர் உலகில் நாட்டின் மதிப்பை உயர்த்துகிறார், அதே நேரத்தில் தன் சொந்த நாட்டிற்குள் அவமானங்களை அமைதியாக சகித்துக்கொள்கிறார்.

2002 முதல், அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. தனது தனிப்பட்ட உணவுச் செலவுகளை தனது சம்பளத்தில் இருந்து ஏற்கிறார். வெளிநாட்டுப் பயணங்களின்போது, வெளிநாட்டில் ஹோட்டல் செலவை மிச்சப்படுத்த வேண்டுமென்றே இரவில் பயணம் செய்து விமானத்தில் உறங்குகிறார். தீபாவளியின்போது விடுமுறை எடுப்பதற்குப் பதிலாக, நமது வீரர்களின் மன உறுதியை உயர்த்துவதில் செலவிடுகிறார். 70-களிலும், அவர் ஒரு இளைஞனின் ஆற்றலுடன் ஓடுகிறார்.

இந்த மனிதன் எந்த மண்ணால் செய்யப்பட்டவர்?
நாட்டின் பெருமைக்காக தொடர்ந்து பாடுபடும், மிகுந்த புத்திசாலித்தனமும், ஆழ்ந்த உணர்வுத்திறனும், மன உறுதியும் கொண்ட, உலக நலனுக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் பாரத மாதாவின் இந்த அசாதாரண, கடின உழைப்பாளி மகன் நரேந்திர மோடிக்கு எனது நூற்றுக்கணக்கான வணக்கங்கள்.
பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய பிரதமர்!!
ஜய் ஹிந்த் 🇮🇳
பாரத் மாதா கி ஜய் 🇮🇳

சாவர்க்கரும் ஜனநாயகமும்

vd savarkar - 2026

— ரவிக்குமார் —

அமெரிக்க அதிபர் முதல் அனைவரும் மேற்கு வங்க மாநில தேர்தல் நிகழ்வுகளை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாஜகவை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பல ஆண்டுகளாக மம்தா பானர்ஜி கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தங்கள் கட்சி அலுவலகங்களை மீட்டெடுத்துக் கொண்டாடினார்கள் . பாஜகவின் வெற்றி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கும் விடுதலை உணர்வை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வரும் முன்பு அதிகாரத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் இதையே காங்கிரசுக்கு செய்திருந்தனர். இன்று இரண்டு கட்சியினருக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் (அ முதல் ஔ வரை அனைத்து பிரிவுகளும்) வீர சாவர்க்கரை இன்றும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீர சாவர்க்கர் பெரும் புரட்சியாளர். ஆங்கிலேயரை எதிர்த்து வன்முறை வழியில் , வெடிகுண்டு பாதையில் பயணித்தவர். கம்யூனிஸ்டுகள் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகு கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர். மம்தா பானர்ஜி அதே வழியில் பயணித்து மேற்கு வங்கத்தில் அவர்களை வீழ்த்தினார். அதே வழியில் தொடர்ந்தார். ஆனால் சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை இல்லாமல் ஜனநாயக வழியில் மம்தா பானர்ஜியை வென்று ஆட்சியில் அமர்ந்துள்ளது.

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

வீர சாவர்க்கர் 1883 ஆண்டு மே மாதம் 28 தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் பாகூர் கிராமத்தில் பிறந்தார். தேசபக்தர்களான சாபேகர் சகோதரர்களை இளம் வயதிலேயே தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. அதனால் மனம் கொதித்த சாவர்க்கர் 1898 இல் தனது குலதெய்வத்தின் முன்பு ஆயுதப் புரட்சி மூலம் ஆங்கிலேய அரசை அகற்ற சபதம் மேற்கொண்டார். 1900 ஜனவரி மாதம் மித்ர மேளா என்ற அமைப்பை ஆரம்பித்து தன் சக மாணவர்களை அதில் இணைத்தார். மித்ர மேளா ரகசிய புரட்சி அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது.

1904 மே மாதத்தில் அபினவ் பாரத் என்ற புரட்சிகர இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் உறுப்பினர்கள் தங்கள் விரலை கீறி இரத்த அபிஷேகம் செய்து சபதம் ஏற்பார்கள். மேற்படிப்புக்காக லண்டனுக்கு சென்றபோதும் அவரது புரட்சிகர செயல்பாடுகள் தீவிரமாக இருந்தன . அதனால் 1910 மார்ச் மாதம் ஆங்கிலேய அரசு அவரை லண்டனில் கைது செய்தது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் வழியில் அவர் கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பிய சாகசம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1910 டிசம்பர் மற்றும் 1911 ஜனவரியில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து , அந்தமான் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. பிறகு 1921 முதல் 23 வரை இந்தியாவில் அலிப்பூர் , ரத்தினகிரி சிறையில் அடைத்தது. 1924 இல் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் எரவாட சிறையிலிருந்து விடுவித்தது.

1947 ஆகஸ்டு மாதம் ஆங்கிலேயே ஆட்சி அகன்று இந்தியா தன்னாட்சி பெற்றது. 1950 ல் அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1952 ல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. சாவர்க்கர் அப்போது அபிநவ் பாரத் அமைப்பை கலைத்து விட்டார். நம் நாட்டு மக்கள் அனைவரும் இனி எதிர்மறையான செயல்பாடுகளையும் வன்முறையையும் தவிர்த்து விட்டு நேர்மறையான செயல்பாடுகள் மூலம் தேசத்தை உயர்த்த வேண்டுமென கூறினார்.

” விடுதலை போர் நடந்து கொண்டிருந்த போது அரசு அதிகாரிகளை கொல்வது, அரசு பணத்தை கொள்ளையிடுவது, அரசு சொத்துக்களை நாசம் செய்வது போன்ற அரசுக்கு எதிரான பயங்கரவாத, வன்முறை செயல்கள் அனைத்தும் நியாயமாக இருந்தன. வன்முறை வழியே நம்முடைய மதமாக இருந்தது. ஆனால் இப்போது போர் முடிந்து விட்டது. நாம் வெற்றி பெற்று விட்டோம். இப்போது அந்த வன்முறை செயல்பாடுகள் தேவையில்லை. அவற்றை நம் நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் அது தொடருமானால் அதுவொரு நாள் நம்மையே திருப்பி தாக்கும். நமக்கு பெரும் பிரச்சனையாக ஆகிவிடும்.”

“எனவே விடுதலை பெற்ற பிறகு நம்முடைய முதல் கடமை வன்முறை , ஆயுத புரட்சி வழியை விட்டுவிட்டு சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும். விடுதலை கிடைத்த பிறகு நம் நோக்கம் மாறிவிட்டது. சுதந்திரத்தை பாதுகாப்பதும் தேசத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றுவதே நமது நோக்கம். இனி நாம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது. சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். அழிவு பாதையில் அல்ல, ஆக்கபூர்வமான நடத்தையை நாம் பின்பற்ற வேண்டும். இனி இதுவே நம்முடைய தேசிய மதமாகும். “

ஆயுத புரட்சி என்ற புயல் வீசிய காலங்கள் போய்விட்டன. இனி சுதந்திர இந்தியா தனது உள்நாட்டு, வெளியுறவுகளை எப்படி கையாள வேண்டும் என்பதில் சாவர்க்கர் தெளிவாக இருந்தார்.

உள்நாட்டில் அரசமைப்பு; வெளியே புரட்சி !
உள்ளே சட்டம்; வெளியே வாள் !
உள்ளே அமைதி; போர் வெளியே !

என்று அவர் கூறினார்.

மகாத்மா காந்திஜியையும் நேரு காங்கிரஸையும் அவர் ஏற்கவில்லை என்றாலும் விடுதலைக்கு பிறகு மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார். தேசபக்திக்கு புதிய வரைவை அவர் அளித்தார்.

” எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது குழப்பத்தையும் வறுமையையும் தான் சந்திக்க வேண்டி இருக்கும். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அவற்றை நீக்கக்கூடிய மந்திர கோல் இல்லை. இது போன்ற சூழலில் புதிய அரசு சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படும் வரை நாம் பொறுமையுடன் தான் இருக்க வேண்டும். இதுவே நம்முடைய தேசிய கடமை. மக்கள் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளாமல், இது என்ன சுதந்திரம். இதற்கு பிரிட்டிஷ் அல்லது ரஷ்ய ஆட்சியே மேலாகும் , என்று கூறுவதை நான் பார்க்கிறேன். இதை கேட்கும்போது என் முதுகெலும்பு சில்லிடுகிறது. ஏனெனில் இது போல் பேசுவது துரோக சிந்தனையாகும். இது போன்ற சிந்தனையால் தான் கடந்த காலத்தில் நாம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டோம். “

” நம் சுதந்திரத்திற்கு இது போன்ற சட்ட புறம்பான போக்கை விட மிகப்பெரிய எதிரி வேறு எதுவும் இல்லை. அந்நியரான ஆங்கிலேயர், ரஷ்யா அல்லது இறை தூதர் ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக நம்மவர்களின் மோசமான ஆட்சியை ஏற்றுக் கொள்ளலாம். உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத சூழ்நிலையை விட பெரிய நோய் தேசத்திற்கு வேறு எதுவும் இல்லை. இது வலி மிகுந்ததாக இருக்கலாம் ஆனால் குணப்படுத்த முடியாததல்ல. அந்நியர் ஆட்சி என்பது தேசத்தின் மரணம். இது நம் மக்களின் இதயத்தை பொறிக்கப்பட வேண்டும். நாடி நரம்புகளில் ரத்தமென பாய வேண்டும்.”

விடுதலைக்கு பிறகு மக்கள் சட்டம் , ஒழுங்கு , அமைதியை பராமரிக்க ஒத்துழைக்க வேண்டுமென சாவர்க்கர் சொன்னார் . ஆனால் மக்கள் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருபவர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால்……..

துடிப்பான, ஆரோக்கியமான ஜனநாயகத்தையே சாவர்க்கர் ஆதரித்தார். எந்த மாற்றமாக இருந்தாலும் அது ஜனநாயக வழியாக மட்டுமே வர வேண்டும் என்றார்.

” தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது , நன்மை செய்யக்கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்கு பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது. “

இதனால்தான் நேரு காங்கிரசுடன் அவருக்கு கருத்து முரண்பாடு இருந்தாலும் , ‘ இது காங்கிரஸ் அரசு அல்ல, நம்முடைய அரசு. அரசு நிர்வாகத்தை காங்கிரஸ் கையாளுகிறது. நாளை வேறொரு கட்சி பெரும்பான்மை பெற்று தேர்ந்தெடுக்கப்படலாம். இதுவே தேசத்தின் வழி” , என்று அவர் கூறினார்.

அதேபோல் ‘எதிர்க்கட்சி’ என்ற சொல்லாடலை பயன்படுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ” பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற எதிர்க்கட்சி என்ற வார்த்தையை நாம் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக சிறுபான்மை பலம் பெற்ற கட்சி (மைனாரிட்டி கட்சி – ஆளும் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்ற கட்சி) என்ற பதத்தை பயன்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையினால் ஆளும் கட்சி செய்யும் அனைத்து செயல்களையும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை வராமல் தடுக்கப்படுவதுடன் பரஸ்பரம் ஒத்துழைப்பு என்ற புரிதல் உண்டாகும். பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி நம் தேசத்துக்கு விரோதமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் தடுக்கவும் தேசத்துக்கு நன்மை தரும் செயல்களை செய்யும் போது அதை முழு மனதுடன் ஆதரிக்கவும் கூடிய மனநிலை உருவாகும்” ,என்று சாவர்க்கர் கூறினார்.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜகவை எதிரியாக பார்த்தன. அந்த எதிர்ப்புணர்வினால் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவது, சமுதாயத்தில் வன்முறை வெறியாட்டம், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல் தடுப்பது, வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டுக்கு விரோதமாக செயல்படுவது, சட்ட ஒழுங்கை மட்டுமின்றி அரசமைப்பையே உள்ளிருந்து சிதைப்பது ஆகிய செயல்களை செய்தன. பாஜக மக்களை திரட்டி வாக்கு பெட்டி மூலம் அந்த கட்சிகளை அதிகாரத்திலிருந்து வெற்றிகரமாக அகற்றி வருகிறது. இந்த ஜனநாயக வழியையே தேச விடுதலைக்குப் பிறகு சாவர்க்கர் வலியுறுத்தினார்.


மே-28 விநாயக தாமோதர சாவர்க்கர் பிறந்த நாள்


தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

kamalalayam tn bjp - 2026

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பொன்னாரிஸம், தமிழிசையிஸம், முருகனிஸம் எல்லாவற்றையும் முன்னாள் தலைவர்களிஸம் என்று வகைப்படுத்தலாம். அவையெல்லாம் வாஜ்பாயிஸத்தின் நீட்சியே. அதாவது மிதவாதமிஸம்.

ஹெச்.ராஜாயிஸம் ஃப்யர் பிராண்ட் இஸம். அத்வானியிஸத்தின் வழியில் செல்லக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு பெரும் தலைகள் இருந்த காலகட்டத்தில் மக்களை பாஜக பக்கம் வரவைக்க மிகவும் பொருத்தமான இஸமாக அதுவே இருந்தது. ஆனால், வாஜ்பாயிஸம் அதற்கு இடம் தரவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுவாக வெளிப்படையாக இருக்கும் இடத்தில்தான் ஃபயர் பிராண்ட் அரசியல் செல்லுபடியாகும். தமிழகத்தில் அது செல்லுபடியாகாது என்று அதை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவராமல் ஓரங்கட்டினார்கள்.

இத்தனைக்கும் எதிர் தரப்பு ஹெச்.ராஜாயிசத்தைத்தான் கட்டம் கட்டித் தாக்கியது. ஏனென்றால் அது பலம் பெற்றால் அவர்களுக்கு நெருக்கடி என்பது எதிரிகளுக்கு நன்கு புரிந்திருந்தது. நம்மவர்களுக்குத்தான் புரிந்திருக்கவில்லை.

ஒருவகையில் கருணாநிதி – ஜெயலலிதா என்ற இரு பெரும் சர்வ அதிகாரமும் மக்கள் செல்வாக்கும் பெற்ற சக்திகளை எதிர்க்க யாராலும் முடிந்திருக்காது. வன்முறை முத்திரை குத்தி எளிதில் ஓரங்கட்டிவிடுவார்கள் என்று நினைத்து மிதவாதம் பக்கம் நகர்ந்தது தவறாகிவிட்டது. இதுவுமே பின்னால் தள்ளி இருந்து பார்ப்பதால் சொல்லும் விஷயம் தான்.

அண்ணாமலையிஸம் ஓர் எல்லைவரை அதிரடியானதுதான். வாஜ்பாயிஸம் போல் மிதமானது அல்ல. அத்வானியிஸம் போல் அதிரடியானதும் அல்ல. மோதியிஸம் போல் இரண்டும் கலந்த கலவை என்று சொல்லலாம். ஊழலற்ற நிர்வாக நேர்த்தி, அனைவருக்குமான வளர்ச்சி, கலாசார மீட்டெடுப்பு ஆகியவற்றின் இதமான கலவை. பெரிதும் வளர்ச்சி மாடலை முன்னுதாரணமாகக் கொண்டது.

உண்மையில் தமிழகத்துக்கு இந்த மோதியிஸமே சரியானது. அண்ணாமலையிஸம் அதன் வழியில் செல்லும் அத்தனை சாத்தியக்கூறுகளையும் கொண்டதுதான்.

ஆனால், மக்கள் மத்தியில் வாஜ்பாயிஸம் போன்ற மிதவாதத்துக்கும் ஆதரவு இல்லை. அத்வானியிஸம் – ஹெச்ராஜாயிஸம் போன்ற ஃபயர் பிராண்டுக்கும் ஆதரவு இல்லை. இரண்டுக்கும் இடை நிலையிலான மோதியிஸ – அண்ணாமலையிசத்துக்கும் ஆதரவு இல்லை.

நயினாரிஸம் என்பதை கூட்டணியிஸம் அல்லது சமரச இஸம் என்று சொல்லலாம். இதற்கும் தமிழக மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை. ஆக, பாஜகவுக்கு தமிழகத்தில் எந்த இஸம்தான் உகந்தது?

நரேந்திர மோதியிஸம் தான் தேசம் முழுவதும் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. எனவே அதன் வழியிலான அண்ணாமலையிஸம் தமிழகத்துக்கு நன்மை தர வாய்ப்பு உண்டு.

ஆனால் மோதியிஸம் என்பது பிற மாநிலங்களில் பெற்றிருக்கும் வரவேற்பை தமிழகத்தில் பெறவில்லை. எனவே அதை அண்ணாமலையிஸம் என்ற பெயரில் முன்னெடுக்க பாஜக விரும்பியது. எதனாலோ இரண்டுக்கும் 2024-ல் பெரும் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.

உண்மையில் அன்று தோற்றது மோதியிஸமே. இந்திய அளவில் இன்னொரு முக்கியமான இஸம் வலிமையுடன் திகழ்கிறது. அது யோகியிஸம்.

இது ஹெச்.ராஜாயிஸம்-அத்வானியிஸம் ஆகியவற்றின் அல்ட்ரா மாடர்ன் வடிவம். இதை அந்தரத்திலிருந்து உருவாக்கிவிட முடியாது. உத்தரபிரதேசத்தில் (க்ரிப்டோ யாதவ்) இடைநிலை ஜாதி சர்வாதிகாரமும் இஸ்லாமிய அப்பீஸ்மெண்டும் உச்சத்தில் இருந்தது. எனவே அங்கு தலித்தாகவும் வெற்றி பெற முடிந்தது. இந்துவாகவும் வெற்றி பெற முடிந்தது.

ஒருவகையில் இங்குமே அந்த அராஜகப் போக்குதான் திராவிட இயக்க வடிவில் இருந்தது. இங்கு தலித்களின் நேச சக்தியாகவும் மென் இந்துத்துவ சக்தியாகவும் அதிமுக இருந்ததால் தலித் சக்தியும் இந்து சக்தியும் தனியாக சொந்த அடையாளத்துடன் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

பாஜகவால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை என்பவர்கள் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயம் இங்கு தலித் சக்தியும் கால் ஊன்ற முடியவில்லை.

தமிழகம் கருத்தியல் தளத்தில் சைமனிஸம் பக்கம் நகர்ந்துவிட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் துரோகம், எழுவர் விடுதலை, பாலசந்திரன் படுகொலை, சல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, சி.ஏ.ஏ. எதிர்ப்பு என தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்டவை எல்லாமே சைமனிஸத்தின் அடிப்படையிலானவையே. அந்த கருத்துருவாக்கத்தை திமுக 2021-ல் கைப்பற்றியது. 2026-ல் ஜோசஃபிடம் தந்திருக்கிறது.

சைமனிஸம், ஸ்டாலினிசம், ஜோசஃபிஸம் மூன்றும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி போன்ற ட்ரினிட்டி சக்திகளே. எனவே தமிழகத்தில் உருவாக வேண்டிய இஸம் எது என்பதை இந்த எதிரியின் ஒருங்கிணைப்பே தீர்மானிக்கவேண்டும். ட்ரினிட்டிக்கு மாற்று திரிசூலமே.

தமிழகத்தில் பாஜகவின் வரலாறை எடுத்துக் கொண்டு பார்த்தால் அண்ணாமலையிசமே ஓரளவுக்கு ஒப்பீட்டளவில் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. ஹெச்.ராஜாயிஸம்-அத்வானியிஸத்துக்கு தலைமைப் பொறுப்பு தராததால் அதைப் பற்றி அதிகம் எதுவும் சொல்லமுடியவில்லை. மற்றபடி அண்ணாமலையிஸம் தலைமைக்கும் வந்திருப்பதால் மற்ற இஸங்களைவிட முன்னணியில் இருக்கிறது.

அண்ணாமலையிஸத்தின் நிறை குறைகளைப் பார்ப்போம். திராவிட பிளஸ்தான் இதன் கொள்கை. எனவே இதை ஏற்க முடியாது. மோதியிஸம் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லா பாரதம் என்கிறது. அதன் அடிப்படையில் நமக்கு திராவிடம் இல்லா தமிழகம் என்பதுதான் சரியானது. ஆனால், வருத்தம் என்னவென்றால் மோதியுமே ‘திராவிட பிளஸ்’ என்பதை ஏற்கிறார். திராவிட மைனஸ் அல்லது சனாதனம் பிளஸ் என்பதுதான் இந்துக்கள் மற்றும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது.

  • * அண்ணாமலையிஸத்தின் அடுத்த அம்சம்: மத்திய தலைமைக்குக் கட்டுப்படாத தன்மை.
    • ஓர் எல்லை வரை சரி.
  • என் மண்; என் மக்கள்
  • அபாயகரமான முழக்கம். நம் தேசம்… நம் தர்மம் என்றே இருந்திருக்கவேண்டும்.

முன்னாள் தலைவர்களுடன் விரிசல்.
திராவிட ஊடகங்களின் திட்டமிட்ட சதி.

மத்திய தலைமை சொல்லியே முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் எல்லாரும் செயல்படுகிறார்கள். திமுக அதைத் தந்திரமாகத் திரிக்கிறது.

உதாரணமாக, தமிழிசை அவர்களை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடச் சொன்னது மத்திய தலைமையே. திரு எல். முருகன் மிதமாகச் செயல்படவும் மத்திய தலைமையே காரணம். நிர்மலா சீதாராமன், குருமூர்த்தி, பேராசிரியர், வானதி ஸ்ரீனிவாசன் என அனைவரின் செயல்பாடுகளும் மத்திய தலைமையின் வழிகாட்டுதலின் படியே.

இவை அனைத்தையும் உட்கட்சி மோதலாகத் திரித்தது ஊடகங்களே.

நெருப்பில்லாமல் புகையுமா..? நிச்சயம் பாஜக கட்சியினருக்கிடையே ஆளுமை உரசல் – ஈகோ க்ளாஷ் இருந்திருக்கும். எல்லா இடங்களிலும் இருப்பதுதான். ஆனால், பொது இலக்குக்காக தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விலக்கி விட்டு ஒற்றுமையாகச் செயல்படும் பக்குவமும் புரிதலும் அவர்களுக்கு உண்டு. எனவே, தலைவர்களைப் பார்த்து அதற்கேற்ப நடப்பதே தொண்டர்களுக்கு அழகு. ஈழப் படுகொலைக்குத் துணை நின்ற பின்னரும் திமுகவும் காங்கிரஸும் தோழமையைக் கைவிடவில்லை. பிற கூட்டணிக் கட்சிகளும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எதையும் மீறவில்லை. தலைவர்கள் எவ்வழி… தொண்டர்கள் அவ்வழி.

டி.எம்.கே. ஃபைல்ஸ் : தமிழர்கள் பொருட்படுத்தாத ஊழலை பிரதான வியூகமாக அமைத்தது பலன் தரவில்லை… தராது. எனவே பிழையான முன்னெடுப்பு. இடதுசாரி, காங்கிரஸ், திமுக லாபி நிறைந்திருக்கும் அதிகாரவர்க்கத்தை வைத்துக்கொண்டு ஊழலை நிரூபிப்பதும் தண்டனை வாங்கித் தருவதும் மிகவும் கடினம்.

அதிமுகவுடனான மோதல். : திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிகிறது; பாஜக தனிமைப்படுத்தப்பட்டுவிடும்; அதிமுகவில் இருக்கும் இந்துக்கள் பாஜகவின் ஆதரவாளர்களாக வேண்டியவர்கள் என்ற கோணத்தில் பார்த்தால் மோதல் தவறு.

பாஜகவின் தனித்தன்மையும் நேர்மையும் கேள்விக்குக்குள்ளாக்கப்படுகிறது என்ற கோணத்தில் பார்த்தால் மோதல் சரி.

  • * அண்ணாமலையிஸத்தின் ஊடகக் கையாளுகை மற்றும் விளம்பர, யுக்திகள்
  • மிகவும் சிறப்பு. மிகவும் அவசியம்.
  • * திரையுலகைப் பற்றி விமர்சனமாகப் பேசக்கூடாது; புகழமட்டுமே செய்யலாம் என்ற தீர்மானம்.
  • மிக மிகத் தவறு.
  • * ஹனி டிராப்…
  • நோ கமெண்ட்ஸ்.
  • * பண மோசடி.
  • வாய்ப்பே இல்லை.
  • *
  • திறமையான நிர்வாகம் சாத்தியமா?
  • 100% சாத்தியமே.
  • * ஆட்சித் திறமை
  • கணிசமாக உண்டு. *
  • கட்சி அவரை ஓரங்கட்டிவிட்டதா?
  • இல்லை. 2026 தேர்தல் தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.
  • மீண்டும் தலைவராக்கப்படுவாரா..?

விஜய் சரியான நேரம் பார்த்துக் காத்திருந்து களம் இறங்கியதுபோல், அண்ணாமலையும் களமும் காலமும் கனியும்போது முன்னிலைக்கு வருவார். கட்சித் தலைவர் பதவியைவிட முதல்வர் பதவியே அவருடைய இலக்கு. நரேந்திர மோதி கட்சித் தலைவராக ஒருநாளும் இருந்ததில்லை. ஒரு ஜம்பிங் பேட் ஆக அண்ணாமலைக்கு அது முதலில் தேவையாக இருந்தது. ஆனால், இனி,மேல் அண்ணாமலையும் கட்சிப் பதவியை விரும்ப வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

அண்ணாமலை இல்லையென்றால் இனிமேல் கட்சியே இல்லை.
சர்ச்சின் ஆதிக்கம் ஒடுக்கப்படாதவரை யார் வந்தாலும் பாஜகவுக்கு எதிர்காலமே கிடையாது. சர்ச்சின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்படாமல் மோதியே தமிழக முதலமைச்சரானாலும் சர்ச்சின் சொல்படியே நடந்தாகவேண்டியிருக்கும்.

விஷயம் ரொம்பவும் சிம்பிள்: அரபு நாடுகள் ஒன்றில் அமெரிக்க ராணுவம் கால் ஊன்றியிருந்தால் அந்த நாட்டில் நடப்பது அமெரிக்க ஆட்சியாகத்தான் இருக்கும். ரட்சணிய சேனை அகற்றப்படாத மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அது பாதிரியின் ஆட்சியாகவே இருக்கும். இயேசுவுக்குக் கூட அங்கு இடம் கிடையாது.

*
மேலே சொல்லப்பட்டிருக்கும் தமிழக பாஜகவின் வரலாறை வைத்துப் பார்த்தால் ஹெச்.ராஜாயிஸமே மிகவும் அவசியம். அதாவது, ஜோசஃபிஸத்தை எதிர்க்க ஜோசஃபை முதன் முதலில் அம்பலப்படுத்திய ஹெச்.ராஜாயிஸமே சரியானது.

(ஜோசஃப் நேர்வழியில் செல்வாக்கு பெறுவதில் தவறில்லை. ஜோசஃப் என்பதை மறைத்துக்கொண்டு செல்வாக்கு பெறுவது தவறு. ஹெச்.ராஜாயிஸம் இதைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஜோசஃபின் முகமூடி கழண்டுவிட்டது. பிற க்ரிப்டோக்களின் முகமூடிகள் கழற்றப்படவேண்டும்.).

அண்ணாமலையிஸத்துக்கு தமிழக அளவில் மக்கள் செல்வாக்கு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. ஊடகங்களிலும் நல்ல ரீச் இருக்கிறது (நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்). ஆக ஹெச்.ராஜாயிஸத்தின் க்ரிப்டோ எதிர்ப்பு கொள்கை + அண்ணாமலையிஸத்தின் களப்பணி… இதுவே பாஜகவுக்கு தமிழகத்தில் நல்லதொரு எழுச்சியைத் தரும்.

பிராமணர் – பிராமணரல்லாதார் என்று பாஜகவுக்குள் எதிரிகள் தூண்டிவிடும் மோதலுக்கும் மிகச் சரியான பதிலடியாக இருக்கும்.

ராஜ அண்ணாமலையிஸம்…
தீவிர க்ரிப்டோ எதிர்ப்பு + அனைவருக்குமான வளர்ச்சி

இந்துத்துவ பிளஸ். *

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

hrnce commissioner office chennai - 2026

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சிலர் கோவிலை சுரண்டும் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் திருக்கோவிலில் லட்டு பிரசாதம் முறைகேட்டில் அதிகாரிகள் துணையோடு ஊழியர்கள் பல கோடி ரூபாய் சுருட்டிய அதிர்ச்சி செய்தி வெளி வந்துள்ளது.

நேற்று (21.5.26) திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண ரசீது முறைகேட்டில் 25 லட்சம் ரூபாய் திருடிய பெண் அதிகாரி பிடிபட்டுள்ளார்.

தப்பு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு இன்றும் முழுமையாக உள்ளது. ஆனால் கோவிலில் இறைவன் முன்பே மனசாட்சி இல்லாமல் பக்தர்களை ஏமாற்றி திருடும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல் வெட்கக்கெடானது.

திருத்தணியில் ஒரு பெண் அதிகாரி மோசடியில் ஈடுபட்டபோது கட்டப்பஞ்சாயத்து செய்து அவரை காப்பாற்றியது கடந்த திமுக அரசு.

அதுபோல திருவண்ணாமலை, ஶ்ரீ ரங்கம் கோவில்களில் விசேஷ நாட்களில் போலி சிறப்பு தரிசன கட்டணக் கொள்ளை பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளிவந்தும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களின் நம்பிக்கையை, அவசரத்தை பயன்படுத்தி முறைகேடாக பல கோடி ரூபாய் சுட்டுகிறார்கள் அதிகாரிகள். ஏதோ ஒரிரு அதிகாரிகள் மட்டும் குற்றவாளி என சித்தரிப்பது, பிரச்சினையை பெரிதாகாமல் மூடி மறைக்கவே.

கோவில் உண்டியல் காணிக்கை முதல் பிரசாத வினியோகம் என ஊழல் பலவிதங்களில் நடக்கிறது. இதற்கு பின்புலத்தில் பல நெட்வொர்க் ஆட்கள் இருக்கிறார்கள்.

முழுமையாக இந்த முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.

அன்னதானம் பெரும் புண்ணியம். இந்த நற்பணி பக்தர்களின் காணிக்கையால் நடந்து வருகிறது. ஆனால் அதிலும் தரமில்லை என ஏராளமான புகார்கள் வருகின்றன. இதிலும் எண்ணற்ற முறைகேடுகளும் நடக்கின்றன.

எனவே புதிதாக பொறுப்பேற்றிருகும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி மற்றும் அமைச்சர், உடனடியாக கடந்த ஐந்தாண்டுகளில் இந்த துறையில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமான முழுமையான வெள்ளை அறிக்கையை விரைவாக தயாரித்து பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

joseph vijay oath taking ceremony in chennai - 2026

இலங்கை ஜெயராஜ் – இலக்கியப் பேச்சாளர்

கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா? இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?

பதில்: வாழ்த்துரைப்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? ஆனால் அதைச் சொன்ன பிறகு மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதிர்ஷ்டத்தால் வரும் வெற்றிகள் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டுமானால், அதற்காக நிறையப் பாடுபட வேண்டியிருக்கும். விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியையும் அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

மக்கள் தொண்டு, சிறந்த இலட்சியம், கொள்கைப்பிடிப்பு, கொடைத்தன்மை, தனி வாழ்க்கைத் தூய்மை போன்ற எதுவும் இல்லாமல் கிடைத்திருக்கும் வெற்றியை, அதிர்ஷ்டத்தால் அமைந்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமில்லை, மக்கள் விஜய்க்கு அளித்திருக்கும் இந்த வெற்றியை, அவர்மீதான பற்றுதலால் மட்டும் விளைந்தது என்று சொல்ல முடியாது. அது பழைய ஆட்சியாளர்களின் மீதான பகையாலும் விளைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் இதுவரை தனது தலைமைப்பண்பை சினிமாவில் மட்டும்தான் காட்டியிருக்கிறார். நிஜத்தில் அதனை இதுவரை அவர் காட்டியதாய்த் தெரியவில்லை. பதவியேற்றதன் பின்னான இந்த சில நாட்களிலும் அவரது அப்பண்பு முழுமையாய் வெளிப்படவில்லை.

பதவி ஏற்பின்போது அவர் பேசிய விதத்திலும், ஊழியர்களோடு சேர்ந்து மேசை தூக்கிய விதத்திலும், நாடகத்தன்மைதான் மேலிட்டுத் தோன்றியது. அன்று கம்பீரமாய் அவர் பேசிய பேச்சில், இயற்கையைவிட செயற்கையே அதிகரித்திருந்தது. அவர் பதவிப்பிரமாணம் செய்தபோது, “பாகுபலியை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழினத் தலைவராய் சட்டசபைக்குள் “கோட்டும் சூட்டுமாய்” அவர் நுழைந்த விதம் ரசிக்கும்படியாய் இல்லை. அத்தனை பேரும் தமிழர் கலாசார உடையில் இருக்க, முதல்வர் மட்டும் மேற்கத்திய உடையில் வந்ததன் காரணம் புரியவில்லை. இவ்வுடை ஒருவேளை இளையோரை ஈர்க்கலாம். ஆனால் அது அவரை ஒரு தமிழ்த் தலைவராய்ப் பாமர மக்களின் நெஞ்சில் பதிய விடாதென்றே தோன்றுகிறது.

அடுத்து, விமர்சனத்துக்குரிய அவரது தோழிக்கு பதவியேற்பு வைபவத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெருமைக்குரிய ஒன்றாய்த் தோன்றவில்லை. இன்னொரு ஜெயலலிதா உருவாக்கப்படுகிறாரோ? என்று எண்ணத் தோன்றியது. அரசியலில் புதிய பாதை அமைக்க நினைக்கும் விஜய், தன் தனி வாழ்க்கையில் பழைய தலைவர்களின் பாதையிலேயே நடக்க நினைப்பது துரதிர்ஷ்டமே!

பதவியேற்றதும், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர் ஆசி பெற்ற செயலில் அரசியற்பண்பாடு இருந்ததாய்ப் பலரும் சொல்கிறார்கள். அது உண்மையெனின், அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் சந்தித்திருக்க வேண்டும். அங்ஙனம் சந்திக்காததால், அவரது மற்றைய சந்திப்புகளெல்லாம் தனது பதவி நிலைப்புக்காகச் செய்யப்பட்டவை என்றே கருத வேண்டியிருக்கிறது.

தனது ஆஸ்தான சோதிடரை உதவியாளராய் நியமித்து, பின் மற்றவர்களின் எதிர்ப்பால் அவருக்குக் கொடுத்த பதவியை இரத்துச் செய்த விதம், அவரது எண்ணித் துணியாத இயல்பை வெளிப்படுத்தியது.

சட்டசபையில் விஜய்யை வைத்துக்கொண்டே, அவரையும் அவரது கட்சியின் செயற்பாட்டையும் உதயநிதி வெகு சாவகாசமாக இழித்துரைத்த போது, அதனை உடன் எதிர்கொள்ளாமல் விஜய் தலை கவிழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த விதம் எரிச்சலூட்டியது.

அந்த இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. “பூனை மெலிந்தால் எலியும் எட்டி உதைக்குமாம்” என்ற கதைதான். சபையில் பதிலுரைக்காமல், பின்னர் உதயநிதியின் தூற்றுதலுக்கான எதிர்வினையை அவர் ஆற்றியிருக்கும் விதம் மதிப்புக்குரியதாய் இல்லை.

மேலதிக வாக்குகளுக்காக பழைய பகைவர்களிடம் கையேந்தினால், இப்படித்தான் இருக்க வேண்டி வரும். “நக்கினார் நாவிழந்தார்” என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

சிங்கம், முயல், புலி, மான், பாம்பு, கீரி, நாய், பூனை என ஒன்றுக்கொன்று பகையான அனைத்தையும் ஒரு கூட்டிற்குள் அடைத்து, அக்கூட்டின் மேல் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் விஜய். அதனால் தினம் தினம் அவரது சிம்மாசனம் ஆடிக்கொண்டுதான் இருக்கப் போகிறது.

நிர்வாகம் என்பது இலேசான வேலையில்லை. இலட்சியங்களைச் சுலபமாக வாயால் பேசிவிடலாம். அவற்றை நிறைவேற்றுவதில்தான் ஆளுமை தங்கியிருக்கிறது. ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் அவர் இட்டிருக்கும் சில கட்டளைகள் மகிழ்வு தருவதென்னவோ உண்மைதான். ஆனால் அவற்றை அவரால் தொடர்ந்து உறுதியாய்க் கடைப்பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை.

விஜய்க்கு இனி சம்பாதிக்க வேண்டிய தேவையேதுமில்லை என்பது நிஜமே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்களை வைத்துக்கொண்டு, இவரால் தூய அரசியல் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமே! மிளகாய்ப் பொடியைப் போட்டு, பாயாசத்தை இனிக்க வைப்பேன் என்பது போல்தான் இதுவும் இருக்கிறது. “மந்திரத்தால் மாங்காய் விழுத்தத்” தெரிந்தால் மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

சினிமா கதாநாயகனான விஜய்யை, உண்மைக் கதாநாயகனாய் நினைத்துக் கொண்டுதான் இளைஞர் கூட்டம் அவர் பின்னால் திரண்டிருக்கிறது. மாற்றம் வேண்டியே தமிழ்நாட்டு மக்கள் விஜய்யை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

அவர்களைத் திருப்தி செய்ய விஜய் நிறையப் போராட வேண்டியிருக்கப் போகிறது. மேற்சொன்னவற்றை நிதர்சனம் உணர்ந்தே கூறியிருக்கிறேன். இத்தகைய எதிர்ப்புக் கடல்களை விஜய் நீந்திக் கடப்பாரானால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

railway news - 2026
#image_title

பெங்களூரு – தென்காசி

வண்டி எண் 06513 பெங்களூர் கண்டோன்மெண்ட் நிலையத்தில் மே 24 ஞாயிறு 10.20க்குப் புறப்பட்டு, மறுநாள் மே 25 திங்கள் மதியம் 1 மணிக்கு தென்காசி வந்தடையும். இதில், SL, 3A, 2S என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படும். 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்படும்.

இந்த ரயில் ஹோசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படுகிறது.

செங்கோட்டை – பெங்களூரு

பெங்களூரு-செங்கோட்டை – பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

செங்கோட்டை: கோடைக்கால விடுமுறை நெரிசலையும், வார இறுதி நாட்களின் கூடுதல் பயணிகளையும் கருத்தில் கொண்டு, செங்கோட்டையிலிருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் (BNC) நோக்கி மே 25 அன்று ஒரு பிரத்யேக ஒற்றை வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (One-Way Summer Special Express) இயக்கப்படும் என்று தென்மேற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வார இறுதி நாட்களைக் கழித்துவிட்டு எளிதாகப் பெங்களூரு திரும்பும் வகையில் இந்த இரவு நேரச் சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

புறப்படும் மற்றும் வந்தடையும் நேர விவரங்கள்:
செங்கோட்டை – பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06514), 2026 மே 25 (திங்கட்கிழமை) அன்று இரவு 23:00 மணிக்குச் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை, சேலம் மற்றும் ஓசூர் வழியாகப் பயணித்து, மறுநாள் மே 26 (செவ்வாய்க்கிழமை) மதியம் 13:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்தை வந்தடையும்.

முக்கிய வழித்தட நிறுத்தங்கள்:
இந்தச் சிறப்பு ரயில் கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, தர்மபுரி, ஓசூர் மற்றும் கார்மேலாராம் ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

பெட்டிகள் விவரம் (Coach Composition):
இந்த ரயில் மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது:

ஏசி 3-டயர் (AC Three Tier) – 1 பெட்டி

ஸ்லீப்பர் கிளாஸ் (Sleeper Class) – 5 பெட்டிகள்

பொது இரண்டாம் வகுப்பு (General Second Class) – 12 பெட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் (Divyangjan Friendly) – 2 பெட்டிகள்

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

அருணாச்சல பிரதேசத்திற்கு கிடைத்த வரம் ஆர்எஸ்எஸ் என்கிறார் மைசி. இவர் அருணாச்சல பிரதேச வனக்கழகத்தின் தலைவராக இருக்கிறார். பனிப்பொழிவு காணும் இந்த சீன எல்லையோர சிறிய மாநிலத்தில் 26 பழங்குடியினர்கள் உள்ளார்கள் என்கிறார் சேத்ர பிரச்சார் பிரமுக்கான முனைவர் சுனில் மொஹந்தி. 1925 இல் ஆர் எஸ் எஸ் துவக்கப்பட்டாலும் அது அருணாச்சல பிரதேசத்திற்கு அறிமுகமானது 1990 ல் தான்.

சுனில் கிட்காரூ , பிரசாத் பார்வே, வினய் தாரே, ராகேஷ் தேஷ்கர் என்ற சங்க பிரச்சாரகர்கள் வேறு மாநிலங்களில் இருந்து இங்கு சங்க பணியை செய்ய வந்தனர். 1992 இல் லித்தோம் நோசி , பிடி தயோம் என்ற இருவர் தலைமையில் இரண்டு குழுக்கள் அயோத்தியில் நடந்த கர சேவைக்கு சென்றனர்.

அருணாச்சல பிரதேசம் மட்டுமல்ல மிஜோராம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் கிறிஸ்துவ பெரும்பான்மை கொண்ட மாநிலங்களாக மாறிவிட்டன. தங்கள் தொன்மையான அடையாளத்தை இழந்து விட்டன. தேச ஒற்றுமை, சமூக ஒற்றுமை, தேச பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மீட்கும் பணியில் அக்கறை கொண்டு செயல்படும் ஆர்எஸ்எஸ் ஸுக்கு இந்த மாநில மக்களின் பண்பாட்டை மீட்கும் பணி முக்கியமானதாக பட்டது.

இப்பழங்குடியினரின் பாரம்பரிய தெய்வமான ரங்பரா என்ற தெய்வ உருவமே மக்கள் மத்தியில் இருந்து மறைந்து விட்டது. காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள். ராஜேஷ் தேஷ்கர் நல்ல ஓவியர் . அவர் பழங்குடியின மக்களில் மூத்தவர்களிடம் அத்தெய்வத்தின் உருவத்தைப் பற்றி கேட்டறிந்தார். பல்வேறு பழங்குடியினர் கூறிய விபரங்களை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப அந்த தெய்வ உருவை படமாக வரைந்தார். பல்வேறு பழங்குடியினரும் அதை பார்த்து ஏற்றுக் கொண்டனர்.

பிறகு அந்த தெய்வ உரு ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூருக்கு வந்தது. அங்கு சிலா விக்கிரகமாக வடிக்கப்பட்டது. முதல் விக்ரகம் அருணாச்சல பிரதேசத்திற்கு வந்தபோது பலர் அதை கண்டவுடன் முகத்தை கையால் மூடிக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டனர். பலர் அதை வியப்புடன் பார்த்தனர். பழங்குடி தலைவர்கள் ஒன்று கூடி அதை பார்த்து, நாங்கள் கிறிஸ்துவர்களாவதற்கு முன்னால் இதுவே எங்கள் தெய்வம் , என்று ஏற்று கொண்டாடினர். இன்று நூற்றுக்கும் அதிகமான ரங்பரா கோயில்கள் உருவாகி வழிபாடு நடத்துகின்றனர் அம்மக்கள்.

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

ஆர் எஸ் எஸ் ஸின் கிளை 1990 ல் அங்கு துவங்கினாலும் அதற்கும் முன்னதாக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தில் 1977 முதல் கல்விப் பணியும் மருத்துவ சேவைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன.

இன்று நம் மாநிலத்தில் 44 பள்ளிக்கூடங்கள், ஒரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறது விவேகானந்தா கேந்திரா. சுமார் 15,000 மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர். அதில் சுமார் 4000 பேர்கள் கேந்திரா நடத்தும் மாணவர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

ஆர் எஸ் எஸ் கருத்தியலின் அடிப்படையில் உருவான அமைப்பு அருணாச்சல் விகாஷ் பரிஷத் . அது 2000 கிராமங்களில் கிளைகளை கொண்டுள்ளது. 29 பள்ளிக்கூடங்களையும் பால்வாடிகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய மாணவர் விடுதிகளில் சுமார் 5000 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இது தவிர மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள், விடுமுறை கால தொழில் பயிற்சிகளை அந்த அமைப்பு நடத்தி வருகிறது.

‘ ஒரே பாரதம் உன்னத பாரதம் ‘ என்ற கோஷத்தை பிரதமர் மோடி எழுப்புவதற்கு முன்பாகவே ஆர்எஸ்எஸ் அந்த திசையில் பயணித்திருந்தது.

மலைகள், மழை, பனி, காடுகளை மட்டுமே பார்த்த இம்மாநிலத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் முதல் முதலாக ரயில் ஏறி, நீண்ட தூரம் பயணித்து மும்பாய் சென்று ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தனர் . அது அம்மாணவர்கள் , ஆசிரியர்கள் உள்ளங்களில் மட்டுமல்ல அவர்கள் கிராமத்திலும் பரந்து விரிந்த இந்தியா பற்றி உயர்ந்த உணர்வை ஏற்படுத்தியது.

அதுபோல நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்களையும் காரிய கர்த்தர்களையும் தேச எல்லையை தரிசித்தல் என்ற நிகழ்ச்சி மூலம் காஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வர ஆர் எஸ் எஸ் ஊக்கமளித்தது.

தேச ஒருமைப்பாட்டை பற்றி உதட்டளவில் பேசிக்கொண்டே தேச விரோதமாக செயல்படும் சக்திகளுக்கு இடையே அவப்பெயரைத் தாங்கிக் கொண்டு தேச ஒற்றுமைக்காக பாடுபடும் ஆர் எஸ் எஸ் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வரப்பிரசாதம் தான்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

hindutva in north east - 2026

— திருநின்றவூர் ரவிக்குமார் —

வங்கதேச முஸ்லிம்களின் சட்ட விரோத ஊடுருவல், குடியேற்றத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்னணியில் இருப்பது அஸ்ஸாம். கடந்த நூற்றாண்டில் அந்த மாநில மக்கள் தொகையில் 12. 4 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1951 கணக்கெடுப்பின்போது 24.7 சதவீதமாகவும் 2011 ல் 34.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இப்போது அது 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து இருக்குமென நம்பப்படுகிறது. பார்பேடா, பாங்காய் காவான், தாராங், துப்ரி, கோல்பாரா, ஹைலகந்தி, கரீம்கஞ்ஜ் ,மோரிகாவான், நாகான் , ஓஜாய் , தெற்கு சால்மாரா போன்ற மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் இயல்பானதாகவோ உள்ளூர் சார்ந்ததாகவோ ஏற்பட்டது அல்ல. வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியர்களால் நிகழ்ந்தது. பிரம்மபுத்ரா நதியோர தீவுகளில் முதலில் ஆரம்பித்தது. எல்லையோர மாவட்டமான துப்ரியில் தொடங்கி தாராங் வரையிலும் அதற்கு அப்பாலும் பரவியது. படகுமூலம் நதி வழியாக ஆயிரக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி மாநிலத்தின் நகரங்கள், கிராமங்கள் போடோலாந்து , தைவா, கைசிங் போன்ற பழங்குடியினர் பகுதிகளுக்குள்ளும், கார்பி – ஆங்லாங் , வடக்கு கச்சார் மலைப்பகுதிகளிலும் குடியேறி உள்ளனர்.

காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியல் , ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையில் உள்ள ஊழல், பொதுமக்களின் அலட்சியம் ஆகியவை இந்த கலாச்சார, பொருளாதார, சமூக, புவியியல் ஆக்கிரமிப்புக்கு காரணங்களாகும்.

அஸ்ஸாமில் கடைசியாக நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கணிசமான அளவு உள்ளூர் காரர்கள் வெளியேற்றப்பட்டு சந்தேகத்துக்குரிய குடியுரிமை கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் சேர்க்க பட்டனர். இதனால் அஸ்ஸாமின் அரசியல் களமே மாறியது. மாணவர்கள் போராட்டம் வெடித்தது. 1970 – 80 களில் நடந்த அந்த போராட்டத்தின் மையமாக இருந்தவை மூன்று விஷயங்கள். அன்னியர்களை அடையாளம் காண் , அவர்களை தனிமை படுத்து, வெளியேற்று என்பதே அந்த மூன்று. சுமார் ஆறாண்டு காலம் அஸ்ஸாம் மாநிலம் கொதித்துக் கொண்டு இருந்தது. 1985 இல் அஸ்ஸாம் ஒப்பந்தம் – ராஜீவ் காந்தியின் நடுவண் அரசுக்கும் அஸ்ஸாம் மாணவர் அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் – ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் அஸ்ஸாம் மக்களின் கலாச்சாரம் , பொருளாதார, அரசியல் உரிமைகளை பாதுகாப்பதாக உறுதி கூறியது.

காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்ட விரோதமாக ஊடுருவல் செய்தவர்களை அடையாளம் காணும் தீர்ப்பாய சட்டம் (ஐ.எம்.டி.டி ) மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அது ஊடுருவல் காரர்களை அடையாளம் காணவே முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஏனெனில் புகார் அளிப்பவர்தான் சம்பந்தப்பட்டவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பதை நிரூபிக்க வேண்டும். 2006 டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, ராஜீவ் காந்தி போட்ட சட்டம் மிக மோசமானது. எந்த அதிகாரமும் இல்லாதது. அது மட்டுமின்றி ஊடுருவல் காரர்களை அடையாளப்படுத்துவதற்கு பதிலாக அதற்கு தடையாக இருக்கிறது, என்று சாடியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஐ எம் டி டி நீக்கப்பட்டதும் பதுருதீன் அஜ்மல் அஸ்ஸாம் அரசியலில் புகுந்ததும் எதோச்சையாக நடந்த விஷயம் அல்ல . அஸ்ஸாமிய இந்துக்களும் முஸ்லிம்களும் எதை வெறுத்தார்களோ அதன் அடையாளமாக அஜ்மல் விளங்கினார். வாசனை திரவிய வியாபாரியான அவர் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களின் குரலாக ஓங்கி ஒலித்தார். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இப்போது அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

அஸ்ஸாமில் அஹோம் லச்சித் போர்புக்கான் என்றவொரு அரசர் இருந்தார். பிரம்மபுத்திரா நதியில் படகுகளைக் கொண்ட படையை ஏற்படுத்தி முகலாயர்களை வென்றார். அஸ்ஸாம் மக்களின் மனம் கவர்ந்த அந்த தேசபக்த அரசரின் பதாகையை முன்னிருத்தி ஆர்எஸ்எஸ் அஸ்ஸாம் மக்களிடையே தேசபக்தி கனலை எழுப்பியது. விளைவாக காங்கிரஸ் முதல்வர் கோயிலுக்கு சென்று பூஜை செய்வது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. சர்பானந்த சோனோவால், ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா போன்ற இளம் தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகி பாஜக.,வில் இணைந்து பின்னாளில் முதல்வராக ஆகினர்.

சோனோவால் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். 2016 இல் பாஜக.,வின் முதல்வரானார் . அதனால் பல பழங்குடியினர் தேசிய சிந்தனை கொண்டவர்களாக மாறினார். பழங்குடியினரின் நிலங்களும் வங்கதேச முஸ்லிம்களால் அபகரிக்கப்படுவதால் அவர்கள் மற்ற அஸ்ஸாமிய இந்து, முஸ்லிம்களுடன் இணைந்து போராட தொடங்கினர். ஆனால் அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக இருந்தன. 2020 வரையிலும் ஊடுருவல் செய்த அந்நியர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 1.43 லட்சம் பேர்களில் வெறும் 329 பேர்கள் தான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

2021 ல் அஸ்ஸாம் மாநில அரசு புதியதொரு குழுவை அமைத்தது. அஸ்ஸாம் ஒப்பந்தம் நடந்த பிறகு 36 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட நான்காவது குழு இது. இந்த குழுவின் பரிந்துரைகள் பலவும் சிறப்பாக இருந்தன. அஸ்ஸாமின் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் 80 லிருந்து 100 சதவீதம் ‘அஸ்ஸாமியர்கள் மட்டுமே’ வேட்பாளராக முடியும். மத்திய ,மாநில அரசு வேலைகள் அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். நில உரிமை அஸ்ஸாமியர்களுக்கு மட்டுமே. பெருவாரியான மக்கள் பேசும் மாநில மொழியான அஸ்ஸாமி மாநில அரசின் மொழியாகும். இதெல்லாம் அந்த குழுவின் பரிந்துரைகள். இவை மெதுவாக நடைமுறைக்கு வர தொடங்கின. இதனிடையே நில உரிமை தகராறுகள் / மோதல்கள் மாநிலம் முழுவதும் வேகமாக ஏற்பட்டு வருகின்றன.

15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ மகான் ஸ்ரீ சங்கர தேவ். அஸ்ஸாமிய மக்களின் தந்தையாக கருதப்படும் அவர் சமுதாய , சமய தலைவர். நாகாவூனில் அவரது அவதார ஸ்தலம் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது. சர்பானந்த சோனோவால் முதல்வராக இருந்தபோது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.

அவருக்கு பிறகு 2021 ல் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா முதல்வரானார். பதவிக்கு வந்தவுடன் தாராங்கில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலை சுற்றி இருந்த வங்கதேச முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். நதியோரம் உள்ள அந்த பகுதி முழுக்கவும் வங்கதேச ஊடுருவல்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அதன் பிறகு காருகுந்தி பகுதி. அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றும் போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேஜர் அவினாஷ் உபாத்தியாயா என்ற இந்திய ராணுவ அதிகாரி கூறுகிறார் : பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் வரும்போதெல்லாம் அத்துடன் சேர்ந்து வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் ஊடுருவல் நடக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து விடுவதால் எல்லை காவல் படையினரால் அதை கண்காணிக்கவோ கட்டுப்படுத்துவோ முடிவதில்லை. ஊடுருவல் காரர்கள் நதியோர வளமையான இடங்களில் மக்காச்சோளம் விளைவிக்கிறார்கள். அந்த தட்டைகளையே அடுப்பெரிக்க பயன்படுத்துகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் வந்த அமர்ந்தால் பிறரை எதிர்பார்க்காமல் தங்களுக்குள் தற்சார்பு வாழ்க்கையை பின்பற்றுகிறார்கள்.

மங்கால்டோய் என்ற பகுதியில் 85 சதுர கிலோமீட்டர் அளவுக்கு வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள். உள்ளூர்வாசிகளுக்கு தங்கள் நிலத்தின் மதிப்பை பற்றியும் அது தங்கள் வசமே வைத்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. உபாத்யாயா உள்ளூர் விவசாயிகளுக்கு போர் தொழில் பழக்கினார். விவசாயிகள் அரசின் உதவியுடன் விவசாய திட்டங்களை அமல்படுத்தவும் அதே வேளையில் தங்கள் நிலத்தை பாதுகாக்க போராடவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 1980 களில் அஸ்ஸாம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த பத்மா ஹசாரிகா இதை முயற்சி செய்தார்.

எங்கள் நிலப்பரப்பு வளமானது. வெள்ளம் வடிந்ததும் விவசாயத்திற்கு தயாராகிவிடும். உரமே தேவையில்லை. ஆனால் இப்போது எங்கள் நிலங்களை மியாக்கள் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) ஆக்கிரமித்து விட்டார்கள், என்கிறார் இஸ்லாம்.அஸ்ஸாமிய முஸ்லீம்களுக்கும் பிரச்சனை உருவாகி வருகிறது. இதை கல்லூரி மாணவரான ஹபீசூர் சரியாக சொல்லுகிறார். நாங்கள் அவர்களுடன் தான் (வங்க மொழி பேசும் முஸ்லிம்கள்) வளர்ந்தோம். ஆனால் எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும். எங்கள் மொழி, எங்கள் அடையாளம், எங்கள் பழக்க வழக்கங்களை நாங்கள் பின்பற்றினால் அவர்கள் எங்களை இஸ்லாத்திற்கு முரணானவர்களாக சித்தரிக்கிறார்கள். ஊடகங்களை எங்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள், என்கிறார் ஹபீசூர்.

மியாக்கள் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பண பலமும் ஆதிக்க சக்திகளின் ஆதரவும் உள்ளது என்று கூறும் ஹபீசூர் , எங்கள் முன்னோர்கள் இந்த பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். இந்த நிலங்களை தங்கள் பெயருக்கு ஆவணப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்து கூட பார்த்ததில்லை. அவர்களது அறியாமைக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது, என்று புலம்புகிறார்.

நாகாவூர் பகுதியில் பல வைணவ மடங்கள் இருந்தன. அவற்றையும் அதன் சொத்துக்களையும் வங்கதேச முஸ்லிம்கள் ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ளனர். ஊடுருவல் காரர்கள் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமல்ல, சட்டபூர்வமாகவே நிலங்களை பதிவு செய்கிறார்கள். போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினரும் உடந்தை. லஞ்சம், ஊழல் வெளிப்படையாக நடக்கிறது.

இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு பரவலாக நடைமுறையில் உள்ளது. அஸ்ஸாமிய முஸ்லிம்கள் அரசு ஒப்பந்த பணிகளை எடுப்பார்கள். அதை வங்கதேச முஸ்லிம்களுக்கு துணை ஒப்பந்தம் மூலம் கொடுத்து விடுவார்கள் . அஸ்ஸாம் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் ஊடுருவல்காரர்களால் பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பிரம்மபுத்திராவின் கிளை நதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால் படகு மூலம் நடக்கும் ஊடுருவலை தடுக்க முடியும். தடுப்பணை பகுதிகளில் மீன் வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க வேண்டும். பன்றி பண்ணைகளை வைத்து, பன்றி எச்சங்களை மீனுக்கு உணவாக பயன்படுத்தி லாபம் அடையலாம். இதனால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். பொருளாதாரமும் மேம்படும், என்கிறார் உபாத்தியாயா. அந்த பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தலாம் என்ற ஆலோசனையையும் அவர் முன்வைக்கிறார்.

1946 அக்டோபர் 27 தேதி அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியில் முதல் ஆர் எஸ் எஸ் ஷாகா துவங்கப்பட்டது. 1975 க்குள் அஸ்ஸாமில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் ஷாகா செயல்பட ஆரம்பித்துவிட்டது. பிரிவினைவாத அமைப்பான உல்பாவுக்கு தேச ஒற்றுமை பணி செய்யும் ஆர் எஸ் எஸ் ஸின் வளர்ச்சி சவாலாக இருந்தது ஆச்சரியமல்ல.

உல்பா பிரிவினைவாதிகள் முரளி மனோகர், ஓம் பிரகாஷ் சதுர்வேதி, பிரமோத் நாராயணன் போன்ற சங்க பிரச்சாரகர்களை கொன்றுள்ளனர். அவர்கள் அஸ்ஸாமிய பிரச்சாரகர்களையும் விட்டு வைக்கவில்லை. மதுமங்கள் சர்மா போன்ற அஸ்ஸாமிய பிரச்சாரகர்களையும் கொன்றுள்ளனர். இதையெல்லாம் 1961 இல் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பிரசாரக்காக வந்த சசிகாந்த் சௌதாய்வாலி என்ற மூத்த முழு நேர ஊழியர் ‘பிரச்சாரக்காக எனது பயணம்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர். இது தவிர 540 ஓராசிரியர் பள்ளிகளை வித்யா பாரதி நடத்துகிறது. சேவா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், விஎச்பி போன்ற அமைப்புகள் இந்த மாநிலத்தில் பல தசாப்தங்களாக பணியாற்றி வருகின்றன.