”நாடு முழுதும் நம்பகமான தேர்வு முறையை உருவாக்க, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வினாத்தாள்களை கசியவிடும் கும்பல்களை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம்” என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக, நள்ளிரவில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி கூறியதாவது:
தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம்
வீடியோ தமிழ்க் குரல்: ஆர். சுதர்ஸன்
நண்பர்களே, நம்பகத்தன்மை வாய்ந்த தேர்வுமுறை. இதற்காக ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். டாஸ்க் ஃபோர்ஸ் ஏற்படுத்துவதாகட்டும், ஃபாஸ்ட்ட்ராக் நீதிமன்றம் ஏற்படுத்துவதாகட்டும், மாநிலங்களின், ஆலோசனைகளை, கருத்தில் கொள்வதாகட்டும்; பார்த்தால்…. கடந்த பல பத்தாண்டுகளாகவே, ஒவ்வொரு மாநிலமும், மத்திய அரசாங்கமும், இந்த மாதிரியான, வினாத்தாள் கசிவுப் பிரச்சனையை, சந்தித்து வந்திருக்கிறார்கள்.
மாணவர்களுடைய எதிர்காலத்திற்குமே இது, பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாடுதழுவிய, அது மாநிலங்களிலும் சரி, மத்தியிலும் சரி, கல்விமுறையிலே மாற்றங்கள், அவசியமானவையாக ஆகி விட்டன. தொழில்நுட்பத்தின் முழுமையான பயன்பாடும், அவசியமானதாக ஆகி விட்டது.
அதோடு கூடவே, மீண்டும் ஏதாவதொரு பேப்பர் மாஃபியா, வினாத்தாள் கசிவேற்படுத்தும் குற்றவாளிகள், தேசத்தின் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் கும்பல், அவர்கள் தப்பிக்க முடியாது. கடுமையான சட்டங்களும் தேவைப்படுகின்றன. நாங்கள் நாடாளுமன்றத்திலே, மசோதாவை முன்வைத்தோம். நான் உங்களிடம் வாக்களித்திருந்தபடியே, கடந்த இரண்டு நாட்களிலே, நாடாளுமன்றத்தின், இரண்டு அவைகளுடைய, பெரும்பான்மையான உறுப்பினர்கள், விரிவான வகையிலே அதுகுறித்து விவாதித்தார்கள்.
மேலும் இன்று, இரண்டு அவைகளுமே, இந்தக் கடுமையான சட்டங்கள் கொண்ட, ஷரத்துக்களை உள்ளடக்கிய, இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள். இப்போது, நம்பகத்தன்மைவாய்ந்த தேர்வுமுறையை நோக்கிய, மகத்துவம் வாய்ந்த ஒரு பணி நிறைவேறியிருக்கிறது.
பணி மேலும் தொடர்ந்து நடைபெற்றுவரும். நாங்கள், இப்படிப்பட்ட நிலையை தொடர்ந்து நீடிக்க விடமாட்டோம். இந்த நம்பிக்கையோடு, நண்பர்களே, வாருங்கள், நாமனைவருமாக இணைந்து, வளர்ச்சியடைந்த பாரதத்தின் கனவை நிறைவேற்றும் வகையிலே, தோளோடு தோள் சேர்ந்து பயணிப்போம். பலப்பல நன்றிகள்.
நவீன காலத் தமிழ் இலக்கிய உலகின் விடிவெள்ளியாய் தோன்றிய மகாகவி சுப்ரமண்ய பாரதியாரால் எனதருமை தம்பி என்று அன்போடு அழைக்கப்பட்ட சிறப்புக்குரிய சீடர் பரலி. சு. நெல்லையப்பர். புதுவையில் வாழ்ந்த காலத்தில் தனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் எப்பாடு பட்டேனும் அந்தப் பணத் தேவையைப் பூர்த்தி செய்த நெல்லையப்பருக்கு, 1915-இல் மகாகவி அனுப்பிய கடிதத்தில் “தம்பி… தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்க!” என்று உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார்.
அத்தகைய பாரதியின் அருமைத் தம்பியான பரலி. சு. நெல்லையப்பர் தமிழையும், பாரதியின் புகழையும் உயிர்மூச்சாய் வளர்த்ததோடு அவ்விதமே தொடர்ந்து வளர்க்கத் தமக்கொரு சீடரும் தம்பியுமாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுத்தார். அத்தகைய பெருமைக்குரிய பெருந்தகைதான் எதிரொலி விசுவநாதன் என்ற திருவாரூர் சு. விசுவநாதன். பாரதி மீதும் அவர்தம் அருமைத் தம்பி போன்ற பரலி. சு. நெல்லையப்பர் மீதும் எதிரொலியார் கொண்டிருந்த பாசத்துக்கும், தமிழ் நேசத்துக்கும் ஓர் எடுத்துக்காட்டு அவர் படைத்தளித்த அற்புத இலக்கியமான ‘பாரதியின் தம்பி’.
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் திருவாரூரில், 1941-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி பிறந்தவர், சு. விசுவநாதன். அவரது தந்தையார் பெயரும், அவர் போற்றிய மகாகவியின் இயற்பெயரான சுப்ரமணியன் என்பதுதான். பாரதியின் புகழ்பாடும் கவிஞர்களில் முதன்மைக் கவிஞராக வலம்வந்த விசுவநாதன், பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் பாடும் புலமை பெற்றிருந்தார். பள்ளிச் சிறுவனான அவரது கவிப் புலமையைக் கண்டு வியந்த திருலோக சீதாராம், அவருக்கு பால பாரதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
விசுவநாதனின் பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டு, தனித்தவோர் அடையாளமாகத் திகழும் எதிரொலி என்ற சிறப்புப் பட்டத்தை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தவர், உவமைக் கவிஞர் சுரதா. சென்னை குரோம்பேட்டையில் நெல்லையப்பர் வாழ்ந்த காலத்தில், அவரைச் சந்திக்கும் பேறு கிடைத்து, அவருக்குச் சிறந்த மாணாக்கராய் வாய்த்த விசுவநாதன், கடந்த 1965-ஆம் ஆண்டில் நெல்லையப்பரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்கள் 70 பேரின் படைப்புகளைத் தொகுத்து, எதிரொலிகள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். அந்தத் தொகுப்பு நூலின் சிறப்பைக் கண்டு வியந்த சுரதா, எதிரொலி என்ற சிறப்புப் பட்டத்தை விசுவநாதனுக்குச் சூட்டினார்.
பாரதியின் அன்பரும் விடுதலைப் போராட்ட வீரருமான பரலி. சு. நெல்லையப்பர் குரோம்பேட்டையில் வாழ்ந்து வந்த காலத்தில், அவர் மறைந்த 1971-ஆம் ஆண்டு வரையில், அவருக்கு நெருங்கிய சீடராய் பணிவிடைகள் செய்ததோடு, தமிழ் மற்றும் பாரதி குறித்த இலக்கிய ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார், எதிரொலி விசுவநாதன்.
பாரதி பற்றிய அவரது ஆய்வுகளில், ஆகச் சிறந்த நூல் பாரதிக்கு விடுதலை. பாரதியின் படைப்புகளுக்கான பதிப்புரிமை தனியாரின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுக் காலம் இருந்ததையும், பாரதி விடுதலைக் கழகம் போன்ற தமிழார்வ அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து 1949-இல் பாரதியின் படைப்புகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதையும் உணர்ச்சி பொங்க விவரிக்கிறது, அந்நூல். அதுமட்டுமின்றி, பாரதியை தேசியக் கவிஞர் என்ற சிறிய வட்டத்துக்குள் அடைத்துவிடாமல், அவரது பெண்ணியச் சிந்தனைகள், சமூகச் சீர்திருத்தங்கள், சாதி ஒழிப்புக் கொள்கைகள், உலகளாவிய மானுடப் பார்வை ஆகிய சிந்தனைச் செறிவை எடுத்துரைத்து, அவர் பற்றிய தவறான புரிதல்களில் இருந்து அந்நூல் விடுதலை அளிக்கிறது. அத்துடன் பாரதி ஆய்வுகளில் உள்ள தவறுகள், குறைபாடுகள் ஆகியவற்றைக் களைந்தும் பாரதிக்கு விடுதலை தருகிறது.
எதிரொலியாரின் மற்றொரு மிகச் சிறந்த ஆய்வு நூல், பாரதியும் பரமசிவனும். 1990-இல் வெளிவந்த இந்நூல், கண்ணன் பாடல்களைப் பாடிய மகாகவி பாரதியாரின் பாடல்களிலும் கட்டுரைகளிலும் காணப்படும் சிவ வழிபாடு மற்றும் வேதாந்த, சித்தாந்தக் கோட்பாடுகளையும் இதன் மூலமான சமயம் கடந்த உலகளாவிய மானுடப் பார்வையையும் விளக்கியுரைக்கிறது. பாரதி பற்றி இதுபோன்ற இலக்கியப் படைப்புகளை உருவாக்கியளித்த எதிரொலி விசுவநாதன், தனது மானுடப் படைப்பான மகளுக்கும் பாரதி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.
பாரதி, அவரது சீடர் பரலி சு. நெல்லையப்பர் ஆகியோர் மீது மட்டுமல்ல, பாரதியின் மற்றொரு சீடர் பாரதிதாசன் மீதும் பற்றுக் கொண்டவர் எதிரொலியார். அவ்வகையில் இவர் படைத்தளித்த பாரதிதாசன் பரம்பரை என்ற ஆய்வு நூல், பாரதிதாசன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 1990-இல் வெளிவந்தது. தமிழ் இலக்கிய உலகில் பாரதிக்குப் பின் பாரதிதாசன் கொண்டுவந்த மிகப் பெரிய மாற்றத்தையும், அந்தத் தாக்கத்தின் விளைவாக உருவான சீடர்களான தமிழ்க் கவிஞர்களின் பங்களிப்பையும் பாங்குற விளக்குகிறது இந்நூல். இதனை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது இந்நூலின் பெருமையைப் பறைசாற்றும்.
எதிரொலி விசுவநாதனின் எழுத்துகளில் நினைவுகூரத் தக்க மற்றோர் படைப்பிலக்கியம், புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி அதே தலைப்பில் அவர் எழுதிய ஆய்வு நூல். இதுமட்டுமின்றி, வள்ளலார், காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தியாகி வ.வே.சு. அய்யர், திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, நாரண. துரைக்கண்ணன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். குழந்தை இலக்கியப் பணிச் செல்வர் ப. வெங்கடராமன் குறித்த ‘நட்புத் திலகம் பி. வெங்கட்ராமன் போன்ற பலதுறை ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளையும் நூல்களாக எழுதியுள்ளார். இவ்வாறாக 50-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்தளித்துள்ளார்.
இவ்விதம் பாரதியின் புகழையும், தமிழின் பெருமையையும் பரப்புவதைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு, குறிப்பாக பாரதியின் கருத்துகள் இளம் தலைமுறையினரிடம் எதிரொலிப்பதைத் தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த எதிரொலி விசுவநாதன் அவர்கள், சென்னைப் புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கத்தில், (2026) ஜூலை 28-ஆம் தேதியன்று மண்ணுலகில் இருந்து விடைபெற்று, பாரதியோடு ஐக்கியமானார்.
அன்னாரின் வழியில், பாரதியின் கருத்துகளை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல நாம் உழைப்பதே, அவர் போன்ற பாரதி அன்பருக்கு நாம் செய்யும் உண்மையான நினைவஞ்சலி ஆகும்.
ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசு மற்றும் ஆளுநர் அலுவலகம் வகுத்த நெறிமுறைகளின்படி இவ்விழா நடவடிக்கைகள் தொடங்கின. ‘வந்தே மாதரம்’ பாடலுடன் விழா தொடங்கியது; அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் (ஜன கண மன) மற்றும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ ஆகியவை இசைக்கப்பட்டன.
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவது இடத்தில் இசைக்கப்பட்டதற்குத் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி. விஸ்வநாதன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த டி.வி.கே. (TVK) எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகியவை எதிர்ப்பு தெரிவித்ததால், இச்சம்பவம் ஒரு புதிய அரசியல் சர்ச்சையை உருவாக்கியது.
பொதுமக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலை ஆளுநர் திணிப்பதாகச் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டினார். ஆளுநர் தனது நிகழ்ச்சி நிரலை ‘லோக் பவன்’ (ஆளுநர் மாளிகை) எல்லைக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தமிழக மக்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மௌனம் காப்பது குறித்துக் கேள்வி எழுப்பிய தூத்துக்குடி தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கப்பட்டு மாநிலப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைக் குறிப்பிட்டு, “இப்பிரச்சினை குறித்து முதல்வர் விஜய் வாய் திறப்பாரா?” என்று வினவினார்.
இதற்கிடையில், பதக்கம் வென்ற 115 பேருக்கு மட்டுமே ஆளுநரிடமிருந்து நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்படும் என்ற முடிவுக்கு 758 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். இறுதியில் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது.
ஆளுநருக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், விழா முழுவதும் அவரால் நின்று கொண்டிருக்க முடியாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்தது. அங்கு நிலவிய சலசலப்பைக் கண்ட பிறகு, அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநரே பட்டங்களை வழங்குவார் என்று துணைவேந்தர் அறிவித்தார்.
வேந்தரிடமிருந்து பட்டங்களைப் பெறப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த அறிஞர்களைப் புறக்கணிக்க மாட்டேன் என்று கூறிய ஆளுநர் ஆர்லேகர், இதற்காக மன்னிப்பும் கோரினார்.
ஆளுநர் ஆர்லேகர் 837 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 950 மாணவர்களுக்கு நேரில் பட்டங்களை வழங்கினார்; மேலும், சிறப்பான கல்விச் சாதனை, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றிற்காக 113 சிறந்த மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக அவர்களை வாழ்த்திய ஆளுநர், தங்கள் அறிவையும் திறமையையும் சமூக மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கவும் அவர்களைக் கேட்டுக்கொண்டார். கல்வியின் மாற்றத்தை உருவாக்கும் பங்கை வலியுறுத்திய அவர், மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அறிவு, நேர்மை, புதுமை மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய விழுமியங்களைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். புதுமையைப் பின்பற்றவும், சிறந்து விளங்கவும், ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் தொலைநோக்கு இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் தீவிரமாகப் பங்கேற்கவும் இளம் பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
“தெய்வம் என்பது ஒரு சட்ட ரீதியான ஆளுமை (juristic personality) ஆகும். தாமிரபரணி ஆறு இந்துக்களால் ஒரு தெய்வமாக வழிபடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அது ஒரு நபருக்கான தன்மையைப் பெறுகிறது. தாமிரபரணி ஒரு ஆறு என்பதற்காக அல்ல, மாறாக அது ஒரு தெய்வம் என்பதாலேயே அதற்கு ‘நபர்’ என்ற அந்தஸ்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். அதை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆற்றை மாசுபடுத்தும் செயல் பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களில் உள்ள விதிமுறைகளையும், அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவது மட்டுமல்லாமல், அந்த ஆற்றின் உரிமைகளையும் மீறுவதாகும் என்று கூறியது. இதன் மூலம், அந்த ஆற்றின் உள்ளார்ந்த மதிப்பு அங்கீகரிக்கப்படுகிறது.
இவ்வழக்கில் ‘சட்டரீதியான ஆளுமை’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே; அதாவது, மாசுபடுத்தப்படாமல் இருப்பதற்கான உரிமைக்காகவே அது வழங்கப்பட்டது. நடைமுறையில் உள்ள சட்டங்களில் குறைபாடுகள் இருக்கும்போதோ அல்லது அத்தகைய அந்தஸ்தை வழங்குவது வழக்கை விசாரிப்பதில் வசதியை அதிகரிக்கும்போதோ நீதிமன்றங்கள் பயன்படுத்தும் ஒரு சட்டரீதியான முன்னெடுப்புதான் இந்த ‘சட்டரீதியான ஆளுமை’ அங்கீகாரம் ஆகும்.
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளது. இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளன. ஆடைகளை ஆற்றில் வீசுவதைத் தடை செய்யும் நடவடிக்கையை எதிர்ப்பதற்கு அவர்கள் அரசியலமைப்பின் 25-வது பிரிவைச் சுட்டிக்காட்டினர். தங்கள் சொந்த தெய்வத்தை அவமதிக்கும் உரிமை தங்களுக்கு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, எதிர்ப்பாளர்களிடம் அதற்கான பதில் எதுவும் இருக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
“ஆற்றுக்கு ‘நபர்’ என்ற அந்தஸ்தை வழங்கியதற்கு மற்றொரு காரணமும் உள்ளது… காலநிலை மாற்றம் என்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். இது சுற்றுச்சூழல் சீரழிவின் நேரடி விளைவாகும். இப்பிரச்சினையைச் சமாளிக்கச் சட்டங்கள் மட்டும் போதாது. கடுமையான சட்ட அமலாக்கம் கூட நோக்கத்தை முழுமையாக அடைய உதவாது. மனித இயல்பு மாற வேண்டும். அது தார்மீக ரீதியான அணுகுமுறைகள் மூலமே சாத்தியமாகும். எனவே, சட்டவியல் (jurisprudence) என்பது ஆன்மீகச் சூழலியலுடன் (spiritual ecology) அதிகளவில் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாட்டில்,” என்று அது கூறியது.
இந்த உத்தரவின் மூலம் ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசுவது தடை செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் ஆறு மாசுபடுத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆற்றை மாசுபடுத்தும் செயல் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அபராதம் விதிப்பதற்கான தீர்மானங்களை உள்ளாட்சி அமைப்பு நிறைவேற்ற வேண்டும். ஆற்றை மாசுபடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது, சிவில் சமூகத்தினரை மாவட்ட நிர்வாகம் இதில் ஈடுபடுத்த வேண்டும். மக்கள் ஆற்றை மாசுபடுத்தாமல் தடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபடும்போது, உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேவேளையில், ஆற்றில் அஸ்தியைக் கரைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அஸ்தியைக் கொண்டு செல்லும் மண்பாண்டங்கள் நீரில் எளிதில் கரைந்துபோகும் வகையில், அவை சுடப்படாத மண்பாண்டங்களாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
பாபநாசம் ஆற்றுப் படித்துறையில் அமைந்துள்ள ‘ஆனந்தவிலாஸ்’ என்ற மண்டபத்தை, பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கோயில் செயல் அலுவலர் அல்லது அறங்காவலர்கள் இந்தியத் தொல்லியல் துறையுடன் (ASI) இணைந்து செயல்பட்டு, அந்த மண்டபத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்.
இந்திய அணி ஜிம்பாபேயில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு டி20 தொடரை விளையாடியது. மூன்று ஆட்டங்களும் ஹராரேயில் நடந்தது. முதல் ஆட்டம் ஜூலை 23இலும் இரண்டாவது ஆட்டம் ஜூலை 25லும் மூன்றாவது ஆட்டம் ஜூலை 26இலும் நடந்தது. மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை மிகச் சுலபமாகக் கைப்பற்றியது.
முதல் ஆட்டத்தில் முதலில் ஆடிய ஜிம்பாபே அணி 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 125 ரன் எடுத்தது. இந்திய அணியின் புதிய பந்துவீச்சாளர்கள் மயாங்க் யாதவ், அஷோக் ஷர்மா, பிரின்ஸ் யாதவ், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். பின்னர் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 126 ரன் எடுத்து வெற்றிபெற்றது. வைபவ் சூர்யவன்ஷி (19 பந்துகளில் 50 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), இஷான் கிஷன் (24 பந்துகளில் 35 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (24 பந்துகளில் 28 ரன்) சிறப்பாக ஆடினர். மாயாங்க் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி முதலில் மட்டையாடியது. தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி (20 ரன்) மற்றும் அபிஷேக் ஷர்மா (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் இஷான் கிஷன் சிறப்பாக ஆடினார். அவர் 44 பந்துகளில், 9 ஃபோர், 2 சிக்சர்களுடன் 81 ரன் அடித்தார். அவருடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயர் (20 பந்துகளில் 25 ரன்), திலக் வர்மா (29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்), ரிங்கு சிங் (8 பந்துகளில் 12 ரன்), ஷிவம் துபே (6 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 219 ரன் சேர்த்தனர்.
மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி முதலில் மட்டையாடியது. வைபவ் சூர்யவன்ஷி (49 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்), அபிஷேக் ஷர்மா (2 ரன்), இஷான் கிஷன் (29 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (27 ரன்), திலக் வர்மா (ஆட்டமிழக்காமல் 11 ரன்), ரிங்குசிங் (14 பந்துகளில் 25 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடிய ஜிம்பாபே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்துத் தோல்வியடைந்தது. அந்த அணியின் ரியான் புரி 54 ரன் எடித்தார். இந்திய அணியின் மயாங்க் யாதவ் 3 விக்கட்டுகளும், யஷ் தாகூர் 2 விக்கட்டுகளும் அஷோக் ஷர்மா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகநாகவும் தொடர் நாயகனாகவும் வைபவ் சூர்யவன்ஷி அறிவிக்கப்பட்டார்.
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.
2026 இளநிலை மருத்துவச் சேர்க்கைக்கான தேர்வு நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்னரே அதற்கான வினாத்தாள் கசிந்துவிட்டது என்பதை மத்திய அரசு பின்னர் அறிந்தது. அந்தத் தேர்வு உடனே ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்து அதன் முடிவுகள் வெளியாகி மருத்துவச் சேர்க்கைகள் நடக்கப் போகின்றன. பிறகென்ன என்றால் – இருக்கிறது.
முதலில் நடந்த தேர்வின் வினாத்தாள் கசிந்தது என்பதால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு முன்னணியில் நின்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி 37 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியது. முதலில் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், இறுதியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஜந்தர் மந்தர் போராட்டமும் வாபஸ் ஆகிவிட்டது.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
விவேகம் என்றால் என்ன? ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் மாட்டிக் கொண்டால் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களுக்கு மேலும் சங்கடம் தரும் முடிவை எடுக்காமல், ஒரு பாதுகாப்பான முடிவை எடுத்து அந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்கு விவேகம் என்று அர்த்தம். அதன் பெயர் தோல்வி அல்ல. அது உங்களுக்கான வெற்றி – மற்றவர்களுக்கு எப்படி இருந்தாலும்.
நீட் வினாத்தாள் கசிந்ததற்கு தர்மேந்திர பிரதான் ஒரு நேரடியான காரணம், அவர் தன்னுடைய அல்லது தனக்கு வேண்டியவர்களின் லாபத்திற்காக உடந்தையாக இருந்து அந்த வினாத்தாள் கசிய உதவினார் என்பது உண்மையானால், ஒரு அகப்பட்ட குற்றவாளியாக அவர் ராஜினாமா செய்யவேண்டும்; மறுத்தால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் விடுவிக்க வேண்டும். அப்படியான குற்றச்சாட்டு தர்மேந்திர பிரதான் மீது இல்லை, அதற்கான சாட்சியம் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. பிறகு ஏன் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும், அது ஏன் மத்திய அரசின் விவேகம் என்றாகும்?
டெல்லி போராட்டக்களப் பகுதியில் குவிந்தவர்களில் அநேகர் மாணவர்களாகத் தெரியவில்லை. அவர்களில் வெகுசிலர் மாணவர்களாக இருக்கலாம். கரப்பான்பூச்சியினர் இருந்தார்கள். அதோடு, மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு அது லட்டு மாதிரியான வாய்ப்பு என்பதால் காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர், இன்னும் சில கட்சியினர் அங்கு திரண்டிருந்தனர்.
ஜந்தர் மந்தரில் போராட வந்தவர்கள் கைகட்டி வாய்பொத்தி காந்திய வழியில் போராடுபவர்கள் அல்ல. அதோடு, பொதுவெளியில் கூட்டம் எங்கு எதற்காகக் கூடினாலும் வந்து சேரும் சமூக விரோதிகளும் அங்கு கலந்திருப்பார்கள். இந்தியாவை வீழ்த்த நினைக்கும் வெளிநாட்டு சக்திகள் அந்தக்கூட்டத்தில் சிலரை அனுப்பி வைத்திருக்கலாம். வேடிக்கை பார்க்கச் சில அப்பாவி மக்களும் அங்கு வந்திருப்பார்கள். அந்த எல்லா மனிதர்களிலும் யார் யாரை என்ன செய்யத் தூண்டுவார்கள், எப்போது என்ன உயிர்ச்சேதம் அல்லது விபரீதம் அவர்களாலேயே ஏற்படுத்தப் படும் அல்லது தூண்டப்படும் என்பதைக் கணிக்க முடியாது. போராட்டக்களமும் டெல்லியில், நமது தலைநகரில், அகில இந்தியாவின் கவனத்தைப் பெறுகின்றதாக இருந்தது.
ஒரு தீக்குளிப்பு, ஒரு கொலை, பெரிய கலவரம், போலீஸ் துப்பாக்கிச் சூடு என்று போராட்டக் களத்தில் ஏற்பட்டால் என்ன ஆகும்? அது கரப்பான்பூச்சிகளால், எதிர்க் கட்சிகளால், மீடியாவால், ஊதிப் பெரிதாக்கப்படும். அது சாதாரண இந்திய மக்களைப் பாதித்து மத்திய அரசுக்கு எதிராக அவர்களைத் திருப்பும். காரணம், சாதாரண இந்திய மக்கள் அறிவைவிட உணர்ச்சிகளால் அதிகம் உந்தப் படுகிறார்கள். ஒரு விஷயத்தின் நியாய அநியாயங்களை விடவும், அது தொடர்பான கூக்குரல், களேபரம், அடிதடி, ரத்தம், உயிரிழப்பு, ஆகியவை அவர்களை அதிகம் பாதிக்கும், அதன்படி அவர்கள் பெரிதும் வழி நடத்தப்படுவார்கள். இந்த விளைவுகள் ஏற்பட அனுமதித்து, ஒரு கல்வி அமைச்சரின் பதவியைத் தக்கவைத்து, வரப்போகும் மாநில சட்டசபைத் தேர்தல்களில் – அடுத்த எட்டு மாதங்களில் உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் வருகின்றன – பாஜக கூட்டணி தனது வெற்றி வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. பத்து ரூபாய் நஷ்டத்தை ஏற்கச் சம்மதிக்காமல், நூறு ரூபாய் இழப்பை பாஜக வரவழைக்கக் கூடாது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், மத்திய அரசு தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டது, அவரும் ஒரு பெரிய நன்மைக்காக அதற்கு உடன்பட்டது, மத்திய அரசின் தோல்வி அல்ல. அது மத்திய அரசின், பாஜக-வின், விவேகமான காரியம்.
இன்னொன்று. ஜந்தர் மந்தர் போராட்டம் ஜனநாயகத்தின் வெற்றி என்று சொல்வதும் சரியல்ல. மெஜாரிட்டி மக்களின் தீர்ப்பு, அல்லது அம்மக்களின் விருப்பம், என்பதுதான் ஜனநாயகத்தின் அடித்தளம். நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து மறுதேர்வு நடந்த சில நாட்களில் லோக்சபாவுக்குத் தேர்தல் நடந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது கரப்பான்பூச்சி கட்சியோ மற்ற எதிர்க்கட்சிகளோ அந்த வினாத்தாள் கசிவு பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக மக்களிடம் பிரசாரம் செய்து அந்த லோக் சபா தேர்தலில் வென்றிருக்க முடியுமா? இல்லை, அது நடந்திருக்காது, என்பது ஒரு நல்ல அனுமானம். கரப்பான்பூச்சி கட்சியின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்பது கண்சிமிட்டிச் சொல்லும் கருத்து. இருந்தாலும், கல்வி மற்றும் கல்வித்தரம் தொடர்பாக மேலும் சில சீர்திருத்தங்களை மத்திய அரசு இனி நினைத்துப் பார்ப்பது சற்று எளிதாகும்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது யாருக்காவது பெரிய இழப்பு, எதிர்பாராத தோல்வி, என்றால் அது லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குத்தான். போராட்டம் நீடித்து அதில் ஏதாவது நிகழ்ந்து, அதனால் மக்கள் மத்தியில் பாஜக பெரிய பின்னடைவைச் சந்திக்கும், அதன் விளைவாக நாம் மக்களிடையே அதிக வெளிச்சம் பெறலாம் என்று நினைத்த ஒருவரின் எண்ணத்தில் மண் விழுந்தால், அதை அவர் தன்னளவில் எப்படி எடுத்துக் கொள்வார்? மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றா, அல்லது தனது நப்பாசைக்குக் கிடைத்த தோல்வி என்றா?
Author: R. Veera Raghavan, Advocate, Chennai Email: veera.rvr@gmail.com Blog: https://rvr-india.blogspot.com
‘மனதின் குரல் (136ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 26.07.2026 தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
ஊக்கம் அளிக்கும் வெற்றித் திருநாள்!
இன்று, ஜூலை மாதம் 26ஆம் தேதி அப்படிப்பட்டதொரு தேதியாகும். இன்று தான் கார்கில் விஜய் நன்னாள்-வெற்றித் திருநாள். இந்த நாள் நமக்குள்ளே பெருமிதத்தை இட்டு நிரப்பி விடுகிறது. இந்த நாளன்று நாம் நமது தீரம்நிறை வீரர்களின் அற்புதமான சாகஸத்தை நினைத்துப் பார்க்கிறோம். கார்கிலின் உயரமான சிகரங்கள், கடினமான பருவநிலை, எதிரிகளின் சவால் என, அனைத்துச் சூழ்நிலைகளையும் நமது இராணுவவீரர்கள் எதிர்கொண்ட அதே வேளையில் அவர்களுடைய நெஞ்சுரம் அனைத்துச் சவால்களையும் விட மிகப் பெரியதாய் இருந்தது. அவர்கள் பாரத அன்னையைப் பாதுகாக்க தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்திருந்தார்கள். இன்று கார்கில் வெற்றித் திருநாளன்று அனைத்து வீரம்நிறை உயிர்த்தியாகிகளுக்கும், இராணுவ வீரர்களுக்கும் சிரத்தையுடன்கூடிய வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
ஒரு பயணம், ஒரு தேசம், ஒரு வணக்கம்
நண்பர்களே, இன்றைய பாரதம் தனது வீரர்களை நினைவு கொள்வதோடு கூடவே, புதிய தலைமுறையினர் வரை அவர்களின் சாகஸங்களைக் கொண்டு செல்லவும் செய்கிறது. இந்த உணர்வோடு தான், இந்த ஆண்டு, சிறப்பானதொரு ’ஷௌர்ய விஜய் யாத்ரா, அதாவது துணிச்சல் வெற்றிப் பயணம்’ மேற்கொள்ளப்பட்டது. ஜூலை மாதம் 14ஆம் தேதியன்று தில்லியின் தேசிய போர் நினைவகத்திலிருந்து தொடங்கிய இந்த மோட்டார்சைக்கிள் பயணம், த்ராஸில் உள்ள கார்கில் போர் நினைவகம் வரை பயணிக்கும். இது தாங்கிச் செல்லும் செய்தி என்னவென்றால், “ஒன் ரைடு, ஒன் நேஷன், ஒன் சல்யூட்”, அதாவது ஒரு பயணம், ஒரு தேசம், ஒரு வணக்கம். தேசத்திற்காக அளிக்கப்பட்ட உயிர்த்தியாகம் என்றும் மறக்கப்படாது என்பதையே இந்தப் பயணம் நமக்கு நினைவூட்டுகிறது.
பாரதத்தின் தொழில்நுட்பத் திறன்
நண்பர்களே, இன்று பாரதம் தனது இராணுவ வீரர்களின் சாகஸத்தோடு கூடவே, தனது தொழில்நுட்பத் திறனையும் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டு வருகிறது. சில நாட்கள் முன்னதாக, பாரதநாட்டுக் கடற்படையோடு ஐ.என்.எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் இணைக்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல், பாரத நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, பாரதத்திலேயே தயாரிக்கவும்பட்டது. இதிலே 75 சதவீதத்துக்கும் அதிக அளவிலே உள்நாட்டுத் தயாரிப்புப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவே தற்சார்பு பாரதத்தின் பெருகிவரும் சக்தியின் அடையாளம். இந்த மாதத்திலேயே டிஆர்டிஓ நிறுவனமானது, பினாகா தொலைதூர வழிநடத்தப்படும் ராக்கெட் ஏவுகணையையும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த வெற்றியின் பின்னணியில் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டுமுயற்சி இருக்கிறது. 2-3 நாட்கள் முன்பாகத் தான் டிஆர்டிஓ நிறுவனம், குஷா ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்திருந்தார்கள்.
நண்பர்களே, இன்று பாதுகாப்புத்தளவாட உற்பத்தியாகட்டும், அவற்றின் ஏற்றுமதியாகட்டும், அல்லது நட்பு நாடுகளோடு ராஜீய ஒத்துழைப்பாகட்டும், பாரதம் தொடர்ந்து புதிய சிகரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்திலே, நான் இந்தோனேசியா பயணித்திருந்தேன்; அங்கே ப்ரம்மோஸ் மற்றும் ஆயுத ஏவுகணைகளுக்கான ஒரு பெரிய புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாரதத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகின் நம்பிக்கை வளர்ந்து வருகிறது. இந்த கார்கில் வெற்றித் திருநாளன்று நாம் நமது அமரத்துவம் பெற்ற உயிர்த்தியாகிகளை நினைவில் ஏத்துவோம்; பாதுகாப்பான, திறமைமிகுந்த, தற்சார்பு நிறைந்த பாரதத்தைப் படைக்கும் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம், வாருங்கள்!!
கிடைக்கும் மழை நீரை சேகரிப்போம்
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் கடந்த பகுதியில், கேட்ச் தி ரயின் – மழைநீரைச் சேகரிப்போம் இயக்கம் பற்றி விவாதித்திருந்தேன். பருவமழையின் ஒவ்வொரு சொட்டையும் பாதுகாக்க, இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ”மழைநீரை சேகரிப்போம்” என்பது தரும் செய்தி மிகவும் எளிமையானது – எங்கே மழை பொழிகிறதோ, எப்போது அது பொழிகிறதோ, அந்த நீரை அங்கேயே சேமியுங்கள்; ஆகையால் ஜூலை மாதம் 4ஆம் தேதி தொடங்கி தேசமெங்கும் ஒரு விசேஷமான இயக்கமும் நடைபெற்று வருகிறது. இதன்படி, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடிநீரின் மறுசெறிவு, பழைய நீர்நிலைகளுக்குப் புத்துயிரூட்டல் மற்றும் மரம் நடுதல் ஆகியவற்றுக்கு புதிய வேகம் அளிக்கப்பட்டு வருகிறது. கிராமம் ஆகட்டும் நகரமாகட்டும், பஞ்சாயத்தாகட்டும், சமூக அமைப்புகளாகட்டும், அனைத்து இடங்களிலும் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். பழைய நீர்நிலைகளிலிருந்து வண்டல் வெளியேற்றப்பட்டது, சில இடங்களில் குளங்கள்-ஏரிகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. மூடிக்கிடந்த ஆழ்குழாய்க் கிணறுகள் இப்போது நிலத்தடி நீர் மறுசெறிவூட்டலுக்கான ஊடகமாக ஆகிவருகின்றன.
நண்பர்களே, மத்திய பிரதேசத்தின் சீதீ மாவட்டத்திலே சுமார் 1,500 ஏரிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நரசிங்க்புரிலே அமுத நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் நீரைச் சேமிக்கும் திறன் பெரிய அளவிலே மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் நந்தியாலிலே அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களும் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கின்றன, பழைய குளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகின்றன. நமது நகரங்கள் ஒன்றும் பின்தங்கிவிடவில்லை. சத்திஸ்கட்டின் கோர்பா, ஓடிஷாவின் புவனேஸ்வர், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் ஆகியன இந்த இயக்கத்தில் உற்சாகமளிக்கும் விளைவுகளை வெளிப்படுத்தி வருகின்றன. நாமும் கூட அக்கம்பக்கத்தில் இருக்கும் குளங்கள், ஏரிகள் அல்லது கண்மாய்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வோம், ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்போம் வாருங்கள். இன்று சேமிக்கப்படும் நீரின் ஒவ்வொரு சொட்டும், வரவருக்கின்ற தலைமுறையினரின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய முதலீடாகும்.
நெஞ்சம் நிமிர்த்திய இளைஞர் படை
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, கிளாஸ்கௌவிலே காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. நாட்டுமக்கள் அனைவரும் பாரதநாட்டின் அணிக்குத் தொடர்ந்து நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தவண்ணம் இருக்கின்றார்கள். அனைத்து விளையாட்டு வீரர்களும், தடகளவீரர்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும், மக்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசையாக இருக்கிறது. நண்பர்களே, நமது இளைஞர்கள் அண்மை நாட்களில் விளையாட்டுக்களில் பல அருமையான சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். பி.வி. சிந்து, ஜப்பான் ஓப்பன் பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் பாரத நாட்டுப் பெண்ணாக ஆகியிருக்கிறார். அவரது இந்தச் சாதனையானது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது. பாரதநாட்டுப் பெண் கிரிக்கெட் அணியும் கூட லண்டனின் லார்ட்ஸ் அரங்கத்தில் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வென்றிருக்கிறது. இது ஒரு வரலாற்று வெற்றியாகும். நமது அணியானது 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை ஜெயித்திருக்கிறது. ஆனால் விஷயம் இது மட்டுமல்ல. லார்ட்ஸின் நீண்ட வரலாற்றிலே இது பெண்கள் அணியின் முதல் டெஸ்ட் பந்தயமாகும். 1983ஆம் ஆண்டிலே இதே மைதானத்தில் பாரதம் தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இப்போது நமது பெண்சக்தி, இங்கே தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
சம்ஸ்கிருத கிளப் எனும் வித்தியாச முயற்சி
நண்பர்களே, சில சின்ன முயற்சிகள் கூட பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. கேரளத்தின் எர்ணாகுளத்தின் தெற்கு சிட்டூரில் விளையாட்டுக்கள் தொடர்பாக இப்படிப்பட்ட ஒரு முயற்சி பற்றி நான் கேள்விப்பட்டேன். அங்கே ஒரு பள்ளியிலே சம்ஸ்கிருத க்ளப் இருக்கிறது. இங்கே இருக்கும் ஆசிரியரான அபிலாஷ் அவர்கள், மிகவும் வித்தியாசமான முறையிலே சம்ஸ்கிருதத்தை பிரபலப்படுத்தி வருகிறார். இந்தத் திட்டத்திற்கு அக்ஷர்கந்துக் என்று பெயரிட்டிருக்கிறார். இதிலே சம்ஸ்கிருதத்தின் எழுத்துக்களை கால்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்களோடு இணைத்து எளிமையான வகையிலே புரியவைக்கப்படுகிறது. இதன் மூலம் கற்கும் ஆனந்தம் கிடைக்கிறது, அதோடு கூடவே விளையாட்டுக்களோடு மக்களுக்கு உறவும் அதிகப்படுகிறது.
தனியார் துறையிலும் தனித்துவ வெற்றி
என் மனம்நிறை நாட்டுமக்களே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விக்ரம்-1இன் வெற்றிகரமான ஏவுதல் நாட்டுமக்கள் அனைவரின் மனங்களையும் பெருமையால் நிரப்பியது. விண்வெளித்துறையின் இந்த வரலாற்றுரீதியான கணத்தின் சாட்சிகளாக பாரதநாட்டவர்கள் நாமனைவரும் இருந்தோம். இது தனியார் துறை வாயிலாக மேம்படுத்தப்பட்ட பாரதத்தின் முதல் ராக்கெட் ஆகும். கற்பனை செய்யக்கூடக் கடினமான இதனை, நமது இளைய தலைமுறை புதுமைகள் படைப்போர் செய்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் அலாதியான திறன், பேரார்வம் மற்றும் பொறுமையை வெளிப்படுத்தினார்கள். நீண்ட காலம்வரை நமது விண்வெளித்துறை, தனியாருக்கு மூடப்பட்டு இருந்தது. இந்தத் துறையில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்காமலேயே இருந்தது. இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் விண்வெளித்துறையை தனியாருக்காகத் திறந்து விட்டோம். இன்று இதன் விளைவு என்னவென்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
பெருமை கொள்ள வைக்கும் இளைஞர் திறன்
நண்பர்களே, அறிவியலிலும் கூட நமது இளைய நண்பர்கள் பாரதத்தைத் தலைநிமிரச் செய்திருக்கிறார்கள். அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள் என்பன உலகின் மிகவும் மகத்துவம்வாய்ந்த போட்டிகளில் ஒன்றாகும். இவற்றிலே அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள். இந்த மாதம்தான் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றின் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பாரதநாட்டு அணியின் செயல்பாடு அருமையாக இருந்தது. இயற்பியல் ஒலிம்பியாடிலே நமது அனைத்து ஐந்து மாணவர்களும் தங்கப் பதக்கம் வென்றார்கள், பாரதம் முதல் இடத்தைப் பிடித்தது. கடந்த பத்தாண்டிலே நடந்த அனைத்து இயற்பியல் ஒலிம்பியாடிலுமே நமது நாட்டின் மாணவர்கள் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்களைக் கண்டிப்பாக ஜெயித்து வந்திருக்கிறார்கள். வேதியியல் ஒலிம்பியாடிலும் கூட நமது அனைத்து மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இதுவரையிலான ஆகச்சிறந்த செயல்பாடு இது. உயிரியல் ஒலிம்பியாடிலும் கூட நமது மாணவர்கள் அனைவரும் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இவற்றிலே ஒரு தங்கப் பதக்கமும் அடங்கும். அதேபோல, கணித ஒலிம்பியாடிலேயும் கூட நமது மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களையும், நான்கு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்கள். தேசத்தின் இளைஞர் சக்தி மீது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. பாரதத்திலே ஒலிம்பியாடுகள், ஹேக்கத்தான்கள் ஆகியவற்றின் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது பேருவகையை அளிக்கிறது. தேசத்தின் அதிக அளவிலான இளைஞர்கள் இப்படிப்பட்ட மேடைகளிலும் தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி, பாரதத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கலக்கலான காஷ்மீர் கம்பளம்
என் உளம்நிறை நாட்டுமக்களே, திறனும் இருக்கிறது, சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் இருக்கிறது எனும் போது, அனைத்துப் பாதைகளும் எளிதாகி விடுகின்றன. கஷ்மீரின் பாரம்பரியமான கம்பளமான ”வகூ” தொடர்பாக இப்போது மேற்கொள்ளப்படும் முயற்சியிலே, இது பளிச்சிடுகிறது. கோரை மற்றும் வைக்கோலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கம்பளத்தைத் தயாரிக்கும் பாரம்பரியம் பல்லாண்டுகள் பழமையானது. இதற்காக முதன்மையாக, கஷ்மீரின் சதுப்புநிலப் பகுதிகளின் புற்கள் மற்றும் கோரைகள் வெட்டப்படுகின்றன. வெயிலில் உலர்த்தப்பட்ட பிறகு வகைப்படுத்தப்படுகின்றன. இதன் பிறகு கைகளால் நெசவு செய்யும் பணி தொடங்குகிறது.
ஒரு கம்பளத்தைத் தயாரிக்க இரண்டு கைவினைஞர்களுக்கு சுமார் நான்கு நாட்கள் பிடிக்கிறது. இந்தக் கம்பளம் அலாதியானது, சூழலுக்கு இசைவானதும் கூட. ஒரு பெரிய விசேஷ அம்சம் என்னவென்றால், கோடையிலே இது குளிர்ச்சியை அளிக்கும், குளிர்காலத்திலே வெப்பத்தைத் தரும். முதலில் இது கஷ்மீரின் ஒவ்வொரு வீட்டிலும் காணப்பட்டது ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதன் பயன்பாடு குறையத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீநகரின் குலாம் ஹுசேன் அவர்களும் அவருடைய மகளான தஞ்ஜீலா அவர்களும் ஒரு உறுதி பூண்டார்கள். இருவரும் வகூ கைவினைத்திறன் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய வாழ்க்கை அளிக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக்கிக் கொண்டார்கள்.
குலாம் ஹுசேன் அவர்கள் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தப் பணியிலே அவர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய இந்த முயற்சியில் பலர் இணையத் தொடங்கினார்கள். குலாம் ஹுசேன் அவர்கள் இந்தத் திறமையை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அவருடைய குறிக்கோளுக்காக மாநில அளவிலே அரசு உதவிகளும் கிடைத்தன. இன்று விரைவாக மக்களின் விருப்பத்தைப் பெற்றுவரும் வகூவானது, தேசத்தின் பிற பாகங்களுக்கும் சென்று சேர்ந்து வருகிறது. இந்த முயற்சியில் இணைந்த அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இன்று நாம் அனைவரும் உள்ளூர் பொருட்கள் மீது அழுத்தம் கொடுத்து வருகிறோம். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தைத் தாங்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கஷ்மீரத்தின் வகூவும் கூட உங்கள் இல்லங்களிலே இடம்பெற வேண்டும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
முன்னேற்றம் தரும் மூலிகை தேநீர்
நண்பர்களே, நமது தேசத்திலே தேநீர் என்பது ஒரு பானம் மட்டுமல்ல. இது நம்மோடு இரண்டறக் கலந்தது. காலையின் தொடக்கமாகட்டும், நண்பர்களின் சந்திப்பாகட்டும், குடும்பத்தோடு இணைந்து சில கணங்களைக் கழிப்பதாகட்டும், தேநீர் என்பது அனைத்து வேளைகளிலும் நம் வாழ்கையில் அங்கம் வகித்து வருகிறது. எனக்கும் தேநீருக்குமான உறவு பற்றி நீங்கள் நன்கறிவீர்கள், இல்லையா!! ஆனால் இன்று நாம் உரையாட இருக்கும் தேநீர், அது சுவையை மட்டும் அளிக்கவில்லை, பல சகோதரிகளுக்கு வாழ்க்கையையும் அளித்திருக்கிறது, தற்சார்பு என்ற புதிய நறுமணத்தையும் கலந்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் பிஜ்நோர் மாவட்டத்தின் லகீவாலா கிராமத்திலே சுயவுதவிக் குழுவோடு தொடர்புடைய பெண்கள், விதுர் பிரேர்ணா சுதேசி ஹர்பல் டீ – மூலிகைத் தேநீரைத் தயாரித்திருக்கிறார்கள். இதிலே லெமன்கிராஸ் எனும் காவட்டம்புல், சீந்தில், அதிமதுரம், துளசி, பச்சை மஞ்சள், பட்டை, ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கைப் பொருட்கள் அடங்கியுள்ளன. தனது வித்தியாசமான சுவை மற்றும் குணங்கள் காரணமாக இந்தத் தேநீரானது மிகக்குறைவான காலத்திலே மக்களிடம் விசேஷமான அடையாளத்தை அமைத்துக் கொண்டது. பிரயாக்ராஜின் மகாகும்ப மேளாவிலும், தில்லியின் சர்வதேச உணவு விழாவின் போதும் இந்த மூலிகைத் தேநீர் மிகவும் பாராட்டுக்களைப் பெற்றது. அயல்நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களும் கூட இதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.
நண்பர்களே, மிகவும் உத்வேகம் அளிக்கும் விஷயம் இதன் தொடக்கம் தான். இந்த ஒட்டுமொத்த முயற்சியும் வெறும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து தொடங்கியது. இன்று இந்த பிராண்டானது தேசத்தின் பெரிய அமைப்புகள் வரை சென்றடைந்து விட்டது. உள்ளூர் ஞானம், இயற்கை மற்றும் பெண்களின் தன்னம்பிக்கை ஆகியன இணையும் போது, ஒரு சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்தின் தொடக்கமாக ஆகி விடும் என்பதை இது முதன்மையாக நமக்குத் தெரிவிக்கிறது.
ஒரு மரம்… ஒரு காடு!
என் கனிவான நாட்டுமக்களே, இன்று நாடெங்கிலும் ஓர் மரம் அன்னையின் பெயரில் இயக்கம் வாயிலாக, இயற்கையின்பால் மக்கள் தங்களுடைய பொறுப்பையும் கடமையையும் ஆற்றி வருகின்றார்கள். இப்படிப்பட்ட உணர்வால் சமூகம் இணையும் போது, மிகவும் அழகான, உத்வேகம் அளிக்கவல்ல எடுத்துக்காட்டுகள் வெளிப்படுகின்றன. நண்பர்களே, அம்தாவாதிலே மக்களின் பங்களிப்புக்கான அற்புதமான சக்தி வெளிப்படுத்தப்பட்டது. பாடஜ் பகுதியிலே, ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக, 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன, இவற்றிலே 25,000த்திற்கும் அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் தேசிய மாணவர் படை கேடட்டுகள், சுயம்சேவகர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த இயக்கத்திலே பங்கெடுத்துக் கொண்டார்கள். வரவிருக்கின்ற ஆண்டுகளிலே இந்த மரங்களெல்லாம், ஒரு அடர்ந்த நகர்ப்புறக் காடாக உருப்பெறும். இந்த முயற்சி கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திலே இடம் பிடித்தது. நண்பர்களே, ஓர் மரம் அன்னையின் பெயரில் இயக்கத்தின்படி, உத்தர பிரதேசத்திலும் கூட மக்கள் பங்களிப்பின் அற்புதமான உறுதிப்பாட்டைக் காண முடிந்தது. அங்கே ஒரே நாளிலே, ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று, 35 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இது விசேஷ கௌரவம் அளிக்கும் விஷயம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மரம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, இவை எண்ணிலடங்கா உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. குஜராத்தின் கிர் காடுகளில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு Indian Grey Hornbill எனும் சாம்பல் இருவாயன் மீண்டும் கூடுகட்டத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பராமரிப்பு மற்றும் மீளுருவாக்க முயற்சிகளின் விளைவாகும் இது. இந்த இருவாயன் வனங்களின் விவசாயி என்று அழைக்கப்படுகிறது. இவை பழங்களை உண்டு, விதைகளை தொலைதூரங்கள் வரை கொண்டு சேர்க்கின்றன, இந்த விதைகளால் காடுகளில் புதிய மரங்கள் கிளைக்கின்றன, இந்த வகையிலே ஒரு பறவை காட்டினை மீண்டும் பசுமை கொழிக்கச் செய்வதில் உதவி புரிகிறது. நாமனைவரும் நம்முடைய வாழ்க்கையின் எந்தவொரு சிறப்பான சந்தர்ப்பத்தையும் இயற்கையோடு கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். ஓர் மரத்தை அன்னையின் பெயரில் நடுங்கள். இன்று நடப்பட்ட ஒரு சிறிய மரக்கன்று, வரவிருக்கும் தலைமுறையினருக்கு பசுமை, தூய்மையான காற்று, அழகான எதிர்காலத்தின் மரபாக ஆகக்கூடும்.
நெகிழி மாசை நீக்க சிறந்த வழி
எனதருமை நாட்டுமக்களே, இன்று நெகிழிமாசு என்பது உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். ஒருமுறை பயனாகும் நெகிழிக் குப்பையானது பல்லாண்டுகள் வரை இயற்கைக்குத் தீங்கு ஏற்படுத்தி வரும் என்பதால், நெகிழியை சரியான முறையிலே அப்புறப்படுத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும். நண்பர்களே, பிஹாரின் சீதாமடீயிலே கழிவிலிருந்து செல்வம் என்பதற்கு அருமையான உதாரணம் வெளிவந்திருக்கிறது.
இங்கே குப்பை மறுசுழற்சி செய்யப்பட்டு அதிலிருந்து கருத்தைக்கவரும் அமரும் மேடை தயார் செய்யப்படுகிறது. ஒரு மேடையைத் தயார் செய்வதில் சுமார் 40 கிலோ ஒருமுறை பயனாகும் நெகிழி செலவாகிறது. இது பலமானதாகவும், நீடித்ததாகவும், ஓய்வளிப்பதாகவும் இருப்பதோடு கூடவே சூழலுக்கு இசைவானதாகவும் இருக்கிறது. இது அரசுப் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொதுவிடங்களில் போடப்படுகிறது. இதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த முயற்சியில் உள்ளூர் அலகுகளோடு சேர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பும் கலந்திருக்கிறது. இதன் காரணமாக உள்ளூர் அளவிலே வேலைவாய்ப்புகளும் ஏற்படுகின்றன. சீதாமடீயின் இந்த முயற்சி, Reduce, Reuse and Recycle, அதாவது, குறைவாகப் பயன்படுத்தல் -மீள் பயன்படுத்தல்-மறுசுழற்சி செய்தல் என்பவை வெறும் கோஷங்கள் அல்ல, மாறாக இவை நமது வாழ்க்கையின் அங்கமாகவே ஆகிவிட்டன என்பதையே சீதாமடீயின் இந்த முயற்சி நமக்குத் தெரிவிக்கிறது.
உள்ளூர் மண்ணில் சதுர்த்தி பிள்ளையார்
நண்பர்களே, கடந்த முறை மனதின் குரலிலே, பிள்ளையார் சதுர்த்தி பற்றிப் பேசியிருந்தேனே, உங்களுக்கு நினைவிருக்கிறது இல்லையா?! நமது தேசத்தின் மண்ணாலான பிள்ளையார் சிலைகளையே வழிபட வேண்டும் என்று அப்போது நான் உங்களிடம் வேண்டிக் கொண்டேன். POP யால் செய்யப்பட்ட பிள்ளையார் விக்கிரகங்களையோ, அயல்நாடுகளிலிருந்து வரும் பிள்ளையார் சிலைகளையோ பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் நாட்டின் மண்ணாலான பிள்ளையார் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக பலர் எனக்குச் செய்திகளை அனுப்பி இருக்கிறார்கள், தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். என்னுடைய வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகப் பலர் எனக்கு எழுதியிருக்கிறார்கள். உள்ளூரின் மண்ணைக் கொண்டு தயார் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை மட்டுமே நிறுவுவோம் என்ற தங்களுடைய மனவுறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மனதின் குரலில் முன்னமும் கூட இப்படிப்பட்ட விவாதம் நடைபெற்றிருப்பதாகவும், அதனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முறை பிள்ளையார் சதுர்த்தியிலே நம் தேசத்தின் மண்ணாலான திருவுருவச் சிலையையே வழிபாட்டுக்கு நீங்கள் பயன்படுத்துங்கள் என்று நான் மீண்டுமொரு முறை என்னுடைய வேண்டுகோளை விடுக்கிறேன். உங்களுடைய இந்த முயற்சியும் கூட ஒருவகையிலே இயற்கைக்கு நீங்கள் செய்யும் வழிபாடாகும்.
மணிப்பூரின் மகத்துவ சாதனை மனிதர்
என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போது நான் உங்களிடம் கூறவிருக்கும் ஒரு நபர் குறித்து தெரிந்து கொண்டால் நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்வீர்கள். இவர் அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல் துறையில் பெரிய அளவில் பணியாற்றி வருகிறார், தனக்கென உலகிலே ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் கூட, இவர் தனது வேர்களின் ஆழங்களோடு இணைந்திருப்பவர், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தனது மண்ணுக்கு மரியாதை செலுத்துவதை மறக்காதவர் – அந்த மனிதர் தான் மணிப்பூரைச் சேர்ந்த டாக்டர் ரோனால்டோ லைஷ்ராம் அவர்கள்.
இவருடைய பெயர் ரோனால்டோ என்றாலும், இவர் ஒரு வானியற்பியலாளர். இவர் ஜப்பானிலே பணியாற்றி வருகிறார், இளம் பால்வெளி மண்டலங்களின் ஒரு பரந்த கூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்யும் குழுவின் அங்கமாக இருந்திருக்கிறார். அவர் என்னதான் செய்தார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புவீர்கள், இல்லையா? உள்ளபடியே, இவர் ஒட்டுமொத்தக் கூட்டத்தின் பெயரை மணிப்பூரின் ஒரு அழகான ஏரியோடு இணைத்து, லோக்டக் ப்ரோடோ-க்ளஸ்டர் என்று பெயரிட்டிருக்கிறார். இந்த நன்னீர் ஏரிக்குள் மிதக்கும் மக்கிய தாவரங்களும் இதர கரிமப் பொருட்களும் (phumdis) ஒன்றிணைந்து மிதக்கும் திட்டுக்களைப் போல மாறுகின்றன. தனித்துவமான நிலப்பரப்பைப் போன்ற தோற்றத்தை இவை உருவாக்குகின்றன; இது ஏதோ பரந்த கடலிலே சின்னச்சின்ன தீவுகள் மிதப்பது போல இருக்கிறது.
இதைப் போலவே பேரண்டத்தில் இந்த இளம் பால்வெளி மண்டலங்கள் கூட ஒரு பரந்த படைப்பை நிர்மாணம் செய்கின்றன. இன்று மணிப்பூரின் லோக்டக், தேசத்தின் வரைபடத்தில் மட்டும் இடம்பெறவில்ல; மாறாக விசாலமான பேரண்டத்திலும் கூட தனது ஒளிவீச்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்தச் சாதனை நாட்டவர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பது. இதனால் நமது இளைய நண்பர்களுக்கு ஒரு கற்றல் கிடைக்கிறது, தங்களுடைய பாரம்பரியத்தோடு இணைந்திருந்தாலும் கூட, புதிய சிகரங்களை நம்மால் எட்ட முடியும் என்பதை. இப்படிப்பட்ட வேர்கள் விண்மீன்கள் உலகைக்கூட பளிச்சிடச் செய்ய முடியும்.
கைத்தறிக்குக் கை கொடுப்போம்
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி நாளினை நாடு கொண்டாடும். இந்த வேளையிலே நமது நெசவாளர் சகோதர சகோதரிகளின் திறன்கள், அவர்களின் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு நாம் விழா எடுக்கிறோம். பல தலைமுறைகளாக தொடர்சங்கிலி போன்று செயல்பட்டுவரும் பாரம்பரியங்களை நமது நண்பர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
நண்பர்களே, கைவினைத்திறத்தால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆடையும், ஏதோ ஒரு துறையினை, சமூகத்தை மற்றும் இதோடு தொடர்புடைய எண்ணிலடங்கா மக்களின் கதைகளை முன்னிறுத்துகிறது. இவர்கள் எல்லாம், பாரதத்தின் கலாச்சார மரபுகளைப் பராமரிப்பதை பெருமித உள்ளத்தோடு செய்கிறார்கள். நாமனைவரும் கைவினைத் திறத்திற்கு ஊக்கமளித்து, நமது நெசவாள நண்பர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதையே இன்றைய நாளன்று நான் என் வேண்டுகோளாக விடுக்கிறேன். நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உணர்வுக்கு மேலும் வலு சேர்ப்போம், வாருங்கள்.
நண்பர்களே, இன்று தேசத்திலே எந்த வகையில் கைத்தறிக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறதோ, இதன் காரணமாக அதிக அளவிலே மக்களின் வாழ்க்கை சிறப்பானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. போச்சம்பள்ளியிலிருந்து பட்னா, குத்தம்பள்ளியிலிருந்து கட்ச்வரை இதற்கான பல எடுத்துக்காட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்று கைத்தறியின் நமது பெருமைமிகு பாரம்பரியத்துக்கு புதிய சக்தியையும், புதிய அடையாளத்தையும் பல தனிநபர்களும், குழுக்களும் அளித்து வருகின்றார்கள். போச்சம்பள்ளி வகையின் அழகான பாரம்பரியத்தைச் சிலர் முன்னெடுத்துச் சென்றால், சில பெண் நெசவாளர்கள் ஒன்றிணைந்து, கம்பளிப் பொருட்களை உருவாக்குகிறார்கள். சிலர் கேரளத்தின் பாரம்பரியமான “கசாவு கலை”யைப் பாதுகாத்து வருகின்றார்கள். இதன் காரணமாக நமது சகோதரிகள்-தாய்மார்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது.
நண்பர்களே, மேலும் ஒரு விஷயம் குறித்து விசேஷமாக நான் குறிப்பிட விரும்புகிறேன், அது தான் காதி. கதராடைகள் என்பவை அண்ணல் காந்தியடிகளுக்கு மிகவும் பிரியமானவை என்பதை நாமனைவரும் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் மக்களால் கணிசமாக விரும்பப்படுவதாக காதி ஆகியிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதன் விற்பனை 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. விற்பனையின் இந்தப் புள்ளிவிவரம் இப்போது கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியிருக்கிறது. வரவிருக்கின்ற பண்டிகைக்காலத்திலே காதி விற்பனை மையத்தின் ஏதாவது ஒரு பொருளை, கைத்தறியோ, கைவினைப் பொருளோ, ஏதோ ஒரு பொருளைக் கண்டிப்பாக வாங்குங்கள்.
மூங்கில் இசையில் மூழ்கலாம்
எனதருமை நாட்டுமக்களே, பாரதத்திலே எத்தனை வகையான இசைக்கருவிகள் இருக்கின்றன என்று உங்களிடத்திலே கேட்டால், நீங்கள் சிந்திக்கத் தொடங்கி விடுவீர்கள். ஏன் என்று சொன்னால், நம் நாட்டிலே ஏராளமான கருவிகளும், அவற்றோடு தொடர்புடைய பாரம்பரியங்களும் இருக்கின்றன. இவை போன்றதொரு கருவி தான், திரிபுராவின் சௌங்க்ப்ரேங்க். இது அங்கிருக்கும் பழங்குடி இனத்தவர்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. மூங்கிலாலான இந்த இசைக்கருவியிலே மூன்று தந்திகள் இருக்கின்றன. இதிலிருந்து வெளிப்படும் ஒலி மிகவும் இனிமையாக இருக்கிறது, சரோத் இசைக்கருவிக்கு சற்று நிகராக இதன் ஒலி இருக்கிறது. சில காரணங்களால், இளைஞர்களிடையே இதன் புழக்கம் குறையத் தொடங்கியது. இந்த கட்டத்தில், குமார் தேப்பர்மா அவர்கள் இதை மீண்டும் பிரபலப்படுத்த வேண்டும் என்று உறுதி பூண்டார். இன்று அவருடைய முயற்சி வளமாகியிருக்கிறது. இவர் சௌங்க்ப்ரேங்கோடு கூடவே அங்கே இருக்கும் பிற பாரம்பரிய இசைக்கருவிகளையும் இசைத்து வருகிறார். கோக்போரோக் பழங்குடிப் பாடல்கள், பௌல் பாடல்கள், பங்காலி பழங்குடிப் பாடல்கள் ஆகியன அவருக்கு மிகவும் பிடித்தமானவை. இப்போது நான் உங்களுக்கு ஒரு சிறிய இசைக் குறிப்பை இசைக்க விரும்புகிறேன். இந்த இசையை உங்களால் என்றைக்கும் மறக்க முடியாது.
#(இசை)#
நண்பர்களே, இதைக் கேட்டதும் உங்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கும் என்று நம்புகிறேன். தேப்பர்மா அவர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாரம்பரியமான இசையை, மக்களுக்கு விருப்பமானதாக ஆக்குவதில் அவருடைய முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது. நீங்களும் உங்களுக்கு அக்கம்பக்கத்திலே இருக்கும் பாரம்பரியமான இசைக்கருவி பற்றிய தகவல்களை சமூக ஊடகத்திலே கண்டிப்பாக பகிருங்கள் என்று உங்களிடத்திலே கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய இந்த முயற்சி மற்றவர்களையும் கூட பாரம்பரியமான பாரத நாட்டு இசையோடு அவசியம் இணையச் செய்யும்.
அப்துல் கலாமும் குருபூர்ணிமாவும்
எனதருமை நாட்டுமக்களே, நாளை ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, பாரத் ரத்ன, டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயா அவர்கள் மறைந்த தினம். டாக்டர். கலாம் ஐயாவின் ஆளுமையில் கருத்தூக்கம் அளிக்கும் பல கூறுகள் இருந்தன என்றாலும், அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றால் அது ஆசிரியர் என்ற பங்களிப்புத் தான். அவர் சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரியபெரிய கனவுகளைக் காண உத்வேகப்படுத்தினார். தற்செயல் நிகழ்வாக, இந்த வாரம் நாம் குரு பூர்ணிமா புனிதமான நாளையும் கொண்டாட இருக்கிறோம். நமது தாய் தந்தை தாம் நமது மூத்த குருமார்கள். பள்ளியில் நமது ஆசிரியர்கள் நமக்கு எழுத்தறிவை அளிக்கிறார்கள். குரு பூர்ணிமையானது, இப்படிப்பட்ட அனைத்து குருமார்களிடத்திலும் நன்றியுணர்வை வெளிப்படுத்தவல்ல சந்தர்ப்பமாகும். நாட்டின் அனைத்து ஆசிரியர்கள்-குருமார்களுக்கும் நான் என் அர்ப்பணிப்புடனான வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
பெருமிதம் தரும் சுதந்திர தினம்
நண்பர்களே, சில வாரங்கள் கழித்து நாம் சுதந்திரத் திருநாளைக் கொண்டாட இருக்கிறோம். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் தரும் தினமாகும். பாரத அன்னையின் சுதந்திரத்தின் பொருட்டு தங்கள் அனைத்தையும் அர்ப்பணித்த கணக்கேயில்லாத வீரர்களை நாம் நினைவில் கொள்ளும் தினமாகும் இது. அவர்களுடைய தியாகம்-தவம் காரணமாகவே இன்று நமது கைகளிலே மூவண்ணக் கொடி இருக்கிறது. இந்த மூவண்ணக் கொடியிலே தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் இருக்கிறது.
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளில் வீடுதோறும் மூவண்ணக்கொடி இயக்கமானது தேசம் முழுவதையும் ஒரு அற்புதமான உணர்வினால் இணைத்தது. ஒவ்வொரு வீடு, ஒவ்வொரு தெருவிலும் மூவண்ணக்கொடியின் விழா தென்பட்டது. இந்த ஆண்டும் கூட, நாம் வீடுதோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தை முழு உற்சாகத்தோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது இல்லங்களில், முழு மரியாதையோடு மூவண்ணக்கொடியைப் பறக்கவிட வேண்டும்.
நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு முன்பாகவும் நீங்கள் எனக்கு நிறைய கருத்துக்கள்-ஆலோசனைகளை அளிப்பீர்கள். இந்த ஆண்டும் கூட, நீங்கள் உங்களுடைய கருத்துக்களை மைகவ் தளத்தில் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். உங்களுடைய கருத்துக்கள்-ஆலோசனைகளுக்காக நான் காத்திருப்பேன்.
நண்பர்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களின் பல புதிய சாதனைகள், உள்ளெழுச்சியளிக்கும் முயற்சிகளோடு இணைவோம், அதுவரை உங்களிடமிருந்து அனுமதி கோருகிறேன். பலப்பல நன்றிகள், வணக்கம்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
இந்த 2026-ல் மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தவுடன், நீட் வினாத்தாள் முன்னதாகவே கசிந்தது என்று தேசியத் தேர்வு முகமை கண்டறிந்தது. உடனே அது பற்றி மத்தியக் கல்வி அமைச்சகம் புகாரளித்து சி.பி.ஐ வழக்குப் பதிந்தது. நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்தது. மறுதேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடக்கப் போகிறது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னணியில் நின்று, மற்ற சில அமைப்புகளும் இணைந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வீதிப் போராட்டம் நடத்துகின்றன. அவற்றின் கோரிக்கை: வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் அவரோ பிரதமர் மோடியா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. பின்னாளில் அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று நமக்குத் தெரியாது.
நீட் வினாத்தாள் கசிவைப் புலன்விசாரணை செய்யும் சி.பி.ஐ, 13 நபர்களைக் கைது செய்திருக்கிறது. வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த ஒரு கெமிஸ்ட்ரி புரொபசர் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு வினாத்தாளைக் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருக்கிறது. அதாவது, வினாத்தாள் கசிவு லஞ்சத்திற்காக நடைபெற்றது என்பது புலன்விசாரணையில் தெரியவருகிறது. வழக்கு நடக்கும்.
இப்போது போராட்டத்திற்கு வருவோம். போராட்டக்காரர்கள் மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கேட்பதில் நியாயம் இருக்கிறதா? இது புரிவதற்கு, நாம் சில அடிப்படை விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் லஞ்ச ஊழல் ஒரு வாழ்க்கை முறை என்றாகி விட்டது. அரசு உயர் மட்டத்தில் லஞ்ச ஊழல் பலப்பல வருடங்களாகப் பரவி விட்டது. அதன் விளைவாக, கீழ் மட்டத்தில் லஞ்ச ஊழல் நர்த்தனம் ஆடுகிறது.
லஞ்சம் தருகிறவர்கள் இருவகை. ஒன்று, லஞ்சம் கொடுத்துத் தாங்கள் நேர்வழியில் பெறமுடியாத சலுகைகளையும் பலன்களையும் பெற்று அதன்மூலம் தாங்கள் அளித்த லஞ்சப் பணத்தைவிட அதிகப் பயன் அடைகிறவர்கள். நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் கொடுத்தவர்கள் இந்த வகை.
இன்னொரு வகையினர், அரசு அளிக்கும் சேவைகள் மற்றும் பலன்களைப் பெறுவதற்காக லஞ்சம் தரும் கட்டாயத்துக்கு உள்ளாகிப் பணம் இழக்கிறவர்கள். உதாரணம்: பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறையாக ஒரு விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக, லஞ்சம் கொடுக்க வேண்டிய பொதுமக்கள்.
இந்தியாவில் மத்தியிலோ ஒரு மாநிலத்திலோ, எந்த அரசு இருந்தாலும் முறைகேடான பயன்களுக்காக லஞ்சம் தருபவர்களும், அதிக வருமானத்திற்காக லஞ்சம் வாங்கும் அரசுத்துறை மனிதர்களும் கைகோர்ப்பது அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும். இதற்குக் காரணம், இரு பக்கத்திலுமான ஒழுக்கக் குறைவு. ஒரு நேரான அரசு கவனிப்பாக இருந்து அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அவற்றை முற்றிலும் ஒழிக்க முடியாது. காரணம்: தனிமனித மனங்களில் உள்ள ஒழுக்கக் குறைவை ஒரேயடியாக எந்த அரசும் களைய முடியாது. அந்த மனிதர்கள் அரசுக் காரியங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டும்போது, ஒரு பொறுப்பான அரசு அவர்களைப் பிடித்து வழக்கு நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரலாம், அவர்கள் எதிர்பார்த்திராத சமூக அவமானத்தை அவர்களுக்குத் தரலாம் – அதன் மூலம் பின்னர் அதே குற்றத்தைச் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த முனையலாம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
சரி, தொன்றுதொட்ட நாளிலிருந்து இந்தியா தனிமனித ஒழுக்கக் குறைவுள்ள சமூகமா? இல்லை. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் இதிகாசங்களையும் புராணங்களையும் போதனைகளையும் கொண்ட நாடு இந்தியா. அந்நியர்கள் ஆட்சியின்போது, அவர்களது ஆட்சியே அக்கிரமம், அநியாயம் என்றிருந்து அதனால் இந்தியப் பொதுவாழ்வில் ஒழுக்கக் குறைவு துளிர்த்துப் பரவியது. அதில் அகப்பட்டவர்கள் அதிகம், தப்பித்தவர்கள் குறைவு.
மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், அதை வழி நடத்துபவர்கள், அதை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகள் மற்றும் பொதுவாழ்வுப் பிரபலங்கள் ஆகியோருக்கு, ஒரு அடிப்படை விஷயம் புரியாதா? அதாவது, நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் துளியும் காரணமல்ல; அதற்குக் காரணம் நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட சிலரும், தேர்வுக்கு முன்னதாக அந்த வினாத்தாளை அறிய முற்பட்ட சில மாணவர்களும், அவர்கள் அனைவரிடம் இருந்த ஒழுக்கக் குறைவும் என்ற அடிப்படை விஷயம் புரியாதா?
புரியும். நன்றாகப் புரியும். இருந்தாலும் போராட்டத்தை நடத்துபவர்கள், அவர்களோடு இணையும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்களிடம் ஒரு குறை இருப்பதால் அவர்கள் தங்களின் அநியாயச் செயலில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அந்தக் குறை: அவர்களிடமும் உள்ள ஒழுக்கக் குறைவு – ஒரு பேருக்காக, வெளிச்சமும் விளம்பரமும் கிடைப்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, உண்மையை ஏற்க மறுக்கும் ஒழுக்கக் குறைவு. அந்த ஒழுக்கக் குறைவையும் அரசால் நீக்க முடியாது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்யலாம்?
ஒழுக்கக் குறைவான நோக்கத்துடன் வீதியில் போராட்டம் நடத்துகின்ற, ஒழுக்கக் குறைவுடன் அதற்கு ஆதரவு தருகின்ற, மனிதர்களின் செயல், நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் வாங்குவது மாதிரியான பெரிய குற்றம் அல்ல. தெருக்களில் இறங்கி அவர்கள் செய்யவிருந்த போராட்டத்தை மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், மத்திய அரசுக்கு மக்கள் மத்தியிலும் கோர்ட்டுகள் பார்வையிலும் கெட்ட பெயர் ஏற்படலாம் – ஏதோ நீட் வினாத்தாள் கசிய விட்டவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நடப்பதாகப் பொதுவெளியில் ஒரு தோற்றம் ஏற்படலாம். அதனால் எதிர்க் கட்சிகளின் கையும் ஓங்கலாம். யார் கண்டது, இந்தியாவுக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகளும் வலிமை பெறலாம். ஆகவே போராட்டத்தை அரசு கடுமையாகக் கையாளாமல் இருந்தது விவேகம் மிக்கது.
போராட்டம் தொடர்பான மனிதர்கள் தங்களை, தங்களின் போலி அக்கறையை, மேலும் மேலும் வெளிக்காட்டிக் கொள்ளச் செய்து, பொதுவெளியில் அவர்கள் செய்யத் துடிக்கும் அராஜகங்களையும் சிறிய அளவில் அனுமதித்து, மதியூகமாகவும் பொறுமையாகவும் அவர்களை அம்பலப்படுத்தி வலுவிழக்கச் செய்வதுதான் மத்திய அரசு செய்யத் தகுந்தது. அதை மத்திய அரசு செய்து வருகிறது. அதைச் செய்வதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சமர்த்தர்கள் அல்லவா?
Author: R. Veera Raghavan, Advocate, Chennai Email: veera.rvr@gmail.com Blog: https://rvr-india.blogspot.com
தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
06135 // 06136 || தாம்பரம் – தென்காசி பகல் நேர சிறப்பு ரயில் 6 சேவைகள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இயங்கும் 06135 – தாம்பரம் தென்காசி சிறப்பு ரயில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 15 வரை வியாழன் மற்றும் சனி ஆகிய 2 நாட்களும் காலை 05:00 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் அதேநாள் மாலை 03:30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் வந்தடையும்.
06136 -தென்காசி தாம்பரம் சிறப்பு ரயில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் காலை 05:00 மணிக்கு தென்காசியில் புறப்படும் சிறப்பு ரயில் அதேநாள் மாலை 03:15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு விழுப்புரம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி இராஜபாளையம் சங்கரன்கோவில் என குறைவான நிறுத்தங்களுடன் அதிவேக சிறப்பு ரயில் சேவையாக இயங்கும்.
இந்த ரயிலில் மொத்தம் 23 பெட்டி உள்ளது . இந்த ரயிலில் இரண்டு ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் ஒரு ஏசி சேர் கார் மற்றும் 14 சேர்க்கார் பெட்டிகள் இரண்டு படுக்கை வசதி பெட்டிகள் நான்கு பொது பெட்டிகள் இரு எஸ்எல் ஆர் உடன் இயங்கும். இந்த ரயில் தென்காசி வந்ததும் செங்கோட்டைக்கு நிறுத்தத்திற்கு சென்று தண்ணீர் நிரப்பி மறுபடியும் செங்கோட்டையிலிருந்து தென்காசி வந்து தாம்பரத்திற்கு புறப்படும் என தெரிகிறது இந்த வண்டி செங்கோட்டை வரை செல்லும் முன் பதிவு பொருத்து நிறுத்தம் கூடுமாம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோவில் விளங்குகிறது. இக்கோவில் மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் பெரியாழ்வார் அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த இடமாக ஆண்டாள் கோவில் அருகில் உள்ள நந்தவனம் வழங்குகிறது.
இந்த நந்தவனத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆண்டாள் அவதரித்த திரு நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி இந்த நந்தவனத்திற்கு வந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. ஒவ்வோர் மாதமும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா ஐதீக முறைப்படி கொண்டாடப்படுகிறது.
ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரம் நட்சத்திரம். இந்த நாளில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் இரு முறை வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரும் ஆடிப்பூரம் நாளில், ஆண்டாள் பிறந்த தினமாகக் கருதப்பட்டு. அன்று, பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெறுகிறது.
இன்று வந்த பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் கோவிலில் இருந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நந்தவனத்திற்கு வந்ததும் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஆண்டாளை சர்வ அலங்காரத்தில் தரிசனம் செய்து சென்றனர்.